திங்கள், அக்டோபர் 17, 2005

வேற்றுக்கிரகத்தில் உயிரினமா? - பாகம் 1

சுத்திகரிப்பு ஆலைகளில் உபயோகப்படுத்தப்படும் கொதிகலன்களைப் போல இரும்பிலான சுவர்களைக் கொண்ட பெரிய கோட்டை. அங்கு தான் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கழிக்க வேண்டும். வாழ்க்கை எப்படி இருக்கும்?

மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இன்னும் பல கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் திண்டாடிவருகின்றான். அவற்றில் முக்கியமானது இந்த பிரபஞ்சத்தின் அமைப்பு. எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க முடியும்? இன்னும் அது விரிவரைடைகின்றதா? எப்போது சுருங்க ஆரம்பிக்கும்? விரிவடைய எந்த ஒரு பொருளுக்குமே அதனைச் சுற்றி இடம் வேண்டும்.

நீங்கள் ஒரு பலூனை ஊதுகின்றீர்கள். அது விரிவடைகின்றது. அதற்கு எங்கிருந்து விரிவடைய இடம் கிடைக்கின்றது?. நீங்கள் இருக்கும் அறை, தெரு, மைதானம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் அறை என எடுத்துக் கொள்வோம். அப்படியானால் அந்த அறையைச் சுற்றிலும் ஒரு இடம் இருக்க வேண்டும். இந்த இடத்தைச் சுற்றி இன்னொரு இடம் இருக்க வேண்டும் அப்படியே அது போய் கொண்டே இருக்கும். அதே போல் தான் பிரபஞ்சத்திற்கும் விரிவடைய இடம் வேண்டும். அப்படியே பிரபஞ்சம் விரிவடைய இடம் இருக்கின்றதென்றால், அந்த புதிய இடத்தினை எவ்வாறு அழைப்பது. இதனை அறிவியலால் இன்னும் விளக்க முடியவில்லை.

பல அறிவியலார்கள் இந்த அண்டமானது, ஒரு புள்ளியில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஒன்றுமில்லாத ஒன்று (?), ஒரு துகளாகவும் (Particle), எதிர் துகளாகவும் (Anti-Particle) பிரிந்து அந்த பிரிந்த துகளும் இருபடியாக்கல் முறையினால் பலமுறை பிரிவடைந்து இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படியே பார்த்தாலும் அந்த துகள்கள் உலாவுவதற்கு பரப்பு எங்கிருந்து வந்திருக்க வேண்டும். சரி ஒரு புள்ளி வைக்கவேண்டும் என்றால் கூட ஒரு தாளாவது வேண்டும். அந்த தாளினை வைக்க ஒரு மேஜை வேண்டும். அந்த மேஜையை வைக்க ஒரு வீடு வேண்டும். வீட்டிற்கு ஒரு தெரு வேண்டும். தெருவிற்கு ......????

இந்த பூகோளமானது, சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். சூரிய குடும்பம் மற்றும் இன்ன பிற கோடிக்கணக்கான கிரகங்களும் இணைந்து ஒரு பால்வழித்திரளை உண்டாக்குகின்றன. இந்த அண்டமானது, இது போன்ற கோடிக்கணக்கான பால்வழித்திரளை உள்ளடக்கியது. சரி இந்த ஒரு பெரிய பரப்பில், நாம் மட்டும் தான் இருக்கின்றோமா அல்லது வேறு கிரகத்திலும் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கின்றோம் என்றால், இவ்வளவு பெரிய பெரிய கிரகங்கள் அனைத்தும் வீணா? பூமியில் மட்டும் உயிரினம் தோன்ற காரணம் என்ன?

வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா என்பதற்கு பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் கீழ்கண்ட முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

1. விண்கலத்தில் பூமி பற்றியத் தகவல்களைப் பதிந்து வேற்ற்கு கிரகங்களுக்கு அனுப்புதல்
2. பூமியில் இருந்து வேற்று கிரகங்களுக்கு ரேடியோ அலைகளை அனுப்புதல்
3. வானில் இருந்து வரும் சமிகஞைகளை அலசுதல்

விண்கலத்தில் பூமி பற்றியத் தகவல்களைப் பதிந்து வேற்ற்கு கிரகங்களுக்கு அனுப்புதல்


பயோனிர்-10 விண்கலம் 1972 லும் பயோனிர்-11 விண்கலம் 1973 லும் விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றின் நோக்கம் சூரிய குடும்பத்தின் அமைப்பினைப் பற்றி அறிவது தான். இப்போது இந்த இரண்டுமே கிட்டத்தட்ட 8 பில்லியன் மைல்கள் பயணம் செய்து சூரிய குடும்பத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கின்றன. இதில் பயோனிர்-11, சமிக்ஞைகளை அனுப்புவதில்லை. பயோனிர்-10, கடைசியாக சென்ற ஜனவரி மாதம் பூமியைத் தொடர்பு கொண்டது. சமிக்ஞைகள் பூமியை அடைய கிட்டத்தட்ட அரை நாளாகும். அது வினாடிக்கு 12 கிலோமீட்டர்கள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பூமிக்கும், விண்கலத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிக மிக அதிகமாகி விட்டதால், அந்த சமிக்ஞைகள் பூமிக்கு கிடைப்பதற்கு முன்பாக வலிமை குன்றி விடுகின்றன.

அந்த விண்கலங்கள் எங்கே சென்று சேரும் எனத் தெரியாது. ஒரு வேளை அந்த விண்கலங்கள் ஏதாவது ஒரு கிரகத்தினை அடைந்து, அந்தக் கிரகத்தில் உயிரினம் இருந்து விட்டால், அவனுக்கு (அல்லது அதற்கு) எப்படி நம்மைப் பற்றித் தெரிவிப்பது? அதற்கு தான் அந்த இரண்டு விண்கலங்களிலும் பூமியைப் பற்றிய தகவல்களை ஒரு தகட்டில் படம் வரைந்து (பிரபஞ்ச மொழி) அனுப்பியுள்ளனர். ஒரு வேளை அந்த தகடு அவனுக்கு கிடைத்து, அவனுக்கும் ஓரளவிற்கு வானவியல் பற்றித் தெரிந்திருந்தால், அவன் பூமியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த கிரகத்தில் உள்ள உயிரினங்கள் ஒரு வேளை, நம்மை விட பல கோடி ஆண்டுகள் பின்னடைந்து இருந்தால் அதனால் ஒரு உபயோகமும் இல்லை.

அந்தத் தகட்டில் ஆண், மற்றும் பெண்ணின் உருவமும், சூரிய குடும்பத்தின் எந்த பகுதியிலிருந்து இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது என்பதற்காக சூரிய குடும்பத்தின் அமைப்பும் வரையப்பட்டுள்ளது.



இந்த யோசனையைத் தெரிவித்தவர்களில் கார்ல் சாகனும் ஒருவர். இவர் ஒரு புகழ்பெற்ற வானவியல் அறிஞர். இவரின் பல புத்தகங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றில் முக்கியமானது Cosmos, Billions and Billions, மற்றும் பல. இதில் Contact என்ற நாவலும் அடக்கம். இது திரைப்படமாகவும் வந்துள்ளது.

இதே போல 1976 ம் ஆண்டு அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலத்திலும் ஒரு தங்கத்திலான CD அனுப்பப்பட்டது. அதிலும் இதே போன்ற ஒரு படம் வரையப்பட்டது. அந்த CD யில் பூமியில் உள்ள பல உயிரினங்களின் சத்தமும், 55 மொழிகளும் (தெலுங்கு, கன்னடா உண்டு. தமிழ் இல்லை), சில பாடல்களும் (ஒரு இந்திய ராகமும்; சுரஸ்ரீ கேசரிபாய் கெர்கரால் பாடப்பட்டது) பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.



ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் அவர்களுக்கு அந்தத் தட்டை பயன்படுத்தத் தெரியுமா என்று?

2. பூமியில் இருந்து வேற்று கிரகங்களுக்கு ரேடியோ அலைகளை அனுப்புதல்

எப்படி பூமி பற்றிய தகவல்களை தகட்டில் பதிந்து அனுப்பினோமோ, அதே போல (ஆனால் விண்கலத்தில் அனுப்பாமல்) வானவெளியில் ரேடியோ அலைகளின் மூலமாக தகவல்களை அனுப்புவது தான் இந்த முறை. பூமியில் நாம் சமிக்ஞைகளை பல செயற்கைகோள்கள், விமானங்கள், இன்ன பிற விண்கலங்களிடமிருந்து பெற்று, அதனை அலசி நமக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதைப் போல வேற்றுக் கிரகவாசிகளும் தகவல்களைப் பெற பெரிய பெரிய ஆண்டினாக்களை உபயோகப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முறை கையாளப்பட்டுள்ளது.

ரேடியோ அலைகள் சக்திவாய்ந்தது மற்றும் எல்லையற்றது. அது சக்தியிருக்கும் வரை (வீச்சினை, வலிமையினை இழக்கும் வரை) பயணம் செய்து கொண்டே இருக்கும். நாம் இப்போது பார்க்கும் பல நட்சத்திரங்கள் பல ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தள்ளி இருந்தாலும் நம்மால் பார்க்க முடிவதற்குக் காரணம், அந்த நட்சத்திரங்கள் வெளிப்படுத்துகின்ற ஒளி அலைகள் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு இங்கு வந்து சேரமுடிவதால் தான். நீங்கள் பார்க்கும் இந்த நிமிடத்தில், அந்த நட்சத்திரங்கள் அழிந்தே போயிருக்கலாம். ஆனாலும் இப்போதும் இருப்பது போன்ற ஒரு தோற்றம் நமக்கு. காரணம், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கிருந்து அந்த அலைகள் பயணம் செய்வதற்கு ஆன கால அளவு தான்.

சரியான வீச்சில் ரேடியோ அலைகளை செலுத்தினால் அவை நீண்ட தூரம் பிரயாணம் செய்து கொள்ளும் திறன் வாய்ந்தவை. அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த முறை பயன்படுத்தப்பட்டது. கிரேட் கிளஸ்டர் என்பது 3,00.000 நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பு. இது ஹெர்குலிஸில், நமது பால்வழித்திரளிலிருந்து சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அந்த கூட்டத்தில் உயிரனம் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இங்கிருந்து அனுப்பும் எந்த ஒரு செய்தியும் (ரேடியோ அலை) அந்தக் கூட்டத்தினை அடைய 25000 ஆண்டுகள் ஆகும். அது சென்று சேர்வதற்கு முன்பு அந்த கூட்டமே இல்லாமல் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது அல்லது அங்கிருந்து நகர்ந்தும் போயிருக்கலாம். நாம் இப்போது காணும் அந்த நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றமே சுமார் 25000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. அதாவது 25000 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை பார்ப்பது போலத் தான். சரி எப்படி இங்கிருந்து அனுப்பினார்கள்?. என்ன அனுப்பினார்கள்?

அரிசிபோ என்ற ட்ரான்ஸ்மிட்டர் மூலமாக 1974 ஆம் ஆண்டு, 2380 MHz அலைவரிசையில் அந்தக் கூட்டத்தினை நோக்கி சக்திவாய்ந்த ரேடியோ அலைகள் மூன்று நிமிடங்களுக்கு அனுப்பப்பட்டன. 25000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அலைகள் அங்கு சென்று சேர்ந்து, அந்த நட்சத்திரங்களும் அங்கேயே இருந்து, உயிரனங்களும் அங்கிருந்தாலும் அவர்கள் பெரிய ராடார்களைக் கொண்டு வரும் செய்திக்காகக் காத்திருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அந்த செய்தி என்னவென்றும் அறியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 25000 ஆண்டுகள் அந்த அலைகள் பயணம் செய்தாலும் அவை சிறிதும் பொலிவிலக்கா வண்ணம், சக்தி வாய்ந்த ட்ரான்ஸ்மிட்டர்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.

சரி நாம் அனுப்பிய அந்த செய்தியில் என்ன இருந்தது?

அந்த மூன்று நிமிடங்களில், 1679 எழுத்துக்கள் கொண்ட ஒரு படமானது (பைட்டுகள்) திரும்பத் திரும்ப அனுப்பப்பட்டது. வரிசையாக 0 வையும், 1 யையும் கொண்டு அடுக்கப்பட்ட எழுத்துக்களாக கோர்க்கப்பட்டது.

ஏன் 1679?

படத்தினை வரிசையான எழுத்துக்களாக அனுப்புவதால், அது ஒரு படம் என்பதனை உணர்த்துவதற்காகத் தான். 1679 என்பது ஒரு பகா எண் (i.e. Prime Number). அதனை 23ம், 79 மட்டுமே வகுக்க முடியும். வேறு எந்த எண்ணும் அதனை வகுக்க முடியாது. ஆதலால் அவன் இந்த 1679 எழுத்துக்களை பெற்று, 23 க்கு 79 அல்லது 79க்கு 23 என அடுக்கும் போது ஒரு சரியான படமும், ஒரு ஒழுங்கற்ற படமும் கிடைக்கும். அவனுக்கு எண் வரிசை தெரிந்து, பகு எண், பகா எண் கருவும் தெரியும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. (வாய்ப்புகள் மிக மிக குறைவே)

நாம் அனுப்பியது 23 க்கு 79. அந்த படமானது இதோ.



இது கீழ்கண்ட செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

மனிதனின் உருவம்
பூமியில் உள்ள தனிமங்களின் வரிசை (ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்,
சூரிய மண்டலம்
டி.என்.ஏ அமைப்பு
எண் வரிசை
அரிசிபோ தொலைநோக்கியின் அமைப்பு

3. வானில் இருந்து வரும் சமிகஞைகளை அலசுதல்

இதைத் தான் இப்போது முழுநேரப் பணியாக பல பல்கழைக்கழகங்களில் செய்து வருகின்றனர்.

இதனை அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். (உங்களுக்குப் பிடித்திருந்தால் கூறுங்கள் அடுத்த பாகத்தில் தொடருகிறேன்)

ஸ்ருசல்

3 கருத்துகள் :

ஜெகதீஸ்வரன் சொன்னது…

Really Nice... Kandippaka Thodaravum !!!

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

மிகவும் அருமையான பதிவாய் இருக்கிறது. தொடருங்கள்.

பரஞ்சோதி சொன்னது…

மிக அற்புதமான பதிவு.

இப்போ தான் பார்க்கிறேன், உடனே சேமித்துக் கொண்டேன், என்னுடைய அறிவியல் பூங்கா பகுதியில் இதை போஸ்ட் செய்ய உங்க அனுமதி தேவை.