வியாழன், ஜனவரி 18, 2007

இப்படிக்கு சூர்யா

நடிகர் சிவக்குமாரின் 'இது ராஜாபாட்டை அல்ல' நான் பத்திரமாக பாதுகாக்கும் புத்தகங்களில் ஒன்று. அவரது இளமைப் பருவம் முதல் தற்போதைய காலம் வரை அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பாதித்தவர்களைப் பற்றியும் அலசிய புத்தகம். 'அலையன்ஸ்' பதிப்பகத்தாருடையது. விலை 350+ (2005-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்)

இவ்வருட புத்தகக் கண்காட்சியில் அப்புத்தக விலை 170 அளவிற்கு குறைக்கப்பட்டது வருத்தம் கலந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு காரணம் புத்தகம் இன்னும் அதிகமான மக்களை சென்றடையும். வருத்தத்திற்கு காரணம் நான் மட்டும் 350 ரூபாய் கொடுக்க வேண்டியதிருந்ததே என்பது தான்.

அதே 'அலையன்ஸ்' பதிப்பகத்தாரிடமிருந்து சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா எழுதிய 'இப்படிக்கு சூர்யா' புத்தகம் பொங்கலன்று வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தைப் புரட்டி பார்த்தேன். சரி தந்தையைப் பற்றியும், தன்னைப் பற்றியும், திரையுலக வாழ்க்கையைப் பற்றியும் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம் என்று தான் வாங்கினேன். விலை ~240.

ஆனாலும் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தகத்தில் கொடுக்குமளவிற்கு சூர்யாவிற்கு என்ன தெரிந்திருக்க முடியும்? அவர் வாழ்வில் அப்படி என்ன சாதித்திருக்க முடியும் (அவரது தந்தை அளவிற்கு அனுபவம் கொண்டவரல்லவே?) என்ற கேள்வியுடன் தான் வாங்கினேன். வியாபார யுத்தி தானோ என்றெல்லாம் கேள்விகள். சரி ஐந்து பக்கங்கள், நல்ல விசயம் இருந்தாலே லாபம் தானே என்று வாங்கிக் கொண்டேன்.

மேலும் அனைத்துப் புத்தகங்களிலும், சூர்யா தனது கையெழுத்தினைப் பதித்திருந்தார். நான் இது அவரே கைப்பட எழுதியதா அல்லது அச்சில் வடிக்கப்பட்டு அச்சிடப்பட்டதா என்று ஆராய்ந்தேன். மேலோட்டமாகப் பார்த்ததில் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நான்கு புத்தகங்களை எடுத்து கூர்ந்து கவனத்துப் பார்த்த பிறகு தான் வித்தியாசம் தெரிந்தது.

'400 புத்தகங்களுக்கு அவரை உட்கார்ந்து கையெழுத்துப் போட்டது...', 'அலையன்ஸ்' நிறுவன ஊழியர் தந்த பதில்.

வீட்டிற்கு இரவு 9 மணிக்கு வந்து புத்தகத்தைப் புரட்டத் துவங்கியதில் பேருந்திற்கு நேரமானது கூடத் தெரியவில்லை. ஆரம்பம் முதல் அற்புதம்.

"முத்து எடுக்கலாம் என்று மூழ்குகிறவன் செத்துப்போவதும் உண்டு.
செத்துப்போகலாம் என்று கடலில் விழுகிறவன் கை நிறைய
முத்துக்களை அள்ளுவதும் உண்டு". நான் இரண்டாவது ரகம்.

கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளிஞ்சல்களைக் கூட
திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கிற
தாழ்வு மனப்பான்மை தான் என் ஒரே சொத்து...."

என்று முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி வரை.

இது போன்ற உவமைகளை விட என்னை மிகவும் கவர்ந்தது: புத்தகமெங்கும் நிறைந்திருந்த 'உண்மை'. தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு, அதுவும் புகழின் உச்சியிலிருக்கும் போது புத்தகங்களில் சொல்வதற்கு பெரிய தைரியம் வேண்டும். அது சூர்யாவிடம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் நாம் இப்போது காணும் சூர்யாவா இது போன்ற செயல்களைச் செய்தது என்று ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகாவும் இருந்தது. ஆனால் 'இவை அனைத்தும் எனது தவறுகள் தான்' என்று ஒப்புக்கொள்ளும் போது, அவர் இப்போதிருக்கும் உயர்ந்த நிலை தெரிகிறது. அதற்கு நிச்சயமாக அவரது வாழ்வில் கிடைத்த வழிகாட்டிகள் தான் காரணமாக இருக்க முடியும்.



பள்ளிப்பருவம்:

அவரது இளமைப் பருவத்தில் அவரை வாட்டிய தாழ்வு மனப்பான்மை, அதன் காரணமாக படிப்பில் ஏற்பட்ட ஈடுபாடின்மை, தம்பியுடனான போட்டி என்று விவரித்திருக்கிறார்.

அப்போது வீட்டுக்கு வந்த யாரோ ஒரு தாத்தா கேட்டர். "தம்பி, நீ என்னாவா ஆகப்போற?"

நான் டாக்டர் அல்லது என்ஜினியர் என்று சொல்வேன் என எதிர்பார்த்தாரோ என்னவோ? நான் அவரிடம் சொன்னது - இது தான்.

"ஐ வாண்ட் டு டை!"

அப்பா:

'அப்பா எனக்கு எல்லாமே தந்திருக்கிறார். ஒரு நடிகரின் புகழ் வெளிச்சம் எங்கள் மீது படாமல் பார்த்துக் கொண்டது தான் அவர் எங்களுக்குத் தந்த மிகப்பெரிய பரிசு. 'கார்ல போய்ட்டு வந்தா நாலு கார் கண்ணாடிக்குள்ளா வாழ்க்கை முடிஞ்சிடும். பஸ்ல போனாதான் நிஜமான வாழ்க்கை எப்படினு புரியும். நிறைய மனிதர்களைப் புரிஞ்சுக்க முடியும். ஸ்கூலுக்குப் பஸ்ல போப்பா', என்று யதார்த்த வாழ்க்கையைக் கற்றுத் தந்தார்.

வண்டியை நிறுத்திவிட்டு நேரே செட்டுக்குள் போய் உட்கார்ந்தேன். பதற்றத்துடன் என்னைப் பார்த்த அப்பாவுக்கு அதிர்ச்சி. "என்னப்பா திடீர்னு?", என்றார். "உங்கப்பா லேட்டு! இன்னும் கிளம்பலையான்னு எரிச்சலோடு தொடர்ந்து மூன்று தடவை ஒருவர் போன் பண்ணினார். அவர் மூஞ்சியைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்", என்று குரலை உயர்த்திக் கத்தினேன்....



நட்பு:

என்னைக் கலங்கி அழ வைத்த நட்பும் உண்டு. 'சரவணா, நான் உன்னிடம் மனம் விட்டுப் பேசி நீண்ட நாள் ஆகிறது. உன்னை சந்திக்க வேண்டும்', என்றார். ஆனால் திட்டமிட்ட நாளில் இருவருக்குமே முடியாமல் போய் விட்டது. ஒரு மாதம் ஓடியிருக்கும். உறுத்தல் விரட்டியடித்ததில் வேலைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு விஜய்யை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்கப் புறப்பட்டேன். ஆச்சர்யம்! எனது செல்போனில், 'விஜய் காலிங்', என்ற டிஜிட்டல் எழுத்துக்கள் மின்னின. விதியின் மேல் வெறுப்பும் விரக்தியும் தந்த போன்கால் அது.

'காக்க காக்க.... கடைசி ஷெட்யூலுக்குப் பணம் இல்லை. குழப்பங்களும், பிரச்னைகளும் திரண்டு எங்களை ஆக்ரமித்த போது, கணம் கலங்கிப் போனோம். ஆனால் படத்தின் கதை எங்களைத் துவளவிடவில்லை. அதை அவ்வளவு விரும்பிக் காதலித்தோம். ஆசையாக என் கையால் தங்கைக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி பரிசளித்து விட வேண்டும் என்று போக்கிஷமாய் மூன்று லட்ச ரூபாய் சேர்த்து வைத்திருந்தேன். அதைத் தயங்காமல் எடுத்தேன். என்னைப் போலவே ஜோதிகாவும் கதையை நேசித்தவர். அவரது தந்தையிடம் எடுத்துச் சொல்லி, மூன்று லட்ச ரூபாய் வாங்கிக் கொடுத்தார். இறுதியாகக் கெளதம், அவரது மனைவியின் மொத்த நகைகளையும் விற்று விட்டார்'.

ஒரு சிறந்த படத்தின் (நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை) வரலாறு தெரிகிறது.

பாசம்:

மெல்லிய முனகலோடு ஒவ்வொருவராக அழைத்து எங்கள் முகங்களை இரு கைகளால் ஏந்தியபடி "என் செல்லங்களைப் பார்த்துட்டேன்" என்றவர் என் முறை வந்த போது, "சாப்டியா கண்ணு" என்றார். அவரது கடைசி மணித்துளிகள் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நான், "நாய்க்குட்டிக்கு அப்பாக்கிட்ட சொன்னியா இல்லையா?", என வெடுக்கென்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பாராமல் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டேன். பிறபகல் பள்ளி முடிந்து வந்தபோது....

பாட்டியிடம் நாம் நெருக்கமாக இருக்கவில்லையே என்ற குற்ற உணர்வு, நண்பன் விஜய் மரணத்தின்போதும் என்னைக் கூண்டில் ஏற்றி விசாரித்தது.

சென்னையில் அம்மாவின் தனிமையைப் போக்கிய துணையான ஜானகியின் தங்கை சின்ன லக்ஷ்மி. எங்கள் வீட்டில் நடந்த தீ விபத்தில் ஜானகி இறந்து போனார். தன்னுடைய பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கிப் போனது என் குடும்பம். மூத்த மகளை அடக்கம் செய்த மறுநாள், 'லக்ஷ்மி இங்க இருக்கட்டும் மச்சான்' என்று இரண்டாவது மகளைப் பெருந்தன்மையாக விட்டுவிட்டுப் போனார் என் அத்தை வீட்டுக்காரர். 'ஏற்கனவே ஒரு பொண்ணைக் கொன்னுட்டேன். இன்னொரு பொண்ண இங்க விட்டுட்டு போகாதீங்க', என்று அப்பா கலங்கியபோது, 'ரெண்டு குழந்தைகளைத் தூக்கி வளர்ந்தீங்க, அதுல ஒண்ணு போயிடுச்சு. இன்னொண்ணு உங்ககிட்ட இருக்கிறதுதான் நியாயம்' என்று சொல்கிற மனிதர்களால் தான் நம் நாட்டில் இன்னமும் கிராமங்கள் அழகாக இருக்கின்றன.




வேலை:

"யாருடைய சிபாரிசும் இல்லாமல் நானே தேடிக்கொண்ட வேலை. .... கனவுகளோடு முதல் தேதி காலை எட்டு மணிக்கு ஃபேக்டரியில் இருந்தேன்.... என்னப்பா இன்னிக்கும் ஆபிஸ் பாய் லீவா?' என் டேபிள் இவ்ளோ மோசமா இருக்கு", என்று கத்திக்கொண்டே "ஹலோ மிஸ்டர் சரவண்ன்" .... "தொடப்பம் இருக்கும்.. எடுத்து ஆபிஸ் ரூமைக் கூட்டிப் பெருக்குங்க...", என்றார்.

திரையுலகப் பிரமுகர்கள்:

'சேது' படம் பார்த்து விட்டு, வாயடைத்துப்போய் அவரைத் தேடியபோது, அந்த ப்ரீவியூ தியேட்டரில் ஒரு சாதாரண ஊழியரைப் போல, லிஃப்ட்க்குப் பக்கத்தில் சுவரோடு சுவராக நின்றிருந்தார். ஒட்டு மொத்த உடம்பிலும் இருபத்தைந்து கிலோ சதையிருந்தால் அதிகம். நெஞ்சுக்கு மேலே பட்டனைத் திறந்து விட்டுக் கொண்டு, சட்டையைக் கை முட்டி வரை மடித்து விட்டிருந்தவரின் பாதங்களில் சாதாரண ஹவாய் காலணிகள்....

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டில் ஒரு நாள் ஸ்டண்ட் பிராக்டிஸ்ல உடம்பெல்லாம் மண்ணும், வியர்வையுமா இருந்தேன். அங்கே பக்கத்திலேயே ஜோதிகாவோட ஷூட்டிங். 'நம்ம கூட நடிச்ச் பொண்ணு 'குஷி', 'தெனாலி',-ன்னு எங்கேயோ உயரத்துக்குப் போயிடுச்சு. நாம என்னன்னா, இப்போதான் பல்டி அடிக்கவே கத்துக்கறோம்'னு நினைச்சிட்டுருக்கும் போது, 'சார் ஜோதிகா மேடம் கூப்பிடுறாங்க'ன்னு ஒருத்தர் வந்து கூப்பிட்டார். 'நான் எதுக்கு அவங்களைப் பார்க்க வரணும்? வேலையா இருக்கேன்'னு சொல்லி அனுப்பிட்டேன். மறுபடியும் அவர் திரும்ப வந்து கூப்பிடவே.. போனேன். 'என்ன சூர்யா, என்னை ஞாபகம் இருக்க?ன்னு கேட்டு செமத்தியா கலாச்சுட்டாங்க. 'என் படங்கள் பார்ப்பீங்களா'ன்னு கேட்டாங்க. 'ஓ... பார்ப்பேனுங்க'ன்னு அப்பாவியா சொன்னேன். 'அட்லீஸ்ட் ஒரு போன் பண்ணிப் பாராட்ட மாட்டீங்களா?'ன்னு கேட்டாங்க....

'நந்தா'வுக்கு அப்புறம் என்ன பண்ணுறதுன்னு நான் குழப்பத்தில் இருந்த போது ஜோதிகாவிடமிருந்து போன்....

அம்மா:

நான் சினிமாவுக்கு வரும் போது, அம்மாவுக்கு தந்த ஒரேயொரு சத்தியத்தை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. 'காதல் எல்லாம் சினிமாவில் மட்டும்தாம்மா. நிஜத்தில் நீங்க பார்க்குற பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்' என்று உறுதி சொல்லியிருந்தேன். எனக்கும் ஜோதிகாவிற்கும் நடந்த கல்யாணம், அம்மா எனக்காக விட்டுத் தந்த விஷயம்.

இன்னும் நிறைய கொடுத்துக்கொண்டே செல்லலாம். புத்தகமாகப் படியுங்கள். இன்னும் சுவாரசியாமாக இருக்கும். ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்தில் வரும் உவமைகள், உண்மையிலேயே சூர்யா எழுதியது தானா? உண்மை என்றால் ஆச்சர்யம்.

ஸ்ருசல்

புதன், ஜனவரி 17, 2007

கொடைத்தன்மையும் மடத்தன்மையையும் - சென்னைப் பயணம் - 2

மாலை நான்கு மணிக்கு பச்சையப்பா கல்லூரியை ஒட்டியிருந்த பள்ளியில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஆட்டோ கட்டினோம்.

எவ்வளவு மக்கள்! என்ன ஒரு கூட்டம்! எவ்வளவு விற்பனை!

மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற ஆண்டு பெங்களூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் 'ஈ' ஆடியது. இந்த பகுதியிலிருந்து பார்த்தால் கண்காட்சியின் மறுமுனையில் கட்டியிருந்த பந்தலின் கயிறு தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் முதன் முதலாக சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற எனக்கு, கூட்டத்தைப் பார்த்து ஆச்சர்யம். 270 கடைகள் இக்கண்காட்சியில் இருப்பதாக வாசலிலிருந்த விளம்பரத்தில் பார்த்தேன். ஆனால் 270 கடைகள் இருந்ததா எனத் தெரியவில்லை. ஒரு வேளை டீ, காபி, பாப் கார்ன் கடைகளையும் சேர்த்து எழுதியிருப்பார்களோ?

எக்கடைக்குள்ளும் செல்லக்கூடாது; சென்றால் அங்கேயே பொழுதினைக் கழிக்க வேண்டிய நிலை வரும் என முடிவெடுத்து அனைத்துக் கடைகளையும், அக்கடை வாசலிலிருக்கும் புத்தகங்களை ஒரு பார்வையிட்டு விட்டு, பின்பு மீண்டும் தேர்ந்தெடுத்த கடைகளுக்குச் செல்ல முடிவெடுத்தோம்.

கடைசியாக, முதலில், காலச்சுவடுக்கு சென்றோம்.

சென்ற ஆண்டு கண்காட்சியில் (பெங்களூர்) கிடைக்காத பல புத்தகங்கள் கிடைத்தன.

ஒரு புளியமரத்தின் கதை
புதுமைப்பித்தன் கட்டுரைகள்

வாங்கிக் கொண்டேன். அவற்றுடன் 'சித்திரம் பேசுதடி' புத்தகமும் எடுத்துக் கொண்டேன். 'காலச்சுவட்டில்', சென்ற ஆண்டு வாங்கிப் படித்த 'புழுதியில் சில சித்திரங்கள்' புத்தகத்தைப் பற்றி நணபனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது 'நான் தான் அந்தப் பாத்திரம்', என்றோரு குரல். அவருடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.



அப்போது நடிகை ரோகிணி அக்கடைக்கு வந்தார். அவரை நான் தேடிக்கொண்டிருந்தது போல், அவரே வந்து சேர்ந்தார். குரு படத்தில் பின்னணி அவரா என்ற ஐயம் இருந்தது.

அதை உறுதி செய்ய,

'நீங்க நடிகை ரோகிணி தானே'

'ஆமா'

'குரு படத்துல ஐஸ்வர்யாவிற்கு பின்னணி பேசுனது நீங்க தா....'

'நான் தான் பேசியிருந்தேன். நல்லாயிருந்துச்சா?'

'இம் நல்லா இருந்துச்சு'

'படம் எப்படி இருந்தது'

'ஹிந்தி குருவை விட தமிழ் குரு ரொம்ப நல்லாயிருந்தது'

'சூர்யா-ல்ல'

'சூர்யாலாம் காரணம்ன்னு சொல்ல மாட்டேன்'

'பின்ன?'

'ஹிந்தி குரு-ல ஏகப்பட்ட வசனங்கள்.....எனக்கு ஒண்ணும் புரியலை. எனக்கு தான் ஹிந்தி தெரியாதே. தமிழ்ல பார்த்த பிறகு தான் புரிஞ்சது...'

'....'

சே! உண்மையை சொல்லியிருக்கக் கூடாதோ?

'உங்களோட குரல்ன்னு என்னால கண்டுபிடிக்கவே முடியலை.... நான் சவீதாவோ இருக்குமோன்னு நெனச்சிட்டு இருந்தேன்'

'ஓ ஹோ.. சவீதா எல்லாம் எப்படி தெரியும்?'

'இம். சும்மா பார்க்குறது தான்'

'இருவர்'-ல கூட ஐஸ்வர்யாக்கு நான் தான் குரல் கொடுத்திருந்தேன்'

'அப்படியா?', உணமையிலேயே ஆச்சர்த்துடன் தான் கேட்டேன்.

''மகளிர் மட்டும்' மாதிரி படங்கள்ல உங்க குரலை சுலபமா கண்டுபிடிச்சிடலாம். ஆனா இந்தப் படத்துல கொஞ்சம் கூட கண்டே பிடிக்கமுடியலை'

'கண்டுபிடிக்க முடியலைன்னா நல்லது தானே'

'ஆமா ஆமா. உண்மை தான்'

'வேட்டையாடு விளையாடு படத்துல கூட 'ஜோ' க்கு நான் தான் பின்னணி'

இன்னொரு 'அப்படியா', போட்டேன்.

தற்போதெல்லாம், அனைத்துப் படங்களிலும் இறுதியில் மட்டுமே பெரும்பாலான கலைஞர்களின் பெயர் வருவதால், கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், அநேகமான தியேட்டர்களில் படம் முடிந்ததுமே நிறுத்தி விடுகிறார்கள். Credits கூட காட்டுவதில்லை.

..... சிறிது நேரம் பேசி விட்டு சலாம் போட்டு விட்டு நடையைக் கட்டினேன்.

அடுத்து அலையன்ஸ்...

வேண்டுமளவிற்கு 'சோ' புத்தகங்களை அள்ளிக்கொண்டேன்.

'வந்தே மாதரம்'
'ஒண்ணரை பக்க நாளேடு'
'கூவம் நதிக்கரை ஓரத்தினிலே 1, 2, 3'
'சர்க்கார் நுழைந்த வீடு'
'சோ கேள்வி பதில் 1, 2'

இன்னும் மூன்று புத்தகங்கள்.

சூர்யா எழுதி பொங்கலுக்கு வெளியிடப்பட்ட 'இப்படிக்கு சூர்யா' புத்தகத்தையும் எடுத்துக் கொண்டேன்.

அடுத்த கடையில் ஒரு வாலிபர் 'ஷார்ட்ஸ் - டி.சர்ட்' போட்டுக் கொண்டு 'அந்த புத்தகம் எடுத்துக் கொடுங்க', 'இவங்களுக்கு இது எடுத்துக் கொடுங்க' என்று கூறிக்கொண்டிருந்தார். அது 'கிழக்குப் பதிப்பகம்', பத்ரி.

கடைசியாக விகடன் பிரசுரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.

'துணையெழுத்து',
'கற்றதும் பெற்றதும் - 3'
'உயிர்',
இன்னொரு புத்தகம்

பர்ஸில் இருநூறுக்கு மேல் பணமில்லை. நல்ல வேளை 'கடன் அட்டை' ஏற்றுக்கொள்ளப்படும் என்று போடப்பட்டிருந்ததால், பிழைத்தேன். ஆனால் முன்னூறு ரூபாய்க்கு

மேலிருந்தால் மட்டும் தான் என்றிருந்தது. விலையைக் கூட்டினேன். கிட்டத்தட்ட நானூறு ரூபாய்க்கு இருந்தது.

பக்கத்தில் இன்னொரு வாலிபர் பர்ஸைத் துளாவிக்கொண்டிருந்தார். அவரிடமும் பணமில்லை. அட்டை மட்டுமிருக்கிறது. ஆனால் மொத்தம் 240 மட்டுமே வந்தது.

என்னுடைய ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதனுடம் இணைக்கச் சொல்லிவிட்டு, 70 ரூபாய் பணமாகக் கொடுத்தேன்.

'என்னே ஒரு கொடைத்தன்மை', என்று என்னை நானே புகழ்ந்து கொண்டிருந்த போது, ஒரு கணம் திடுக்கிட்டு போனேன்.

காரணம். எனக்கு மொத்தம் 300 ரூபாய் வருமா என்பதே. கூட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட 300 வந்தது. ஆனால் டிஸ்கவுண்ட்-ஐ நான் சேர்க்க மறந்து விட்டேன். கடைசியில் பார்த்தால் ~270 மட்டுமே வந்தது. ஆஹா... 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கப் போய், நாம பிச்சையெடுக்க வேண்டியதாகி விட்டதே' என்று விழி பிதுங்கி நின்றேன்.

விகடன் பிரசுரத்தார்கள், பெருந்தன்மையுடன் 'கார்டை' பெற்றுக்கொண்டு ரசீது கொடுத்தார்கள்.

அனைத்துப் புத்தகங்களையும் மூட்டைக் கட்டிக் கொண்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி 9.

10.30 க்கு மீண்டும் கோயம்பேடு சென்று பஸ் பிடிக்க வேண்டும்.

சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது மணி 10.15.

வழக்கம் போல ஆட்டோவிடம் தகராறு.

'ஹீம். இரண்டு நாள்ல ஆட்டோவிற்கு கொடுத்த பணத்தைக் கொண்டு ஒரு ஆட்டோவே வாங்கியிருக்கலாம். அவ்வளவு காசு. நாமே ஆட்டோ கூட ஓட்டலாம் போல. நல்ல வருமானம்', என்று கூறினேன்.

'ஆமா சார். நல்ல பிசினெஸ் என்றார்'.

'ஆமா. ஆபிஸிற்கு பைக்ல போனால், சவாரி ஏத்த முடியாது. ஆனா ஆட்டோல போனா, வர்ற வழியிலேயே இரண்டு பேரை சேர்த்துக்கிட்டா, பெட்ரோலுக்கும் ஆச்சு. ஈ.எம்.ஐக்கும் ஆச்சு'

'ஆமா சார்'

'ஆனா ஆட்டோவை எங்க பார்க் பண்ணுறது? ஆபிஸ்-ல எப்படி விடுவாங்க', இது நண்பர்.

முந்தய நாள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது அந்த ஓட்டுனர் கூறியது தான் ஞாபகம் வந்தது.

'சார் வெயில் படம் தாங்க முடியலை'

'ஆமா அதை ஏன் கேக்குறீங்க.. சத்யத்துல தான் பார்த்தேன். கொடுமை', என்றேன்.

'நானும் சத்யத்துல தான் சார் பார்த்தேன்'

'எப்ப பார்த்தீங்க?. நான் பார்த்து மூணு வாரம் இருக்குமே. இன்னுமா மெட்ராஸ்ல ஓடுது?'

'போன வாரம் போனேன் சார். அதுவும் பேமிலியோட... ஆட்டோல'

'ஓ!'

'அதுல படம் தான் பெரிய பிரச்சனைன்னா ஆட்டோ அதை விட பெரிய பிரச்சினை. ஆட்டோவை பார்க் பண்ண விட மாட்டேண்டாங்க...'

'ஏன்?'

'ஆட்டோக்கு எல்லாம் பார்க்கிங்க் கிடையாது. நாலு சக்கர வண்டிக்கு மட்டும் தான்னு சொன்னாங்க....'

'டிக்கெட் எடுத்திருக்கேன். பேமிலியோட வந்திருக்கேன்னு சொன்னாலும் கேட்கலை. கடைசியா பக்கத்துல தெரிஞ்ச கடைல போய் பார்க் பண்ணிட்டு வந்தேன் சார்...'

இந்த ஞாபகம் வந்ததால், ஆட்டோ வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு, கோயம்பேடு நோக்கி நகர்ந்தோம்.

தனியார் பஸ் நிறுத்த வளாகத்தின் நுழைவாயிலில் ஒரு 50 வயதிருக்கும் நபர், 'சார் பெங்களூரா', என்றார்.

'ஆம்', என்று கூறி முடிப்பதற்குள் ஆட்டோ ஓட்டுநர் அருகில் ஜம்ப் செய்து அமர்ந்து கொண்டார்.

'ஏன் பஸ் எனக்காக வெயிட்டிங்கா', என்று கேட்டேன்.

'சார். ஜி.ஆர். (ஏதோ சொன்னார்) டிராவல்ஸ் பஸ் இருக்கு. அதுல போயிடலாம்'

'அப்ப இது 'கே.பி.என்'-க்கு இல்லையா?'

அப்போது தான் உறைத்தது.

'இல்லை'

'எங்கிட்ட கே.பி.என். டிக்கெட் இருக்கு. வண்டியை விட்டு இறங்குங்க சார்'

'சார் நானூறுவா தான் ஆகும்'

'அய்யா சாமி. எங்கிட்ட டிக்கெட் இருக்குதுங்க. அத விட்டுட்டு திரும்ப 400 ரூபாய் போட்டு எதுக்கு நான் டிக்கெட் எடுக்கணும்?, நீங்க முதல்ல இறங்குங்க'

ஆட்டோவை மெதுவாகச் செலுத்தி அவரை ஓட்டுநர் இறக்கி விட்டார்.

அப்போது இன்னொருவர், 'சார் எங்க போகணும்', என்று ஆட்டோவிற்குள் ஏற முயன்றார்.

'நான் எங்கயேயும் போகலை. சும்மா கோயம்பேடுக்கு வந்தேன். ஆளை விடுங்க', என்று அருகில் கிளம்பத் தயாராக இருந்த பஸ்ஸிற்குள் தாவினேன்.

பின்னாடியே ஓடி வந்த பஸ் நிறுவன ஊழியர்,

'சார் சார் U14-ஆ?', என்றார்.

'ஆமா'

'சார் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்'

'என்ன தரைல படுத்து தூங்கணுமா? பஸ்ல இடம் கொடுக்குற வரைக்கும் எனக்கு ஓ.கே', என்று அவர் கூறியபடி இன்னொரு சீட்டில் சென்று படுத்தேன்.

பேய்களின் ரத ஊர்வலம் மாதிரி, 3.15 மணிக்கெல்லாம் பெங்களூரில் அம்போவென்று இறக்கி விட்டு விட்டு, தனது வலத்தை மீண்டும் தொடங்கியது.

பெங்களூரிலிருந்து சென்னைக்குச் செல்ல, 8.30 மணி நேரமானது. ஆனால் திரும்ப வருவதற்கோ 4.30 மணி நேரம் மட்டுமே. எதனால் இப்படி? சிறிதும் பொறுப்பில்லாமல் ஓட்டும் ஓட்டுநர்கள் காரணம் என்று அடித்துச் செல்லலாம். இதனை எழுதி முடிக்கும் இத்தருவாயில் வந்த செய்தி: கே.பி.என் ஆம்னி பஸ் - டேங்கர் லாரி மோதி 4 பேர் பலி. 30 பேர் பலத்த காயம்.

செவ்வாய், ஜனவரி 16, 2007

பிளாக் கேட்ஸ் சுட்டுடுவாங்க... சென்னைப் பயணம் - 1

பொங்கலுக்கு சொந்த ஊருக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணம் சனிக்கிழமை இரவு வரையில்லை. காலையில் அலுவலகம் (இலவச பிரவுசிங் செண்டர்) சென்று விட்டு பொழுது போகாமல், நண்பனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருக் கொண்டிருந்தேன்.

'நாளைக்கு என்ன பிளான்?', என்று கேட்டேன்.

'குரு பார்க்கலாம்ன்னு இருக்கேன். ஹிந்தி'

'நான் ஏற்கனவே ஹிந்தில பார்த்துட்டேன். ஒண்ணும் புரியலை. தமிழ்ல பார்க்குறேன்னா சொல்லு சென்னைக்கு வர்றேன்'

ஆனால் சென்னை செல்ல டிக்கெட்? இரவு பத்து மணிக்கு தனியார் பஸ் நிறுவனத்திற்கு எண்களைச் சுழற்றினேன். (இன்னும் சுழற்றினேன் தானா?)

'சார் பத்தரை மணிக்கு பஸ். ஒரே ஒரு டிக்கெட் இருக்கு. ரிட்டன் டிக்கெட்டோட.. இங்க ஒருத்தர் சேன்சல் பண்றதுக்காக வந்திருக்கார். ஒரு 20 நிமிசத்துல வந்தீங்கண்ணா நல்லா இருக்கும்'

உடனே பெட்டியைக் கட்டிக் கொண்டு ஆட்டோ பிடித்தேன். சாதாரணமாக ஒரு மணி நேரம் பிடிக்கும் இடத்திற்கு இருபது நிமிடத்தில் சென்று அந்த நபரை சந்தித்தேன்.

நண்பருடன், உற்சாகத்துடன், காத்திருந்தார். பணத்தைக் கொடுத்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.

காலை எட்டு மணிக்கு சென்னையை அடைந்தேன். நண்பன் வீட்டிற்குச் சென்று நாளிதழைப் புரட்டினோம். ரோகிணி, ஆல்ப்ர்ட், மற்றும் உட்லண்ட்ஸில் குரு தமிழ் பதிப்பு.

முதல் வேலையாக சரவண பவன் சாப்பாடு. சாம்பார் வடை கேட்டால், இன்னும் வடையை நெய்யில் மிதக்க விட்டுத் தான் கொடுக்கிறார்கள்.

முடித்து விட்டு நேராக, ரோகிணி தியேட்டருக்குச் சென்றோம். வாசல் முழுவதும் கூட்டம். ரோகிணி அனைத்து அரங்குகளிலும் 'அல்டிமேட் ஸ்டார்' விருட்சிகக் குமார் படம்.

'தோல் வார்' படத்திற்கு டிக்கெட் வாசலில் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. 'குரு' படம் ஓடுவதற்கான ஒரு அடையாளமும் இல்லை.

டிக்கெட் கவுண்டரில் சென்று, 'குரு-க்கு டிக்கெட் இருக்கா....', என்றேன்.

'இன்னும் பெட்டி வரலை'

மலேசியாவில தமிழ் பதிப்பு ஓடுது; சிங்கப்பூர்ல தமிழ் பதிப்பு ஓடுது; பெங்களூர்ல கூட இன்னைக்கு ரிலீஸ்ன்னு சொல்லுறாங்க; இங்கேயேப் படம் எடுத்து, பக்கத்துல பிரிண்ட்
போட்ட 'குரு' படத்தோட பெட்டி இங்க இன்னும் வரலையா?.

அஜீத்தின் திருவிளையாடல்.

அருகிலிருந்த அஜீத்தின் இளம் ரசிகர், 'இன்னா படம்?', என்று, அஜீத்திற்கே போட்டியா, என்ற கோபத்தில் கண்கள் கொப்பளிக்க வினவினார்.

'குரு'

'அப்படின்னா..... யாரோடது?'

நான் என்ன சொல்வது? அபிஷேக் படமென்றா? ஐஸ்வர்யா ராய் படமென்றா? அல்லது ரகுமானுடைய படமென்றா?

'மணிரத்னம்', என்றேன்.

'மணிரத்னம் யார்?' என்று கேட்டுவிடுவாரோ என்று அச்சத்துடன் பாவமாகப் பார்த்தேன்.

'ஓ' போட்டுவிட்டு வேலையைப் பார்க்க கிளம்பி விட்டார் அவர்.

அடுத்து நேராக உட்லாண்ட்ஸ்.

வாசலில் பத்து, இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்ததும், இங்கே கண்டிப்பாக 'குரு' ஓடும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. டிக்கெட்டும் கிடைத்தது.

படம் எப்படியா? இங்கே படிக்கவும்.

மாலை ஸ்பென்சர் - லேண்ட்மார்க். பல புத்தகங்களைப் புரட்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. பிடித்த புத்தகங்களின் விலை 2000, 3000. விழி பிதுங்கியது.

அங்கிருந்து நடையைக் கட்டி விட்டு, காமராஜர் அரங்கம் சென்றோம். 6.30-க்கு துக்ளக் ஆண்டு விழா. சென்ற ஆண்டு இடப்பற்றாக்குறை காரணமாக வாசலில் வாசகர்கள் அமர்ந்து பார்த்தார்கள் என்று படித்ததன் விளைவாக, ஒரு 5.45க்கு அங்கு சென்று விட்டால், எப்படியாவது உள்ளே சென்று விடலாம் என்று மாஸ்டர் பிளான் தீட்டி அரங்கை
நோக்கிச் சென்றோம்.

அடா அடா... வாசல் படிக்கட்டுகளில் ஒரு நூறு, இருநூறு பேர் அரங்க வாயிலை (சாலையை) நோக்கியவாறு அமர்ந்திருந்தார்கள். கதவினருகில் இரு காவலர்கள்.

நண்பனிடம், 'நல்லவேளை சீக்கிரமே வந்துட்டோம். இன்னும் கேட் திறக்கலை போல. ஒரு 200 பேர் கூட இருக்க மாட்டாங்க. எப்படியும் உள்ள போய் மூணாவது சீட்ல உக்காந்துடனும்'.

'மக்கள் எவ்வளவு அமைதியாக, யாருடைய வருகைக்காகவோ அமர்ந்திருக்கிறார்கள். பரவாயில்லை ஒரு கட்டுக்கோப்போட உட்கார்ந்திருக்காங்க', என்று பேசிக்கொண்டிருந்தோம்.

6:00 மணி. சோ வந்தார்.



வாயிலில் அமர்ந்திருந்தவர்கள் கைத் தட்டி வரவேற்றார்கள். ஆனால் ஒரு சிலரைத் தவிர யாரும் அவரிடம் பேசி விட வேண்டும் என்று வாசல் படிக்கட்டுகளை விட்டு எழவில்லை.

'அழகு! யாருமே அவரை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு எவ்வளவு அமைதியா இருக்காங்க', என்று அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

சோ, அங்கு அமர்ந்திருந்தவர்களிடம், 'எல்லாரும் மன்னிச்சுக்கணும். இந்த தடவையும் இடப்பற்றாக்குறை. உங்களுக்கு எல்லாம் உள்ள இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை. வெளில உட்கார்ந்து பார்க்குறதுக்கு புரஜக்டர் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கோம். கோவிச்சுக்காம பாருங்க', என்றார்.

'என்னது? இடப்பற்றாக்குறையா? அப்ப பவ்யமா வாசலைப் பார்த்து உட்கார்ந்திருக்குறவங்க?'

அவங்க எல்லாம், 6.30 மணிக்கு வைக்கப்படும் புரொஜக்டர் திரைக்காக, 5.30 மணிக்கே 'பெவிக்கால்' போட்டு அமர்ந்திருக்கும் மக்கள்.

அப்போது தான் சற்று சுதாரிப்பு வந்து, அருகிலிருப்பவரிடம், 'அப்ப எப்ப கேட்டை ஓப்பன் பண்ணுணாங்க? உள்ள இருக்குறவங்க எப்ப உள்ள போனாங்க?', என்றேன்.

'அவங்க எல்லாம் மத்தியானம் ஒரு மணிக்கே வந்துட்டாங்க', என்றார்.

அடப்பாவிகளா? வேற வேலையே இல்லையா? எப்படி மத்தியானம் ஒரு மணியில இருந்து 6.30 மணி வரைக்கும் ஒரே இடத்துல?

'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', படத்தில் மகனின் திருமணத்தில் சாப்பாட்டுச் செலவைக் குறைக்கும் எண்ணத்தில் கவுண்டமணி, பந்த் அன்று திருமணம் ஏற்பாடு செய்திருப்பார். ஆனால் அவரது எண்ணத்திற்கு மாறாக, பெரும் கூட்டமே சாப்பிடுமிடத்தில் இருக்கும். 'இன்னைக்கு பந்த்-ன்னு தான் முந்தா நேத்தே சத்திரத்துல வந்து படுத்துக்கிட்டோம்', என்று சொல்லும் மொட்டை தான் ஞாபத்திற்கு வந்தார்.

நம்மால முடியாதுப்பா என்று நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாம் ஐக்கியமானோம். படிக்கட்டுகளின் மீதேறி அரங்க நுழைவாயிலிருந்த 20 அடி உயரமான திண்டின் மீது, விழுந்து விடுவோமோ என்ற பயத்துடனே, அமர்ந்தோம்.

6.30-க்கு சோ பேச ஆரம்பித்தார். வாசகர்கள் கேள்வி கேட்டார்கள். பதிலளித்தார்.

ஒருவர், 'சென்னையில் பல இடங்களில் நடைபாதைகளில் சில்லரை வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கிறார்கள். அவங்களால நிறைய பேருக்குப் பிரச்சினை. இதுக்கு நீங்க தான் ஏதாவது செய்யணும்'

'இவரை எல்லாம் யார் கேள்வி கேட்ட விட்டது', என்று சோ தனது இரு கைகளையும் பின்புறம் துளாவி சிலரை தேடினார். ஆனால் அவர் துளாவியதற்கு 1 கி.கிராம் காற்று மட்டுமே கிடைத்தது. அவரின் கோபம் புரிந்தோ என்னவோ அருகிலிருந்த உதவியாளர் பல அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தார்.

ஆதலால் வழக்கம் போல, இரு கைகளையும் நம்பியார் போல் சேர்த்து, 'இக் கூம் இக் கூம்' என்று இருமியபடியே

'பிளாட்பாரங்கள்ல் ஏன் மக்கள் கடை போடுறாங்கன்னு பார்த்தோம்னா... இட நெருக்கடி..', என்று 'மக்கள் ஆட்சி' மம்மூட்டி போல் ஏதோ சமாளித்தார். (இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதியது).

8 மணியளவில், அத்வானி பேச ஆரம்பிக்கும் போது, 'நாம எஸ்கேப் ஆகிடுவோம் என்று நினைத்து வெளியேற நினைத்தால், படியெங்கும் கூட்டம்.

சரி திண்டின் மீது குதித்தேறி வெளியேறலாம் என்று திண்டின் மீது நடப்பதற்கு ஆயத்தமானேன்.

'சார். பிளாக் கேட்ஸ் இருக்காங்க சுட்டுடுவாங்க....', அருகிலிருந்த நபர் தடுத்தார்.

அதிர்ச்சியில் இரு அடி பின்னெடுத்து வைத்து, 'ஏன்?' என்றேன்.

'ஏதோ தீவிரவாதின்னு நினைச்சு சூட் பண்ணிடப்போறாங்க', என்றார்.

'என்னங்க அத்வானி உள்ள பேசிட்டு இருக்கார். நாமெல்லாம் வெளிய உட்கார்ந்திருக்கோம். நான் அரங்கத்தை விட்டே வெளிய போகலாம்னு போறேன். இதுக்கு ஏன் சுடுறாங்க'

'பிளாக் கேட்ஸ்க்கு அதெல்லாம் புரியாது. டவுட் வந்து சுட்டிடுவாங்க', என்று மீண்டும் எச்சரித்தார்.

'என் அறிவுச் சுடரே...மணியே', என்று அவரைப் பாராட்டி விட்டு அவர் கூறியபடியே, படி வழியாக மக்களை விலக்கி வெளியே வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலை 9 மணிக்கு தான் எழுந்தோம்.

10.30 மணிக்கு சரவண பவனில் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். கோவிலுக்கு சென்று விட்டு சாப்பிட வந்திருக்கலாமோ என்று தோன்றிற்று.

சரி விடு. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் என்று மனசைத் தேற்றிக் கொண்டு, ஆட்டோவில் ஏறி சரவண பவனை நோக்கிச் சென்றோம்.

'ஆட்டோ எவ்வளவு?'

'முப்பது'

'அங்க போறதுக்கே 20 தான். நூறு மீட்டர்க்கு முப்பதா? 15 தர்றோம்'

'சார் இன்னும் அஞ்சு ரூபா கொடுங்க சார்...'

'இதுவே சாஸ்தி தான் சார்'

சரவண பவன் வாசலில் வந்து ஆட்டோ நின்றது.

'இன்று விடுமுறை' என்ற அறிவிப்புப் பலகை தொங்கியது. அடப்பாவியா சக்கரைப் பொங்கல் சாப்பிடலாம்னு வந்தா.. என்று புகைந்து கொண்டிருக்கும் போதே ஆட்டோ ஓட்டுநர்,

'என்ன சார்... சாப்பிட வந்தீங்களா', என்று வெறுப்பேற்றினார்.

'பின்ன சரவண பவனுக்கு படம் பார்க்கவா வருவாங்க... ஏன் சார் நீங்க வேற', என்று நொந்து பணத்தை கொடுத்தேன்.

சரி ஆசைப்பட்டபடியே கோயில். வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று விட்டு, வசந்த பவன்.

காலையில் சினிமா; மாலையில் புத்தகக் கண்காட்சி; இரவு இனிதே ஊர் திரும்புதல் என்று இன்பச் சுற்றுலாவிற்கு பிளான் போடுவது போல் பிளான்.

மணி 12.00. நேராக தேவி.

வாசலில் யாரும் பிளாக்கில் டிக்கெட் கிடைப்பதற்கான அடையாளமே இல்லை. ஆஹா மாட்டுனோம்டா என்று டிக்கெட் கவுண்டரை நெருங்கினோம்.

'போக்கிரி டிக்கெட் இருக்கா'

'இங்க இல்ல. முன்னாடி விப்பாங்க அங்க வாங்கிக்கங்க...'

'அடப்பாவியா? அந்த அளவுக்கு ஆகிடுச்சா நிலைமை?' என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பாக, அத்தியேட்டர் ஊழியர் நேராக வந்து,

'என்ன டிக்கெட் வேணுமா?', என்றார்.

'ஆமா'

'ஒரு டிக்கெட் தான் இருக்கு'

'எனக்கு ரெண்டு வேணுமே'

அருகிலிருந்த இரண்டாம் முந்திரிக்கொட்டை புலிகேசி, எனக்கு கொடுங்க நான் வாங்கிக்கிறேன் என்று கையை நீட்டினார்.

தியேட்டர் ஊழியர், பழனி விபூதியை எடுத்து மு.கொ.புலிக்கேசிக்குக் கொடுப்பது போல், ஒரு பொட்டலத்தைத் திறந்து போக்கிரி டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். கஞ்சா விக்கிற மாதிரிலடா விக்கிறீங்க!

எத்தனை கோடி ரூபாய்க்கு டீல் முடிந்தது என்று தெரியவில்லை.

வெளியே சுட்டெரிக்கும் வெயில்; மாலை தான் புத்தகக் கண்காட்சி என்று திட்டம். என்ன செய்வது? டிக்கெட் வேண்டுமே என்று யோசித்து கொண்டிருந்த கணம் ஒரு டிப்-டாப்பான ஆசாமி,

'டிக்கெட் வேணுமா?', என்று கேட்டார்.

'எவ்வளவு' என்று கேட்டபடியே அவரது தோளின் மீது கையைப் போட்டு தள்ளிக் கொண்டு சென்றேன்.

'200'

'200-ல்லாம் ஆகாது. 000 ரூபாய் தர்றேன்'

'ப்ச்'

'அட ஆகுங்க. கொடுங்க'

'ஃப்ரண்ட் வர்றதா இருந்தது. வரலை. அதான் விக்கிறேன்'

'அப்ப என்ன? உங்களுக்கு இதுவே நல்ல லாபம் தானே'

'சரி ரூபாயைக் கொடுங்க'

'டிக்கெட்டைக் கொடுங்க. அது சரி பால்கனி தானே?'

'தேவில ஏதுங்க பால்கனி....', என்று செவிட்ல விட்டார்.

'சரி சரி விடு விடு..' (மனதிற்குள்)

'.... கார்னர் சீட் தான். இங்க கதவுக்குப் பக்கத்துல தான்', என்று கூறி அரங்கு வாயிலை நோக்கிச் சென்றார்.

'இல்ல இல்ல. நான் பார்த்துக்குறேன். சீட்டைக் கொடுங்க'

ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்காமல், நேராக காவலாளியுடம் சென்று 'ரெண்டு', என்று கூறி சீட்டைக் கொடுத்தார்.

'என் ஃபிரண்ட் வெளில இருக்காருங்க. அவர் வரட்டும்', என்றேன்.

'அவருக்கு டிக்கெட்?', என்று கேட்டார்

'அதான் நீங்க கொடுப்பீங்கல்ல....'

'அப்ப நானு?'

'நீங்க தான் உங்க ஃபிரண்ட் வரலைன்னு சொன்னீங்க'

'ஆனா நான் பாக்கணுமே'

'அட நீங்க இன்னொரு நாள் பார்த்துக்கங்க'

'என்னங்க...', என்று இழுத்தார்.

'நீங்க என்ன லோக்கலா?'

'ஆமா'

'என்னோட பிரண்ட் ஊர்ல இருந்து வந்திருக்கார். அவருக்காகத் தான் இப்ப நான் உங்ககிட்ட இந்த டிக்கெட்டையே வாங்குறேன். நாம லோக்கல் தான எப்பனாலும் படம்
பார்த்துக்கலாம். டிக்கட்டை கொடுங்க'

'இல்ல... நான்...'

'அட சும்மா கொடுங்க.... ரெண்டு டிக்கெட் நல்ல லாபம். திரும்ப அதே ஃபிரண்டோட வந்து இன்னொரு நாள் பாருங்க', என்று கூறி டிக்கெட்டை இழுத்து, பணத்தைத் திணித்தேன்.

'கார்னர் சீட்', பார்ட்டியின் வருத்தம் புரிந்தது. பாவம் புள்ள, ரெண்டு நாளைக்கு முன்னாடியே ரிசர்வ் பண்ணி, கேர்ள் ஃப்ரண்ட்டுக்கு சேர்ந்து கார்னர் சீட்டை புக் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த பார்ட்டி எஸ்கேப். இந்தப் பார்ட்டியும் வந்த வரை லாபம்ன்னு டிக்கெட்டை கொடுத்துட்டு போயிடுச்சு.

அவரை சரிகட்டி டிக்கெட் வாங்குன பாவத்துக்கு விஜய ராஜேந்தர். மன்னிக்கவும். விஜய் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அடிச்சார். அடியாட்களை மட்டுமல்ல. என்னையும் சேர்த்து தான்.

ஃபிரண்ட்ஷிப் பற்றியும், காதல் பற்றியும் விஜய் ரகுநாதர் வசனம் பேசிய போது விசில் பறந்தது.ஆனால் இப்படமும் ஓடும்!

அடுத்து சாப்பிட்டு விட்டு... புத்தகக் கண்காட்சி.

அதை, சாப்பிட்டு விட்டு நாளைக்குத் தெம்பாக எழுதுகிறேன்.

ஸ்ருசல்

சீமை சிலுக்கு கார்ப்பரேஷன் - குரு திரைப்பட மதிப்பீடு

இப்படத்தின் கதை பெரும்பாலானோர்க்கு பரிச்சயமான ஒன்று தான். மணிரத்னம் எவ்வளவு தான் டிஸ்க்ளெய்மர் போட்டு படத்தை ஆரம்பித்தாலும், பேட்டிகளில், 'குரு படம் வளரத்துடிக்கும்/வளர்ச்சியடைந்த ஒவ்வொரு தொழிலதிபரின் கதை', என்று கதறினாலும், இது திருபாய் அம்பானியின் கதை தான்; சிற்சில மாற்றங்களுடன். கிராமத்தில் பிறந்து, இளவயதில் வெளிநாட்டில் பணிபுரிந்து, கனவுகளுடன் இந்தியாவிற்குத் திரும்பி, இந்தியத் தொழில் துறையில் கொடிநாட்டும் மனிதனின் கதை. கதையின் அடிப்படை: கனவு. அக்கனவினை எப்படி அவன் நனவாக்குகிறான் என்பதே கதை.

வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பும் குருநாத் தேசிகன் (இந்தியில் குருகாந்த் தேசாய்; அபிஷேக்), வியாபாரம் தொடங்க முதலீடு வேண்டி நண்பனின் அக்கா சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) மணக்கிறார். அங்கிருந்து மும்பை வரும் மூவரும், ஆரம்பத்தில் ஏற்படும் துயரங்களை நேர்மையான பத்திரிக்கையாளர் குப்தாவின் (மிதுன் சக்ரவர்த்தி) உதவியினால் சமாளிக்கிறார்கள். தொழிலில் சிறிது சிறிதாக முன்னேறி 'சக்தி கார்ப்பரேஷன்' என்ற குடையின் கீழ் 'சக்தி பாலியிஸ்டர்' (சூர்யா பாஷையில் 'சீமை சிலுக்கு'), 'சக்தி கெமிக்கல்ஸ்' போன்ற நிறுவனங்களை நிர்வகிக்கும் நிலைக்கு உயர்கிறார். இந்நிலையை அடைய, சில குறுக்கு வழிகளையும் நாடுகிறார். குரு சொல்வது போல், 'இந்த நாட்டுல பல கதவுகள் பணக்காரங்களுக்கு மட்டுமே திறக்குது. அதை திறக்குறதுக்கு ஏழையான நான் என்ன செய்ய முடியும்? சில இடங்கள்ல ஓங்கி மிதிச்சேன்; திறந்தது. சில இடங்கள்ல சலாம் போட்டேன்; திறந்தது. எங்க சலாம் போடனுமோ அங்க சலாம் போட்டேன். எங்க தட்டனுமோ அங்க தட்டுனேன்', முறையில்.

இவரின் இவ்வணுகுமுறை பிடிக்காத பத்திரிக்கையாளர் குப்தா, தனது உதவியாளர் ஷியாம் சரணவனனுடன் (இந்தியில் ஷியாம் சக்ஸேனா; மாதவன்) சேர்ந்து குருவை எதிர்க்கிறார். இவ்விருவரும், தங்களது 'சுதந்திர மணி' ('The Independent'; தின மணி; இந்தியன் எக்ஸ்பிரஸ்?) பத்திரிக்கையில் குருவின் அட்டூழியங்களைப் பற்றி எழுதுகிறார்கள். இவர்களின் முயற்சியால் ஒரு கட்டத்தில் 'சக்தி கார்ப்பரேஷன்' சீல் வைக்கப்படுகிறது. காரணம்: பொருட்கள் உற்பத்திக்காக, வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்களை கடத்தி வந்ததும், அனுமதி பெறாமல் ஒரு சில யூனிட்களை நடத்தியதும் தான். பணம் முதலீடு செய்த, பொதுமக்கள் பணத்தைக் கேட்டு நெருக்க, அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத அதிர்ச்சியால் பக்கவாதத்தினால் (ஸ்ட்ரோக்) பாதிக்கப்படுகிறார். அரசு இலாக்காக்கள் இவருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் வைக்கிறது.

இதனை எப்படி சமாளித்து, நிறுவனங்களை மீட்கிறார் என்பதே மீதக் கதை.

அருமையான இக்கருவை, மணிரத்னம் இன்னும் சிறப்பான முறையில் திரைப்படமாகக் கொடுத்திருக்கலாம். அனைத்து காட்சிகளுமே யூகிக்கக்கூடிய வகையில் அமைத்துள்ளது பெரும் குறைபாடு. படத்திற்கு நங்கூரமாக இருப்பது அபிஷேக்கின் நடிப்பு, ராஜீவின் கேமரா மற்றும் கலை. இயக்குனரின் கை வண்ணம், 1950-60ம் ஆண்டுகளை திரையில் நிறுத்துவதில் மட்டுமே தெரிகிறது. அப்பளுவின் பெரும்பகுதியை ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இதில் மணிரத்னத்தின் உழைப்பு போதாது. அலைபாயுதே போல், கதை / திரைக்கதை அமைக்க வேண்டிய வேலை இதில் குறைவே.

அபிஷேக்கின் நடிப்பு அபாரம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இயலாத நிலையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் காட்சியில் அவரது முகபாவம் அற்புதம். ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

மாதவன் எப்பொழுது படங்களில் நிறுத்துவாரோ, அப்போது தான் மக்களுக்கு விடிவுகாலம். எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முக பாவனை. ஒவ்வொரு வரிக்கும், வாயை
திறந்தும், மூடியும் வித்தியாசமாக முக பாவனங்களைக் கொடுக்கிறார். முக்கியமாக, மிதுன் சக்ரவர்த்தி, அபிசேக்கைப் (குருநாத் தேசிகன்) பற்றிய மாதவனின் எண்ணத்தை வெளிப்படுத்துமாறு கூறும் காட்சி. தாங்க முடியவில்லை. அவரை விட்டு விட்டால், மணிரத்னத்திற்கு நல்லது; தமிழ் ரசிகர்களுக்கும் தான். அவரால் உருப்படியாக அழக்கூட
முடியவில்லை (வித்யா பாலன் இறக்கும் காட்சியில்). இவரை விட பல சிறந்த நடிகர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மாதவனின் பாத்திரம் பத்திரிக்கையாளர் குருமூர்த்தியின் பாத்திரம் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?

வித்யாபாலன் பத்திரிக்கையாளர் குப்தாவின் பேத்தி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறு வயதில் வியாதியினால் பாதிக்கப்பட்டு நடக்கும் தன்மையை இழக்கும் இவர், இடையில் மாதவனை மணந்து ஒரு வருடத்தில் இறந்து போகிறார். இவரது பாத்திரம் படத்திற்கு சிறிதும் அவசியமில்லை. ஒரு வேளை, குருவிற்கும், குப்தாவிற்கும் தொழிலுக்கும் அப்பாற்ப்பட்டு தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக, மணிரத்னம் இப்பாத்திரத்தைப் படைத்திருக்கலாம்.

மாதவன், வித்யா பாலன் பாத்திரங்களைத் தவிர்த்து விட்டு, மிதுன் சக்ரவர்த்தியே அபிஷேக்குடன் மோதுவது போல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும்.

கிளைமேக்ஸ்:

அரசு இயந்திரங்களை (அரசு அதிகாரிகள், அமைச்சர்கள்) தவறாகப் பயன்படுத்தி நிறுவனத்தினை வளர்த்த குற்றத்திற்காக, விசாரணைக் கமிஷன் முன்பாக, குரு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார். தனது தரப்பு வாதங்களாக, 'நான் சின்ன வயசுல கஷ்டப்பட்டேன்; இப்ப நல்லா இருக்கேன்; என்னால நாட்டுல பொருளாதாரம் வளர்ந்திருக்கு', என்று கூறும் காரணங்கள் சிறிதும் பொருந்தாத வகையில் இருக்கிறது.

இசை: படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். பின்னணியில் தேடித் தேடி பார்த்தாலும் ரகுமான் கிடைக்கவில்லை. இரண்டு பாடல்களை மட்டும் பின்னணியில் ஒலிக்கவிட்டு விட்டு ரகுமான் தூங்கச் சென்று விட்டாரோ என்னவோ? ஒரு வேளை, 'நாம் என்ன தான் உயிரைக் கொடுத்து இசையமைத்தாலும் மணிரத்னம் படங்கள் (உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து) கவனிக்கப்படாமல் போய் விடுகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு சிரத்தை எடுப்பானேன்?', என்று நினைத்திருப்பாரோ என்னவோ? இரண்டு நல்ல பாடல்கள் படத்திலேயே இல்லை. சுமாரான பாடலான 'Barse Ro', மற்றும் மோசமான பாடலான, 'ஜோடி' பாடல்களை படத்தில் வைத்ததன் காரணம் புரியவில்லை. 'ஜா ஹே' பாடலை அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, அபிஷேக்கின் குழந்தைகள் கோரஸாகப் பாடுமிடம் மட்டும் அழகு. அது கூட மணிரத்னத்தின் கைவண்ணமே.

ராஜீவ் மேனன் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரது (மற்ற ஒளிப்பதிவாளர்களது) மற்ற படங்களில் வரும் ஒரு குறை இப்படத்தில் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. உ.ம். மழைக் காட்சியை, பெரும்பாலும் வேறு வழியில்லாது, வெயிலடிக்கும் தருவாயில் எடுப்பது இப்படத்தில் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யா ராயின் அறிமுகப்பாடலில் அங்கங்கு இக்குறையைக் காண முடிகிறது. 1960 காலகட்டங்களில் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்கள் இருந்ததா? அபிஷேக் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில், 'No Smoking' & 'Fasten your seat belt' என்று லேசர் பிரிண்ட் ஒட்டப்பட்டதை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும்? மேலும் அதே ஹெலிகாப்டர் இறங்கும் போது, 'டாடா' என்று இப்போதைய லோகோ நன்றாக பின்னணியில் தெரியும். இது போன்ற பல தவறுகளைத் தவிர்ப்பதற்காக, நிறைய 'குளோஸ் அப்' காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தை முதலில் ஹிந்தியில் பார்த்து விட்டு, பின்னர் தமிழில் பார்த்தேன். ஹிந்தியில் சுத்தம் புரியவில்லை. தமிழில் பரவாயில்லை. ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு சிறிதும் தெரியாத வகையில் தமிழாக்கம் செய்த 'டும் டும் டும்' டைரக்டர் அழகம் பெருமாளுக்குப் பாராட்டுக்கள். அபிஷேக்கிற்கு சூர்யா குரல் கொடுத்திர்க்கிறார். ஐஸ்வர்யாவிற்கு நடிகை ரோகிணி குரல் கொடுத்திருக்கிறார். இருவருமே திறம்படச் செய்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயிற்கு பின்னணி கொடுத்தது யார் என்று படம் பார்க்கும் போது, பல கேள்விகள். சுகாஸினியா அல்லது சவீதாவா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ரோகிணியின் குரலென்றே அறியப்படாத அளவிற்கு சிறப்பாகச் செய்திருக்கிறார்.

என்னைக் கேட்டால், படம் பரவாயில்லை என்று சொல்வேன்.

3 / 5 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

நடிப்பு: அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மிதுன் சக்ரவர்த்தி, மற்றும் பலர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
இயக்கம்: மணிரத்னம்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ் (ஜி. சீனிவாசன், மணிரத்னம்)

ஸ்ருசல்

புதன், ஜனவரி 10, 2007

சென்ற ஆண்டின் சிறந்த பாடல்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டில் முதலாவது பதிவாக, சென்ற ஆண்டின் சிறந்த பத்து பாடல்களைப் (என்னைப் பொருத்தவரை) தமிழ் பாடல்களை பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது. நான் எதிர்பார்க்காமல், என்னையுமறியாமல், என்னை மிகவும் கவர்ந்த பாடலை முதலாவது பாடலாகக் கொடுத்திருக்கிறேன். அந்தப் பாடல் தான் சென்ற ஆண்டின் சிறந்த பாடல் என கூறுவேன். உங்களில் எத்தனை பேர் அப்பாடலை கேட்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை.




இவ்வருடம் ஒவ்வொரு இசையமைப்பாளரும் தங்களது பெயர் சொல்லும்படியாக ஒரு வெற்றிப் படத்தைக் (பாடல்களை) கொடுத்துள்ளனர். ரகுமானுக்கு 'ரங் தே பசந்தி', காட் ஃபாதர் படங்களும், ஹாரீஸ் ஜெயராஜூற்கு மிகச் சிறந்த வெற்றிப் படமாக 'வேட்டையாடு விளையாடு' திரைப்படமும், யுவன்சங்கர் ராஜாவிற்கு 'வல்லவன்' திரைப்படமும், வித்யாசாகருக்கு 'தம்பி' திரைப்படமும், விஜய் ஆண்டனிக்கு 'டிஷ்யூம்' திரைப்படமும் வெற்றியாக அமைந்துள்ளது.

ஆனால் தமிழில் ரகுமானின் சிறந்த பாடல்கள், வெற்றி பெறத் தவறிய, 'சில்லென்று காதல்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. வர்த்த ரீதியாகவும், விமர்சகர்களின் ஆதரவைப் பெற்ற காட் ஃபாதர் படத்தின் பாடல்கள் எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. 'வாள மீனுக்கும்' பாடல்களையும், நூறு முறைக் கேட்டும் பிடிக்காத பாடல்களையும் ஒளிபரப்பும் தொலைக்காட்சியும், தமிழ் திரைப்பட பாடல்களின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய தொலைக்காட்சியான, சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு முறை கூட காட் ஃபாதர் பாடல்கள் ஒளிபரப்பப் படாதது வருத்தமளிக்கிறது. 'கம்மா கம்மா' கரையில் பாடலை மட்டும் இரு முறை பார்த்த ஞாபகம். சிறந்த இரு பாடல்கள், மக்களை சென்றடையத் தவறிவிட்டதாகத் தோன்றுகிறது. இந்தியில் வெளிவந்த 'ரங் தே பசந்தி' அவருக்கு ஆஸ்கர் பரிந்துரையையும் பெற்றுத் தந்துள்ளது.

அதே போல், யுவனின் சிறந்த பாடல்கள், 'புதுப்பேட்டை', 'பட்டியல்' போன்ற வெற்றி பெறத் தவறிய படங்களிலிருந்து அமைந்துள்ளன.

வித்யாசாகருக்கு ஓரளவிற்கு வெற்றிப் படமாக, 'ஈ'அமைந்தாலும், அப்படத்திலும் எந்த பாடலும் மனதைக் கவரவில்லை. ஆனால் வித்யாசாகரின் பின்னணி இசை மோசமாகி வருகிறது. நான் பார்த்த இரு படங்களிலும் 'ஈ' மற்றும் இன்னொரு படத்திலும் ('எம் மகன்' என்று நினைக்கிறேன்) பெரும்பாலும் காதைப் பொத்திக் கொண்டு தான் படம் பார்த்தேன். ஏதோ ஹாலிவுட் படங்களின் 'சேசிங்' காட்சிகளில் வரும் இசையைப் போல ஒரே சத்தம்.

புதுமுக இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளிவந்துள்ள 'வெயில்' படத்தில் இரு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. எனக்குப் பிடித்தமான பாடல் 'உருகுதே' உட்பட.

இதோ பாடல்களின் பட்டியல். பாடல்களுக்கு விளக்கங்களை எனது பழைய பதிவுகளிலிருந்து தொகுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். இப்போது அப்பாடல்களின் வெற்றி / தோல்வி நன்றாக தெரியுமாதலால், எனது விளக்கங்களை படிப்பதற்கு எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

10. நெஞ்சாங்கூட்டில்

படம்: டிஸ்யூம்
பாடியவர்: ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆண்டனி

படத்திற்குப் பாடல்கள் பெரிய பலம். பாடல்களுக்காகத் தான், திரைப்படம் பார்க்க சென்றேன். எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி கவனிக்கப்பட வேண்டியவர். 'நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில் நீயே நிற்கிறாய்' என்று இழுக்கும் போது பின்னணியில், பிலிம் சுருளை இழுப்பது போல் வரும் இசை வித்தியாசமாக இருக்கிறது.

9. உன் பார்வையில் பைத்தியமானேன்

படம்: உனக்கும் எனக்கும்
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

வழக்கம் போல, தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் வெற்றி பெற்ற தனது படத்தின் பாடல்களை அப்படியே தமிழிலும் கொடுத்துள்ளார். ஆனால் இம்முறை அதே படத்தின் பாடல்கள்.

தெலுங்கை விட, தமிழில் படம் நன்றாக அமைந்துள்ளது என்பது எனது கருத்து. தெலுங்கில் சந்தானம் போல ஒரு பாத்திரம் அமையாதது ஒரு சிறிய குறை. திரிஷாவின் பாத்திரமும் தமிழ் பதிப்பில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஆரம்பத்தில், கிடாருக்கு முன்பு வரும் இசை (என்ன கருவி என்று தெரியவில்லை) அற்புதம். மேலும் (2:03 - 2:08) & (3:50 - 3:55) இடத்தில் வரும் குழுவினரின் ஹம்மிங் மிக இனிமை.

கார்த்திக், சுமங்கலி இருவருமே சிறப்பாக பாடியிருக்கிறார்கள். சன் மியூசிக்கில் எப்பொழுதுமே 'சம்திங் சம்திங்' பாடலும், 'பூக்களுக்குள் கத்தி சண்டை' பாடல்களை மட்டுமே ஒளிபரப்புவது ஏனோ? மிக அரிதாகவே இப்பாடல் ஒளிபரப்பபடுகிறது (அல்லது நேயர்களால் விரும்பி கேட்கப்படுகிறது).

8. லூசுப் பெண்ணே

படம்: வல்லவன்
பாடியவர்: சிம்பு (உறுதியாகத் தெரியவில்லை), பிளாசே
இசை: யுவன் சங்கர் ராஜா

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'லூசுப் பெண்ணே' பாடலும் ஓரளவிற்கு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அந்த பாடலின் ஆரம்பத்தில் (0:43 - 1:01) வரும் கிடார் இசை, குஷி படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் சந்திக்குமிடங்களில் வரும் பின்னணி இசையை ஒத்துள்ளது. இந்தப் பாடல் கூட குஷி படத்தில் இடம் பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல் போலவே ஒளிப்பதிவு செய்ய்ப்பட்டிருக்கிறது.

6. இளமை

படம்: காட் ஃபாதர்
பாடியவர்கள்: அஸ்லம், தன்வி, ஷாலினி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

கண்டிப்பாக, படத்தின் சிறந்த பாடல் இதுவாகத் தான் இருக்கும். பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள், 'இன்னிசை' பாடல் தான் சிறந்த பாடல் என்கின்றனர். எனக்கென்னவோ இந்த பாடல் தான் மிகவும் பிடித்திருக்கிறது. வித்தியாசமான இசை. அசத்தும் பீட். கேட்ட முதல் முறையே பிடித்து விட்டது. அஸ்லம் அருமையாகப் பாடியிருக்கிறார். ஷாலினியின் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. சாதாரண வரிகள் ஆனால் நல்ல அழுத்தம்.

இளமை........
விடுகதை
பெண்களே........
விடை

கீழ்கண்ட வரிகளில் வரும் ராகம் கவர்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் - கூட்டிற்குள்
வர வேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் - வீட்டிற்குள்

இரவெல்லாம்........
சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை........
அனுப்பி வைப்பேன் போங்கள்.

ஆரம்பம் முதல் இறுதி வரை பீட் சிறிதும் குறையாமல் சிறப்பாக அமைந்துள்ளது. ஷாலினி ரகுமானுக்கு பாடும் முதல் பாடல் என்றும் நினைக்கிறேன். 1:38 முதல் 2:10 வரை குழுவினரின் குரலை கேட்கும் போதே உடலெங்கும் உற்சாக அலைகள் ஓடுகின்றன.

6. உருகுதே

படம்: வெயில்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஸல், சங்கர் மகாதேவன்
இசை: ஜி. வி. பிரகாஷ்

இந்த படத்தின் பாடல்கள் வந்த புதிதில் சில பாடல்களை கேட்டு விட்டு, மறந்து விட்டேன். சமீபத்தில் கே.எல் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டேன். பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'வெயில்' என்று கூறிய போது எனக்கு ஆச்சர்யம். கடந்த ஒரு மாதமாக, இப்பாடல் நம்மிடமிருந்தும் இப்படியொரு அருமையான பாடலை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று வருத்தமாக இருந்தது. மிக மிக அருமையான பாடல். ஸ்ரேயா கோஸலின் குரல் அற்புதம்.

'உருகுதே மருகுதே
ஒரு பார்வையாலே

உலகமே சுழலுதே
உன்னை பார்த்ததாலே',

என்று பாடலின் ஆரம்பத்திலேயே உருகியிருக்கிறார்.

'தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே'

என்ற இடத்தில் ராகமும், ஸ்ரேயா கோஸலின் குரலும் அற்புதம். அதே போல் பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஸ்ரேயா கோஸல் மீண்டும் 'உருகுதே மருகுதே' என்று ஆரம்பிப்பார் என்று நான் ஆவலுடன் காத்திருந்த போது, சங்கர் மகாதேவன் 'உருகுதே மருகுதே', (4:45) என்று சுருதியை உயர்த்தி பாடி ஏமாற்றம் கொடுத்தார். ஸ்ரேயா கோஷலே பாடியிருக்கலாமே என்று நான் நினைத்த மறுகணமே ஸ்ரேயா 'ஒரு பார்வையாலே' என்று பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை விட அவ்விடம் சிறப்பாக ஒலித்திருக்க முடியாது. இரண்டும் இணைத்த போது, ஸ்ரேயாவின் குரல் இன்னும் சிறிது மயக்கம் கொடுக்கிறது. ஆனால் "ஒலகமே" என்று அவர் உச்சரிக்குமிடம் தான் நெருடலாக இருக்கிறது.

இந்தப் பாடல் எனக்கு மேலும் இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

1. முதல்வன் படத்தில் இடம் பெற்ற குறுக்கு சிறுத்தவளே பாடல். இந்த பாடலை ஹரிஹரண் பாடியிருந்தால், இரு பாடல்களுக்குமுள்ள வித்தியாசம் இன்னும் குறைந்திருக்கும்.

2. தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்த 'ஜெய்ராம்' ('சின்ன நெஞ்சிலே' என்ற அற்புதமான பாடல் இடம் பெற்ற படம்) என்ற படத்தில் வரும் 'வானும் உண்டு, வையம் உண்டு' என்ற பாடலை சிறிது ஒத்துள்ளது. அந்த பாடல் என்னிடம் இல்லாத காரணத்தால் என்னால் சரியாக ஒப்பிட முடியவில்லை. திரையுலகிற்கு இப்படத்தில் மூலம் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ், அனைத்து பாடல்களில் இல்லாவிட்டாலும்,. இந்தப் பாடலில் அவரது மாமாவின் தரத்திற்கு நெருங்கி வந்திருக்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். அதே போல் சிறந்த பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கு, ஓரளவிற்கு, 'முன்பே வா' பாடலைத் தவிர சிறப்பான பாடல் ரகுமான் பட்டறையிலிருந்து அமையாத குறையை ஜி.வி.பிரகாஷ் நீக்கிவிட்டார்.

5. முன்பே வா

படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடல் ஆரம்பித்த முதல் விநாடியே Dr.Alban-னின் It's my life பாடலை ஒலிக்கவிட்டு விட்டோமே என்ற சந்தேகம். அது அந்த முதல் விநாடி மட்டும் தான். அதன் பிறகு ரகுமானின் கொடி தான். ரகுமானின் பட்டறையிலிருந்து மற்றுமொரு நல்ல மெல்லிசை பாடல். இறுதியில் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு நல்ல பாடல், ரகுமானிடமிருந்து.இந்தப் பாடல் ஹிட்டாகும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. குழுவினர் பாடும் ரங்கோலி இடம் அழகு.

4. மஞ்சள் வெயில்

படம்: வேட்டையாடு விளையாடு
பாடியவர்கள்: ஹரிஹரண், விஜய், நகுல்
இசை: ஹரீஷ் ஜெயராஜ்

கஜினியை ஒப்பிடும் போது 'வேட்டையாடு விளையாடு' படம் ஹரிஷ் ஜெயராஜூற்கு பின்னடவு தான் என கூறலாம். கெளதம் எப்படி இது போன்ற பாடல்களுக்கு ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுத்தமாகக் கவரவில்லை. கெளதமும் 'ராசி' என்ற வலையில் விழுந்து விட்டாரோ என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இந்தப் படத்திலும் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி பாடிய 'உயிரிலே' பாடல் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் பரபரப்பாக விற்பனையாகத் தான் செய்கின்றன. யார் கண்டது? அனைத்து பாடல்களும் ஹிட்டாகலாம்.

ஆனால் மஞ்சள் வெயில் என ஆரம்பிக்கும் இந்த பாடல் அருமை. கமலஹாசனின் நடிப்பு இந்தப் பாடலுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஹரிஹரண்
அற்புதமாக பாடியிருக்கிறார். அதிலும் முக்கியமாக 'பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே' 'குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே' என்ற வரிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

3. ரூபாரூ

பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான், நரேஷ் அய்யர்
படம்: ரங் தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல் இது தான் என்று அடித்துக் கூறுவேன். அருமையான பாடல். நல்ல இசை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை மிக அருமை. நரேஸ் அய்யர் நன்றாகப் பாடியிருக்கிறார்.

இந்த இசைத்தட்டில் ஆச்சர்யப்பட வைத்த விசயங்கள் இரண்டு. கிதார் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகுமான் ஆசிட்டிற்கு கிதார் இசையை இரண்டு பாடல்களில் (லக்கா சுப்பி, ரூபரூ) முழுவதுமாக உபயோகித்திருக்கிறார். மற்றொன்று நரேஸ் அய்யரின் குரல். இவர் தான் அன்பே ஆருயிரேயில் மயிலிறகே பாடலைப் பாடியவர். அந்தப் பாடலில் அவருடைய குரல் பலரைக் கவரவில்லை. ஆனால் இதில் அவருடைய குரல் முற்றிலும் வித்தியாசமாக, மிக நன்றாக இருக்கிறது

இந்தப் பாடலைப் பற்றியும், இது எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றியும் ஏற்கனவே ரங்கு தே பசந்தி இசை மதிப்பீட்டில் எழுதி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றி ரகுமான் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். "இந்தப் பாடலை நான் பாடுவதற்கு முன்பாக, நரேஷ் அய்யரை வைத்து பதிந்து பார்த்ததில் அது சிறப்பாக வரவே அதையே பயன்படுத்தினேன். அதனால் தான் ஒரு சில வரிகள் மட்டுமே நான் பாடுவதை நீங்கள் கேட்கிறீர்கள். மேலும் 'ஹேய் சாலா' என்றெல்லாம் விழித்து பாடுவது எனக்கு சவுகரியமாக இருக்காது". இளமை ததும்பும் குரல், இசை.

2. நியூயார்க் நகரம்

பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
படம்: சில்லுன்னு ஒரு காதல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடல். கேட்ட மறு நொடியே இந்த பாடல் பிடித்து விட்டது. பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அற்புதம். இம்.ஹீம் இம்.ஹீம் என்று அற்புதமாக ஆரம்பித்து கிடாரை உடன் எடுத்துக் கொண்டு 'நியூயார்க் நகரம்' என்று ரகுமான் பாட ஆரம்பிப்பது அற்புதம். அதே போல் 0:45 நொடியில் ஒரு ஹெலிகாப்டர் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு பறந்து மீண்டும் இடது புறத்திற்கு வருவது அழகாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது முடிந்ததும் 1:05 நிமிடத்தில் "ஹோ" என்று பின்னணியில் வரும் சப்தம் அற்புதம். இவை இரண்டும் பாடலின் தரத்தை வெகுவாக உயர்த்துகின்றன.

'நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடங்குது
பனியும் படருது
கப்பல் இறங்கியே
காற்று கரையில் அடங்குது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்
நானும் மெழுகுவர்த்தி
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ'

சூர்யா கூறியது போல் ரகுமான் முதன் முதலாக காதல் பாடலைப் பாடியுள்ளார். அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அனைத்துத் தரப்பினரையும் சுண்டி இழுக்கும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.

பாடலில் மற்றுமொரு சிறப்பு பெண் குழுவினரின் குரல். 3:10-3:20 மற்றும் 4:30 - 5:10 வரை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். இசைத்தட்டில் 'தன்வி & பார்கவி பிள்ளை' என்று எழுதப்பட்டிருந்தது. அவர்களுக்கு பாராட்டுக்கள். முதன் முதலில் தமிழில் இசைக்கலைஞர்களுக்கு கேசட்டில் இடம் கொடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதே போல் ஒவ்வொரு பாடலிலும் கோரஸ் பாடியவர்களின் பெயரைத் தனித் தனியாக சி.டியில் வெளியிடச் செய்து அவர்களை ரகுமான் சிறப்பித்திருப்பது அழகு. மூன்று நாட்களாக வாயைத் திறந்தாலே இந்த பாடல் தான். தாராளமாக ஐந்து மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

1. லுக்கா சுப்பி

பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், லதா மங்கேஷ்கர்
படம்: ரங் தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

நான் பட்டியலின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது போல, 'லுக்கா சுப்பி' பாடல் தான் என்னை மிகவும் கவர்ந்த, சென்ற வருடத்தில் அதிகம் விரும்பி கேட்ட, ஏன்? இன்னும் விரும்பி கேட்கும் பாடல். இப்பாடலை முதலில் கேட்கும் போது, வேறு பாடல்களை ஞாபகப்படுத்துவது போன்றதொரு தோற்றத்தைக் கொடுத்தது. மேலும் 'ரூபாரூ', 'பாத் சாலா', பாடல்கள் இப்பாடலை சுலபமாக கடந்து முன்னணியில் நின்றது. ஒரு இனிய மெலோடி பாடல் என்ற வகையில் மட்டும் எனக்குப் பிடித்திருந்தது. இப்பாடலைப் பற்றி கீழ்கண்டவாறு எனது பழைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

-------------------------------------------------------------------------

ஏ.ஆர்.ரகுமானும், லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடியிருக்கும் முதல் பாடல். இந்த இசைத்தட்டு வருவதற்கு முன்பே மிகவும் பேசப்பட்ட பாடல். இதற்காக லதா சென்னை வந்து பாடிக்கொடுத்து சென்றார் என்பதும் கொசுறு செய்தி. லதாவிற்காக சில நேரங்களில் மும்பையில் ரிக்கார்டிங் வைத்திருக்கும் ரகுமான், தான் புதிதாக கட்டியிருக்கும் ஸ்டுடியோவிற்கு லதா கண்டிப்பாக வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால், அவர் சென்னைக்கு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. இருவருமே மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் முக்கியமாக ரகுமான். நல்ல மெலோடி. பாடலின் ஆரம்பத்தில் வரும் கிதார் இசை வெள்ளைப் பூக்கள் பாடல் போலவே இருக்கிறது.

-------------------------------------------------------------------------

ஆனால் இப்பாடலை, திரைப்படத்துடன் பார்க்கும் போது என்னை அப்படியே புரட்டி போட்டு விட்டது. படத்துடன் இப்பாடல் அற்புதமாக இணைக்கப்பட்டிருந்தது. இப்பாடலின் இரண்டாம் பகுதி படத்தில் ஒலிக்குமிடம் அப்படியே கண்ணீரை வரவழைத்துவிட்டது (இதனை சொல்வதற்கு கூச்சப்படவில்லை). இதற்காகவே இப்படத்தை மூன்று முறை திரையரங்கில் மட்டும் பார்த்தேன்.

விமானப் படையில் பணியாற்றும் மகன் (மாதவன்) விமான விபத்தில் இறக்கிறார். அவருடைய இறுதிச் சடங்கில் பாடல் ஆரம்பிக்கிறது. மாதவனின் காதலி (சோகா அலி கான்), நண்பர்கள் (அமீர்கான், சித்தார்த், மற்றும் மூவர்), மாதவனின் தாய் (வஹீதா ரஹ்மான்) அஞ்சலி செலுத்தும் போது பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.



இவ்விடத்தில் பாடல் ஒலிக்குமென, முதல் முறை பார்க்கும் போது, சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மறைந்திருந்து விளையாடும் மகனை தேடும் தாய் பாடுவதாக, அமைந்திருந்தது இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.



பாடலின் முதல் பகுதி, அக்காட்சியுடன் நிறைவடைந்தது. இன்ன பிற பாடல்களைப் போல, இப்பாடலும் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதே என்ற ஏமாற்றத்தில், அடுத்த காட்சியைத் தொடர்ந்தேன். அடுத்த காட்சி, மாதவனின் வீட்டில்.

விமான விபத்தைப் பற்றி தொலைக்காட்சிகளில் செய்தியும், அதைத் தொடர்பான பேட்டிகளும் ஒளிபரப்பாகிறது. அதனை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்க, மாதவனின் தாய் கதவைத் திறக்கிறார். வாசலில் காணும் காட்சியால் கண்ணீரில் உறைந்து போகிறார். வாசலில், மாதவனின் உடைமைகளை

ஏந்திக் கொண்டு விமானப்படை வீரர்கள் கம்பீரமாக நிற்கிறார்கள்.





அப்போது ரகுமான், சுருதியை உயர்த்திப் பாடும் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது (4:07). பின்னர் மகனின் உடைமைகள் ஒவ்வொன்றாக கண்ணீருடன் பார்க்கிறார். பாடல் நிறைவடைகிறது. இக்காட்சிகளைத் திரையில் பார்க்கும் போதே மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.




அற்புதம்!! அற்புதம்!!

சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. அது முதல் இப்பாடலை பல முறைக் கேட்டிருக்கிறேன்; கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பாடல் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நினைக்கிறேன். இப்பாடல், அந்த விருதினை விட பல மடங்கு இப்பாடல் அற்புதமானது. அவ்விருதிற்கு மேலான தகுதியை உடையது.

இப்பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிய, ஆனால் என்னைக் கவர்ந்த மற்ற பாடல்களின் பட்டியல்:

1. அக்டோபர் காற்று (பாடியவர்: மாதங்கி; படம்: ஜெயம் ரவி நடித்தது; இசை: பரத்வாஜ்)

2. பூவின் மடியில் (பாடியவர்: சாதனா சர்கம்; படம்: இருவர் மட்டும்; இசை: விஜய் ஆண்டனி)

3. ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடிப் போகாது (பாடியவர்: யுவன் சங்கர் ராஜா; படம்: புதுப்பேட்டை; இசை: யுவன் சங்கர் ராஜா)

4. தையத்தா தையத்தா (பாடியவர்: சாதனா சர்கம்; படம்: திருட்டுப் பயலே; இசை: பரத்வாஜ்)

5. போகப் போக பூமி விரிகிறதே (பாடியவர்கள்: ஹரிச்சரண், விஜய், 'அந்நியன்' புகழ் சைந்தவி, ஹரிணி சுதாகர்; படம்: பட்டியல்; இசை: யுவன் சங்கர் ராஜா)

6. சுடும் நிலவு சுடாத சூரியன் (பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி; படம்: தம்பி; இசை: வித்யாசாகர்)

7. இன்னிசை அளபெடை (பாடியவர்கள்: நரேஷ் அய்யர், சைந்தவி, (மஹதி); படம்: வரலாறு; இசை: ஏ.ஆர்.ரகுமான்)

ஸ்ருசல்