செவ்வாய், நவம்பர் 11, 2008

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் மிகவும் ரசித்த பாடல்களின் பட்டியல். இவற்றுள் சென்ற வருடம் வெளியான படத்தின் பாடலும் அடக்கம். அவற்றின் பட்டியல் இதோ.

1. கண்கள் இரண்டால்

திரைப்படம்: சுப்ரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்

தமிழகத்தில் இப்பாடலை முணுமுணுக்காதோர் யாரும் உண்டோ இப்போது?. சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது இப்பாடலை எனது வீட்டில் விரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். என்னடா பாடல் இது, கேட்கவே இல்லையே என்று பார்த்த போது தான் சுப்ரமணியபுரம் என்று தெரிய வந்தது. இரண்டு,மூன்று தடவை பார்த்த பிறகு, மனதிற்குள் ஒட்டிக்கொண்டது. அடுத்த சில நாட்களுக்கு இப்பாடலை கண்ட நேரங்களிலும் பாடிக் கொண்டிருந்தேன். வீட்டில், 'ஆரம்பிச்சுட்டாண்டா' என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அது முதல் இப்பாடல் எனது பாடலாகி விட்டது. மிக அற்புதமான பாடல் - படமாக்கிய விதமும் ஒரு முக்கிய காரணம் என்று கூறுவேன். ஜேம்ஸ் வசந்தனுக்குள் இப்படி ஒரு திறமையா என்று வியக்கும் வண்ணம் அமைந்த பாடல். தமிழ் திரையுலகத்திற்கு ஒரு புதிய இசையமைப்பாளர் - நன்று.



2:03 ல் வரும் புல்லாங்குழல் நாதம் அற்புதம். ஆனால் அந்த புல்லாங்குழல் முடியும் தருவாயில் அது 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடலை சிறிது ஞாபகப்படுத்துகிறது. மற்றபடி, சரணத்தில் வரும் ராகம் இனிமை மட்டுமல்ல, வரிகளை கவிஞர் தாமரை மிக அற்புதமாகவும் எழுதியிருக்கிறார்.

கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதில் எப்போது
நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத
உருவமும் கொள்ளாத
கடவுளைப் போல்
வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு
நினைவில்லை
இனி இந்த ஊன்உயிர்
எனதில்லை
தடையில்லை சாவிலுமே....
உன்னோடு வர

இரண்டு சரணங்கள் முடியும் போதும், பாடகர்கள் 'சொல்லாத கதை....' (முதல் சரணத்தில்), என்றும் 'உன்னோடு வர' (இரண்டாம் சரணத்தில்) என்றும் இழுத்து முடித்து, 'கண்கள் இரண்டால் என்று ஆரம்பிப்பது கொள்ளை அழகு. பாடல் மட்டுமல்ல, பாடலின் ஒளிப்பதிவும் மிகவும் அருமை. நன்றாக படமாக்கியிருக்கிறார்கள்.

பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை மட்டும் சிறிது (00:12 ல் வரும் டின் டின் டின் என்ற பியானோ இசை மட்டும்), கருத்தம்மா படத்தில் வரும் 'தென் மேற்கு பருவக்காற்று' பாடலின் ஆரம்ப இசையை ஞாபகப்படுத்துகிறது. மற்றபடி, வசந்தன் அவர்களின் இசைத்திறமை வியக்க வைக்கிறது. 'வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலையும் 'நாக்க மூக்க பாடலையும் இளைஞர்களின் விருப்பமான பாடலாக்கி காட்டுவது பெரிய விசயமில்லை - இது போன்ற மெல்லிசை பாடலை அனைவருக்கும் பிடித்தமான பாடலாக்கி காட்டுவதில் தான் திறமை இருக்கிறது. இது ஒரு புதிய 'வசீகரா'.

2008-ன் சிறந்த தமிழ் பாடல் என்று கூறினால் தகும் என்று நினைக்கிறேன்.

2. முன் தினம் பார்த்தேனே

திரைப்படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் அய்யர், பிரஷாந்தினி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

இந்தியாவில் இருந்த போது, இந்த இசைத்தட்டு வெளியானது. ஆவலுடன் வாங்கி பாடல்களை ஒரு முறை ஒலிக்க விட்டு கேட்டேன் அந்த அளவிற்கு (வழக்கம் போல்) ஈர்க்கவில்லை. 'அடியே கொல்லுதே' பாடலை மட்டும் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே யூடியூப்பில் கேட்டிருந்தேன் - அது கூட 'என்றென்றும் புன்னகை' பாடலின் சாயலில் இருந்ததால் என்னைக் கவரவில்லை. இங்கே ஊருக்கு வந்த பிறகு, சில நாட்கள் கழித்து கேட்க ஆரம்பித்த பிறகு, சில பாடல்கள் பரவாயில்லை - மோசமில்லை என்று தோன்றியது. ஆனால் அவற்றுக்கும் மத்தியில் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இது ஒரு மற்றுமொரு 'என்னைக் கொஞ்சம் மாற்றி', 'ஏ அழகிய தீயே' ரகம். அருமையான பாடல்.

நரேஷ் அய்யர் வழக்கம் போல் மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். மேலும் பாடலினை ஆரம்பிக்கும் அந்த கிடார் இசை பாடல் முழுவதும் பரவியிருப்பதுமாகட்டும், பீட்டினை இழுத்துச் செல்லும் அந்த பெர்க்யூஷன் ஆகட்டும் பாடலினை இனிமையாக்கியிருக்கின்றன.

முன் தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாலே
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானாதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன?
ஊர்பார்க்க ஒன்றாக சென்றாலென்ன?




[2:14]

துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

[2:35]
ஓ நிழல் போல விடாமல்
உன்னைதொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு
நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி


என்ற இடங்களில் வரும் ராகமும், [2:14] வரிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் பீட்டும் அட்டகாசம்.

ஆனால் யூடியூப்பில் யாரோ இது Faith என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான தழுவல் என்று குறிப்பிட்டிருந்தர். அப்பாடலையும் கேட்டேன். அது உண்மையே!

இப்படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம், முதன் முறையாக பாம்பே ஜெயஸ்ரீ கெளதம் மேனனுக்காக பாடாதது தான். நிம்மதி!

3. சீக்கி சீக்கி

திரைப்படம்: சரோஜா
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா

சென்னையில் இருந்த ஆறு நாட்களில் ஆறு படங்கள் பார்த்தேன். அவற்றுள் சரோஜா இரு முறை. இப்படம் என்னைப் பெரிதாக கவரவில்லையெனினும், சக்கரைக்கட்டி போன்ற மகா காமெடி படங்களுக்கு மத்தியில் இது எவ்வளோ பரவாயில்லை என்று தோன்றிற்று. மறு முறை திரையரங்கிற்கு செல்லும் போது, இப்படத்தை பார்ப்பதற்காக செல்லவில்லை ஆனால் வேறு எந்தப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால், இப்படம் தேர்ந்தெடுத்தோம் நானும் நண்பனும். எனக்கு இப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு இப்பாடலும் ஒரு முக்கிய காரணம். பாடல்கள் வந்த பொழுது, 'தோஸ்து படா தோஸ்து' பாடலை மட்டும் விரும்பிக் கேட்டிருந்தேன். ஆனால் இப்படத்தை முதல் முறையாக பார்க்கும் போது, இப்பாடல் அவ்வளவு இனிமையாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. முக்கிய காரணம் - யுவன் சங்கர் ராஜாவின் தோற்றம், அவர் நடுநடுவே 'யே ஒவ்வே யோவ், யே ஒவ்வே யோவ்' 'Baby girl you are messed up ho ho ha ha move your body' என்று பாடுவதுமாகும். சத்யம் தியேட்டரில் இப்பாடலை கேட்பதற்கு நானே எழுந்து யுவன் போல் ஆடலாம் போலிருந்தது. அற்புதம்.




பாடலில் உள்ள பீட் சொல்லவே தேவையில்லை. அற்புதம். யுவன் மறுபடியும், மறுபடியும் தனது திறமையை நிரூபிக்கிறார்.

'தோஸ்து படா தோஸ்து' பாடல் அப்படியே 'ஏம்மா இன்னும் மயக்கமா' என்ற பழைய பாடலினை ஞாபகப்படுத்துகிறது.

4. காதல் வைத்து காதல் வைத்து மற்றும் போகாதே

திரைப்படம்: தீபாவளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா

இப்படம் வந்த வேளையில் இப்படத்தின் பாடல்களையும் தவற விட்டு விட்டேன் படத்துடன். நீண்ட நாட்களுக்குப் பிறகு (நான்கு மாதங்களுக்கு முன்பாக) எனது வீட்டில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனது சகோதரியின் மகன் இப்படத்தில் வரும் 'கண்ணன் வரும் வேளை' என்ற பாடலுக்கு பள்ளியில் ஆடுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அந்தப் பாடலை ஒன்றிரண்டு முறை கேட்டிருக்கிறேன். அவ்வளவாக கவரவில்லை. அப்படியே விட்டு விட்டேன். அவர்கள் குறிப்பிட்ட பிறகு மீண்டும் இரண்டு, மூன்று முறை கேட்டுப்பார்த்தேன். மிகவும் பிடித்தது. அதுவும் அப்பாடலில் வரும்

[1:22]
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீர மாலை

நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
....
நீயில்லாமல் நிலவும் எனக்குத் தொலைவே


என்ற வரிகளும் அவற்றின் ராகமும் மிக, மிக இனிமை. அனுராதா ஸ்ரீராம் அற்புதமாகப் பாடியிருப்பார்.

அப்படியே இப்படத்தில் வரும் இன்ன பிற பாடல்களையும் கேட்டேன். அவை அற்புதம். முதலாவதாக 'கண்ணன் வரும் வேளை'. பாடல் பிடித்துப் போனது. அதன் பிறகு, 'போகாதே' பாடலைக் கேட்டேன். அப்பாடலின் மீது ஏனோ ஒரு இனம்புரியாத மயக்கம். இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் அப்பாடலில் [0:53] 'கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி' வரிகள் முடியும் போது ஒரு பீட் வருமே! ஆஹா.



அந்த பீட் நிற்காமல் அப்படியே பாடல் முழுவதும் தொடர்வது மிகவும் அற்புதம்! அதே போல் 2:41 முதல் 3:20 வரை வரும், யுவனின் டிரேட்மார்க் வயலினும், அந்த வயலினைத் தொடர்ந்து வரும் கிடாரும் மிக இனிமை. அந்த வயலினும், கிடாரும் முடிந்த பிறகு, இரண்டாவது சரணம் ஆரம்பிப்பதற்கு முன்பாக [3:34] 'டொய்ன்' :) என்று இரண்டு விநாடிகள் வரும் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதன் பிறகு, இப்பாடலை பார்த்தேன். அது முதல் இப்பாடலின் மீது மயக்கம். மூன்று பாடல்களுமே அற்புதமானவை அவற்றுள் எனக்கும் மிகவும் பிடித்தது இப்பாடல்.

என்ன அற்புதமாக ராகம், குரல் (குரலுக்கு சொந்தக்காரர் விஜய் யேசுதாஸ்), இசை, வரிகள்! பாடலினை ஆரம்பித்து வைக்கும் அந்த சோகமான ஆலாபனையே மிகவும் அருமையாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் பீட்டும், அது அப்படியே பாடல் முழுவதும் தொடர்வதும் கொள்ளை அழகு.



'தேவதை கதைகேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்த்த மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்"

அற்புதமான ராகம். இனிமையான வரிகள் கூட. 'தேவதை கதை கேட்ட போதெல்லாம்' என்ற வரிகளில் வரும் பாவனாவும் அழகு தான்.

தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானை விட மிகச் சிறந்த இசையை கொடுப்பது யுவன் தான் என்று கூறலாம். ஹாரீஷ் போன்றவர்கள் எல்லாம் அதற்குப் பின் தான் வருகின்றனர் என்பது எனது கருத்து. எத்தனை அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார் சமீபத்தில். கடந்த நான்கு ஆண்டுகளிலேயே என்னால் 'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'சரோஜா', 'தீபாவளி', 'கற்றது தமிழ்', 'பட்டியல்', 'அறிந்தும் அறியாமலும்', ராம், சண்டைகோழி, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் பல அற்புதமான பாடல்களைக் கொடுத்துள்ளார். அதுவும் இவர் பாடல்களில் உயிர் இருக்கிறது என்று கருதுகிறேன்.

உதாரணத்திற்கு 'மேற்கே மேற்கே', 'காதல் வைத்து', 'போக போக', 'போகாதே', 'பறபற பட்டாம் பூச்சி', 'தாவணி போட்ட தீபாவளி', முக்கியமாக 'காதல் வளர்த்தேன்' (மன்மதன்) பாடலில் வரும் இவ்வரிகளின் ராகம் குறிப்பிடத்தக்கது.

'உன் முகத்தைப் பார்க்கவே
என் விழிகள் வாழுதே,
பிரியும் நேரத்தில்
பார்வை இழக்கிறேன்'


யுவன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மற்றுமொரு சிறந்த இசையமைப்பாளர்.

5. மன் மோகினி

திரைப்படம்: யுவராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தியில், ரகுமான் இசையமைத்து கூடிய விரைவில் வெளியாகவிருக்கும் படம் யுவராஜ். சுபாஷ் கய் இயக்கத்தில் உருவான படம். இப்படத்தின் பாடல்கள் இருவாரங்களுக்கு முன்பாக வெளியானது. தற்போதைய ரகுமானின் பாடல்களை பல முறை கேட்க வேண்டியிதிருக்கிறது. ஜோதா அக்பர் வெளியான அன்று நாள் முழுவதும் கேட்டும் ஒரு பாடல் மட்டுமே பிடித்தது. ஆனால் தூங்கிய பிறகு, மறுநாள் மீண்டும் ஒலிக்கவிட்ட பிறகு அனைத்துப் பாடல்களும் மிகவும் இனிமையாக இருந்தன. அதனை விடவும் கூடுதலாக கேட்க வேண்டியதிருக்கிறது யுவராஜின் பாடல்களை விரும்புவதற்கு!.

பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே பிடிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால், ஜோதா அக்பர் பாடல்கள் அனைத்தையும் அவ்வாறு நான் கேட்காமல் விட்டிருந்தால் அப்பாடல்களின் இனிமையை இழந்திருப்பேன் (இன் லம் ஹோ, கெ ஹனோ' பாடல்கள்). இப்படத்திலும் கேட்ட மாத்திரத்திலேயே பிடித்த பாடல் 'மன் மோஹினி' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் தான். வரிகள் இந்தியில் இருப்பதால் என்னால் விவரிக்கவும் இயலாது.



தோம் தோம்
தன தோம் தோம்
தன தோம் தோம்
தன தன தன தன


என்று ஆரம்பிப்பதே அழகு. இது மட்டுமல்ல பாடல் முழுவதுமே இனிமையாக தான் இருக்கிறது. முக்கியமாக 1:49 முதல் 2:12 வரை வரும் வயலின் மிக, மிக இனிமை. அந்த வயலின் அப்படியே 'மன் மோஹினி', என்ற வரிகளுடன் ஐக்கியமாகி மறைவது [2:12 - 2:20] இன்னும் இனிமை. மொத்தத்தில் மிக அற்புதமான பாடல். இதுவரை இப்பாடலை எத்தனைமுறை கேட்டிருக்கிறேன் என்ற கணக்கே இல்லை.

இப்பாடலைப் பாடியவர் விஜய் பிரகாஷ். குரலும், பாடியவிதமும் அருமையாக இருக்கிறதே. யார் இவர் என்று தேடிய போது தான் 1998 ஸீ டிவியில் ஒளிபரப்பான சரிகமபதநி நிகழ்ச்சியில் இறுதி வரை சென்ற பாடகர் என்று தெரிய வந்தது. அப்போட்டியின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்தேன். அருமை! 10 வருடங்களுக்குப் பிறகு அப்பாடகரின் திறமையை அனைவரும் அறியும் விதமாக ஓர் அற்புதமான பாடலைக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் பாராட்டப்பட வேண்டியவர் (ஏற்கனவே ஒரு பாடலை சுவதேஷ் படத்தில் பாடியிருந்தாலும் அப்பாடல் அந்த அளவிற்கு அவருக்குப் பெயர் பெற்று
தரவில்லை).

இவர் குரல் ஏ.ஆர்.ரகுமானின் குரலை ஒத்திருக்கிறது என்றும் நான் கருதுகிறேன்.

செவ்வாய், ஜூலை 15, 2008

சக்கரகட்டி இசை மதிப்பீடு

நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கு நன்றி. இருவரின் புண்ணியத்திலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடாமல் கேட்க முடிந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரகுமானிடமிருந்து வித்தியாசமான ஆல்பம். சிவாஜியின் பாடல்கள் என்னை மிகவும் கவரவில்லை. ஆனால், 'சில்லென்று ஒரு காதல்' படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருந்தன - அவற்றை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆல்பத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. அது என்னவென்று கூறமுடியவில்லை. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றில் இரண்டு பாடல்கள், 'மீனாட்சி' என்ற இந்தி படத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. பாடல்களைப் பற்றிய எனது மதிப்பீடு.

1. ஏலே (3 / 5)

பாடியவர்கள்: கிரிஷ், நரேஷ் அய்யர்
பாடலை எழுதியவர்: நா.முத்துக்குமார்

நண்பர்கள் பாடும் பாடல். இப்படத்தில் இரண்டு நண்பர்கள் பாடும் பாடல்கள் உள்ளன. 'டாக்ஸி டாக்ஸி' மற்றுமொரு பாடல்.

'ஏலே
நேரம் வந்திடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவை திறந்து போலே
புதையல் பங்கு போட வா

வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை என்னும் புகைப்படம் எடுப்போம்'

என்று தொடங்கி செல்லும் 'ஏலே' என்ற இந்த பாடல் ஒரு சாதாரண பாடல். இப்பாடலில் எதுவே என்னைக் கவரவில்லை என்ற உண்மையைக் கூறியே ஆக வேண்டும். ரங் தே பசந்தியில் இடம் பெற்ற 'ரூபாரூ' பாடலினை இப்பாடல் ஞாபகப்படுத்துவதாலும், அப்பாடலின் இனிமை பாதி கூட இதில் இல்லாத காரணத்தினாலும் இருக்கலாம்.




2. நான் எப்போது பெண்ணானேன் (4 / 5)

பாடியவர்: ரீனா பரத்வாஜ்
பாடலை எழுதியவர்: பா.விஜய்

இப்பாடல் 'மீனாட்சி' படத்தில் இடம் பெற்ற 'ஏ ரிஸ்தா கியா' என்ற பாடலின் தமிழாக்கம். படத்திற்கு முதலில் ஹிந்தி பாடல்களை மட்டுமே பயன்படுத்துவதாக எண்ணம் இருந்ததாவும், அப்போது பதிவு செய்யப்பட்ட இரு பாடல்களில் இது ஒரு பாடல் என்று ரகுமான் விழாவில் தெரிவித்திருந்தார். இன்னொரு பாடல், 'சின்னம்மா சிலுக்கம்மா'.

உண்மையைக் கூற வேண்டுமானால், இது ஒரு அற்புதமான மெலோடி பாடல். மிக அற்புதமான மெல்லிசைப் பாடல். இப்பாடலை பல மாதங்களாக இந்தியில் கேட்டு வருகிறேன். பிடித்தமான பாடல்களில் ஒன்று. அற்புதமான இசை; அற்புதமான குரல். தமிழில் இப்பாடலைக் கெடுத்த பெருமை கவிஞர் பா.விஜய் அவர்களைச் சாரும். இப்படி கூட ஒரு பாடலை எழுத முடியுமா என்பதை அவரிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும், என்பது எனது கருத்து. ஏனோ பாடலும், வரிகளும் ஒட்டவில்லை என்பது எனது கருத்து. 'ஜோதா அக்பர்' படத்தின் பாடல்களைக் கூட இவர் தமிழில் சரியாக மொழி பெயர்க்கவில்லை என்பது எனது கருத்து. வைரமுத்து அவர்கள், 'குரு' படத்தின் பாடல்களை மிகவும் அற்புதமாக (வழக்கம் போல்) தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.




'நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

முதல் புன்னகை பூத்தது அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அவள் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
அன்னை தேவதை என்றாய் அப்போதா

என் உறக்கத்தின் நடுவில் சின்ன பயம்'

எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கலாம் - நீங்கள் ஹிந்தியில் கேட்டிருக்காவிடில் - பிடித்துப் போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் இப்பாடலின் இசை மிகவும் சொல்லப்பட வேண்டிய ஒன்று. ரீனா பரத்வாஜூம் மிகவும் அற்புதமாகப் பாடியிருக்கிறார். (ஹிந்தியிலும் இவரே பாடியிருக்கிறார்). ஆரம்பத்தில் 'ஹீம் ஹீம் ஹீம்' என்று இவர் பாடலை ஆரம்பிக்கும் அழகே தனி.

3. சின்னம்மா சிலுக்கம்மா (4 / 5)

பாடியவர்கள்: பென்னி தியோல், சின்மயி
பாடலை எழுதியவர்: பா.விஜய்

இது மீனாட்சி படத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடல். இந்தியில் சுக்விந்தர் சிங் அற்புதமாக பாடியிருப்பார். மேடைகளில் அவர் இப்பாடலை பாடும் அழகே தனி. தமிழில் ஆண், பெண் இருவரின் குரலும் பரவாயில்லை. சின்மயியின் குரல், ரெய்ஹானாவின் குரலை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் மிகவும் வித்தியாசப்படுத்திப்பாடியிருக்கிறார்.

இப்பாடலின் பீட்டும், இசையும் அற்புதம்.

"சின்னம்மா சிலுக்கம்மா நில்லு நில்லு
சேலம்மா சிலையம்மா சொல்லு சொல்லு

சின்னம்மா சிலுக்கம்மா நில்லு நில்லு
சேலம்மா சிலையம்மா சொல்லு சொல்லு"

என்று (00:30)-ல் ஆரம்பித்து (00:52)-ல்

'அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா
<ஏதோ> எவனம்மா'

என்று மாறும் போதும், 3:05-ல் 'நீ உருகி வந்திடும் தங்கம்' என்று மாறுமிடத்தில் ராகம் அற்புதம்.



அதே போல் முதல் சரண்த்திற்கு முன்பு. 2:13'- 'டிட்டு டிட்டு' என்று ஆரம்பித்து 2:25-ல் டிரம்ஸ்-ஆக மாறும் போது இசை அபாரம். மிகச் சிறந்த பாடல். தமிழில் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. பாடியவர்களும், பாடலை எழுதியவரும் நன்றாக அவர்களது பணியைச் செய்திருந்தால் இப்பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

4. மருதாணி (5 / 5)

பாடியவர்கள்:
மதுஸ்ரீ, ஏ.ஆர்.ரகுமான்
பாடலை எழுதியவர்: வாலி

இப்படத்தின் சிறந்த பாடல் இது தான் என்று உறுதியாக கூறுவேன். அற்புதமான மெலோடி - சிறந்த இசை - மதுஸ்ரீ மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். பிரிந்த காதலன் (அல்லது காதலுடன் சண்டையிட்டு தன்னையே திட்டிக்கொள்ளும்), நாயகி பாடும் பாடல். இப்பாடல் முழுமையாக அற்புதமான பாடல். இப்பாடலை கேட்ட மாத்திரமே பிடித்து விட்டது.

பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை 'டிட்டுடு டிட்டுடு' என்று அற்புதமான பீட் தொடர்கிறது - கேட்பதற்கே அற்புதமாக இருக்கிறது. பாடலுக்கு பெரும் பலம் அந்த பீட். அந்த பீட்டைத் தொடர்ந்து குழுவினர் 00:11-ல் 'ஹான்ன்ன்ன் ஹா ஆ ஆ ஆ' என்று ஆரம்பிப்பதே இதமாக இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து 'மதுஸ்ரீ' 'மருதாணி விழியில் ஏன்?' என்று ஆரம்பிக்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது.



மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி (இது புரியவில்லை)
கங்கை என்று கானலைக் காட்டும்
கானல்
காதல் என்று கங்கையைக் காட்டும்

வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி (இது புரியவில்லை)
காதல் மண் மீது சாயாது

நிஜமான காதல் தான்
நிலையானப் பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது

வாலி மிக அற்புதமாக, பாடலுடன் ஒன்றிப்போகும்படி எழுதியிருக்கிறார். அற்புதம்.

முதல் சரணத்தை ஒட்டி வரும் பியானோ இசையை மற்றுமொரு ரகுமான் பாடலில் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை. அதே போல் இரண்டு சரணத்திலும் ஓஹோ தார ரா ரா ரா ரா ரா ரா தா ரீ ரா' (2:48, 4:19) ரகுமான் பாடுவது பாடலுக்கு வளம் சேர்க்கிறது. அற்புதம்.

மொத்தத்தில் இது ஒரு மிகச் சிறந்த பாடல்.


5. டாக்ஸி டாக்ஸி (5 / 5)

பாடியவர்கள்: பென்னி தியோல், பிளாசே, Viviane Chaix
பாடலை எழுதியவர்: வாலி

இது மற்றுமொரு நண்பர்கள் பாடும் பாடல். ஆனால் முதல் பாடலைப் போல் சாதாரணப் பாடல் அல்ல. இப்பாடல் 'முஸ்தாபா முஸ்தா' + 'முக்காலா முக்காப்புலா' பாடலின் கலவை என்றும் கூறலாம். பீட்டில் தூள் பரத்தியிருக்கிறார் ரகுமான். இது ரகுமானுக்கு 'சிக்குபுக்கு', 'முக்காலா' போன்று புகழை இப்பாடல் நிச்சயமாக பெற்றுத்தரும். ஆனால் பாடலின் பீட் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது.

'ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி

டாக்ஸி டாக்ஸி
நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி

நீ நீ இல்லையேல்
நான் நான் எங்கு போவது

தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை
என்னாவது'

'நான் மம மம' என்று ஆரம்பிக்கும் போதே பாடலில் வித்தியாசம் தெரிகிறது. அந்த பிரெஞ்ச் பாடகி பாடலுக்கு வளம் சேர்த்திருக்கிறார் 'நான் மம மம' என்று ஆரம்பத்தில் பாடும் போதும் சரி, நடு நடுவில் 'ஊலா ஊலாலா' (1:40) என்றும், 'ஞன்சமிஞ்சா ஞன்சமிஞ்சா' என்று பாடும் போதும் சரி, மிக இனிமையாக இருக்கிறது. அதே போல் பென்னி தியோலும், பிளாசேயும் நன்றாக பாடியிருக்கிறார்கள். முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசை (1:50 - 2:15) ஆஹா. அற்புதம். என்ன வாத்தியம் என்று தெரியவில்லை - மிக இனிமை.



மொத்தத்தில் அற்புதமான பாடல்.


6. ஐ மிஸ் யூ டா (3 / 5)

பாடியவர்கள்: சின்மயி
பாடலை எழுதியவர்: நா.முத்துக்குமார்



நாயகனை நினைத்து நாயகி பாடும் பாடல். சின்மயி பாடியிருக்கிறார். இசை, பாடிய விதம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இன்னும் என்னைக் கவரவில்லை. ஆரம்பத்தில் வரும் இசை, 'தாஜ்மஹால் ஓவியக் காதல்' (யுவன் சங்கர் ராஜா) பாடலை ஞாபகப்படுத்துகிறது.

தாராளமாக சி.டியை வாங்கலாம் - வருத்தப்படமாட்டீர்கள்.

செவ்வாய், மே 13, 2008

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

படம்: யாரடி நீ மோகினி
பாடியவர்: கார்த்திக், ரீட்டா
இசை: யுவன் சங்கர் ராஜா

செல்வராகவனின் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு, அவரது உதவியாளரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் நன்றாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இப்பாடல் இந்த ஆல்பத்தில் தனித்து நிற்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வெண்மேகம்'(ஹரிஹரண் பாடியது) பாடல் தான் எனக்கு விருப்பமான பாடலாக இருந்தது. அப்பாடல், 'ஏய் உன் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா பாடலின்' பிரதி என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் அப்பாடலின் சரணத்தில் (2:02-ல்) வரும் கீழ்கண்ட வரிகளின் ராகமும்

"தேவதை வாழ்வது
வீடல்ல
கோவில் கடவுளின்
கால்தடம்
பார்க்கிறேன்"


இரண்டாம் சரணத்தில் (2:36 - 2:59) வரும் இசையயும் என்னை கிறங்கடித்தது.

'ஒரு நாளுக்குள் எத்தனை', என்ற இந்த பாடலின் இனிமையை சிறிது தாமதாகவே உணர்ந்தேன். கார்த்திகும், ரீட்டாவும் மிக அழகாகப் பாடியுள்ளார்கள்.

ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகிற பொழுது
தொடுவானத்தை
தொடுகிற உணர்வு

என்று கார்த்திக்கும்,

ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்
எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும்ம்ம்
வரும் நடுக்கம் - என்றாலும்
கால்கள் மிதக்கும்

என்று ரீட்டாவும் பல்லவியை மிக அழகாக ஆரம்பித்து வைக்கிறார்கள்.

சரணத்தில் வரும் ராகம் மிக அருமை (02:40)

"இது ஏதோ
புரியா உணர்வு
இதைப் புரிந்திட
முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை
ஒரு எரிமலை
பெருங்காற்றும் சேர்ந்தே
ஒன்றாய் சிரிக்கும்"


அதே ராகத்தில், இரண்டாம் சரணத்தில் வரும் வரிகள் மிகவும் கவர்கின்றன.

"தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம்
பின்பு தெரியலாம்
அது வரையில்
நடப்பது நடக்கும்"

பாடல் முழுவதும் யுவன் மெல்லிய பீட்டை அசத்தலாக தழுவவிட்டிருக்கிறார். அவருக்கே உரித்தான, அழகான பியானோ இசையையும் (01:44 - 01:59, 05:16 - 05:31) இடையில் கோர்த்து பாடலுக்கு இனிமையை கூட்டியிருக்கிறார். மொத்ததில் மிக அருமையான பாடல்.




2. நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே

படம்: உற்சாகம்
பாடியவர்: ஹரிஹரண்
இசை: ரஞ்சித் பரோர்

ரகுமான் தரத்திற்கு இணையாக, ரஞ்சித் பரோர் இசையமைத்திருக்கிறார். இதனை எனக்கு அறிமுகம் கொடுத்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி. அவர் கொடுத்த தொடுப்பில் கேட்டதும், உடனே கலாட்டாவில் பாடல்களை வாங்கினேன். என்னவொரு அருமையான பாடல்கள்! அத்தனையும் தேன். இப்பாடல், 'கண்கள் உன் கண்களோ' பாடல், 'நண்பா நண்பா', என அத்தனையும் அற்புதமான பாடல்கள். ரஞ்சித் பரோருக்கு ஒரு பெரிய ஓ! ஆனால் இத்தனை அருமையான பாடல்கள் இப்படத்தில் மாட்டிக்கொண்டதே என்ற வருத்தம் உண்டு. இவை மட்டும், ஒரு சூர்யா படத்தில் இருந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்! பாஸ்டன் பாலா நன்றாகக் குறிப்பிட்டிருந்தார்' பிரகாஷிற்கு செல்லும் சில படங்கள் இவருக்குச் செல்லட்டும் என்று. அதனை ஆமோதிக்கிறேன்.

ரஞ்சித் பரோர், ஏற்கனவே 'வி.ஐ.பி'-யில் நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அதன் பிறகு தமிழில் இசையமைக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. ஆனால், உற்சாகத்தில், விஐபி-யை விட அற்புதமான பாடல்கள். இப்பாடல்களை தினமும் எத்தனை முறை கேட்கிறேன் என்ற கணக்கே இல்லை. இப்பாடலில் அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. இசை, ஹரிஹரன் மற்றும் நந்தினியின் மயக்கும் குரல், வைரமுத்து அவர்களின் வரிகள். எத்தனை அற்புதமான வரிகள்!

'ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்


வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு
யாம் கண்டனம்'


அற்புதமான வரிகள், ராகம்! மிகச் சிறப்பு.


பல்லவியில் முதல் சில வரிகள் முடிந்ததும், 'கொதித்தாடுதே குழைந்தாடுதே' (1:08) என்று நந்தினி மயக்கும் குரலால் பாடுவதும், அதன் பின்னணியில் அற்புதமான வயலினும் அற்புதம். அதே போல் 'உள்ளாவியை நீ தீண்டாவே காற்றாக வா தலைவா'(4:20) வரியில் வரும் ராகமும், வயலின் இசையும் தேன். நந்தினி இவர் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாக்கம் தெரிகிறது. மொத்தத்தில் 2007-ன் சிறந்த பாடல்.



3. அடடா அடடா அடடா

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
பாடியவர்: சித்தார்த்
இசை: தேவி ஸ்ரீபிரசாத்

மற்றுமொரு தெலுங்கு ரீமேக் திரைப்படம். இப்படத்தின் பின்னணி இசையைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தேன். இப்படத்தின் பாடல்களை படம் பார்ப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். நன்றாக இருந்தது - ஆனால் என்னை மிகவும் கவர்ந்ததுஅந்த தீம் இசை மட்டுமே.



ஆனால் திரைப்படம் நன்றாக இருந்த காரணத்தினால் படத்தின் பாடல்கள் மறுமுறை கேட்கும் போது பிடித்து விட்டது. அதிலிருந்து இப்பாடல் எனது விருப்பமான பாடலாகி விட்டது. நன்றாக பாடியிருக்கிறார். ஆனாலும், பாடலின் நடுவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள், 'பா நி ச சா....' என்று பாடுவதும் பிடிக்கும். மொத்தத்தில் நல்ல பாடல்.



இப்படத்தில் இடம் பெற்ற 'உயிரே உயிரே பிரியாதே' என்ற பாடலும் மிக அருமையான பாடலும். அதிலும், அப்பாடலின் நடுவில் வரும் 'ஹான் ஹான் ஹான்' என்ற பெண்ணின் குரல் அற்புதம்.

4. யாரோ மனதிலே

படம்: தாம் தூம்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹரீஷ் ஜெயராஜ்

மற்றுமொரு வழக்கமான ஹரீஷ் ஆல்பம். இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அதில் இப்பாடலும் ஒன்று. படத்தில் இரண்டு மூன்று பாடல்கள் வேறு படத்தின் பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. அவற்றுள் முதல் பாடல்: 'அன்பே என் அன்பே' பாடல். இப்பாடல் 'ஓ மனமே ஓ மனமே' பாடலின் ராகத்தை ஒத்திருப்பதால், அப்பாடல் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டாவது 'ஆழியிலே முக்குழிக்கும்' பாடல் அப்படியே 'ரட்சகன்' படத்தில் இடம்பெற்ற 'கையில் மிதக்கும் காற்றாக' பாடலின் நகல் போன்று தோன்றுகிறது. 'புதிய மனதில்' என்ற பாடல் வித்தியாசமான முயற்சி. கவர்கிறது. 'சரி சரி சரி... அட அது சரி சரி'. :). ஆனால், இப்பாடலில் ஆரம்பத்திலும் (0:08), நடுவிலும் (1:30), இறுதியிலும் (4:18), 'டாட டடண்டன்' என்ற இசையோ எங்கேயோ கேட்டிருக்கிறேன். தலை காய்கிறது. இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

'யாரோ மனதிலே' என்ற இப்பாடலை தூக்கி நிறுத்தியிருப்பவர், பாம்பே ஜெயஸ்ரீ. பொதுவாக, பாம்பே ஜெயஸ்ரீ, ஹரீஸின் எல்லா படங்களிலும் பாடுவதால் எனக்கு அவர் பாடிய பாடல்கள் பெரிய ஈர்ப்பாக அமைந்ததில்லை. இப்பாடல் பெரிதாக கவரவில்லையென்றாலும், அவர் தான் பாடலுக்குப் பலம் என்று கூறலாம். ஓரளவிற்கு நல்ல இசை கூட. இப்பாடலில் 2:41-ல் வரும் 'தத்தத்தா தார தத்தத்தா' என்று வரிகளில் வரும் ராகத்தை எங்கேயோ கேட்டிருக்கிறேன். :-(




5. உன்னை கேள் உன்னை கேள்

படம்: இனிமே நாங்க தான்
பாடியவர்: இளையராஜா
இசை: இளையராஜா

தமிழில் வந்த கம்ப்யூட்டர் அனிமேட்டட் திரைப்படம். யூ டியூப்பில் ஒரு பாடலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவாயில்லையே என்று அதன் தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் போது தான் இசை இளையராஜா என்று தெரிந்து கொண்டேன். அப்போது இப்பாடலைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அற்புதமான பாடல். இசையிலும், முக்கியமாக மெல்லிசையிலும், இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார். அதற்கு இப்பாடலும் விதிவிலக்கல்ல. இசையினை விட என்னவொரு அற்புதமான குரல், இளையராஜாவினுடையது.

உன்னை கேள்
உன்னை கேள்
என்ன செய்தாய்
எண்ணிப் பார்
எண்ணிப் பார்
என்ன சொல்வாய்?


ஊருக்காக நீ ஓடி
உழைத்தாயோ - இல்லை
உன்னை மட்டுமே பார்த்துக்
கிடந்தாயோ

நன்மைகளா
தீமைகளா
செய்ததென்ன
உண்மை சொல்வாய்

நல்ல ராகம். நல்ல குரல். பல்லவி(1:12 - 1:31) மற்றும் முதல் சரணம் முடிந்ததும் வரும் இசை அற்புதம்.

'மனத்தை அழுக்காக்கி
சிரிக்கிறாய்
முகத்தை முகமூடியாக்கி
மறைக்கிறாய்'


என்னவொரு அற்புதமான வரிகள்! அழகான பாடல். YouTube வீடியோ இதோ: (1:50 முதல் பார்க்கவும்)



இப்படத்தின் பாடல்கள் கலாட்டா.காமில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.

திங்கள், மே 05, 2008

வீணையின் நாயகன்

சென்ற வாரம் அருகில் உள்ள திரையரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியன்' படத்திற்கு சென்றேன். நல்ல திரைப்படம் - நன்றாகவே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜெனிலியா பாத்திரம் தான் சிறிது ஓவர் ஆக்டிங் போல் தோன்றியது (சந்தோஷ்.... ஏன் சந்தோஷ்......... சாரி சந்தோஷ்). மற்றபடி ஓர் நல்ல படம்.

படத்திற்கு செல்வதற்கு முன்பாகவே பாடல்களை கேட்டிருக்கிறேன். இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. முக்கியமாக, ஆஹாஹாஹா..... என்று ஒரு நிமிடத்திற்கு வரும் அந்த தீம் மியூசிக். 'உனக்கும் எனக்கும்' படத்திலேயே 'உன்பார்வையில் பைத்தியம் ஆனேன்' போன்ற சிறந்த பாடல்களை கொடுத்து அசத்தியவர் தேவி ஸ்ரீபிரசாத். தேவி ஸ்ரீபிரசாத்தின் பாடல்களை விட அவரது பின்னணி இசை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர் செண்டிமெண்ட், சோகக் காட்சிகளுக்கு இசையமைக்கும் விதம். செண்டிமெண்ட் காட்சிகளுக்கும், சோகக் காட்சிகளுக்கும் வயலின், வீணை இசைக்கருவிகளை விட மிகச் சிறந்த வாத்தியம் இல்லை என்பது எனது கருத்து.

அவற்றை மிகச் சிறப்பாக உபயோகப்படுத்துவதில் தேர்ந்தவர் பின்னணி இசையின் ராஜா, இளையராஜா அவர்கள்.

அதற்குப் பிறகு, வீணையைக் கொண்டு பின்னணி இசையை கோர்ப்பவர்கள் யாருமே இல்லை என்று உறுதியாக கூறலாம். அப்படியேயாயினும், ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே சில இசையமைப்பாளர்கள் உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள் (நான் பார்த்த) அனைத்துப் படங்களிலும் வீணை வாத்தியத்திற்கு முக்கிய இடம் கொடுத்து அதிஅற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல,

ஏ.ஆர்.ரகுமான் பாடல்களிலேயே அதிகமாக வீணை இசை இடம் பெறுவதில்லை என்ற வருத்தம் உண்டு. அதிலும் பின்னணியில் சுத்தம். ஆனால் தேவி ஸ்ரீபிரசாத் அதற்கு நேர் மாறானவர். இப்படத்திலும் சில முக்கியமான காட்சிகளில் அத்தகைய இசையினைக் கொடுத்து என்னை மிகவும் கவர்ந்திழுந்திருக்கிறார். அவற்றைப் பற்றியும், அவரது இன்ன இரண்டு படங்களில் எனக்குப் பிடித்த அத்தகைய காட்சிகளின் தொகுப்பு இது. தேவி ஸ்ரீபிரசாத்திற்கு வீணையின் மீது ஏன் அத்தனை ஓர் காதல் என்று தெரியவில்லை. ஆனால் அக்காதல் ஒர் அற்புதமான ஒரு காதல் என்று அவரது பின்னணி இசையைக் கேட்கும் போது தெரிகிறது. அது போன்ற காட்சிகளில் வீணையைத் தவிர வேறு வாத்தியத்திற்கு அந்தக் காட்சியின் சோகத்தையும், வலிமையையும் உணர்த்தும் திறமை இல்லை என்று கூறுவேன்.

முதலாவதாக சந்தோஷ் சுப்ரமணியம்
----------------------------------

தன்னிடம் சொல்லாமல், தொழில் தொடங்குவதற்காக, தனது மகன் வங்கியில் கடன் வாங்குகிறான் என்பதை உணரும் ரவியின் தந்தை, பிரகாஷ் ராஜ் தனது மனைவி கீதாவிடம், அவனுக்கு அந்தப் பெண் மட்டும் பிரச்சனை இல்லை, வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறுகிறார். அப்போது அதன் அர்த்தத்தை உணரும் கீதா அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதற்கு சில தினங்களுக்கு முன்பாக, தனது வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று ரவி, தனது தாய் கீதாவை திட்டிய பிறகு ரவியுடன் பேசுவதை தவிர்க்கும் கீதாவிற்கு இதனைக் கேட்கும் போது அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுகிறது.

மறுநாள் காலையில் தாயுடன் பேசுவதற்காக ரவி தயங்கி நிற்பதையும், பின்னர் பேசாமல் சென்றதை கவலையுடன் பார்க்கும் கீதாவின் உணர்வினையும் மெருகேற்றும் விதமாக பின்னணியில் வரும் இசை அற்புதம். (05:10)




அதே போல், ஜெனிலியா, ரவி வீட்டிற்கு வரும் போது ரவி ஜெனிலியாவிற்கு அனைவரையும் அறிமுகம் செய்கிறார். அப்போது கீதாவைப் பார்த்து ஜெனிலியா, 'ஆன்ட்டி, உங்க குரல் அழகா இருக்கு ஆன்ட்டி', என்று கூறும் போது அதே இசை. அற்புதம். (00:42)




இரண்டாவதாக உனக்கும் எனக்கும்
--------------------------------

இப்படத்தின் 'உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்', பாடல் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடல்களில் சிறந்த பாடல் என்று கூறுவேன். அப்பாடல் எப்படி பின்னணி இசையாக, அருமையாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

காதலியிடம், தான் லண்டனுக்கு திரும்ப செல்வதாக சோகத்துடன் கூறும் போது வரும் இசை:



00:20-ல் 'பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்', என்ற வரிகள், வீணை இசையாக உருமாறியிருக்கிறது)

பாக்யராஜூம், பிரபுவும் ரவியினைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் போது, வெட்டி விடுவேன் என்று பிரபுவை அரிவாளை ஓங்குகிறார். எங்கே வெட்டு என்று பாக்யராஜ் கூறும் போது, 'டாட்', என்று கூப்பிடும் ரவியினைத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அழுக்கு பனியன், பாண்டில், உடல் முழுவதும் புழுதியுடனும், காயங்களுடனும் நிற்கும் ரவியினைப் பார்த்து பாக்யராஜ் கண்ணீர் வடிக்கும் காட்சிக்கு எவ்வளவு அற்புதமாக இந்த வீணை மெருகேற்றுகிறது என்று பாருங்கள்.(09:48)




அதே இசை, திரிஷா பேசுவதை கேட்கும் மகிழ்ச்சியுடன் பாக்கியராஜ் கேட்கும் போது: (07:44)



ஆர்யா - தெலுங்கு படம்
------------------------

அல்லு அர்ஜீன் நடித்த 'ஆர்யா' என்ற தெலுங்குப் படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் காதலிக்கு திருமணம். நாயகன் காதலியின் திருமணத்தில் அவரை சந்தித்து, அவரை இன்னும் தான் காதலிப்பதாக கூறி காதலியை அழ வைக்கிறார். ஆனால் தான் நடித்ததாக கூறி, காதலிக்கு திருமண வாழ்த்துக்கள் என்று ஒரு ரோஜாப் பூவினைக் கொடுக்கிறார். சில நொடிகளே வந்தாலும், அந்த வீணை இசை என்னவொரு அற்புதமான இசை! (02:00)



தேவி ஸ்ரீபிரசாத் இது போல இன்னும் நூற்றுக்கணக்கான படங்களில் மனம்
மயக்கும் இசையைக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி இத்துடன் இவ்விடுகையை முடிக்கிறேன்.

ஞாயிறு, ஏப்ரல் 27, 2008

தமிழர்கள் தன்மானமிக்கவர்கள்

சென்னை: நகரில் நடக்கும் திருட்டு, கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்று
ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருட்டு, கொலை என்பது மனித இனம் தோன்றிய நாள் முதலாக நடக்கும் சாதாரண ஒரு நிகழ்வு. ஏதோ நேற்று, இன்று நடப்பது போன்று கொலைகளைப் பார்த்து பொது மக்கள் பயப்படுவது என்பது தேவையில்லாத ஒன்று. மேலும் கொலைகள் இந்தியாவில் மட்டும் நிகழவில்லை.சர்வதேச அளவில் நடைபெறும் ஒன்று. நமது நாடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல இது. உலகம் முழுவதும் வாழும் மனிதர்களுக்கான சகிப்புத்தன்மை குறைந்து வருவதன் விளைவாக கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

ஆனால் அதே சமயத்தில், நாளொன்றுக்கு 500 நபர்கள் என்பதில் இருந்து 400
நபர்கள் என்ற அளவிற்கு இழப்பு இருக்குமாறு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகரில் உள்ள ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதனால் நல்ல மாற்றத்தினை மக்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆதலால் பொது மக்கள், இது போன்ற கொலைகளைப் பார்த்து பீதி அடையத் தேவையில்லை. வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு உயிரோடு
திரும்பி வந்தால் மகிழ்ச்சி அடையவும் கூடாது. அதே சமயத்தில் வெளியே உயிரை விடும் பட்சத்தில் பீதியடையவும் கூடாது. தமிழர்கள் தன்மானமிக்கவர்கள்; வீரம் மிகுந்தவர்கள். வீரத்துடன் மரணத்தை ஏற்க வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்குடன், Gladiator படத்தில் வரும் 'Go! Die with Honor' என்ற காட்சியை மேற்கோளிட்டு குறிப்பிட்டார்.

==================== அசல் செய்தி ==========================

சென்னை: பண வீக்கம் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் பீதி அடையத்
தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்று
ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பணவீக்கம் அதிகரிப்பு என்பது
சர்வதேச அளவில் நடைபெறும் ஒன்று. நமது நாடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல
இது. உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண
வீக்கம் உயருகிறது.

7.4 சதவீதம் என்ற அளவிலிருந்து 7.1 சதவீதம் என்ற அளவுக்கு பண வீக்கம்
குறைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதைப் பார்த்து நாம் யாரும் பீதி அடையத் தேவையில்லை. குறைந்தால் மகிழ்ச்சி அடையவும் கூடாது, கூடினால் பீதி அடையவும் கூடாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க மத்திய அரசு போதுமான
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.

ஞாயிறு, மார்ச் 30, 2008

நூறு தேங்காய் உடைக்கிறேன்

2008 ஜூலை
------------

இது வரை காவல் நிலையத்தின் வாசலையே மிதித்திராத பழனி, இன்று முதன் முறையாக அதை செய்ய வேண்டியதாகி விட்டது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, முதன் வரிசையில் அமர்ந்திருந்தவரின் அருகில் நடுக்கத்துடன் சென்று, தனக்குக் கூட கேட்காத வகையில்

"சார்", என்று அழைத்தான்.

"இம்..."

""

"என்ன விசயம்?"

"சார்... கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...."

"கிட்னி ஆபரேஷனா? அந்த செக்ஷன் போ...."

பத்தடி நடந்து, பக்கத்தில் காவலர் காட்டிய பகுதிக்கு சென்றான் பழனி..

"சார்..."

"என்ன விசயம்?"

"சார், கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...."

"கிட்னி ஆப்பரேஷனா? யாருக்கு?"

"எங்க அப்பாவுக்கு..."

"எந்த ஆஸ்பிட்டல்?"

"கிட்னி கேர் ஆஸ்பிட்டல் சார்..."

"கிட்னி கேர் ஆஸ்பிட்டல். இம். என்னைக்கு ஆப்பரேஷன்?"

"அடுத்த வாரம் சார்..."

"அடுத்த வாரமா? அடுத்த வாரம் ஆப்பரேஷனை வச்சுக்கிட்டு சாவகாசமா வர்ற?"

"சார் போன வாரம் தான் ஆப்பரேஷன் பண்ணுறதா முடிவெடுத்தோம்.... இப்ப தான் டோனர் கிடைச்சாங்க...."

"யாரு டோனர்?"

"என்னோட பிரண்டுக்கு தெரிஞ்சவங்க..."

"தெரிஞ்சவங்கன்னா? யாரு.. அவர் பொண்டாட்டியா?"

"இல்ல சார்... அவனோட சொந்தக்காரங்க..."

"என்ன சொந்தம்? அவர் ஏன் உங்களுக்கு டொனேட் பண்ணனும்..."

"அவர் எங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம்.. எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அதனால அவரே கொடுக்குறதா சொல்லியிருக்கார்."

"சரி சரி... இந்த பார்மை பில்லஃப் பண்ணிக் கொடுத்துட்டு அடுத்த வாரம் வா."

"சார் அடுத்த வாரமா? புதன்கிழமை ஆப்பரேஷன் சார்..."

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க ஒரு வாரம் ஆகுமே..."

"சார் நீங்க கொஞ்சம் மனசு வச்சா?"

"உங்கப்பா ஒருத்தர் தான் பேசண்டா? ஊர்ல எத்தனை பேசண்ட் இருக்காங்க.. அவங்க எல்லாரையும் பார்க்க வேண்டாமா? "

"சார் வேணும்னா, டோனரை இங்கேயே கூட்டிட்டு வர்றேன் சார்..."

"இது என்ன ஸ்கூல் பசங்ககிட்ட, யார் மிட்டாயை தின்னான்னு கேட்குற சமாச்சாரமா? உயிர் சமாச்சாரம்... அதுவும் இல்லாம, நீ கூட்டிட்டு வர்றவர் தான் அந்த ஆளுன்னு

எப்படி எனக்கு தெரியும்? நாங்க என்கொயரி எல்லாம் பண்ணி முடிக்க ஒரு வாரம் என்ன ரெண்டு வாரமே ஆகும்... அதனால நீ போய்ட்டு அடுத்த வாரம் வா..."

"சார்..."

"சுந்தரம்...", என்று அந்த அதிகாரி அருகில் இருந்த நபரை அழைத்தார்.

"சார்", என்று வந்து நின்றார் ஓர் கான்ஸ்டபிள்...

"இந்த ஆளை கூட்டிட்டு போங்க..."

சுந்தரத்துடன் சென்ற பழனி மீண்டும் திரும்ப அதே அதிகாரியிடம் வந்தான்..

"என்ன பேசுனீங்களா"

"பேசுனேன் சார். சார்... பத்தாயிரம் கொஞ்சம் ஜாஸ்தி தான் சார்"

"பத்தாயிரம் ஜாஸ்தியா? கிட்னி ஆப்பரேஷன் என்ன கவர்ண்ட்மெண்ட் ஆஸ்பிட்டல்லயா பண்ணுறீங்க? 'கிட்னி கேர்' ஆஸ்பிட்டல்ல தானே? அங்க என்ன ஓசிக்கா பண்ணுறாங்க?".

யோசித்தபடியே நின்றான், பழனி.

"அதுவுமில்லாம இதுல எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருக்கு. ஒழுங்கா என்கொயரி முடியனும்னா ஒரு மாசம் கூட ஆகலாம். அது வேற என்கொயரி ரிசல்ட் பாசிட்டிவா வரும்னு கூட சொல்ல முடியாது"

"சார்"

"கிட்னி கொடுக்குறதுக்கு பெரிய மனசு வேணும். சும்மா, வேண்டப்பட்டவங்க, பிரண்டோட பிரண்டு எல்லாம் யாருங்க இங்க கிட்னி கொடுக்குறாங்க? சொந்த புள்ளை கூட கொடுக்க மாட்டான். அதனால சும்மா கதையடிக்கிறத விட்டுட்டு காசை கொடுத்திட்டு போங்க"

"சரி சார்", என்று மண்டையை ஆட்டி, காசை கட்டி விட்டு வந்தான், பழனி.

2008 டிசம்பர்:
-----------

'இம் என்ன கேசு?'

'ஆப்பரேஷன்'

'இம்.. என்ன கிட்னியா, ஹார்டா, லிவரா?'

'கிட்னி சார்...'

'வாங்குறீயா, கொடுக்குறீயா?'

'வாங்குறேன் சார்...'

'இம்.. கிட்னின்னா 20000 ரூபாய் ஆகும்..'

'சரி சார், ஏற்பாடு பண்ணிடலாம் சார்... '

'சரி போய்ட்டு, அப்புறம் டோனரை வரச்சொல்லுங்க.. அவர்ட்ட என்கொயர் பண்ணிட்டு சைன் போட்டு அனுப்புறேன்..'

'ரொம்ப நன்றி சார்...'

மாலை
------

"நீங்க தான் பழனி அப்பாவுக்கு கிட்னி கொடுக்குறீங்களா?"

"ஆமா சார்..."

"பத்து ரூபா கொடுத்துடுங்க"

"சார்."

"என்ன யோசிக்குறீங்க?"

"பத்தாயிரத்து நான் எங்க சார் போவேன்"

"சும்மாவா கிட்னிய நீ கொடுக்க?. காசு வாங்குறேல?"

"சார்.. என் கடனை அடைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க"

"அது மட்டுமா? கைல 50000 ரூபாய் தர்றேன்னு சொல்லியிருக்கார்ல"

"சார்.."

"ரொம்ப யோசிக்காத... நான் என்ன எல்லா பணத்தையுமா கேட்டேன். 10 ரூபாயை கொடுத்திடு.. மிச்சத்தை நீயே வச்சுக்க... எல்லாரும் நல்லா இருக்கலாம்.. "

""

2009 டிசம்பர்
-------------

காவல் நிலைய வளாகத்தின் இடது புறத்தில் தனது ஸ்விஃப்ட் காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து இறங்கினான், மாதவன்.

அப்போது, இருவர் அவன் அருகில் வந்து.

"சார் எதுவும் ஆப்பரேஷன்?"

"ஆமா, என் அண்ணனுக்கு. கிட்னி ஆப்பரேஷன்", என்றான் மாதவன்.

"ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். மொத்தமா 30000 ரூபாய் கொடுத்திடுங்க.. சாயங்காலமே எல்லாத்தையும் முடிச்சிடுலாம். நீங்க யார்கிட்டேயேயும் போய் அலைய

வேண்டாம். நாங்களே எல்லாம் பார்த்துக்குறோம்"

2010 ஜூலை
-----------

ஒரு போலீஸ்காரர், வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில்...

'கணேஷா. உன்னை தான் மலை போல் நம்பியிருக்கேன். இந்த வருஷமாவது என் வாழ்க்கையில கண்ணை துறப்பா... இந்த குற்றப்பிரிவில இருந்து எப்படியாவது உடல்

உறுப்பு தானம் பிரிவுக்கு எப்படியாது Transfer வாங்கி கொடுத்துடுப்பா. உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்'

====================================================


செய்தி: கிட்னி தானம் போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது.

குறிப்பு: போலீஸ் துறையினரில் பலர் கடமை தவறாமல் பணி புரிகிறார்கள் என்பதனை அறிவேன். இது நகைச்சுவைக்காக(?) மட்டும் எழுதப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது போன்ற ஓர் நிலைமை வந்து விடக்கூடாது என்பதே எனது ஆவல்.

சனி, பிப்ரவரி 23, 2008

ஏன் எனக்கு மயக்கம் - காதலிக்க நேரமில்லை

சென்ற வாரம் எழுதிய சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள் பட்டியலில் ஒரு பாடலை சேர்க்க மறந்து விட்டேன் என்பதனை மிக தாமதமாக தான் உணர்ந்தேன். அதனை விட்டுவிட்டு அடுத்த பட்டியலில் சேர்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு. அது நான் பல முறை ஆச்சர்யப்பட்ட புது இசையமைப்பாளர் (இன்னும் அவரை புது இசையமைப்பாளர் என்று கூறுவதில் உடன்பாடு இல்லை), விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான ஒரு பாடல்.

இம்முறை திரைப்பட பாடல் அல்ல; தமிழ் தொலைக்காட்சி தொடருக்காக அவர் இசையமைத்த பாடல். சில நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சில நொடிகள் மட்டுமே இந்தப் பாடல் நமக்கு பிடிக்குமா என்ற தயக்கம் இருந்தது. அந்த பெண் பாடகர் ஆ... என்று பாட ஆரம்பித்ததுமே அந்தத் தயக்கம் காணாமல் போய்விட்டது. உங்களில் பலர் அப்பாடலை கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்.

பாடலைப் பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
தொடர்: காதலிக்க நேரமில்லை.
பாடல்: என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

காதலனை எண்ணி, எண்ணி காதலி பாடும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது. இத்தனைக்கும் ஒரு சரணம் மட்டும் தான் இப்பாடலில். ஆனாலும் அட்டகாசம்! அற்புதம்.


என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன்
செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு

என்ற எட்டுவரிகளை அட்டகாசமான ராகத்தில் பாடி விட்டு அனுப்புபுபு ஹோ ஓஓஓஒ என்று தொடர்ந்து


பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்

மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்துக் கொல்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செயுது
மழையில்
விடுகிறேன்

கனவில் மட்டும் காதல் செய்து
இரவில் கொல்கிறேன்

மேற்கண்ட வரிகளை பாடும்போது, நம்மையே மறக்க செய்கிறார் பாடகர். அற்புதம்!

சரணத்திற்கு முன்பாக வரும் அந்த ஆலாபனையும் நன்றாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சரணம் மிக இனிமையாக இருந்தாலும், பல்லவி அளவிற்கு இனிமை அல்ல.

ஆனாலும் பாடகி, தனது வித்தியாசமான குரலினால் அங்கேயும் கவர்கிறார். உதாரணத்திற்கு 1:40-ல்


யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள்
தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் எனை சுடுவது
ஏனோ

அதிலும் அந்த ஏனோ (1:53) என்ற வார்த்தைக்கு ஓர் நீட்டத்தைக் கொடுத்து அதனை இனிமையாக்கிய விதமே தனி தான்.

விஜய் ஆண்டனிக்கும் நன்றி.

இதோ அந்த பாடல்.





இதே போல் சென்ற ஆண்டு இவரின் இன்னொரு பாடலையும் குறிப்பிட மறந்து விட்டேன். அது 'நான் அவன் இல்லை படத்தில் இடம் பெற்ற 'ஏன் எனக்கு மயக்கம்' என்ற பாடல். அப்பாடலும் ஓர் அட்டகாசமான, அற்புதமான, இனிமையான பாடல். அப்பாடலைப் பாடியவரும் அதே பாடகர் - சங்கீதா ராஜேஸ்வரன். இணைந்து பாடியிருப்பவர் ஜெயதேவ்.

இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் இசையே மிக அருமை. அதனை விடவும் இரண்டு இடங்களில் ராகம் என்னை மிகவும் கவர்ந்தது.

'ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்னாச்சு.... '

என்று ஆணும் பெண்ணும் பாடிவிட்டு,

பெண் (00:52)


'ஹே இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால்
விரலில் வெட்கம் வளர்ந்தேன் - பறந்தேன்'
என்று பாடுமிடத்திலும்

முதலாம் சரணத்தில் பெண் பாடும் (02:24)-ல்

'கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
சாகும் போது உன்னை மட்டும் தேட சம்மதம்'
என்று பாடுமிடத்திலும் தான். (அதனை ஒத்த இரண்டாம் சரணம் 'லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன் - 4:07 வரிகளும் தான்) .

அதுவும் மேலே குறிப்பிட்ட வரிகளில் தான் எத்தனை இனிமை (ராகம், பாடிய விதம், வரிகள்). மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் வரிகள்.

இதோ அந்த பாடல்



விஜய் ஆண்டனி இது போல் இன்னும் பல நல்ல பாடல்கள் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி இப்பதிவினை முடிக்கிறேன். இதனை ஒத்த வரிகளை எனது பழைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

திங்கள், பிப்ரவரி 18, 2008

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்களின் பட்டியல். தமிழில் கடந்த மூன்று மாதங்களில் நல்ல திரையிசை பாடல்கள் வெளிவராவிடிலும், கடந்த மூன்று மாதங்களாக எனக்கு இசை விருந்து பழைய பாடல்களின் மூலமாக கிடைத்தது. அது உங்களுக்கு மிகவும் பழக்கமான பாடல்களே. அவற்றை மீண்டும் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, அப்பாடல்களின் அருமையை உணர முடிந்தது. முதலில் புதிய பாடல்கள்.

1. மன் மோஹனா

படம்: ஜோதா அக்பர்
பாடியவர்: பெலே ஷிண்டே
இசை: ஏ.ஆர்.ரகுமான்

லகான், ஸ்வதேஷ் படங்களை இயக்கிய அஷ்வத் கோரிகர் இயக்கத்தில் உருவான திரைப்படம், இந்த வாரம் உலகெங்கும் வந்துள்ளது. நேற்று தியேட்டருக்கு சென்று, பாதை தெரியாமல் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டேன். இன்னும் இரண்டு தினங்கள் அத்திரையரங்கில் படம் ஓட்டப்படும் எனத் தெரிகிறது. வேலை சிறிது குறைவாக இருக்கும் பட்சத்தில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். சரி பாடலுக்கு வருகிறேன்.

இப்படத்தின் பாடல்களை முதல் நாள் கேட்ட பொழுது இப்பாடலைத் தவிர வேறெந்த பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க இப்படத்தில் நான்கு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் ஆரம்பம் முதல், இந்த நிமிடம் வரை இப்பாடல் தான் எனக்குப் பிடித்தமான பாடல், மன் மோஹானா என்று ஆரம்பிக்கும் இப்பாடல் தான்.

கிருஷ்ண பகவான் மீதான தனது அன்பை தலைவி வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. இந்தி மொழி எனக்குத் தெரியாது. ஆனால் பாடலில் இருக்கும் இசை, உருக்கத்தின் மூலமாக தலைவியின் அன்பை உணர முடிகிறது. இது ஓர் தெய்வாம்சமான பாடல். இதற்கு முன்பு, சிவாஜி படத்தில் கோமதியின் சாந்தமான குரலில் பாடப்பெற்ற சஹாரா பாடல் தான் எனக்கு இதற்கு முன்பு பிடித்த திரையிசை பக்தி பாடல். அப்பாடலுக்கு இப்பாடல் நிகரானது.

பெலே ஷிண்டே மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இந்த இடத்தில் இவரது குரல் அழகாக இருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் பாடல் முழுவதும் அற்புதமாக இருக்கிறது. ரகுமானின் இசையை தனியாக வேறு நான் குறிப்பிட வேண்டுமா என்ன?


'ஜோடிக்கே அப்புனே காஸி மதுரா
ஜோடிக்கே அப்புனே காஸி மதுரா
ஆக்கே பசா மோரே நன்
தும் பின் பாவூன் கேசே செய்ன்'
என்று 00:44 இடத்தில் வரும் ராகமும், அதனைத் தொடர்ந்து வரும் வயலின் இசையும் மிகவும் கவர்கிறது. ஆனால் அந்த வயலினிசையை எங்கோ கேட்டது போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நண்பர், அது 'சங்கமம்' படத்தில் இடம் பெற்ற மார்கழித் திங்கள் அல்லவா பாடலின் இடையில் வரும் வயலினிசையை ஒத்திருக்கிறது என்று கூறி எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்.



இப்பாடலினை முதலில் ஐஸ்வர்யா ராய் தான் பாடுவதாக இருந்ததாகவும், அவருக்கிருந்த வேலைப்பளுவினால் அவரால் பாட இயலாமல் போய் விட்டதாகவும், படத்தின் இயக்குநர் ஓர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யா ராய் அப்பாடலை பாடியிருந்தால், பெலே ஷிண்டே போன்ற சிறந்த பாடகரை பலருக்கு தெரியாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது.

நல்ல வேளை. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'இன் லம் ஹோ' பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்று. இதன் தமிழ் பதிவு (ஆடியோ) இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருக்கிறது. அதனைக் கேட்க வேண்டும்.

2. இது என்ன மாயம்

படம்: ஓரம் போ
பாடியவர்கள்: சங்கர் மஹாதேவன், அல்கா யக்னிக்
இசை: ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ஓர் பாடல் என அவ்வப்போது திரும்ப வைப்பவர். அதிலும் அந்த ஒரு பாடலை மிக அற்புதமாக இயற்றி அனைவரது புருவத்தையும் உயர்த்த வைப்பவர். உதாரணமாக 'வெயில்' படத்தில் இடம் பெற்ற 'உருகுதே' பாடலையும், 'பொல்லாதவன்' படத்தில் இடம்பெற்ற 'மின்னல்கள்' பாடலையும், 'கிரீடம்' படத்தில் இடம்பெற்ற சில பாடல்களையும் குறிப்பிடலாம். அவ்வகையில் இப்பாடலையும் சேர்க்கலாம். ஆனால் அவர் இயற்றிய பாடல்களில் 'உருகுதே' பாடலுக்கு நிகரான, ஏன், அதனை விட ஒரு படி சிறந்த பாடல் என இப்பாடலினைக் குறிப்பிடலாம்.

'ஓரம்போ' பாடலை முன்பு பலமுறை கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதில் விஜய. டி. ராஜேந்தர் பாடிய 'கண் கணபதி' பாடலைத் தான் விரும்பி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்பாடலினை மிக தாமதமாக தான் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் இப்படத்தினை பார்க்கும் போது, இப்பாடல் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது. என்ன ஒரு அற்புதமான பாடல்! படம் முடிந்ததும் இப்பாடலைத் தேடிப் பிடித்து கேட்டேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த ஞாயிறு ஒரு மறக்க முடியாத ஞாயிற்றுக் கிழமையாக அமைந்தது. பொழுது சாயும் நேரம். 6.30, 7 மணிக்கு பாடலை ஒளிக்க விட்டு விட்டு (ரிப்பீட்டில்), குளிக்க சென்றேன். 9 மணி வரை இப்பாடலை கேட்டுக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அற்புதமான பாடல்!

ஆரம்பத்தில் வரும் அற்புதமான பியானோ இசையை தாண்டி, சங்கர் தனது அற்புதமான குரலினால்


'இது என்ன மாயம்
இது எது வரை போகும்'

என்று பாடி கட்டிப் போடுகிறார்.

பாடலுக்கு அழகே பல்லவி தான். ஓவ்வொரு வரியும் ஒரு விதமான சிறப்பினைக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு வரியினைத் தாண்டி வரும் வரிகளும் அவற்றில் ஒலிக்கும் ராகமும் அற்புதமாக இருக்கிறது.


கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புதுப்புது
அனுபவம் எதிரிலே

உலகமே...........


என்று சங்கர் மகாதேவன் அவ்வரியை முடிக்கும் போது, அல்கா யக்னிக்

'உன்னால் இன்று
புதியதாய்'

அவருடன் சேரும் போது, கேட்கும் நமக்கு ஓர் ஆனந்த மயக்கமே ஏற்படுகிறது.

'உணர்கிறேன்'

என்று சங்கர் மீண்டும் பாட

உற்சாகத்தை
முழுவதாய்

என்று அல்கா யக்னிக் மீண்டும் சேர, அற்புதம் தான்...

என் வானத்தில்
சில மாற்றங்கள்

வெண்மேகத்தில்
உன் உருவங்கள்

என் காற்றிலே
உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேனே


நான் கேட்கும் போது பறந்து தான் போனேன்.

நாட்கள் பலவாகி விட்டன. இது போன்ற உற்சாகமான, காதல் பாடலைக் கேட்டு. ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. சங்கருக்கு அவ்வப்போது இது போன்ற நல்ல பாடல்கள் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.



3. உன் பார்வையில் ஓராயிரம்

படம்: காதல்
பாடியவர் : சித்ரா, பெயரிலி
இசை: இளையராஜா

சமீபத்தில் கல்லூரி படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சிற்சில இடங்களில் உள்ள குறைகளை நீக்கி விட்டுப் பார்த்தால் இது ஓர் அற்புதமான படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைத்து ஆண்களும் கூறுவது போல், தமன்னாவின் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தினை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆதலால் இப்பாடல் வரும் இடத்தினை விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. பஸ் நிறுத்தத்தில் இப்பாடல் ஒலிக்குமிடமும் (சித்ரா), மீண்டும் மேடையில் பாட வாய்ப்பு கிடைக்கும் போது நாயகி இப்பாடலை உருகி பாடுமிடமும் (வேறொரு பாடகி) அற்புதம்.

அது வரை சாதாரண படமாக இருந்தப் படம், இப்பாடலில் இடம்பெற்ற காட்சி வந்த போது எங்கோ போய் விட்டது. இப்பாடலை பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்பாடலுக்கு பாலாஜி சக்திவேலு ஓர் பெரிய இடம் கொடுத்து தூக்கி வைத்திருக்கிறார் என்பது என் கருத்து. இப்படத்தினைப் பார்த்து விட்டு, இப்பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். என்னவொரு அற்புதமான பாடல்! இதனை மீண்டும் உணரவைத்த பாலாஜி சக்திவேலுக்கு மிக்க நன்றி.

ராஜா சாரின் மேல் எனக்கு நாளுக்கு நாள் மரியாதை உயர்ந்து கொண்டே போகிறது. இன்னும் சுருங்க கூற வேண்டுமானால், ராஜா சாரின் இசை வெறியனாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறலாம்.




அசல்:




4. காலம் மழைக்கால மேகம்

படம்: விடிஞ்சா கல்யாணம்
பாடியவர்: இளையராஜா
இசை: இளையராஜா

நானும் நண்பர் ஒருவரும் இசை சம்பந்தமாக பல நிரலிகளையும், மின்னஞ்சல்களையும் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படி அவர் அனுப்பிய ஓர் பாடல் தான் விடிஞ்சா கல்யாணம் படத்தில் இடம் பெற்ற 'காலம் மழைக்கால மேகம்' என்ற பாடல். இப்பாடலை பல வருடங்களுக்கு முன்பாக ஒரிரு முறை கேட்ட ஞாபகம். ஆரம்பத்தில் மிக சாதாரண பாடல் போல் தான் எனக்குத் தோன்றியது. ஆனால் பாதி பாடல் சென்ற பிறகு தான் இது ஒரு அற்புதமான பாடல் என்று தெரிந்து கொண்டேன்.

என்ன ஒரு அருமையான இசை! அதனை விட என்ன அழகாக, அருமையாக, உணர்வு பூர்வமாக பாடியிருக்கிறார். ராஜா சாரைத் தவிர இப்படி ஓர் இசையினை இதற்கு யாரும் தந்திருக்க முடியாது. அவரை விடவும் அற்புமாக யாரும் இப்பாடலை பாடியிருக்க முடியாது.

ஆரம்பத்தில் வரும் ஓர் சோகமான வயலினிசையும், அதனைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையும் மிக, மிக அற்புதம். இசையினைத் தாண்டி வழக்கம் போல் தனது தபேலா இசையுடன், ராஜா சார் குரலில் உருக்கத்துடன்

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ

நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ

கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதிக்கும்


அற்புதமாக பாடியிருக்கிறார். என்னவொரு அற்புதமான ராகம்.

அதனை விடமும், முதலாம் மற்றும் இரண்டாம் சரணத்தில் வரும் அனைத்து வரிகளின் ராகமும் மிக, மிக அற்புதம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

1:58-ல்


'ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே

இதழ் இதழ் வாடி இன்று
சருகாகிப் போனதே

நாயகன் நாயகி
அன்றில்கள் போல்
வாழ்ந்ததோர் வாழ்க்கை தான்
கானல் நீர் போல்
தேவன் தேவி
காதல் மேவி
வாழ்ந்த நாட்கள்
கனவாகிப் போனதே'


அது முதல் எத்தனை முறை இப்பாடலை கேட்டிருக்கிறேன். இது வரை சலிக்கவில்லை. இது போன்ற காட்சி அமைப்பிற்கு, தமிழில், ஏன் உலகிலேயே இது போல இசையமைக்க இளையராஜா சாரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது எனது கருத்து. எனது உயிர்விடுவதற்கு முன்பாக ஒரு முறையாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்று ஆவலுடன் உள்ளேன்.

கமலஹாசன் ஒவ்வொரு முறையும், ராஜா சாரை புகழ்ந்து பேசும் போதெல்லாம் அவரின் வார்த்தைகளின் ஆழம் எனக்குப் புரிந்ததில்லை. ஒரு முறை, கமலஹாசன், இளையராஜாவினைப் பற்றி

'இதெல்லாம் இவருக்கு பத்தாது அப்படின்றது என்னோட கருத்து', என்று குறிப்பிட்டார்.

இப்போது உணரமுடிகிறது, அதன் அர்த்தத்தை. இது போல் எத்தனை அற்புதமான பாடல்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. ராஜா ராஜா தான்!

http://www.youtube.com/watch?v=D3qXszcwTLg

5. Let it out - Kleenex

பேண்ட்: Starrfadu

ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த பாடல்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் இங்கு பட்டியலிட விரும்பாததற்கு காரணம் - பலருக்கு இங்கே அது பிடிக்காதோ என்ற ஐயமே காரணம்.

சென்ற மாதம், தொலைக்காட்சியில் ஏதோ ஓர் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் ஓர் விளம்பரத்தை ஒலிபரப்பினார்கள். அற்புதமான விளம்பரம். அந்த இசை என்னை மிகவும் கவர்ந்திழுந்த காரணத்தினால் விளம்பரதாரரின் பெயரினைக் குறித்து வைத்துக் கொண்டேன். சாலையில் செல்வோரை அழைத்து அவர்களுடன் உரையாடி அவர்களின் உணர்வுகளை அழுகையாக வரவழைக்கும் விதமாக அவ்விளம்பரம் அமைந்திருந்தது. அதன் விளம்பரதாரர்: கிளீனக்ஸ் (Kleenex). நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனம்.

இப்பாடலை இயற்றியது, 'Starrfadu' என்ற Inde குழுவினர் தான். அவர்களின் பாடலை மிகச் சிறப்பாக இவ்விளம்பரத்திற்காக உயபோகப்படுத்தியிருக்கிறார்கள்.



பாடல் மிக அற்புதம். வரிகளும், இசையும் கூட. அது முதல் மனது பாரமாக உணரும் நேரங்களிலும், சோர்வடைந்திருக்கும் நேரங்களிலும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று(விளம்பரத்துடன்). இதனைப் பார்க்கும் போது, எனது கவலையும் தீர்வது போல் உணர்கிறேன்.

பாடல்:



அமேஸானின் (எம்.பி3)யும், YouTube-ம் இருப்பது மிகவும் வசதி. சிறந்த பாடல்களின் பட்டியலை அமேஸானில் பார்த்து விட்டு, YouTube-ல் அது எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து விட்டு, Amazon-ல் MP3 வடிவத்தில் வாங்குவது மிக வசதி. இரு நிறுவனத்தாருக்கும் நன்றி.

ஸ்ருசல்