வெள்ளி, நவம்பர் 25, 2005

Desktop திரட்டிகள் (Feed Readers)

ஒவ்வொரு மின்னஞ்சல் வரும் போது, எப்படி உங்களுக்கு அவுட்லுக் மென்பொருள் அறிவிப்புக் கொடுத்து மின்னஞ்சலை செர்வரில் இருந்து இறக்கம் செய்து உங்கள் கணினியில் சேமிக்கிறதோ, அதே போல உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகளையும் அவை புதிதாக Post செய்யப்படும் போது உடனே இறக்கம் செய்ய பல மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பற்றி இங்கே தெரிவிக்கின்றேன.

FeedDemon என்ற மென்பொருளை நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உபயோகப்படுத்தலாம். நீங்கள் இதனுடைய Trial Version-ஐ இந்தப் பக்கத்திலிருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். Licensing பற்றித் தெரிந்து கொள்ள அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்திற்குச் செல்லவும். இதனை உங்கள் கணினியில் நிறுவியதும், இயல்பாகவே பல வலைத்தளத்திலிருந்து செய்திகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். உங்களுக்குப் பிடித்தமான பதிவினை இதில் சேர்க்க, Channel Group-ல் Right Click செய்து வரும் மெனுவில் New -> New Channel Option தெரிவு செய்யவும்.




பின்பு வரும் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய வலைப்பதிவின் Atom URL-ஐ கொடுக்கவும். முடித்ததும், நீங்கள் கொடுத்த வலைப்பதிவிலிருந்து அனைத்து புதிய பதிவுகளும் இறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும்.





இனி உங்கள் கணினியிலேயே உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகளையும் இறக்கம் செய்து கொள்வது மட்டுமல்லாமல், உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்கள் படித்துக் கொள்ளலாம் அதுவும் இணையத்தில் தொடர்பு இல்லாமல். (i.e offline). இதனால் உங்களுக்குப் பணமும் மிச்சமாகும்.




இதனைப் போல நிங்கள் இன்னொரு மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது. அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள http://www.feedreader.comஎன்ற வலைப்பக்கத்திற்கு செல்லவும். ஆனால் இதில் தமிழ் எழுத்துருக்கள் படிப்பதற்கான வசதி இல்லை.

Desktop திரட்டிகளை சில நேரம் நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். அப்படி முடியாத பட்சத்தில் Google-ன் ரீடர் பக்கத்தினைப் பயன்படுத்தி நீங்கள் பல வலைப்பதிவுகளை கூகுள் மின்னஞ்சல் போல வாசிக்கவும் முடியும். அதற்கு http://www.google.com/reader என்ற பக்கத்திற்கு சென்று "Your subscriptions" option -> "Add Feed" -> ஐ தெரிவு செய்து, உங்களுக்கு வேண்டிய பதிவின் URL-ஐக் கொடுக்கவும்.




ஒவ்வொரு முறை நீங்கள் ரீடர் பகுதிக்கு செல்லும் போது நீங்கள் பதிவு செய்துள்ள அனைத்து வலைப்பகுதிகளில் இருந்து புதிய பதிவுகள் திரட்டப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். Gmail மின்னஞ்சல் போல நீங்கள் படித்துக் கொள்ளலாம்.





அதே போல உங்கள் கூகுள் தேடி-யின் முகப்பினையும் உங்கள் வசதிக்கேற்ப Customize செய்து உங்கள் வலைப்பதிவையோ, உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளோ கிடைக்குமாறும் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 'Personalize Google' Option-ஐ தெரிவு செய்து உங்களுக்கு வேண்டிய செய்தி நிறுவனங்களின் தலைப்புகள் வரும் படி செய்ய முடியும்.





சிக்கல்கள்:

இது சிறந்த பயனளிக்கும் முறைதான் என்றாலும் உங்களால் சில மென்பொருட்களில் படங்கள் பார்க்க இயலாது. மேலும் முக்கியமாக நீங்கள், பின்னூட்டம் இட இயலாது. நீங்கள் அந்த வலைப்பதிவிற்கு சென்று தான் பின்னூட்டமிட வேண்டும். மற்றவர்களின் பின்னூட்டங்களையும் படிக்க இயலாது. முக்கியமாக, யார் யார் புதிதாக எழுதுகிறார்கள் எனத் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் தமிழ்மணம் போன்ற மன்றத்தில் இணைந்தால், அவர் பற்றி உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு மிக மிக பிடித்தமான பதிவுகளை மட்டும் இது போன்ற மென்பொருட்கள் கொண்டு படித்துவிட்டு மற்ற பதிவுகளுக்கு இந்த மன்றங்களுக்கு செல்லத் தவற வேண்டாம்.

உங்களுக்கு இதனை நிறுவிப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏதும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருசல்

வியாழன், நவம்பர் 24, 2005

சிதம்பர ரகசியம்

தமிழ் சேனல்களில் நான் பார்க்கும் ஒரே தொடர் 'சிதம்பர ரகசியம்' மட்டுமே. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 'மர்ம தேசம்-2' தொடரை வாரம் தவறாமல் பார்த்து வந்தேன். உங்களில் பலருக்கு இந்தத் தொடர் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அப்போதே Split Personality ஐ பற்றி டைரக்டர் நாகா அருமையாக படமாக்கியிருந்தார். ஒரு கிராமத்தில், அநியாயம் செய்பவர்களை 'கருப்புசாமி' அழிப்பதாக செல்லும், அந்த கதை. கதையின் நாயகனின் (சேத்தன்) குடும்பமும் கடுமையாக அந்த பழிவாங்கும் படலத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் (நாயகன் பாட்டி, சித்தப்பா உட்பட). ஊர் மக்களை கொடுமைப்படுத்தி வந்த நாயகனின் பாட்டி கருப்புசாமியால் கொல்லப்படுவார். ஏதோ ஒரு தவறுக்காக (எனக்கு ஏன் என ஞாபகம் இல்லை) அவர் சித்தப்பாவின் கை வெட்டப்படும். அந்த கிராமத்திற்கு வரும் பெண் பத்திரிக்கையாளர் (அப்படித் தான் நினைக்கிறேன்) தேவதர்ஷினி அதனைப் பற்றி ஆர்வத்துடன் துப்பு துலக்குவார். கடைசியில் கொலையைச் செய்யும் கருப்புசாமி வேறு யாருமல்ல; கதையின் நாயகனே எனத் தெரியவரும். சிறுவனாக இருக்கும் போது, கருப்பு சாமி கதையைக் கேட்டு கேட்டு அவனே கருப்பாக மாறி அவன் பாட்டியைக் கொன்றிருப்பான்; சித்தப்பாவின் கையையும் வெட்டியிருப்பான். அவன் சித்தப்பாக்கும் இவை எல்லாம் முன்பே தெரிந்திருந்தும் இதனை வெளியே சொல்ல மாட்டார். தொடரின் கடைசி பாகத்தை என்னால் சரியாக பார்க்க முடியாமல் போனது. மேலும் இந்தத் தொடரின் போது தான் பாலசந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்திற்கும், சன் டி.விக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பாலசந்தர் ராஜ் டி.வி. சென்றார்.

நடுவில் நாகா ராஜ் டி.வி.யில் மின்பிம்பங்களுக்காக ஏதோ ஒரு மர்ம தொடர் செய்தார். மீண்டும் சன் டி.வி.யில் ஒரு வருடத்திற்கு முன்பு 'சிதம்பர ரகசியம்' தொடரை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அமர்களமாகத் தான் போனது. நடுவில் எனக்குப் பிடிக்காமல் போனதாலும், நேரம் கிடைக்காத காரணத்தாலும் என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் போனது. பத்திரிக்கை நிருபரான சோமு பணி நிமித்தமாக சிலரை சந்திக்கப் போகும் இடங்களில் எல்லாம் (விஷம் கொடுத்து) கொலை நடந்தேறுகிறது கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, கொலையுண்டவர்களின் கைரேகையும் எடுக்கப்படுகிறது. அதனால் சோமு மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்ய முயலும் போது (அல்லது கைது செய்த பின்னோ) அவர் தலைமறைவாகிறார். இந்த நிகழ்வுகள் நாடி ஜோசியத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டிருக்கும். அவர் வேலை பார்க்கும் பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளரின் மகள், எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவரின் ஆராய்ச்சிக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் தோன்றுகிறது.

நடுவில் சில மாதங்கள் பார்க்கவில்லை. நேற்று மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சோமு, கொலையுடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவரை மிரட்டி விசாரிக்கும் காட்சி ஒளிபரப்பானது. அப்போது அந்த மருத்துவர் தனக்கு கொலை பற்றியெல்லாம் எதுவும் தெரியாது; கொலையுண்ட சிலரின் கை ரேகைகளை எடுக்கும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். கைரேகை எடுக்கச் சொன்னது யார் என சோமு கேட்பதற்கு, "முன்பு விஷ தன்மையுள்ள ஒரு தனிமத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். அதனைப் பார்த்து ஒருவர் என்னை பார்க்க வந்தார். எனக்கு அதிகம் பணம் கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அந்த விஷம் தயாரிக்கும் முறையினைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.. நானும் அதற்கு சம்மதித்தேன்" என்கிறார்.

அப்போது தொலைபேசி அழைக்கிறது; காணமல் போன சோமுவின் சொந்தக்கார பெண் கிடைத்து விட்டதாக செய்தி வருகிறது. அவளைப் பார்க்க சோமு செல்கிறார். இந்த வார நிகழ்ச்சி இதோடு முடிந்தது. இந்தத் தொடர் எங்கு சென்று முடியப் போகிறது எனத் தெரியவில்லை.

ஒரு வேளை அனைத்து வாரமும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் கணித்திருக்க முடியும். விஷம் கொடுத்துக் கொல்லுதல், விஷம் தாயாரிக்க உதவிய மருத்துவர் முதலானவற்றைப் பார்த்ததும், பள்ளியில் படிக்கும் போது படித்த பழைய கட்டுரை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. (மாலை மலர் என நினைக்கிறேன். கட்டுரை பெயர்'உலகை உலுக்கிய கொலைகள்' என்றும் ஞாபகம்)

அது ஒரு பிரபலமான ஃபோட்டோத் தொழிற்சாலை (நமது ஊட்டி இந்துஸ்தான் போட்டோ நிறுவனம் போல), அங்கு புதிதாக ஓர் இளைஞன் மேலாளர் பொறுப்பில் பணியில் சேருகிறான். வந்த சில நாட்களிலே அனைவருக்கும் அவனைப் பிடித்து விடுகிறது. அவனுடைய மேலதிகாரி உட்பட. அடிக்கடி தொழிற்சாலைக்கும் சென்று அங்கு வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்களிடம் அன்பாக பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான்.

ஆனால் சில நாட்களில் அவனுடைய சக பணியாளர் பணியில் இருக்கும் போது இறந்து போகிறார். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களால் அவன் எதனால் இறந்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி விடுகின்றனர். சில வாரங்கள் கழித்து இறந்தவரின் இடத்தை நிரப்ப வந்தவரும் அதே முறையில் இறக்கிறார்.

ஒரு நாள் அவனும், அவனுடைய உயரதிகாரியும் இந்த மரணங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய உயரதிகாரி காபி கேட்கிறார். காபி கொண்டு வந்து கொடுத்து அவனுடைய சீட்டிற்குப் போன சிறிது நேரத்தில் அவரும் இறந்து போகிறார். அவனுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சில நாட்கள் கழித்து போலீசார் அந்த தொழிற்சாலையில் ஒரு கூட்டம் நடத்துகின்றனர். அந்தக் கூட்டத்தில் அவனும் கலந்து கொள்கிறான். காரணம் என்னவாக இருக்கும் என்று விவாதம் ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைச் சொல்கின்றனர். ஆனால் எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படும் காரணமாகத் தெரியவில்லை. திடீரென்று அவன் எழுந்து, "இந்த சாவுகளுக்கு ஏன் தாலியம் விஷம் காரணமாக இருக்கக் கூடாது". எனக் கேட்கிறான். டாக்டர்கள் மத்தியில் ஒரே நிசப்தம். "ஆம். வாய்ப்புகள் இருக்கின்றன" எனக் கூறுகின்றனர். ஏனென்றால், அந்தத் தொழிற்சாலையில் லென்சுகளில் பூச்சுகளுக்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் அது. அதனை உட்கொண்டால் இதனைப் போன்ற மரணம் நிகழ அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் போலீசார் மத்தியில் சந்தேகம். இவனுக்கு எப்படி இது தெரியும் என்பது. அவனை வைத்து விசாரிக்கும் போது, உண்மையை ஒப்புக்கொள்கிறான். சிறு வயது முதலே இது போன்ற வேதிப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகம் எனவும், அது போலவே தாலியம் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறான். அது மட்டுமல்லாமல் தாலியம் (தாலியம் சல்பேட்), இது போன்ற தொழிற்சாலைகளில் பரவலாகக் கிடைக்கும் என்பதும் இங்கு பணியில் சேருவதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கிறான். வேலை விட்டுச் செல்லும் போது பல தடவை தாலியத்தை டப்பாவிலும் அடைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கிறான்.

சிறு வயதில் இருந்தே, கிடைக்கும் பணத்தில் இது போல விஷப் பொருட்களை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்ததும் தெரிய வருகிறது. சந்தேகம் வராமல் இருக்க தானும் சமயங்களில் உட்கொண்டுள்ளான். சமயங்களில் யார் யாருக்கு விஷம் வைத்துள்ளோம் என்பது தெரியாமல் அந்த உணவையும் இவனே உண்ண நேர்ந்து இவனும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளான். அப்போதே பலர் இறந்ததால், போலீசார் இவனை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஜெயிலில் கழிக்கிறான். ஆனால் வெளியே வந்ததும் தன்னைப் பற்றி வெளியில் சொல்லாமல் வேலை தேட, கடைசியில் அந்தத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்துள்ளான்.

எதற்காக அங்கு பணிபுரியும் சகத் தொழிலாளர்களைக் கொன்றாய் எனக் கேட்டதற்கு, "எனக்கு அது எத்தகைய வீரியம் கொண்டுள்ளது; அதனை உட்கொள்பவர்கள் எம்மாதிரியான மரணத்தைத் தழுவுகிறார்கள் என்பதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் காரணம்" என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியுறுகிறார்கள். பின்னர் அவன் கைது செய்யப்படுகிறான்.

தாலியமானது (Chemical Symbol TI), ஆர்சனிக்-க்குப் பிறகு அதிகமான விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருளாகக் கருதப்படுகிறது. இது 1861 ல் இங்கிலாந்தில் சர் வில்லியம் குரூக்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. தாலோஸ் என்றால் கிரேக்க மொழியில் பச்சைத் தண்டு என்று பொருள். இது ஆரம்பத்தில் எலி பாஷணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இதனுடைய அதீதமான விஷத்தன்மையால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது (அமெரிக்கா உட்பட). ஆனாலும் இது போன்ற லென்சுகளில் பூச்சிற்காக பலத் தொழிற்சாலைகளில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகின் சில கொலைகளுக்கும், கொலைத் திட்டங்களுக்கும் காரணியாக இருந்துள்ளது.

கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவினைக் கொல்ல அமெரிக்க அரசு 1967 ல் செய்த முயற்சிக்கு தாலியம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோவின் தலைமுடியும், தாடியுமே அவருக்கு கம்பீரமானத் தோற்றத்திற்குக் காரணம் எனவும், அதுவே அவர் மேல் மக்கள் கொண்ட அபிமானத்திற்குக் காரணம் என சி.ஐ.ஏ நம்பியது (அல்லது நம்பியதாக நம்பப்படுகிறது). தாலியத்தை குறைவாக உட்கொண்டாலோ, அல்லது அது தோலின் மேல் பட்டாலோ அதிகமான முடியுதிர்வுக்கு காரணமாக அமையும் என்று CIA காஸ்ட்ரோவிற்கு எப்படியாவது தாலியத்தினை அவருடைய உடலில் செலுத்திவிட வேண்டும் என முடிவெடுத்து, ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பயணத்தினைப் பயன்படுத்தி அவருடைய ஷூவில் தாலியத்தைத் தடவி அவருடைய முடியினைக் கொட்ட வைத்து விட வேண்டும் என்று சி.ஐ.ஏ முடிவெடுத்ததாக நம்பப்படுகிறது.

1994 ஆம் ஆண்டில் ரஷ்ய வீரர்கள், அவர்களுடைய களத்திற்கு அருகே கிடந்தப் பெட்டியினை எடுத்துப் பார்த்த போது அதில் தாலியம் பவுடர் இருந்துள்ளது. ஆனால் அது என்னவென்று அறியாமல் அவர்கள் அதனை புகையிலையுடன் சேர்த்து புகைத்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். ஒரு வேளை அதனை அபின் போன்ற போதைப் பொருள் என நினைத்திருப்பார்களோ?

ஸ்ருசல்

திங்கள், நவம்பர் 21, 2005

இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு

சென்ற சனிக்கிழமை பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பெங்களூரிலே வாசம் செய்தாலும், இங்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுவது சில தமிழ்மணம் வாசகர்களின் பதிவினைப் படிக்கும் வரைத் தெரியாது. நன்றி (அலெக்ஸ் பாண்டியன், பத்ரி). சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சிறிது நேரத்திற்கு முன்னதாக செல்ல வேண்டும் என நினைத்து 11 மணிக்கே கண்காட்சி நடக்கும் இடத்தை அடைந்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பிற்கு எதிர் மாறாக 30-40 பேர் கூட அங்கு இல்லை.

முதலில் சென்ற இரு கடைகளிலும் கடன் அட்டை வாங்க மறுத்து விட்டதால் எனக்கு ஏமாற்றம். கையில் 1000 ரூபாய் தான் இருந்தது. வெளியே சென்று ATM-ல் பணம் எடுக்கலாம் என்றால் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். மேலும் நுழைவு சீட்டு திரும்ப எடுக்க வேண்டும். பார்க்கிங் பணம் திரும்பக் கட்ட வேண்டும். சரி அடுத்த ஸ்டால்களில் முயற்சித்துப் பார்க்கலாம் என்று சென்றேன். காலச்சுவடு பதிப்பகத்தாரின் ஸ்டாலுக்குச் சென்று பார்வையிட ஆரம்பித்தேன். பாதி ஸ்டால்களை சுந்தர ராமசாமியின் புத்தகங்கள் ஆக்கிரமித்திருந்தன. நாவல்கள் எனக்கு அதிகமான பரிட்சயம் கிடையாது. எனக்கு சுந்தரா ராமசாமியின் புளிமரத்துக் கதை, ஜே.ஜே சில குறிப்புகள் புத்தகங்கள் மட்டும் தான் தெரியும். கதை புத்தகங்களில் எனக்கு உடன்பாடு இல்லாததால், கட்டுரைகள் மாதிரியான புத்தகங்கள் வாங்க விரும்பினேன். ஆனால் கடைக்காரர் அந்த நாவல் புதிதாக வந்துள்ளது; இந்த நாவல் புதிதாக வந்துள்ளது என்று கூறி நான் அவற்றைப் படித்திருக்கிறேனா எனக் கேட்டார். இல்லை எனக் கூறிவிட்டு நகர்ந்தேன். கடைசியாக சே குவாராவின் புத்தகமும், குமரி நீட்சி புத்தகமும் வாங்கினேன். நல்ல வேளை கடன் அட்டை வாங்குவதாகத் தெரிவித்ததால் பிழைத்தேன்.

மணி 12 ஆகியிருந்தது.

அடுத்த சில கடைகளிலும் வைரமுத்து, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் புத்தகங்களே அலங்கரித்திருந்தால் நகர்ந்து கொண்டே சென்றேன். ஒரு ஸ்டாலில் என் மாமாவிற்கு யவன ராணி வாங்கிவிட்டு அங்குள்ளவரிடம் பேச்சுக் கொடுத்தேன். வரவேற்பு எப்படி உள்ளதென எனக் கேட்டது தான் தாமதம். மடமடவென தனது ஏமாற்றத்தைக் கொட்ட ஆரம்பித்தார்.

ஸ்டாலுக்கு நாங்கள் 10000 ரூபாய் கொடுத்து அனுமதி பெற்றிருக்கிறோம். தங்கும் வசதி, உணவு, வாகன உள்ளிட்டவற்றை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் சேர்த்து 16000 க்கும் மேலாகி விட்டது. ஆனால் இந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 20000 க்கும் மேல் விற்பனையாகவில்லை. போன வருடம் குறைந்த அளவிலான தலைப்பில் புத்தங்கங்கள் இருந்தாலும் ஓரளவிற்கு நல்ல விற்பனை நடந்தது. ஆனால் இந்த முறை பல புதிய தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தும், விற்பனை மிக மிகக் குறைவே என்றார்.

சென்னையில் கண்காட்சி என்றால் நிற்க இடமிருக்காது. ஷிப்ட் முறையில் நாங்கள் பணிபுரிவோம். ஆனால் இங்கு அந்த கூட்டத்தில் 10 ல் ஒரு பங்கு கூட இங்கு இல்லை என்று வருத்தப்பட்டார்.

"நீங்கள் விளம்பரம் செய்திருக்கலாமே? எனக்கே கண்காட்சி நடப்பது நேற்று தான் தெரியும்", என்றேன்.

"எல்லாம் கொடுத்திருக்கிறோம் சார். இத நடத்திறவங்க AD கொடுத்திருந்தாங்க. இங்க தமிழ் புத்தகக் கடைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து தினத்தந்தியில வேற AD கொடுத்திருக்கிறோம்." என்றார்.

எனக்கு ஒன்று புரிந்தது. வாங்கும் ஆசையுள்ள, பொருளாதாரத் திறனுள்ள வாசகர்கள் பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்கள் படிப்பவர்களே. ஒரு வேளை டைம்ஸ் ஆப் இண்டியாவில் கொடுத்திருந்தால் நல்ல வரவேற்பு இருந்திருக்கும் என எனக்குப் பட்டது. ஆனால் அவரிடம் சொல்ல அது உகந்த நேரம் அல்ல என நினைத்து அடுத்த ஸ்டாலுக்கு நடையைக் கட்டினேன்.

அடுத்த ஸ்டாலில் வரலாறு, அறிவியல் என்று கதைகள் அல்லாத தலைப்பில் பல புத்தகங்கள் தென்பட்டன. எனக்குப் பிடித்திருந்தது. "அசோகமித்திரனின் கட்டுரைகள் (பாகம் ஒன்று, இரண்டு)", "மூன்றாவது கண்" புத்தகங்கள் வாங்கினேன். என் நண்பன் இரு புத்தகங்கள் எடுத்துக் கொண்டான். புத்தகங்கள் நல்ல முறையில் (Font, காகிதம்) அச்சிடப்பட்டிருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்த ஸ்டாலில் ஜெயகாந்தனின் "சிந்தையில் ஆயிரம்" பாகம் 1 மற்றும் 2 புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன. ஆனால் முதல் பாகத்தில் பெரும்பாலும் சிறுகதைகள் இருந்ததால் இரண்டாம் பாகம் மட்டும் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்டேன். அவர் போனை எடுத்தார்.

"ஹலோ"

....

"ஹலோ, நாங்க மலேசியாவில (????) இருந்து பேசுறோம்."

....

"ஜெயகாந்தனின் "சிந்தையில் ஆயிரம்" புத்தகம் இன்னும் 10 காப்பி அனுப்பி வைங்க."

....

"ஆமா. சரி, சிந்தையில் ஆயிரம் புத்தகம் இரண்டாம் பாகம் மட்டும் கேக்கறாங்க கொடுக்கலாமா?"

....

"அப்படியா? இல்ல... இங்க ஒருத்தர் கேக்கறார்."

...

" Very Poor" (அவர் Response எப்படி இருக்கிறது எனக் கேட்டிருக்க வேண்டும்)

...

"சரி. பரவாயில்லை. அத மட்டும் அனுப்பிச்சிடுங்க. ஆமா"



போனை வைத்தார்.

"சார். தனியா கொடுக்க முடியாதுன்னு சொல்லிடாங்க சார்", என்றார். பலத்த யோசனைக்குப் பிறகு, இரண்டையும் எடுத்துக் கொண்டேன். கார்டை நீட்டினேன். சிறிது நேரம் காத்திருக்கும் படி கூறினார். அருகில் உள்ள கடையில் காபி கிடைக்குமா எனக் கேட்டேன்.

"No Power" எனப் பதிலளித்தார் காபி போடுபவர்.

புத்தகங்களை அங்கு வைத்து விட்டு வெளியே சென்று காபி குடிக்கலாம் என கிளம்பினோம்.

"சார். இத இங்க வச்சிட்டு போறோம். பாத்துக்கங்க", என்று கடைக்காரரிடம் சொன்னேன்.

"யாரும் வரமாட்டங்க. பயப்படாம போங்க" என்று விரக்தியுடன் சொன்னார்.

வெளியே சென்று பார்த்தால் ஆச்சர்யம். நூறு பேருக்கு மேல் அங்குள்ள புட் கோர்ட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கறும்புச் சாறை மட்டும் குடித்து விட்டுத் திரும்பினோம். புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். மணி 1.30 ஆகியிருந்தது. கிரிக்கெட் மேட்ச் ;) ஆரம்பித்து விடும் என வீட்டிற்குக் கிளம்பினேன். வீட்டிற்கு வரும் வழியில் தான் சின்னசாமி ஸ்டேடியம். ஸ்டேடியத்தின் வாசலில், உள்ளே நுழைவதற்கு பலத்த கூட்டம். எனக்கு இந்த முறை டிக்கெட் கிடைக்கவில்லை. ஆபிஸில் கேட்டதற்கு கார்ப்பரேட் டிக்கெட் மட்டும் இருக்கிறது. விலை 4000 என பதிலளித்தனர். "ஆ! 4000 ரூபாய்க்கு நான் ஒரு புது டி.வி வாங்கி அதுல வருசம் முழுவதும் மேட்ச் பார்ப்பேன்", எனக் கூறிவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன்பே மேட்ச் நடப்பது தெரிந்திருந்தால் எப்படியாவது டிக்கெட் கிடைத்திருக்கும்.

சரி தலைப்பிற்கு வருகிறேன். என் நண்பன் "இன்போசிஸ் நாராயண மூர்த்தி" என்ற புத்தகத்தை வாங்கியிருந்தான். அதனை வீட்டிற்கு வந்து அதன் முதல் பக்கத்தைப் புரட்டி பார்த்த போது இவ்வாறாக அச்சிடப்பட்டிருந்தது.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி
விலை: ரூபாய் 80


அடுத்த புத்தகத்தில்

மூன்றாவது கண்
விலை: ரூபாய் 50


என்றிருந்தது, ஆச்சர்யமாக இருந்தது. (இதனை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே குறிப்பிடுகின்றேன்)

ஸ்ருசல்

வியாழன், நவம்பர் 17, 2005

வேற்றுக்கிரகத்தில் உயிரினமா? - பாகம் 2

இதன் முதல் பாகத்தில் வேற்றுக்கிரகத்தில் உயிரனங்கள் இருக்கிறதா என்பதை அறிய பயன்படுத்திய இரண்டு முறைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் மூன்றாவது முறையினைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வானில் இருந்து வரும் சமிகஞைகளை அலசுதல்

மற்ற இரு முறைகளைப் போலவே சில யூகங்களின் அடிப்படையில் இந்த முறை செயல்முறைப்படுத்தப்படுகின்றது. முதல் முறையில், வேற்றுக் கிரகங்களில் உயிரினம் இருக்கிறது ஆனால் அவை எங்கு இருக்கின்றது எனத் தெரியாதலால் விண்கலங்களில் படங்களை அனுப்பினோம். இரண்டாவது முறையில் வேற்றுக்கிரக வாசிகளுக்கு நாம் அனுப்புக் ரேடியோ அலைகளை பெறும் கருவிகள் இருக்கிறது என்ற யூகத்தின் அடிப்படையில் சில தகவல்களை ரேடியோ அலைகளாக அனுப்பினோம்.

மூன்றாவது முறையானது இரண்டாவது முறையின் தலைகீழ். அதாவது, நாம் அனுப்பியது போல வேற்றுகிரக வாசிகள் சில தகவல்களை அனுப்புகிறார்கள் என்ற யூகத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றது. அதனால் விண்ணில் இருந்து வரும் அனைத்து ரேடியோ அலைகளையும் பகுத்து அவை வேற்றுகிரகங்களிலிருந்து வருகிறதா என ஆய்வது. இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான அறிவியல் சோதனைக்கூடத்தில் கடந்த சில வருடங்களாக செயல்முறைப்படுத்தி வருகின்றனர். இந்த திட்டதிற்கு SETI (Search for Extraterrestrial Intelligence) எனப் பெயர்.

இந்த செயல்முறையின் முன்னோடியாக கார்ல் சாகனைக் குறிப்பிடலாம். இவரைப் பற்றி முதல் பாகத்திலேயேக் குறிப்பிட்டிருந்தேன். இந்த திட்டம் துவக்குவதற்கு ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கும் பெரும் பங்கு வகித்துள்ளார்.

விண்ணிலிருந்து வரும் அலைகளைப் பகுப்பதற்காக, 1971-ல் நாசா ஒரு பெரிய தொலைநோக்கி அமைக்க முயற்சித்தது. இதற்கு புராஜக்ட் சைக்லாப்ஸ் எனப் பெயர். இதற்காக நாசா 10 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசிடம் கேட்டது. "அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை ஒன்றுக்கும் உதவாத ஒரு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது" என சில அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினை நாசா சந்திக்க வேண்டியிருந்தது. மேலும் நாசாவின் பட்ஜெட்டினைக் குறைக்க நிதி மசோதாவில் திருத்தம் செய்தது மட்டுமல்லாமால் அந்தத் திட்டத்தினை கைவிடவும் வைத்தார். இது இந்த திட்டத்திற்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தது. திட்டம் தயாராக இருக்கிறது ஆனால் நிறைவேற்ற பணம் இல்லை.

இதன் விளைவினைப் பற்றி விவாதிப்பதற்காக வானவியல் கழகத்தினருடன் நாசா நடத்திய சந்திப்பில் ஓர் நாசா விஞ்ஞானி, பெரிய தொலைநோக்கியை அமைப்பதற்கு பதிலாக அதன் மாற்றியமைக்கப்பட்ட, சிறிய தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார். அவர் சொன்ன முறையின் (Suitcase SETI) மூலமாக ஏற்கனவே இருந்த தொலைநோக்கிகளின் உதவியுடன் ஒரு வருடத்திற்கு அலைகள் பகுக்கப்பட்டன.

1982-ல் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் E.T. படம் வெளியிட்டார். அது உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் மூலமாக கார்ல் சாகன் ஸ்பீல்பர்க்கை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஒரு நாள் Carl தன் மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையுடன் ஸ்பீல்பர்க்கை, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டலில் சந்தித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாசாவின் SETI படத்தினைப் பார்த்ததும் அவர்களின் கவனம் அதனைப் பற்றித் திரும்பியது. அப்போது கார்லின் மனைவி, SETI திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஏன் உதவக்கூடாது என ஸ்பீல்பர்க்கைப் பார்த்துக் கேட்டார். அதற்கு எவ்வளவு செலவாகும் என ஸ்பீல்பர்க் கேட்டதற்கு, $100,000 எனப் பதிலளித்தார் கார்ல் மனைவி. உடனே ஸ்பீல்பர்க் ஒப்புக்கொண்டார். இவ்வாறாக 1985 ல், 8 மில்லியன் சேனல்களிலிருந்து சமிக்ஞைகளை பெறுமாறு தொலைநோக்கி ஒன்று வானவியல் கழகத்தினரின் உதவியுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டது. அதனை ஸ்பீல்பர்க்கே துவக்கியும் வைத்தார். இதற்கு SERENDIP (Search for Extraterrestrial Radio Emissions from Nearby Developed Intelligent Populations) எனப் பெரிடப்பட்டது.

அது பல வடிவங்களைப் பெற்று SETI என அழைக்கப்படுகின்றது. இன்று இந்த திட்டத்திற்காக, விண்ணில் இருந்து வரும் அனைத்து அலைகளையும் பெறுவதற்காக அரிசிபோ எனப்படும் பெரிய தொலைநோக்கிப் பயன்படுத்தப்படுகின்றது. இது புர்டோ ரிக்கா எனும் தீவில் 1961-ம் ஆண்டு ஐனோஸ்பியர்களைப் பற்றி ஆராய கார்னல் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்டது. இது தான் உலகிலேயே பெரிய, மின்காந்த அலைகளை கிரகிக்கும் வசதியுடைய டிஷ். இதன் விட்டம் 330 மீட்டர்கள். இது ஒரு மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட 38778 அலுமின்ய தட்டுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது பல நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கும், அமெரிக்க ராணுவத்திற்காக எதிரிகளின் ராடார் சமிக்ஞைகளைக் கண்காணிப்பதற்காகவும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இதனை நீங்கள் ஜேம்ஸ்பாண்ட் நடித்த கோல்டன் ஐ படத்திலும் பார்த்திருக்கலாம்.



முதன்முதலில், இதன் முதலாம் பாகத்தில் குறிப்பிட்டபடி, 1974 ஆம் ஆண்டு அண்டவெளிக்கு நம் இருப்பிடத்தை அறிவிக்க கார்ல் மூன்று நிமிடங்கள் சில படங்களை ரேடியோ அலைகளாக அனுப்புவதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் அதன் உபயோகம், SETI க்கும் விரிவாக்கப்பட்டது. அது முதல் அந்த தொலைநோக்கியின் மூலமாக அண்ட வெளிகளிலிருந்து புவிக்கு வரும் அனைத்து அலைகளையும் பதிவு செய்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்றனர். அவ்வாறாக ஒரு நாளைக்கு அனுப்பப்படும் தகவல்களின் அளவு என்ன தெரியுமா? 35 GB. இதன் 35 GB அளவிற்கான தகவல்கள் 140,000 கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றது. சராசரியாக ஒரு கூறினை பகுக்க சாதாரணக் கணினியினால் 30 மணி நேரமாகும் எனக் கணக்கிடப்பட்டது. அப்படியானால் 140000 கணினிகளின் சக்தியினை ஈடுகட்டும் விதமாக பெரிய சூப்பர் கணினியினை வடிவமைக்க வேண்டும். அதற்கு அதிக செலவாகும் என்பதால Grid Computing முறையானது 1999 ம் ஆண்டு முதல் கையாளப்படுகின்றது. ஒரு பெரிய வேலையை ஒரு கணினி மட்டும் செய்யாமல் அந்த வேலையை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பல கணினிகளுக்குக் கொடுத்து கிடைக்கும் முடிவுகளை மீண்டும் ஒன்றாக்கி தேவையான விடையினைப் பெறும் முறை தான் கிரிட் கம்யூட்டிங் எனப்படுகிறது (அல்லது அது தான் என் அனுமானம்). இதனால் பெரிய பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் அமைக்க ஆகும் செலவு மிச்சமாகிறது). சில ஆராய்ச்சி திட்டங்களுக்கு அரசு அதிகமாக பணம் ஒதுக்காத காரணத்தினால் இந்த முறை கையாளப்படுகின்றது. இதே முறை SETI@Home ற்கும் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த முறையின் மூலமாக, உங்கள் கணினியின் ஓய்வு நேரத்தை SETI குழுவினர் எழுதிய சாப்ட்வேர் (SETI@Home) பயன்படுத்திக் கொள்ளும். அதாவது பகுக்கப்பட வேண்டிய கூறு உங்கள் கணினிக்கு இண்டர்நெட் மூலமாக அனுப்பப்படும். அதனை SETI@Home சாப்ட்வேர் பெற்று உங்கள் பிராசசரினைப் பயன்படுத்தி பகுத்துக் கொள்ளும். இதற்காக நீங்கள் SETI@Home என்ற சாப்ட்வேரை இறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். இதனை Screensaver-ஆகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.



சராசரியாக இப்போது ஒரு கூறைப் பகுக்க உங்கள் கணினிக்கு 3-5 மணிநேரம் ஆகும். ஒவ்வொரு கூறும் பகுக்கப்பட்ட பிறகு சோதனை முடிவுகள் மீண்டும் பல்கலைக்கழக செர்வருக்கு அனுப்பபடும். அது மீண்டும் அதனை மற்றொருவருக்கு மறு பரிசோதனைக்கு அனுப்பும். பகுக்கப்பட்ட கூற்றின் முடிவினை உங்கள் கணினி அனுப்பியது, மீண்டும் ஒரு கூறு உங்கள் கணினிக்கு அனுப்பப்படும். ஆனால் இது வரை வேற்றுக்கிரகத்தில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. 25 வருடங்கள் என்பது வானவியலில் மிக மிக குறுகிய கால அளவு. ஒரு வேளை நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டிதிருக்கும்.




இந்த SETI யினை மையமாக வைத்து CONTACT என்ற நாவலை கார்ல் எழுதினார். அது திரைப்படமாகவும் 1997 ஆம் ஆண்டு, (திரைக்) கதையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கதையின் நாயகி எல்லி, SETI போன்ற ஒரு செயல்திட்டத்தில் பணியாற்றுவார். ஒரு நாள் அவருடைய தொலைநோக்கியில் Vega என்ற கிரகத்தித்தில் இருந்து அனுப்பப்பட்ட ரேடியோ செய்தி பதிவாகிறது. அந்த கிரகமானது கிட்டத்தட்ட 26 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிடைத்த செய்தியினை உலகின் பல பகுதியில் உள்ள விஞ்ஞானிகளின் உதவியினால் டீகோட் செய்கிறார். அனுப்பப்பட்ட செய்தி என்ன என்பதனைக் கண்டறிவதற்கு செய்த முயற்சி கடைசியில் பலனளிக்கிறது. பூமியில் இருந்து Vega கிரகத்திற்கு செல்வதற்கு உதவும் விண்கலத்தின் மாதிரி படமே அது. அந்த விண்கலத்தை வடிவமைக்க அதிக செலவு பிடித்தாலும், சில ஆண்டுகள் முயற்சிக்கு பின் அதனை வடிவமைத்து அந்த நட்சத்திரம் நோக்கி எல்லி பயணிக்கிறார். இவ்வாறாக அந்த கதை போகும். அந்த நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு எப்படி பூமியில் மனிதர்கள் இருப்பது தெரிந்தது? அதன் காரணத்தை கார்ல் தனது கதையில் இவ்வாறாக விவரிக்கிறார்.

அதாவது முதல் முதலாக டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப் பயன்படுத்திய சாதனங்களில் வெளியிடப்பட்ட அலைகள் புவியினைத் தாண்டி பல கோடிக்கணக்கான மைல்கள் செல்லும் வலிமை படைத்தவை. அதாவது தேவையில்லாமல் அவ்வளவு சக்தி கொடுத்து ஒளிபரப்பப்பட்டன. அது எப்படியோ Vega கிரகத்தையும் அடைகிறது. அவர்கள், நாம் இப்போது வைத்திருக்கும் SETI தொலைநோக்கிகளை வைத்து யாராவது அண்டவெளியில் அவர்களைப் போல இருக்கிறார்களா எனப் பார்க்கும் போது ஹிட்லர் கலந்து கொண்ட 1939-ம் ஆண்டு ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் அவர்களது தொலைநோக்கியை வந்தடைகிறது. அதனை அப்படியே மீண்டும் பூமிக்கு அனுப்புகிறார்கள்.


ஹிட்லர் படத்தைப் பார்க்கும் போது அவர்களுக்கு அதிர்ச்சி. பின்பு விவரம் தெரிய வரும் போது சரியாகி அடுத்து வரும் செய்திகளைக் கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஹிட்லர் படத்துடன் விண்கலத்தை வடிவமைக்கும் வரைபடத்தையும் அனுப்புகிறார்கள், வேற்றுக்கிரக வாசிகள். அந்த செய்தி மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து பூமிக்கு வந்தடைகிறது. கிட்டத்தட்ட இந்த அப்போது தான் எல்லிக்கு அந்த செய்தி கிடைக்கிறது. இவ்வாறாக அந்த கதை செல்லும். நான் படம் முழுவதுமாகப் பார்க்கவில்லை; கதை மட்டும் தான் படித்தேன்.

அதே போல, பெரும் வெற்றி பெற்ற இண்டிபெண்டன்ஸ் டே படத்திலும் SETI பற்றி சொல்லப்பட்டிருக்கும். திடீரென்று பூமியைச் சுற்றி வேற்றுக்கிரக வாசிகளின் ராட்சச விண்தட்டுகள் ஆக்கிரமித்து பூமியைத் தாக்க ஆரம்பிக்கின்றன. பூமியில் உள்ள உயிரனங்களை அழித்து பூமியை ஆக்கிரமிப்பதற்காக, நம்மை பல ஆண்டுகளாக நன்கு கண்காணித்து, பல ஒளி ஆண்டுகள் பயணித்து பூமிக்கு வருகிறார்கள். கடைசியில் அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி இன்னொரு கலத்தில் சென்று வேற்றுக்கிரக வாசிகளின் கம்ப்யூட்டரில் வைரஸினை ஏற்றி (இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்க கூடாது) அவர்களைத் தோற்கடிப்பது போல காட்டியிருப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் SETI குழுவினருக்கு செய்தி வருவது போல காட்டியிருப்பார்கள்.



SETI க்கும் பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதில் முக்கியமானவர் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பால் ஆலன். இவர் போன வருடம் 13.4 மில்லியன் டாலர்களை வழங்கினார். அவரின் சேவையைப் பாராட்டி SETI குழு ஒரு பெரிய தொலைநோக்கியை (Allen Telescope Array) அமைத்து அதற்கு ஆலனின் பெயரிட்டு சிறப்பித்துள்ளது.

SETI@Home தான் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட முதல் கிரிட் கம்யூட்டிங் புராஜக்ட் என நினைக்கிறேன். இப்போது இதனைப் போலவே பல செயல்திட்டங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. உதாரணமாக Einstein@Home (மற்றொரு வானவியல் ஆராய்ச்சி), ClimatePrediction.Net (வான்நிலை), Predictor@Home (நோய்கூறுகளை ஆராய). இப்போது இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு BONIC(Berkeley Open Infrastructure for Network Computing) என்ற மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கணினியின் திறன் இந்த புராஜக்ட்கள் அனைத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும். நீங்களும் உங்களுக்கு விருப்பமான திட்டத்தினை மட்டும் தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது வரை என்னுடைய கணினி SETI@Home-ற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக 1272 க்கும் மேற்பட்ட கூறுகளைப் பகுத்து இந்தத் திட்டத்திற்கு உதவி புரிந்துள்ளது. நீங்களும் உங்கள் கணினியினை SETI போன்ற ஆராய்ச்சி செயல்திட்டங்களுக்குக் கொடுத்து உதவலாமே?

ஸ்ருசல்

புதன், நவம்பர் 16, 2005

சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்

நேற்று மதிய உணவருந்தும் போது என்னுடைய சகப்பணியாளர் தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நண்பரே நகரின் (பெங்களூர்) பிரபலமான சர்வதேசப் பள்ளிக்கூடத்தைக் குறிப்பிட்டு அங்கு வருடத்திற்கு எவ்வளவு கட்டணம் என மற்ற நண்பர்களிடம் கேட்டார். அதற்கு இன்னொரு நண்பர் வருடத்திற்கு 35000, நன்கொடையாக 25000, பேருந்து வசதி வேண்டுமானால் அதற்கு வருடம் 10000 சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார். கேட்ட எனக்கு மயக்கம் வராதக் குறை தான்.

அது எங்களில் பலர் நான்கு வருடங்களுக்கு கல்லூரிப் படிப்பிற்காக செலவிட்ட மொத்த தொகை. அதே தொகையை ஒரு வருடத்திற்கு கட்டணமாக; அதுவும் எல்.கே.ஜிக்கு. இது அவசியமா என நான் கேட்ட போது விவாதம் ஆரம்பித்தது. அந்த மாதிரியான பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் கூறலாம்.

1. தன்னால் முடியாததை தன் குழந்தையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
2. குழந்தைக்கு கிடைக்கும் விழிப்புணர்வு

தன்னால் முடியாததை தன் குழந்தையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்

என்னுடன் பணிபுரியும் அனைவருமே தங்களது ஊர்களில் அரசு, அல்லது தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள். 12 வகுப்பு வரை, அதிகபட்சமாக வருடத்திற்கு 100 ரூபாய் மட்டுமே கட்டியவர்கள். அவர்கள் இப்போது மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் ஊதியம் பெருகின்றனர். அவர்களால் அவர்கள் குழந்தையை இந்த மாதிரியான பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியும் தான். ஆனால் அது மிக அவசியமா என்பது தான் கேள்வி? சமுதாயத்தில் பெரும்பாலோனோர், தாங்கள் சிறு வயதில் செய்ய முடியாததை தன்னுடைய குழந்தைகளாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள். படிக்க முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் எனவும், பள்ளி மட்டுமே முடித்தவர்கள், தங்கள் குழந்தை பெரிய பொறியாளாராக வர வேண்டும் எனவும், கல்லூரியில் படித்தவர்கள் தங்கள் குழந்தை வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டும், I.A.S, I.P.S, I.E.S போன்ற பெரிய பதவிகளுக்கு வர வேண்டும் என கனவுகளும், ஆசைகளும் வைத்திருப்பார்கள். அதனை மனதில் வைத்து தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவினைப் போதிப்பார்கள். பலரின் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் நினைத்தது போலவே சாதித்து விடுவார்கள். துரதிர்சடவசமாக சிலர் அதனை செய்ய இயலாமலும், இன்னும் சில குழந்தைகள் அவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யமுடியாமலும் ஏற்பட்டு விடுகிறது. குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் படிக்கும் போதே, "நல்லா படிச்சு இன்ஜினியர் ஆகணும் சரியா?" என்பதனை பொதுவாக அனைவரின் வீட்டிலும் கேட்க முடியும். இப்போது அது சிறிது மாறி, "நல்லா படிச்சு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகணும் சரியா?" என ஆகி உள்ளது.

இது தவறு எனவும் கூறமுடியாது. குழந்தைகள் என்ன சாதிக்க வேண்டும் என்ன நாம் தீர்மானிப்பது போல் ஆகி விட்டது. அவர்களை பல நேரங்களில் குறைத்தே மதிப்பிட்டு, நம்முடைய எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிப்பது எந்த அளவிற்கு நியாயம்? நீங்கள் உங்கள் குழந்தை என்ஜினியர் ஆக வேண்டும் என்ற உங்களின் எதிர்பார்ப்பைத் திணிக்காமலிருந்தால், ஒரு வேளை அவன் பெரிய விஞ்ஞானியாகி இருக்கக் கூடும். படிக்காத குடும்பத்திலிருந்து வந்த பலரும் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், தங்களின் சுய பரிசோதனையினால் நல்ல நிலைக்கு வந்துள்ளதை அனைவருமே அறிவோம். ஆனால் பலருக்கும் எந்த மாதிரியான எதிர்பார்ப்பினையும் குழந்தைகளின் மனதில் விதைக்காமல் வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள் என்ற அச்சம் இருக்கத் தான்
செய்யும்.

வாழ்க்கை என்பது எந்த ஊரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பயணிக்கிற பாதை தான். அந்தப் பாதையில் பயணிப்பது தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது. இதில் வெற்றி என்பதும் கிடையாது. தோல்வி என்பதும் கிடையாது. ஒருவரின் வெற்றி மற்றொருவருக்குத் தோல்வியாக இருக்கலாம். பாதையில் உள்ள வழிகாட்டியாக அவர்கள் செல்வதற்கு நீங்கள் உதவியாக இருக்கலாமே தவிர நீங்கள் போட்டு வைத்தப் பாதையில் அவர்கள் செல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் திறமையினால் ஆகாயத்தில் பறந்திருக்கலாம். உங்களின் தவறான மதிப்பீட்டினால் அவர்களை கூண்டுக்குள் வைத்திருப்பது நல்லதல்ல. உங்கள் பாதைப்படி அவர்கள் பயணித்தது உங்களுக்கு கடைசியில் சந்தோசத்தை விளைவிக்கலாம் "நல்லது. நான் நினைத்தது போலவே வந்திருக்கிறான்" என்று. ஆனால் அவன் பறக்க வேண்டியவன் என்பதை கடைசி வரை நீங்களும் அவனும் உணராமல் போயிருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு நீங்கள் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர்வதற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும், எப்போது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும், எந்த மாதிரியான புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். மேலும் சில புத்தகங்கள் வாங்குவதற்கும் வசதியில்லாமல் இருந்திருக்கலாம். இப்போது உங்களுக்கு அவை என்ன என்பது தெரியும், பணம் அதற்கு செலவழிக்க சக்தி இருக்கிறது என்ற காரணத்தினால் உங்கள் குழந்தைக்கு அதற்கான வழிகள் அனைத்தையும் கூறி, நீங்கள் வாங்க நினைத்த புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்தாலும் உங்களுக்கு இருந்த அந்த ஆர்வம் உங்கள் குழந்தைக்கும் இருக்கும் என சொல்ல முடியாது. அவனுக்கு எதில் ஆர்வமோ அதில் தான் மனம் சொல்லும். ஆதலால் அவர்களுக்கு அதில் ஆர்வம் வந்தால் நலம். நீங்கள் உங்கள் அனுபவ அறிவினைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவலாம். இல்லையெனில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க முயலாம். ஆர்வம் இல்லாமலேயே அதில் அவர்களை ஈடுபாடு காட்டச் சொன்னால் அது பெரும் தோல்வியில் தான் முடியும்.

இதனை Five Point Someone என்ற புத்தகத்தில் வரும் கதையுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிப்பிலும் இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். கதைப்படி அவர் ஒரு ஐஐடி விரிவுரையாளர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். இந்தியாவில் பொறியியல் படிக்கும் (ஐஐடி பற்றி விவரம் தெரிந்த) பலருக்கும் ஐஐடி-ல் இடம் வாங்குவதற்குத் தான் முயலுவார்கள். சாதாரணமானவர்களுக்கே அப்படி என்றால், ஐஐடி விரிவுரையாளர்களுக்கு? அந்த விரிவுரையாளரும் தன்னுடைய மகனும் தன்னைப் போல ஐஐடியில் பயில வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் அந்த மாணவன் இரண்டு முறை முயன்றும் தேர்வில் தோல்வியடைகிறான். ஐஐடி-ல் சேர வேண்டியதால் அவனும் வேறு எந்தக் கல்லூரியிலும் சேராமல் திரும்பத் திரும்ப முயற்சிக்கிறான். இரண்டு முறை தோல்வியடைந்ததால் அவனின் தந்தை அவனுடன் பேசுவதை நிறுத்துகிறார். எப்போதும் அவனைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். அவன் முழுவதுமாக மூன்றாம் முறையும் முயற்சி செய்கிறான். ஒரு நேரத்தில் விரக்தி அதிகமாகவே தன்னுடைய தங்கைக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான. அது ஒரு விபத்து எனக் கருதி அந்த பேராசிரியர் தன் வாழ்க்கையைத் தொடருகிறார். சில ஆண்டுகள் கழித்து அது விபத்து அல்ல; தற்கொலை எனத் தெரிய வரும் போது இடிந்து போகிறார். இவ்வாறாகப் போகும் கதை.

இதில் இழப்பு யாருக்கு? தந்தைக்கா? மகனுக்கா? அவனை அவனின் விருப்பத்திற்கு விட்டிருந்தால், அவன் உயிருடனாவது இருந்திருப்பான். ஏன் அவனுக்குப் பிடித்த துறையில் நன்றாகவே வந்திருக்கலாம். அந்த விரிவுரையாளர் தன்னுடைய பழைய அனுபவங்களைக் கொண்டு தன் மகனுக்கு அவன் வாழ்க்கையில் எப்படி உதவ முடியும் என்று யோசித்திருக்க வேண்டுமே தவிர எப்படி தன் மகனைப் பற்றிய தன் கனவை அவன் நனவாக்க வேண்டும் என முயற்சித்திருக்கக் கூடாது. வரலாறைப் புரட்டிப் பார்த்தால் பெரிய விஞ்ஞானிகள், படிக்காத குடும்பத்திலிருந்தும், பெரிய விஞ்ஞானியின் புதல்வர்கள் பேர் சொல்லும் அளவிற்கு கூட வராமலும் போயிருக்கிறார்கள். எந்த ஒரு சாதனையாளரின் மகனும் அவன் தந்தையைப் போல பெரும் சாதனை புரிந்து புகழ்பெற்றான் எனக்குத் தெரிந்து இல்லை. அது வியாபாரத்தில் (டாடா, பிர்லா, ...) வேண்டுமானால் சாத்தியம். கவாஸ்கர் பெரிய பேட்ஸ்மேன் தான் அவர் மகன் இன்னும் ரஞ்சிகளில் தான் ஆடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? தன்னை போலவே தன் மகனும் பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. ஒரு உதாரணத்திற்கு இதைக் கூறினேன். இதனைப் போல ஆயிரக்கணக்கில் கூறமுடியும்.

அது அவர்களின் வாழ்க்கை. நீங்கள் ஒன்றும் சிற்பியல்ல; உங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் கொண்டு அவர்களை செதுக்குவதற்கு. ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறான். நீங்கள் உளி மட்டுமே. நல்ல உளியாக இருந்து சிற்பம் சிறப்பாக வருவதற்கு உதவுங்கள் அது போதும்.

குழந்தைக்கு கிடைக்கும் விழிப்புணர்வு

இதனை ஓர் அளவிற்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக அல்ல. பொதுவாக சர்வதேசப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் வசதிகளாக வெளிநாட்டு சுற்றுலாக்கள், உள்கட்டமைப்பு வசதி, கலை மற்றும் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம், வெளிநாட்டு ஆசிரியர்களல் போதிக்கப்படும் கல்வி முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இது மிக மிக அவசியம் எனத் தோன்றவில்லை. நீங்கள் இவ்வளவு கொடுத்து கல்வி போதிப்பதனால் அவர்கள் மற்ற சாதாரண (அரசு அல்லது தனியார்) பள்ளி மாணவர்களை விட மிகவும் வேறுபட்டு சிறப்பாக வந்துவிடப் போவதில்லை. அப்படி நாட்டில் உள்ள பல விஞ்ஞானிகள் அந்த மாதிரியான பள்ளியிலிருந்து தான் உருவாகியிருக்க வேண்டுமே?

ஒரு வேளை அந்த மாதிரியான பள்ளிகளில் படிப்பதனால் நல்ல நட்பு கிடைக்கலாம். புதுமையான சூழலால் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகலாம். அது எல்லா இடங்களிலுமே கிடைக்குமே? வித்தியாசமான சிந்தனைகள் உருவாவதற்கும், நல்ல நட்பு கிடைப்பதற்கும் வருடத்திற்கு 40000 செலவழிக்க வேண்டுமா என்ன? அவர்கள் 10, 12 வகுப்பு போகும் போது எவ்வளவு பணம் கட்ட வேண்டியதிருக்குமோ? ஏன் அந்த புதுமையான சூழலே அவர்களுக்கு சிக்கலானால்? சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் (பணம், பதவி வேண்டுமானாலும் இருக்கலாம்) புதல்வர்களுடன் படிப்பதால் ஏதேனும் ஏற்ற தாழ்வு உண்டானால்? சாதாரணமாக அரசு பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வினை நீங்கள் கண்டிருக்கலாம். வருடாந்திர கட்டணம் மட்டும் கட்டி படிக்கும் மாணவர்கள், தங்களை விட வசதிபடித்த வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுடன் சில ஏற்ற தாழ்வினை உணர்வது உண்டு. பெற்றோரால் வருடக் கட்டணத்தைக் கட்ட முடிந்திருக்கும். ஆனால் அந்த ஆடம்பர செலவுகள் அனுமதிக்கப்பட்டிருக்காது. அதே போல வருடாந்திர செலவான 40000 த்தை இப்போது சாப்ட்வேர் போன்ற துறைகளில் உள்ளோர் கட்ட முடியும். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கும் மற்ற வசதி படைத்த மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியை என்ன தான்
முயன்றாலும் ஓர் அளவிற்கு மேல் களைய முடியாது. அதனை ஒரு சாதகமாக எடுத்துக் கொண்டால் நலம். சாதாரண நகர்புறங்களிலும் (உ.ம் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற), கிராமப்புறங்களிலும் படிப்பவர்களுக்கு மேற்படிப்புகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இருப்பது இல்லை; அப்படியே இருந்தாலும் அங்கு அதற்கு வேண்டிய வசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் எந்த பள்ளியில் படித்தாலும் போதுமானது. கல்விக்கு அங்குள்ள வசதிகளும், அங்குள்ள பல தரப்பட்ட மக்களுடன் (நண்பர்கள் உட்பட) பழகக் கிடைக்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க உதவிகரமாக இருக்கும். மேலும் சர்வதேசப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் SAT போன்ற தேர்வுகள் எழுதி இளநிலைப் படிப்பையே அயல்நாடுகளில் தான் தொடர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் இந்தியாவில் இளநிலைப் படிப்பை படிப்பதில்லை என்பது என் கருத்து.

ஒருவனுக்கு கஷ்டத்தில் இருக்கும் போது தான் முன்னேற வேண்டும் என்ற வேட்கை அதிகமாகிறது. அப்போது தான் முன்னேறுவதற்கான பல்வேறான வழிகளை பலமாக சிந்திக்க ஆரம்பிக்கின்றான். அந்த சிந்தனை தான் அவனுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அறிவியல்,
சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு விசயம் தடைக்கல்லாக இருந்திருக்கும்.

குழந்தைகளை வசதியான பள்ளிக்கூடங்களில் சேர்க்கக் கூடாது என்பதனை சொல்வதற்கல்ல இந்தப் பதிவு. வசதியானப் பள்ளிக்கூடங்களில் படித்தாலும் குழந்தைகளின் வளர்ப்பு முறையும், அவர்களுக்கு கிடைக்கும் நண்பர்களும், சிறு வயதில் அவர்களைப் பாதிக்கும் விசயங்களுமே அவர்களை, அவர்களின் எதிர்காலத்தினை நோக்கி நடை போட வைக்கின்றன. என்ன தான் பணம் கொடுத்து சேர்த்தாலும், அனைத்து திறமைகளுமே மந்திரம் போட்டது போல கிடைத்து விடாது. பெற்றோரின் தலையாயக் கடமை தன் குழந்தைக்கு சிறந்த கல்வியினைப் போதிப்பது தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வி லட்சகணக்கில் கொடுத்து வரும் சர்வதேசப் பள்ளிகளில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. சில நேரங்களில் சக்திக்கு குறைவாக சில விசயங்களை செய்வது இன்னும் நிறைவைத் தரும், நல்லது பயக்கும் என்பது என் கருத்து. "தேவையே கண்டுபிடிப்பின் முன்னோடி" என்ற கூற்றின் படி அவர்கள் தேவையை உணர்ந்து அதனை அடைய முயற்சி செய்தால் அவர்கள் வாழ்வும் சிறப்பாக இருக்கும்.

தேடிப் பெறுவதே நிலைக்கும்; ஆனந்தம் தரும்; வாழ்க்கைக்கு உதவும் என்பது என் கருத்து.

ஸ்ருசல்

புதன், நவம்பர் 09, 2005

ஊடகங்களில் விளம்பரம்

குமுதம் என்று கேட்டால், தி சென்னை சில்க்ஸ் அட்டை படம் போட்ட புத்தகம் தான் கிடைக்கிறது. அந்த அட்டையைத் தூக்கிப் பார்த்தால் மட்டுமே, அஸின் சிரித்துக் கொண்டிருக்கும் படம் தெரிகிறது. அட்டைப் படத்தில் நடிகைகள் ஆக்கிரமித்தது போய் இப்போது விளம்பரங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கி விட்டன. புத்தகங்களைப் புரட்டும் போது, முதல் பக்கமே விளம்பரமாக இருப்பதும், தொலைக்காட்சித் தொடர்களில் அரை மணி நேர நிகழ்ச்சியில் வரும் 10 நிமிட விளம்பரங்களும், ஒவ்வொரு பாடலுக்குமிடையில் வரும் 3 நிமிட விளம்பர இடைவேளையும், டி.டி யில் ஓவருக்கு 5 பந்துகள் வீசப்படும் கிரிக்கெட் பந்தயங்களும் அலுப்பைத் தருகின்றன.

நாட்டு நடப்பிற்கும், பொழுது போக்கிற்கும் இப்போது நாம் அதிகம் நம்பி வருவது ஊடகங்களையே. ஊடகங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி பெற்று, இன்று மனித வாழ்வின் ஓர் அத்தியாவசியமான அங்கமாகி விட்டது. ஒரு நாள் செய்தித் தாள் வராமலிருந்தாலோ, தொலைக்காட்சி தெரியாவிடிலோ, இணையத் தொடர்பு இல்லாவிடிலோ, அன்றைய தினம் முழுவதும் வெறுமையாகிப் போவதை உங்களில் பலரும் உணர்ந்திருப்பீர்கள். பண்டிகைக்கு மறுதினம் செய்தித் தாள்கள் வராமல், பேயறைந்தது போல இருந்த நிலையை தொலைக்காட்சிகளும், இணையங்களும் மாற்றி உள்ளன என்பதனை மறுக்க முடியாது. ஆனால் இந்த ஊடகங்ளினால் மனிதனின் அறிவு வளர்கிறதோ இல்லையோ, விளம்பரத்துறையும் அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் நன்கு வளர்ச்சியடைந்து வருகின்றது. விளம்பரங்கள் இல்லாத நாளிதழோ, வார / மாத இதழோ, தொலைக்காட்சி சானலோ, வலைப் பக்கமோ காண்பது மிகவும் அரிது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் விளம்பரங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டதாகவே தோன்றுகிறது.

விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் இல்லாமல் எந்த ஒரு ஊடகம் சார்ந்த நிறுவனமும், ஊடகங்களில் விளம்பரம் செய்யாமல் எந்த ஒரு நிறுவனமும் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. ஏன் ஊடக நிறுவனங்களே தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை, பிற ஊடகங்களில் இட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு குங்குமம் விளம்பரங்கள் சன் டி.வியிலும், F.M விளம்பரங்கள் விகடன் இதழ்களிலும், ஸ்டார் மூவிஸ், HBO பட விளம்பரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் சாதாரணமாகத் தென்படும் விசயங்களே.

இப்போதெல்லாம் வார இதழ்களில், செய்திப் பக்கங்கள் எங்கு இருக்கின்றன என தேட வேண்டியதிருக்கிறது. விளம்பரங்களைத் தவிர்த்து விட்டு பக்கங்களை வேகமாகத் திருப்பும் போது, 'கற்றதும் பெற்றதும்'-ம் சேர்ந்து திருப்பப்பட்டு விடுகின்றன. பின் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது.

இந்த வாரம் எத்தனைப் பக்கங்கள் விளம்பரங்களாக அச்சிடப்பட்டுள்ளன என வார இதழ்களில் எண்ணிப் பார்த்ததில்...

ஆனந்த விகடன் - 25 முழு, 2 அரை பக்கங்கள் (மொ. பக்கங்கள்: 192)

குமுதம் - 19 முழு, 8 அரை பக்கங்கள் (144)
கல்கி - 11 முழு பக்கங்கள் (56)
அவுட்லுக் - 34 முழு, 2 அரை பக்கங்கள் (82)
துக்ளக் - 8 முழு பக்கங்கள் (38)
இந்தியா டுடே(த)- 9 முழு பக்கங்கள் (58)

இது தீபாவளிக்கு அடுத்த வாரத்தில் வந்த வார இதழ்களில் கணக்கிடப்பட்டவை. பண்டிகையின் போது இது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தனைக்கும் யாரும் அந்த விளம்பரங்களை உற்று நோக்குவது போல் தெரியவில்லை. முன், பின் அட்டை விளம்பரங்கள் மட்டுமே கண்ணில் படுகின்றன. மற்றவை பார்க்கப்படாமலேயே தவிர்க்கப்படுகின்றன.

நாளிதழ்களில் உள்ள விளம்பரங்கள் மட்டுமே ஓரளவிற்கு கவனிக்கப்படுகின்றன. அந்தக் காலங்களில் அரசு டெண்டர்களும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே நாளிதழ்களில் இடம் பெற்று வந்தன. அதுவும் இப்போது மாறி, நாளிதழ்களிலும் மற்ற விளம்பரங்கள் வரத் துவங்கி விட்டன. டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில், மொத்தம் வரும் 16 பக்கங்களில் தினமும் சராசரியாக 10 கால் பக்க விளம்பரங்கள் வருகின்றன. இன்று கூட 5 முழு பக்க விளம்பரங்கள், 5 அரை பக்க விளம்பரங்கள், மற்றும் 12 கால் பக்க விளம்பரங்கள் வந்திருந்தது. (Bangalore Times & Times Ascent தவிர்த்து)

தொலைக்காட்சிகளில் இதன் நிலைமை இன்னும் மோசமே. சில நேரங்களில் அனைத்துச் சானல்களிலும், ஒரே நேரத்தில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருப்பது எரிச்சலையேத் தருகின்றது. ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்களும் மனதைக் கவர்கின்றன. சீரியல்களுக்கு இந்த விளம்பரங்களே பரவாயில்லை என்றும் சில நேரம் தோன்றுகின்றது. ஆனாலும் விளம்பரங்களின் ரசிப்புத் தன்மை இந்தக் கட்டுரையின் மையக் கருத்தில் இருந்து மாறுபடுவதால், அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பே சானல்கள் என்று சொல்லி, வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களும் விளம்பரங்களை சகட்டு மேனிக்கு ஒளிபரப்புவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. இலவச சேவையாக இருந்தால் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளலாம். பணத்தையும் கட்டி விட்டு ஏன் நேயர்கள் மேல் விளம்பரங்களைத் திணிக்க வேணடும்? சில இந்திய செய்தி சானல்களில் கூட விளம்பரங்களின் நேர அளவு கூடிக்கொண்டே செல்கிறது. CNN-லும், BBC-லும் மிகக் குறைந்த அளவிற்கே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

விளம்பரங்களினால் சில நன்மைகளும் இருக்கின்றன. வார இதழ்களுக்கு நாளிதழ்களைப் போல வாசகர்கள் இல்லாதக் காரணத்தினாலும், அதிகமான பக்கங்கள் (கலர் பக்கங்கள் உட்பட) கொண்ட புத்தகங்கள் 5-10 ரூபாய் விலைக்கு கொடுக்கப்படுவதாலும் ஏற்படும் பணச்சுமையை சமாளிக்க இந்த விளம்பரங்கள் உதவும். ஆனாலும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வது நல்லதே. சில தொலைக்காட்சி சானல்களுக்கும், முக்கியமாக எல்லா பே சேனல்களுக்கும் இது பொருந்தாது என்பது என் கருத்து.

இணையத்தில், Spam மின்னஞ்சல்கள், பெரும்பாலான (செய்தி, தேடிகள், சினிமா, இசை சார்ந்த) வலைப்பக்கங்களில் வரும் விளம்பரங்கள், Spyware, Adware என்று இதன் எல்லை பரந்து கிடக்கின்றது. இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளில் குறைந்தது 60 சதவீத கணினிகள் ஏதாவது Adware சம்பந்தப்பட்ட சாப்ட்வேர்கள் ஒளிந்து ஓடிக்கொண்டிருக்கின்றன என ஒரு சர்வே தெரிவிக்கின்றது. மேலும் இந்த Spyware, Adware துறை 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருமானத்தையும், Anti-Spyware, Anti-Adware, Anti-Spam துறைகளும் பல பில்லியன் டாலர்கள் வருமானத்தைக் கொடுக்கும் துறைகளாகிவிட்டன.

இந்தக் கட்டுரை வெறும் பார்வை மட்டுமே. தீர்வு என்று ஒன்று இதற்குக் கொடுப்பது சிறிது கடினமே.

ஸ்ருசல்

திங்கள், நவம்பர் 07, 2005

கால் சென்டரில் ஓர் இரவு

ஊரே உறங்கிக் கொண்டிருக்க, குர்கானில் உள்ள ஓர் கால்சென்டரில் 1000 கால்செண்டர் ஏஜெண்ட்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனத்திற்காக சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அங்குள்ள ஒரு குழுவினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் கடவுள்.

கதைகள் படிப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று. மனித உறவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு நாள் / ஒரு வாரம் செலவு செய்வது வீண் விரயம் என நினைப்பவன். அப்படியே படித்தாலும் அது பெரும்பாலும் சயின்ஸ் பிக்சனாகவோ அல்லது புகழ்பெற்றக் கதையாக மட்டுமே இருக்கும். (பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற வகைகள் வேறு.)

இந்த வருட ஆரம்பத்தில் அப்படி நான் படித்தப் புத்தகம் "Five Point Someone". அந்தப் புத்தகத்தை கடையில் தற்செயலாக எடுத்து திரும்ப வைக்கும் போது அதன் தலைப்பு என்னைக் கவர்ந்தது "What not to do at IIT". அதனை எழுதியவர் சேத்தன் பகத் என்ற முன்னாள் ஐஐடி மாணவர். நல்ல புத்தகம். மூன்று ஐஐடி மாணவர்கள் (அலோக், ஹரி, இன்னொருவர் பெயர் மறந்து விட்டது), அவர்களின் பேராசிரியர் செரியன் மற்றும் அந்த பேராசிரியர் குடும்பத்தினைப் பற்றிய கதை. அந்த பேராசிரியரின் மகன் தன் தந்தையைப் போல ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் 3 மூன்று வருடங்களாக முயன்றும் இடம் கிடைக்காமல் போகவே தற்கொலை செய்து கொள்கிறார். பேராசிரியரின் மகளை அந்த மூன்று மாணவர்களில் (ஹரி என நினைக்கிறேன்) ஒருவன் காதலிக்கும்படியாக கதை செல்லும். அதனைப் பற்றி கண்டிப்பாக யாராவது புத்தக விமர்சனம் எழுதியிருக்கலாம் (கூகுள் செய்யம்). புத்தகத்தில் பிடித்தது கடைசிப் பக்கங்கள். அதிலும் அந்த பேராசிரியர் (செரியன்) விழாவில் தன் மகனைப் பற்றியும், ஐஐடியில் சேர விரும்புவோர்களைப் பற்றியும் பேசுவது.

ஐஐடி பற்றிய என்னுடைய பதிவினைக் காண இங்கே சொடுக்கவும்

அவரின் இரண்டாவது புத்தகத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்த ஆசிரியரிடமிருந்து ஓர் மின்னஞ்சல். One Night @ the call center புத்தகம் முடிவு பெற்றாகி விட்டதாகவும் $18 அனுப்பினால் ஆசிரியர் கையொப்பமிட்ட புத்தகம் அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கலாமா அல்லது சில மாதங்கள் காத்திருக்கலாமா என யோசித்து, காத்திருக்கலாம் என முடிவெடுத்தேன். தீபாவளி விடுமுறை விட்டு வந்ததும் சனிக்கிழமை புத்தகக் கடைக்கு சென்றேன். அந்தப் புத்தகம் வந்திருந்தது. விலை அவரின் முந்தைய புத்தகத்தைப் போலவே 95 தான்.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே கதையையும் சொல்லி விடுகிறார் ஆசிரியர். கதையை இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் வலைத்தளத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி அருகில் உள்ள குர்கான் நகரில் உள்ள ஒரு கால் சென்டரில் ஒரு இரவில் நடப்பதைப் பற்றியது தான் கதை. கதையில் வரும் பாத்திரங்கள் அந்த கால் சென்டரின் ஒரு குழுவில் பணிபுரியும் ஆறு பேர் மற்றும் அவர்களின் மேனேஜர் பக்ஷி. கதை நாயகன் ஷியாம், அவன் முன்னாள் நண்பி பிரியங்கா, வுரூம் மல்கோத்ரா, ராதிகா, இஷா, மற்றும் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

சியாமும், பிரியங்காவும் 4 வருடக் காதலர்கள். இடையில் ஏற்பட்ட சண்டையால் பிரிவு. பிரிவு வாட்டுகிறது. பிரியங்காவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு.

வரூம் மல்கோத்ரா ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு பின்னர் பணத்திற்காக கால் சென்டர் பணிக்கு வருகிறார்.

ராதிகா காதலித்து மணம் புரிந்தவள். அவள் கணவன் கல்கத்தாவில் பணிபுரிகிறான். மாமியார் தொல்லை. கணவனுக்கு கள்ளத் தொடர்பு. (இது அந்த இரவு தான் தெரிய வருகிறது)

இஷா மாடலிங் வாய்ப்பிற்காக அலைந்து கொண்டிருக்கிறாள். அவள் மேல் வுரூமிற்கு காதல். ஆனால் அவளுக்கு மாடலிங் தான் உலகம்.

முன்னாள் ராணுவ வீரர் தன் மகன், பேரனைப் பிரிந்து வாழ்கிறார்.

இப்படி இவர்கள் அனைவருக்கும் குடும்ப பிரச்சினை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை அவர்கள் மேனேஜர் பக்ஷி மற்றும் வேலை நிரந்திரமின்மை.

அந்த சிக்கல்களிலிருந்து அவர்கள் எப்படி ஒரே நாள் இரவில் மீண்டு வருகிறார்கள் என்பதே கதை. தினமும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் அவர்களுக்கு அன்று இரவு கடவுளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பின்பு அவர்கள் எனன செய்கின்றனர் என்பதனைப் பற்றி 300 பக்கங்களில் விவரித்துள்ளார் ஆசிரியர்.

கதை சாதாரணமானது தான் என்றாலும் சுவாரசியமாகவே செல்கிறது. ஆனால் உரையாடல்களில் எகத்தாளமும், குறும்பும் சாதாரணமாகத் தெறிக்கிறது. உதாரணத்திற்கு பெண்களைப் பற்றியும், அவர் மானேஜரைப் பற்றியும் சியாம் மனதில் கொடுக்கும் பதில்கள். மேலும் கால் சென்டர் ஊழியர்களின் டேட்டிங், துணையை சுலபமாக மாற்றும் குணம், அவர்களின் வேலைப் பளு, ஆகியவற்றையும் குறிப்பிடத்தக்க அளவில் தொட்டிருக்கிறார். கால் சென்டரைப் பற்றிய முன் அனுபவம் இல்லாமல் வெறும் கேள்வி ஞானத்தினை மட்டுமே கொண்டு இது போன்ற படைப்பினைக் கொடுப்பது சாதாரணமான விசயமல்ல. அந்தப் பணியை திறம்பட செய்திருக்கிறார். இந்தக் கால இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். (அவருக்கும் 35 வயது தான் என நினைக்கிறேன்)

இன்னும் பல சுவாரசியமான விசயங்கள் என்னைக் கவர்ந்தன. வரூம் மல்கோத்ரா, பத்திரிக்கையில் பணிபுரியும் போது அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு "ஏன் அரசியல்வாதிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை?". சமூகத்தில் தொழில் அதிபர்கள், பொறியியல் வல்லுனர்கள், திரை துறையினர், அரசுத் துறை ஊழியர்கள் என பலரும் தற்கொலை செய்வது கொல்வது போல் ஏன் அரசியல்வாதிகள் மட்டும் தற்கொலை செய்து கொள்வதில்லை? என அமையுமாறு அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார்.

ஆனால் கிளைமேக்ஸில் அவர் பயன்படுத்தும் உத்திகளில் உடன்பாடு இல்லை. கால் சென்டரில் அழைப்புகள் குறைவதால் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுக்கும் போது, தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வரூம் ஒரு யோசனை சொல்கிறான். அவன் யோசனைபடி அனைத்து வாடிககையாளர்களுக்கும் தொலைபேசி செய்து அவர்களின் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கியிருக்கிறது என இவர்கள் சொல்வது ஒப்புக்கொள்ளமுடியாத ஒன்று. அதுவும் அதற்கு மைக்ரோசாப்ட் வோர்ட் rand() உத்தியைப் பயன்படுத்தியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம். கம்ப்யூட்டர் வாங்கிய அனைவருமே முட்டாள்களாக இருக்க மாட்டார்களே! முடிவானது, Contact (By Carl Sagan), Digital Fortress (By Dan Brown) புத்தகங்களின் முடிவினைப் போலவே சப்பென்று இருந்தது.

சில பாத்திரங்களுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. மேலும் அந்த கடவுள் பாத்திரம் சொல்லும் விசயங்களும் வித்தியாசமானது ஒன்றும் அல்ல.

"ஒரு இரவில் நடப்பதனைப் பற்றி ஒரு புத்தகம் முழுவதும் கூறமுடியுமா?" என்று ஆசிரியர் ரயிலில் பிரயாணம் செய்யும் போது கேட்கும் கேள்விக்கு இன்னும் சிறிது அழுத்தம் கொடுத்து அவர் மனசாட்சியிடம் கேட்டிருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு வித்தியாசமான முயற்சி தான். அவரின் முந்தைய புத்தகத்துடன் ஒப்பிடும் போது 65 மதிப்பெண்களே கொடுப்பேன் இந்தப் புத்தகத்திற்கு.

ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொடுத்திருந்த லிங்கில் இருந்த படம் நன்றாக இருந்தது. ஆனால் புத்தகத்தில் அட்டைப் படத்தில் அணுகுண்டிற்கு பயன்படுத்தப்படும் குறியீடு போல ஒரு நட்சத்திரம் வரையப்பட்டிருந்தது ஏனோ? அதே குவாலிஸ் படத்தினைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

போன புத்தகத்தினைப் போல் பெரும்புகழை பெற்றுத் தராவிட்டாலும் இந்த புத்தகம் ஓரளவிற்கு புகழை (அவருடைய வித்தியாசமான முயற்சிக்காகவாவது) தேடித் தரும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ருசல்

வெள்ளி, நவம்பர் 04, 2005

மங்கலான தீபாவளி

அது என்னவோ தெரியவில்லை சிறுவனாக இருக்கும் போது வரும் ஆசைகளும், கனவுகளும் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் போய்விடுகின்றன. சிறுவயதில் தீபாவளி என்றால் ஆனந்தம். பாட்டி நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்பாள். ஏதாவது ஒரு தீபாவளிக்கு புதுத் துணி கூட கிடைக்கும். பாட்டியுடன் சினிமா செல்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். தீபாவளியன்று காலை வரைத் தெரியாது இந்தத் தீபாவளிக்கு வெடி உண்டா அல்லது ஒரு துப்பாக்கியுடனும் ஒரு பாக்கெட் சீனி வெடியுடனும் முடிந்து விடுமா என்று. ஆனால் எப்போதும் தீபாவளி சோகமாக இருந்ததில்லை. சந்தோசம் கரைபுரண்டு ஓடும். அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். நல்லா சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய துணி வாங்கி அணிய வேண்டும். நிறைய வெடி போட வேண்டும் என! ஆனால் இப்போது? அந்த ஆசையே இல்லை. தீபாவளி, மற்றும் ஒரு நாள் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. துணி எடுக்க பணம் இருக்கிறது ஆனால் ஆசை இல்லை. எனக்கென்று துணி இந்த முறை எடுத்துக் கொள்ளவும் இல்லை. வெடி வாங்க காசு இருக்கிறது. வாங்கவில்லை. ஏன் ஒரு வெடி கூட போடவில்லை. ஏன் இந்த மாறுதல் என நினைத்துப் பார்த்தால் என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, இப்போது நான் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் சில விசயங்களும் (கனவுகளும்), சாதித்த பின் அர்த்தமில்லாமலேயே போய்விடுமோ? அப்போது துணி, வெடி வாங்க வேண்டும் அதற்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவானது இப்போது அர்த்தமிழந்துவிட்டன. அதே போல இப்போது நினைத்திருக்கும் (பொருளைப் பற்றியது) கனவுகளின் நிலை?

தீபாவளியன்று என்னை மூன்று விசயங்கள் பாதித்தன. முதலாவது.

இரவு 12.30 மணி வரை ஊரைச் (ஸ்ரீவில்லிபுத்தூர்), சுற்றி விட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வரும் வழியில் ஒரு மின்சாரக் கம்பத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அருகில் மூன்று பேர் ஒரு ஆட்டினைக் கிடத்தி கால்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அருகில் நின்று ஒரு பெண்மணி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வருவதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன்பாக அந்த ஆட்டிற்கு உயிர் போயிருக்க வேண்டும். அந்த ஆட்டின் தலை இருக்கிறதா எனப் பார்த்த போது, அந்தத் தலையானது அருகில் கட்டப்பட்டிருந்த இரு ஆடுகளுக்கு முன்பிருந்த ஒரு சிமெண்ட் மேடையின் மீது வைக்கப்பட்டிருந்தது. தலைக்கும், ஆட்டுக்குட்டிகளுக்குமான இடைவெளி ஒரு மீட்டர் கூட இராது.

எங்கள் ஊர் பண்டிகை நாட்களில் தெரு அல்லது ரோடுகளிலேயே சிலர் ஆடுகளை அறுப்பர். யாராவது ஒருவர் தனது பணத்தினை செலவிட்டு இரண்டு அல்லது மூன்று ஆடுகளை இரண்டு தினங்களுக்கு முன்பாக வாங்கி பண்டிகை தினத்தன்று அதன் கறியை விற்பனை செய்வார். அந்த வகையில் தான் இதுவும். அந்தப் பெண்மணி அந்த ஆடுகளுக்கு தற்காலிக சொந்தக்காரராக இருந்திருக்க வேண்டும்.

அருகில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் எந்த விதமான சத்தமும் எழுப்பாமால் மிக அமைதியாக இருந்தது, அதற்கு ஏற்படப்போகும் மரணத்திற்கு தயார்படுத்திக் கொள்வதைப் போல இருந்தது. முதல் ஆடு வெட்டப்படும் போது, மற்ற இரு ஆடுகளும் எந்த விதமான உணர்வினைப் பரிமாறிக்கொண்டிருக்கும்? அதுவும் அந்த இரு ஆடுகளுக்கு முன்பாக, வெட்டப்பட்ட ஆட்டின் தலை! 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உயிரோடிருந்த ஒரு ஜீவன் இப்போது இல்லை. அந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக இரண்டு நாள் அல்லது ஒரு நாள் பழக்கம் கண்டிப்பாக இருந்திருக்கும். அவ்வாறு பழகிய ஜீவன்களில் ஒன்று வெட்டி வைத்திருக்கும் போது அவற்றின் மனதில் எம்மாதிரியான பய உணர்வு வளர்ந்திருக்கும்? அவை ஏன் ஓடுவதற்கு முயற்சிக்கவில்லை (கயிறு கட்டியிருந்தாலுமே...)? ஏன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை? அந்த இரண்டு ஆடுகளில் இன்னொன்றும் கொல்லப்பட்டு விட்டால் அந்த மூன்றாம் ஆட்டின் மனநிலை எவ்வாறு இருக்கும்?. என்றெல்லாம் நினைத்துப் பார்த்த போது பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த ஆடுகளுக்கு முன்பே அதன் இறப்பு தெரிந்திருக்குமா என உணர முடியவில்லை. சில பண்டிகைகளில் கொட்டு, மேளம் அடிக்கும் போது ஆடுகள் மிரண்டு அங்குமிங்கும் அலை பாயும். அந்த மேளச் சத்தத்தில் அதன் பயத்தினை தெளிவாக அறிய முடியும். தீபாவளிக்கு அப்படி எந்த விதமான சத்தங்களும் கிடையாது.

இதே நிலையில் மூன்று மனிதர்கள் கட்டப்பட்டிருந்தால் அவர்கள் எம்மாதிரியாக நடந்து கொண்டிருப்பார்கள்? சங்கிலியிலேயே கட்டிப் போட்டிருந்தாலும், திமிறி இருப்பார்கள். அழுதிருப்பார்கள். அவர்களிடம் கடைசி வரைக் கெஞ்சி இருப்பார்கள். நீ போ நீ போ என விலகியிருப்பார்கள். இல்லையா?

ஏற்கனவே மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி இருந்த எனக்கு இதனைப் பார்த்த பின்பு முட்டை சாப்பிடுவதற்கும் மனசு வரவில்லை.

மீதம் அடுத்த பாகத்தில் ...

ஸ்ருசல்