வியாழன், நவம்பர் 24, 2005

சிதம்பர ரகசியம்

தமிழ் சேனல்களில் நான் பார்க்கும் ஒரே தொடர் 'சிதம்பர ரகசியம்' மட்டுமே. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 'மர்ம தேசம்-2' தொடரை வாரம் தவறாமல் பார்த்து வந்தேன். உங்களில் பலருக்கு இந்தத் தொடர் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அப்போதே Split Personality ஐ பற்றி டைரக்டர் நாகா அருமையாக படமாக்கியிருந்தார். ஒரு கிராமத்தில், அநியாயம் செய்பவர்களை 'கருப்புசாமி' அழிப்பதாக செல்லும், அந்த கதை. கதையின் நாயகனின் (சேத்தன்) குடும்பமும் கடுமையாக அந்த பழிவாங்கும் படலத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் (நாயகன் பாட்டி, சித்தப்பா உட்பட). ஊர் மக்களை கொடுமைப்படுத்தி வந்த நாயகனின் பாட்டி கருப்புசாமியால் கொல்லப்படுவார். ஏதோ ஒரு தவறுக்காக (எனக்கு ஏன் என ஞாபகம் இல்லை) அவர் சித்தப்பாவின் கை வெட்டப்படும். அந்த கிராமத்திற்கு வரும் பெண் பத்திரிக்கையாளர் (அப்படித் தான் நினைக்கிறேன்) தேவதர்ஷினி அதனைப் பற்றி ஆர்வத்துடன் துப்பு துலக்குவார். கடைசியில் கொலையைச் செய்யும் கருப்புசாமி வேறு யாருமல்ல; கதையின் நாயகனே எனத் தெரியவரும். சிறுவனாக இருக்கும் போது, கருப்பு சாமி கதையைக் கேட்டு கேட்டு அவனே கருப்பாக மாறி அவன் பாட்டியைக் கொன்றிருப்பான்; சித்தப்பாவின் கையையும் வெட்டியிருப்பான். அவன் சித்தப்பாக்கும் இவை எல்லாம் முன்பே தெரிந்திருந்தும் இதனை வெளியே சொல்ல மாட்டார். தொடரின் கடைசி பாகத்தை என்னால் சரியாக பார்க்க முடியாமல் போனது. மேலும் இந்தத் தொடரின் போது தான் பாலசந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்திற்கும், சன் டி.விக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பாலசந்தர் ராஜ் டி.வி. சென்றார்.

நடுவில் நாகா ராஜ் டி.வி.யில் மின்பிம்பங்களுக்காக ஏதோ ஒரு மர்ம தொடர் செய்தார். மீண்டும் சன் டி.வி.யில் ஒரு வருடத்திற்கு முன்பு 'சிதம்பர ரகசியம்' தொடரை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அமர்களமாகத் தான் போனது. நடுவில் எனக்குப் பிடிக்காமல் போனதாலும், நேரம் கிடைக்காத காரணத்தாலும் என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் போனது. பத்திரிக்கை நிருபரான சோமு பணி நிமித்தமாக சிலரை சந்திக்கப் போகும் இடங்களில் எல்லாம் (விஷம் கொடுத்து) கொலை நடந்தேறுகிறது கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, கொலையுண்டவர்களின் கைரேகையும் எடுக்கப்படுகிறது. அதனால் சோமு மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்ய முயலும் போது (அல்லது கைது செய்த பின்னோ) அவர் தலைமறைவாகிறார். இந்த நிகழ்வுகள் நாடி ஜோசியத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டிருக்கும். அவர் வேலை பார்க்கும் பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளரின் மகள், எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவரின் ஆராய்ச்சிக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் தோன்றுகிறது.

நடுவில் சில மாதங்கள் பார்க்கவில்லை. நேற்று மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சோமு, கொலையுடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவரை மிரட்டி விசாரிக்கும் காட்சி ஒளிபரப்பானது. அப்போது அந்த மருத்துவர் தனக்கு கொலை பற்றியெல்லாம் எதுவும் தெரியாது; கொலையுண்ட சிலரின் கை ரேகைகளை எடுக்கும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். கைரேகை எடுக்கச் சொன்னது யார் என சோமு கேட்பதற்கு, "முன்பு விஷ தன்மையுள்ள ஒரு தனிமத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். அதனைப் பார்த்து ஒருவர் என்னை பார்க்க வந்தார். எனக்கு அதிகம் பணம் கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அந்த விஷம் தயாரிக்கும் முறையினைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.. நானும் அதற்கு சம்மதித்தேன்" என்கிறார்.

அப்போது தொலைபேசி அழைக்கிறது; காணமல் போன சோமுவின் சொந்தக்கார பெண் கிடைத்து விட்டதாக செய்தி வருகிறது. அவளைப் பார்க்க சோமு செல்கிறார். இந்த வார நிகழ்ச்சி இதோடு முடிந்தது. இந்தத் தொடர் எங்கு சென்று முடியப் போகிறது எனத் தெரியவில்லை.

ஒரு வேளை அனைத்து வாரமும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் கணித்திருக்க முடியும். விஷம் கொடுத்துக் கொல்லுதல், விஷம் தாயாரிக்க உதவிய மருத்துவர் முதலானவற்றைப் பார்த்ததும், பள்ளியில் படிக்கும் போது படித்த பழைய கட்டுரை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. (மாலை மலர் என நினைக்கிறேன். கட்டுரை பெயர்'உலகை உலுக்கிய கொலைகள்' என்றும் ஞாபகம்)

அது ஒரு பிரபலமான ஃபோட்டோத் தொழிற்சாலை (நமது ஊட்டி இந்துஸ்தான் போட்டோ நிறுவனம் போல), அங்கு புதிதாக ஓர் இளைஞன் மேலாளர் பொறுப்பில் பணியில் சேருகிறான். வந்த சில நாட்களிலே அனைவருக்கும் அவனைப் பிடித்து விடுகிறது. அவனுடைய மேலதிகாரி உட்பட. அடிக்கடி தொழிற்சாலைக்கும் சென்று அங்கு வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்களிடம் அன்பாக பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான்.

ஆனால் சில நாட்களில் அவனுடைய சக பணியாளர் பணியில் இருக்கும் போது இறந்து போகிறார். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களால் அவன் எதனால் இறந்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி விடுகின்றனர். சில வாரங்கள் கழித்து இறந்தவரின் இடத்தை நிரப்ப வந்தவரும் அதே முறையில் இறக்கிறார்.

ஒரு நாள் அவனும், அவனுடைய உயரதிகாரியும் இந்த மரணங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய உயரதிகாரி காபி கேட்கிறார். காபி கொண்டு வந்து கொடுத்து அவனுடைய சீட்டிற்குப் போன சிறிது நேரத்தில் அவரும் இறந்து போகிறார். அவனுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சில நாட்கள் கழித்து போலீசார் அந்த தொழிற்சாலையில் ஒரு கூட்டம் நடத்துகின்றனர். அந்தக் கூட்டத்தில் அவனும் கலந்து கொள்கிறான். காரணம் என்னவாக இருக்கும் என்று விவாதம் ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைச் சொல்கின்றனர். ஆனால் எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படும் காரணமாகத் தெரியவில்லை. திடீரென்று அவன் எழுந்து, "இந்த சாவுகளுக்கு ஏன் தாலியம் விஷம் காரணமாக இருக்கக் கூடாது". எனக் கேட்கிறான். டாக்டர்கள் மத்தியில் ஒரே நிசப்தம். "ஆம். வாய்ப்புகள் இருக்கின்றன" எனக் கூறுகின்றனர். ஏனென்றால், அந்தத் தொழிற்சாலையில் லென்சுகளில் பூச்சுகளுக்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் அது. அதனை உட்கொண்டால் இதனைப் போன்ற மரணம் நிகழ அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் போலீசார் மத்தியில் சந்தேகம். இவனுக்கு எப்படி இது தெரியும் என்பது. அவனை வைத்து விசாரிக்கும் போது, உண்மையை ஒப்புக்கொள்கிறான். சிறு வயது முதலே இது போன்ற வேதிப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகம் எனவும், அது போலவே தாலியம் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறான். அது மட்டுமல்லாமல் தாலியம் (தாலியம் சல்பேட்), இது போன்ற தொழிற்சாலைகளில் பரவலாகக் கிடைக்கும் என்பதும் இங்கு பணியில் சேருவதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கிறான். வேலை விட்டுச் செல்லும் போது பல தடவை தாலியத்தை டப்பாவிலும் அடைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கிறான்.

சிறு வயதில் இருந்தே, கிடைக்கும் பணத்தில் இது போல விஷப் பொருட்களை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்ததும் தெரிய வருகிறது. சந்தேகம் வராமல் இருக்க தானும் சமயங்களில் உட்கொண்டுள்ளான். சமயங்களில் யார் யாருக்கு விஷம் வைத்துள்ளோம் என்பது தெரியாமல் அந்த உணவையும் இவனே உண்ண நேர்ந்து இவனும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளான். அப்போதே பலர் இறந்ததால், போலீசார் இவனை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஜெயிலில் கழிக்கிறான். ஆனால் வெளியே வந்ததும் தன்னைப் பற்றி வெளியில் சொல்லாமல் வேலை தேட, கடைசியில் அந்தத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்துள்ளான்.

எதற்காக அங்கு பணிபுரியும் சகத் தொழிலாளர்களைக் கொன்றாய் எனக் கேட்டதற்கு, "எனக்கு அது எத்தகைய வீரியம் கொண்டுள்ளது; அதனை உட்கொள்பவர்கள் எம்மாதிரியான மரணத்தைத் தழுவுகிறார்கள் என்பதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் காரணம்" என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியுறுகிறார்கள். பின்னர் அவன் கைது செய்யப்படுகிறான்.

தாலியமானது (Chemical Symbol TI), ஆர்சனிக்-க்குப் பிறகு அதிகமான விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருளாகக் கருதப்படுகிறது. இது 1861 ல் இங்கிலாந்தில் சர் வில்லியம் குரூக்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. தாலோஸ் என்றால் கிரேக்க மொழியில் பச்சைத் தண்டு என்று பொருள். இது ஆரம்பத்தில் எலி பாஷணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இதனுடைய அதீதமான விஷத்தன்மையால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது (அமெரிக்கா உட்பட). ஆனாலும் இது போன்ற லென்சுகளில் பூச்சிற்காக பலத் தொழிற்சாலைகளில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகின் சில கொலைகளுக்கும், கொலைத் திட்டங்களுக்கும் காரணியாக இருந்துள்ளது.

கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவினைக் கொல்ல அமெரிக்க அரசு 1967 ல் செய்த முயற்சிக்கு தாலியம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோவின் தலைமுடியும், தாடியுமே அவருக்கு கம்பீரமானத் தோற்றத்திற்குக் காரணம் எனவும், அதுவே அவர் மேல் மக்கள் கொண்ட அபிமானத்திற்குக் காரணம் என சி.ஐ.ஏ நம்பியது (அல்லது நம்பியதாக நம்பப்படுகிறது). தாலியத்தை குறைவாக உட்கொண்டாலோ, அல்லது அது தோலின் மேல் பட்டாலோ அதிகமான முடியுதிர்வுக்கு காரணமாக அமையும் என்று CIA காஸ்ட்ரோவிற்கு எப்படியாவது தாலியத்தினை அவருடைய உடலில் செலுத்திவிட வேண்டும் என முடிவெடுத்து, ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பயணத்தினைப் பயன்படுத்தி அவருடைய ஷூவில் தாலியத்தைத் தடவி அவருடைய முடியினைக் கொட்ட வைத்து விட வேண்டும் என்று சி.ஐ.ஏ முடிவெடுத்ததாக நம்பப்படுகிறது.

1994 ஆம் ஆண்டில் ரஷ்ய வீரர்கள், அவர்களுடைய களத்திற்கு அருகே கிடந்தப் பெட்டியினை எடுத்துப் பார்த்த போது அதில் தாலியம் பவுடர் இருந்துள்ளது. ஆனால் அது என்னவென்று அறியாமல் அவர்கள் அதனை புகையிலையுடன் சேர்த்து புகைத்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். ஒரு வேளை அதனை அபின் போன்ற போதைப் பொருள் என நினைத்திருப்பார்களோ?

ஸ்ருசல்

2 கருத்துகள் :

பூனைக்குட்டி சொன்னது…

Thanks for the informations srusal.

பரஞ்சோதி சொன்னது…

ஆகா சிதம்பர ரகசியம் மாதிரியே விறுவிறுப்பான கட்டுரை.

நானும் அத்தொடரை விரும்பி பார்ப்பேன், அதிலும் ஆரம்பத்தில் மிரட்டும் வகையில் வரும் இசை, அந்த நடராஜர் சிலை என்னை மிகவும் கவர்ந்தவை.

எனக்கு இந்திரா சவுந்திரராஜன் கதை என்றால் சின்னவயதிலேயே மிகவும் விரும்பி படிப்பேன்.

நீங்க சொன்ன விஷ மேட்டரும் அருமை. பாராட்டுகள்.