சனி, டிசம்பர் 31, 2005

இந்த வருடம் எப்படி?

மற்றுமொரு ஆங்கில வருடம் கழிந்து விட்டது. எல்லா பத்திரிக்கைகளிலும் கடந்த 53 வாரங்கள் எப்படிக் கழிந்தன என்பது பற்றிய கட்டுரைகள் பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் Attrition Rate (நிறுவனத்தை விட்டு வெளியேறுவோர், புதிதாக வேலைக்குச் சேர்பவர்களின் விகிதம்) வழக்கம் போல குறைந்து விட்டது. நண்பர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மின்னஞ்சல்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த 365 நாட்களின் முக்கியமான நிகழ்ச்சிகளாக இதைத் தான் கூறுவேன்.


  • தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம்

  • லாலு, சிவசேனா, பா.ஜ.க.வின் வீழ்ச்சி (பீஹார் மாநில தேர்தல் வெற்றியைத் தவிர்த்துப் பார்த்தால்)

  • ஒரிசா மாநிலம் பெற்ற அந்நிய முதலீடு (~50000 கோடிக்கு POSCO என்ற தென் கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்றது). இதை ஆதரித்தும், எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்து வருவது வேறு விசயம்.

  • அம்பானி சகோதரர்களின் பிரிவு

  • பங்கு சந்தையின் வரலாறு காணாத Sensex உயர்வு. ஜஸ்வந்த் சிங் நிதியமைச்சராக இருக்கும் போது அடுத்த ஆண்டு 7000 புள்ளிகளைத் தொட்டுவிடும் என்றார்கள். இப்போது அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

  • தனியார் விமான நிறுவனங்களுக்கு அயல்நாட்டு சேவை அனுமதி

  • இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • இந்தியா - சீனா உறவில் ஏற்பட்ட சிறிய மேம்பாடு

  • லஞ்ச விவாகரத்தில் எம்.பிக்கள் வெளியேற்றபட்டது (நல்ல முன்னுதாரணம். இன்னும் பலர் குற்றம் புரிய வேண்டும் என்பது என்னுடைய ஆசை அல்ல. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முயற்சி)


மேலும் இந்த ஆண்டோடு ரிலேட்டிவிட்டி தியரி வெளியிடப்பட்டு 100 வருடங்கள் ஆகின்றன.

மற்றபடி அரசியல் அளவில் சென்ற வருடத்திற்கும், இந்த வருடத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. தமிழின் பெயரால் இன்னும் சிலர் அரசியல் செய்ய ஆரம்பித்திருப்பது வருத்தத்திற்குரியது. கிரிக்கெட்டிலும் அரசியலின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. மன்மோகனின் அரசு பெரிய மாறுதல்களை செய்து விட வில்லை. பழைய பா.ஜ.க அரசின் கொள்கைகள் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டம் வெறும் பெயரளவில் நிறைவேற்றப்பட்டது. சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள் கூட மக்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்களை விளைவித்து விடவில்லை. அண்டை மாநிலங்களில் அத்தகைய அழிவுகள் கூட மறக்கப்பட்டு சின்ன சின்ன விரோதங்கள் இன்னும் மனதில் வைத்திருக்கப்படுகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கைகள் கூட மொழி ஆதிக்கவாதிகளின் பிடியில் கட்டுண்டு, முரண்பாடான, விரும்பத்தகாத விசயங்களை அச்சிடுவது வருத்தமடையச் செய்தது. ஜனநாயகத்தின் அத்தியாவாசியமான, கடைசி நம்பிக்கை பேச்சுரிமையை பாதிக்கும் விதமாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் இனி நடக்காது என நம்புவோமாக. வெள்ளப் பாதிப்புகளைப் பேசுவதை விட, சவுரவ் கங்குலி நீக்கப்பட்டது போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது நல்ல முன்னேற்றம்.

ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர் மஞ்சுநாத் கொலை செய்யப்பட்டது ஒரு பெரிய கறை. பெங்களூரில் BPO பணியாளர் பிரதீபாவின் கொலை கண்டிக்கப்பட வேண்டிய விசயம் என்றாலும், உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டதற்கு மஞ்சுநாத்திற்குக் கிடைத்த தண்டனை வருத்தத்திற்குரியது. இது உண்மையாக இருப்பவர்களின் அடிப்படை நம்பிக்கையை சிறிது அசைத்துப் பார்க்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு நாட்டின் அழிவு இது போன்ற நிகழ்ச்சிகளில் தான் தொடங்குகிறது. இனி வரும் வருடங்களில் இது போல நிகழாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதே நேரத்தில் வருட கடைசியில் ஐ.ஐ.சி-ல் நடந்த தாக்குதல் பெங்களூர் நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பற்றாகுறைக்கு நேற்று மனித வெடிகுண்டுகள் பற்றிய கடிதம் ஒன்றும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல்களும் நேற்று சில நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதும் பலரை கவலை கொள்ளச் செய்துள்ளது. எங்களது அலுவலகம் அமைந்துள்ள தொழில்நுட்ப வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அனைவரும் அலுவல்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். பெங்களூரில் தாக்குதல் நடத்தினால் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களின் கணிப்பு எனக் கூறப்படுகிறது. இந்தியாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும், முயற்சியும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. எப்போது இதை நிறுத்துவார்கள்? இந்தியாவை சீரழிக்க தீவிரவாதிகள் வேண்டாம்; சில அரசியல்வாதிகளே போதும் என்பதை எப்போது அவர்கள் புரிந்து கொண்ட பின்பு தான் என நினைக்கிறேன்.

மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்தும், தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பதிலேயே இந்த வருடத்தின் பெரும்பகுதி போய்விட்டது. ஆனாலும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன என்று உறுதியாகக் கூறலாம். பல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், Service Mode ல் இருந்து விடுபட்டு, தங்களின் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது நல்ல மாறுதல். அதன் எண்ணிக்கை சொற்பமே என்றாலும், எதிர்காலத்தில் மிகுந்த நன்மைபயக்கும் விசயமாகும். இத்தனை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தும், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றியும், இந்தியாவில் இருந்து எந்த மென்பொருட்களும் (ஒன்றிரண்டைத் தவிர்த்து) சர்வதேச நிறுவனங்களைக் கவரவில்லை. அனைவரும் அதற்கான முதல் படி இது.

பீஹாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது நல்ல மாற்றம். இன்னும் சில ஆண்டுகள் கழித்தே அவரின் ஆட்சி எம்மாதிரியான மாற்றத்தை பீஹார் மக்களுக்குக் கொடுத்துள்ளது என்பதைக் கூற முடியும். அதே போல மேற்கு வங்காளத்திலும் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அது அந்த மாநிலத்திற்கு நல்லதே. அவர்களின் ஆட்சி மிகச் சிறப்பாகவே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் (25 வருடங்கள் ஆண்டு விட்டார்கள்), இன்னொரு கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பார்க்கலாம் அந்த மக்கள்.

ஆனால் பொருளாதார ரீதியாக நல்ல ஆண்டு தான். அதிகமான அந்நிய முதலீடுகள். தமிழகத்திற்கு வோல்க்ஸ்வோகன் முதலான நிறுவனங்கள் வருவதற்காக ஒப்பந்தங்கள் செய்துள்ளன. பில் கேட்ஸ் தமிழகத்தில் முதலீடு செய்ய உறுதி கூறியுள்ளார். ஆனாலும் தகவல் தொழில்நுட்பத்தில் கர்நாடாகவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவே. அடுத்த வருடத்தில் இந்த இடைவெளி குறைய வேண்டும் என்பது என் அவா. அல்லது ஒரே இடத்தில் குவியாமல் முதலீடு நாட்டின் பல நகரங்களுக்கும் செல்ல வேண்டும். மேலும் ஆறு, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட வேண்டும். திரைத் துறையில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். பயம் மற்றும் அதிருப்தியில் யாருமே திரைப்படம் எடுக்காமல் போய்விட்டால் மக்கள் என்ன செய்வார்கள்? அனைவருக்கும் பைத்தியம் தான் பிடிக்கும். விளையாட்டு அல்ல; இது இன்றைய நிலையில் உண்மையும் கூட.

தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் (ஏகாதிபத்தியம்) அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது. தொலைத் தொடர்பு, மருந்து, தொலைகாட்சி நிறுவனங்கள், சாலை போக்குவரத்து, எண்ணெய் முதலான துறைகளில். அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து முரண்பாடுகள் இருந்தால் ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி மிகவும் முக்கியம். ஆங்கில செய்திச் சேவையில் கோலேச்சி கொண்டிருந்த (சேவை தரமாகவே இருந்தாலும்) என்.டி.டி.விக்கு போட்டி வந்திருப்பதும் ஆரோக்கியமான விசயம். ராஜ் தீபக்-ன் சி.என்.என். ஐ.பி.என் சேனலில் உடனடி விசேசங்கள் காணக்கிடைக்கவில்ல என்றாலும் செய்தியின் தரத்தில் குறை இருக்காது என நம்புகிறேன். அதே போல தமிழ் செய்தி சேவையில் கூட சன் டி.வி, ஜெயா டி.வி நிறுவனங்களுக்குப் போட்டியாக இன்னும் சில சேனல்கள் வந்தால் நன்றாக இருக்கும். அதற்குண்டான தடைகள் நீக்கப்படவேண்டும். கூகுளுக்குக் கூட போட்டி வந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம். போட்டி எல்லோரையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கச் செய்து, தரத்தினை மேம்படுத்த உதவுகிறது. போட்டி இல்லையென்றால் வளர்ச்சி இல்லை. எங்கு வளர்ச்சி இல்லையோ அங்கு ஆரோக்கியமும், சந்தோசமும் இல்லை.

எனக்கு இது வழக்கம் போல மற்றுமொரு சாதாரண வருடம் தான். வலைப்பதிய ஆரம்பித்தது, பெரிய மாறுதல் எனக் கூறுவேன். எண்னங்களை வெளியிட ஓர் சிறந்த வடிகாலாக இந்த வலைப்பதிவுகள் அமைந்துள்ளன. ரகுமானை நேரில் சந்தித்து, பேசும் வாய்ப்பு கிட்டியது. சச்சின் 35 சதங்கள் அடித்ததில் மகிழ்ச்சி. வழக்கம் போல திரை இசை என்னுடைய பொழுதுபோக்கு நேரத்தில் பெரும் பங்கு வகித்தது. திரைஇசையில் யுவன் (கண்ட நாள் முதல், அறிந்தும் அறியாமலும், புதுப்பேட்டை, கள்வனின் காதலி, ஒரு கல்லூரியின் கதை, அகரம்), ஹாரிஸ் (அந்நியன், கஜினி) நன்றாக செயல்பட்டு வருவது ஆரோக்கியமான விசயம். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, டிஸ்யூம் பட பாடல்கள் மூலமாக கவனிக்க வைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே சுக்ரனுக்கு இசையமைத்தவர். வருட கடைசியில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்த ரங்கு தே பசந்தி பாடல்கள் மிகவும் கவர்ந்தது. புதுபேட்டையில் வரும் 'ஒரு நாளில் வாழ்க்கை என்றும்' பாடலில் வரும் வயலின் இசை மிகவும் பிடித்திருந்தது. ஆறரை கோடி பாடல் (அ.ஆ), ரூபாரூ (ரங்கு தே பசந்தி) சுட்டும் விழிச்சுடரே பாடல், ரா ரா பாடல், ஏலே ஏலே மாட்டித் தான் பயலே (அறிந்தும் அறியாமலும்), மேற்கே மேற்கே (கண்ட நாள் முதல்), மிகவும் பிடித்த பாடல்கள்.

தி சென்னை சில்க்ஸ்-ன் விவாஹா விளம்பரம் மிக அழகாகவும், இனிமையாகவும் இருந்தது. நிறைய முறை ரசித்துப் பார்த்தேன் (இப்போதும் கூடத் தான்). இது பின்னணி பாடகி சின்மயி பாடி சுரேஸ் பீட்டர்ஸ் இசையமைத்தது.

பல நல்ல புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

பலருக்கு ஒவ்வொரு வருடமும் எப்போது இந்த வருடம் முடியும் என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்து விடும். உயிருக்குயிரானவர்களின் பிரிவு, பண இழப்பு, விபத்து, தொழிலில் ஏற்படும் தோல்வி அந்த வருடத்தினை மறக்க முடியாமல் செய்து விடுகின்றன. புதுவருடாமாவது நன்மையை பயக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து விடும். இது மனதளவில் தன்னம்பிக்கை வளர்வதற்கும் உந்து சக்தியாக விளங்கும்.

பலர் புதிய வருடம் பல மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்காக, தங்களின் பழக்க வழக்கங்களை மாற்ற முயல்வதும் உண்டு. அது பெரும்பாலும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிப்பதும் உண்டு. புதுவருடம் நன்றாக இருக்க வேண்டும் என வருடத்தின் கடைசி நாள் நினைத்து, முதல் நாளில் மிகவும் ஜாக்கிரதையாக மனைவியிடன் சண்டை போடாமல் அல்லது அதிகம் காட்டமாகப் பேசாமல், நிதானமாக செயல்படுவதும் உண்டு. இந்த வருடம் நன்றாக இருக்க வேண்டும்; நான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வேன்; மற்றவர்களிடம் வீணாக சண்டை போட மாட்டேன்; நான் மாறி விடுவேன் என்ற நம்பிக்கையின் வீச்சு முதல் நாள் அதிகமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக அது மறைந்து விடும். நாட்கள் அப்படியே மாறாமல் தான் இருக்கும். நமது மனநிலை தான் சில நாட்களில் மாறிவிடும். புதிய கோணத்தில் பார்த்து, அந்த வீச்சும், ஆர்வமும் குறையாமல் பார்த்துக் கொண்டால் வருடம் முழுவதும் மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தான்.

எனக்கு புது வருடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியில் சுற்றத் தவறுவதில்லை. எங்கே சுற்றுவது? எல்லா இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. The Forum Mall, Garuda Mall, ஹோட்டல்கள், இந்த அலுவலகம்; இப்படி எல்லா இடங்களிலும்; M.G.Road செல்லவும் பயம் :)

வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஸ்ருசல்

வெள்ளி, டிசம்பர் 16, 2005

என்.டி.டி.வியின் பிதாமகன்

கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாட்டைத் தவிர மற்ற அனைத்து விசயங்களும் விவாதிக்கப்படுகின்றன. சில நாட்களாக விளையாட்டுச் செய்திகளில் அரசியல் செய்திகள் ஆக்கிரமித்துள்ளன. அரசியல் விசயங்களே அதிகம் தென்படும் தலைப்புச் செய்திகளில் விளையாட்டுத் துறையான கிரிக்கெட் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. கங்குலியை கிரிக்கெட் வாரியம் தூக்கியதும் தான் தாமதம், கொல்கத்தாவினர் (சிலர் தான். அனைவரும் அல்ல) கோஷங்களை ஆரம்பித்து கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்துள்ளனர்.

கங்குலியைத் தூக்கியது சரியா தவறா என்பதைப் பற்றி பின்னர் விவாதிக்கலாம். ஆனால் இந்த விசயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் அவசியம்தானா எனத் தோன்றுகிறது? அதிலும் முக்கியமாக என்.டி.டி.வி, மூச்சுக்கு முன்னூறு முறை கங்குலியை நீக்கியது சரியா தவறா என விவாதம் நடத்துகிறது. தலைப்புச்செய்திகளில் மூன்று நாட்களாக அதைத் தான் வாசிக்கின்றனர். இன்னும் கூட என்.டி.டி.வி-ன் வலைத்தளத்தில் முக்கிய செய்தியாக அது தான் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறிது நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் போட்டிகளிலிருந்து கங்குலியை நீக்கியதும் என்.டி.டி.வி "சச்சின் 2, 2, 0 ரன்களே குவித்துள்ளார் அவரை ஏன் நீக்கவில்லை" என்ற தோனியில் என ஓர் செய்தி தொகுப்பினை ஒளிபரப்பியது. அதாவது கங்குலியை மட்டும் வைத்துவிட்டு சச்சினை விட்டு விட்டதாகக் குறிப்பிட்டது. பல விசயங்களில் ஓரளவு நடுநிலைமையோடு செயல்பட்டு வரும் என்.டி.டி.வி, இந்த விசயத்தில் கங்குலிக்கு சாதகமாகவே செய்தி வெளியிட்டு வருகிறது. கல்கத்தாவில் நடைபெறும் போராட்டங்களை LIVE ஆகவும், அவருடைய ஆதரளவாளர்களின் பேட்டியையும் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறது. இப்போது காம்பீர் அவசியமா, லக்ஷ்மண் அவசியமா என சொல்பவர்களின் பேட்டியைத் தேடித் தேடி ஒளிபரப்பவும் செய்கிறது. கங்குலி அணியில் மீண்டும் இடம்பெறச் செய்யாமல் ஓயாது போலத் தெரிகிறது. இனிமேல் என்.டி.டி.வி-யை 'Never give up Dada Television' என்று அழைக்கலாம். ஆரம்பத்திலிருந்து கங்குலிக்கு சாதகமாகவே என்.டி.டி.வி செய்திகளை வெளியிடுவதும், பிரணாய் ராய் கல்கத்தாவைச் சார்ந்தவர் என்பதும், என்.டி.டி.வி-ல் கல்காத்தாவினரின் ஆதிக்கம் மிகுந்திருப்பதும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கங்குலி ஒரு சிறந்த வீரர் என்றால் நாடு முழுவதுமே போராட்டம் நடந்திருக்குமே? ஏன் அது கல்கத்தாவில் மட்டும் நடக்கிறது. அதுவும் போராட்டத்தில் சேப்பலையும், கிரண் மோரையையும் தேச துரோகிகள் அளவிற்கு கொண்டு சென்று கோஷம் எழுப்பவது கங்குலியின் எதிர்காலத்தைத் தான் பாதிக்கும். கங்குலியை ஏன் அவர்கள் ஒரு பெங்காலி வீரராகப் பார்க்கின்றனர். அவர் மட்டும் தான் அணியில் ஆடுகிறாரா? இத்தனை நாள் கங்குலியும், டால்மியாவும் கோலோச்சும் போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? பாலாஜியும், கும்ளே, ராபின் சிங்கு போல பல நல்ல வீரர்கள் அணியை விட்டு அனுப்பப்படும் போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? அவர்களுக்கு கங்குலி மட்டும் அணியில் ஆடி மற்ற பத்து பேர் ஆடாவிட்டாலும் போதுமா? கங்குலி அனைத்துப் போட்டிகளிலும் இடம் பெற்று இந்தியா எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறாவிட்டாலும் போதுமா?

10 வருடமாக இந்தியாவிற்காக விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்த வீரரை நடத்திய விதம் சரியல்ல எனக் கூறுகின்றனர் பலர். அதே கேள்வி தான். 10 வருடமாக இந்தியாவிற்காக விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் நடந்து கொள்ளும் விதம் தான் நன்றாக இருக்கிறதா?

சேப்பல் விவாகாரம் உச்சத்தில் இருந்த போது ஜிம்பாப்வேக்கு எதிராக சதத்தை எடுத்து விட்டு அவர் மீடியாவிற்கு கொடுத்த பேட்டியின் அழகை என்னவென்று சொல்வது?. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரகளையும், பிரச்சினைகளும், சிக்கல்களும். இவ்வளவும் டால்மியாவும், கங்குலியும் வந்த பின்னர் தான் என்று நினைக்கிறேன். பயிற்ச்சிக்கு தாமதமாக வருவதும், இவருடைய விளையாட்டு உபகரணங்களை மற்றவர்களைச் சுமந்து வரச் சொல்வதும், பயிற்சியாளரின் கருத்துகளைக் காதில் வாங்காமல் இஷ்டத்திற்கு முடிவெடுப்பதும், அணி வீரர்களின் தேர்வில் தனது ஆதிக்கத்தை செலுத்தியதும், வீரர்களை நடத்திய விதமும், மைதானத்தில் நடந்து கொண்ட விதமும் (பல முறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்), அப்போதெல்லாம் டால்மியாவின் உதவியுடன் ICC யை எதிர்கொண்டு அவற்றை ரத்து செய்யச் செய்த விதமும் பலமுறை விவாதத்திற்கு வந்துள்ளதை அனைவரும் அறிவர். அணியில் பிரித்தாளும் கொள்கை முறையில் விரோதத்தை வளர்த்ததாக பலர் குற்றம் சாட்டினரே? ஸ்டீவ் வாக்கே இப்போது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லியிருந்தாரே?

இத்தனை ஆண்டுகள் விளையாட்டிற்குப் பிறகு, இவர் ஒழுக்கத்திலும், விளையாட்டிலும் சிறந்தவராக இருந்தால் யார் நினைத்தாலும் இவரை வெளியேற்ற முடிந்திருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ராகுல் டிராவிட் மீதோ, சச்சின் மீதோ இந்த மாதிரி அவதூறோ அல்லது குற்றச்சாட்டோ வந்ததுண்டா?

எதற்கெடுத்தாலும் டால்மியாவுடன் சேர்ந்து கொண்டு அனைவரையும் புல்லைப் பார்ப்பது போல பார்த்து, நோகடித்து வீட்டிற்கு அனுப்பினாரே? மனதை நோகடிக்கும் எத்தனை பேட்டிகள்? யாரையும் மதிக்காமல் நடந்து கொண்ட விதம். இப்போது அழுவதிலும், குமுறுவதிலும் என்ன நியாயம்? ஒரு வேளை இப்போது நன்றாகப் பழகலாம். ஒரு வேளை மீண்டும் டால்மியாவிற்கு தலைமைப் பதவியோ, கங்குலிக்கு கேப்டன் பதவியோ கிட்டினால் அவர் அப்போதும் பழைய முறையில் தான் நடந்து கொள்வார் என்பது என்னுடைய யூகம்.

இங்கு கங்குலியின் விளையாட்டுத் திறன் மட்டும் பார்க்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே சேப்பலும் கூட அவரின் ஒழுக்கத்தைப் பற்றியும், தலைமைப் பண்பையும் (மற்றவர்களை வழிநடத்தும் திறன்) முதலானவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசி வந்தார். இவரால் எத்தனை இளம் வீரர்கள் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பபட்டார்களோ?

இத்தனை நாட்களாக கங்குலி அணியில் வேண்டும் என தீர்மானத்த தேர்வுக்குழுவினரின் முடிவுக்கு ஆதரளித்தவர்கள் இப்போது அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று முடிவெடுக்கும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? இது போல பலருக்கும் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளதே? ஒரு போட்டியில் சேர்க்கப்படுவதும், வாய்ப்பே தரப்படாமல் தூக்கப்படுவதும் புதிதன்றே. அவ்வாறாக முடிவெடுக்கப்பட்ட போதெல்லாம் கங்குலி எப்போதாவது தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுண்டா? அல்லது இப்போது போராட்டம் நடத்தும் நபர்கள் தான் ஏதாவது சொல்லியதுண்டா?

தேர்வுக்குழு செய்த ஒரே தவறு அவரை முதல் டெஸ்டிற்கு எடுத்தது தான் எனக் கூறுவேன். இந்த இரண்டு போட்டிகளில் என்ன ஆராய்ந்து விட்டார்கள்? ஆனால் இந்த முடிவு பழைய தேர்வுக்குழு எடுத்ததே. அப்போது தான் 3-2 என்ற கணக்கில் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் உள்ளே வருவதை எதிர்த்ததில் கிரண் மோரேயும் ஒருவர். சரத் பவார் வந்ததும் அந்த மூன்று நபர்களையும் தூக்கி எறிந்தார். ஆனால் அவர்களின் முடிவை தூக்கி எறியமுடியாதே. அதனால் தான் என்னவோ அவர் முதல் போட்டிக்கு வைத்துக் கொள்ளப்பட்டார்.

இதனால் சிறிய அனுதாப அலை ஏற்பட்டுள்ளது என்பதோ உண்மை தான். அணியில் இருந்து வெளியேற்றப்படும் இவர் முதல் நபர் அல்ல. இவரைப் போல, ஏன் இவரை விட மிக நன்றாக விளையாடிய பல நபர்கள் அணியில் இருந்து பல முறை ஏன் என்று காரணம் சொல்லப்படாமலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் கங்குலி கோடி கோடியாக சம்பாதித்து விட்டார். பல வீரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரே ஒரு "ஒரு நாள் போட்டியிலோ" அல்லது "டெஸ்ட் போட்டியிலோ" தொலைத்து விட்டு ரஞ்சி ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

இவருக்கு இன்னும் அணியில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறதே தவிர நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த 40, 39 ரன்களைப் பெற்றது போல இந்த 5 ஆண்டுகளில் இவ்வளவு கவனமாக விளையாடியது போலத் தெரியவில்லையே? இவர் ஒன்றை மட்டும் இப்போது புரிந்து கொண்டிருப்பார். இவரின் உண்மையான சகாக்கள் என்று இப்போது தெரிந்திருக்கும்.

ஆனால் ஒன்று; அணியில் இடம் பெற வேண்டி ரஞ்சி போட்டிகளில் இனி வெளுத்து வாங்குவார். அணியில் இடம்பெற குட்டிகரணம் போடுவார்.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கங்குலி நீக்கப்பட்டதற்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய பாராளுமன்றத்திலும் இதனைப் பற்றி விவாதிக்க சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அனுமதி அளித்துள்ளார். இதனைப் பற்றி விவாதிக்காவிட்டால் நாட்டின் ஒருமைப்பாடே குலைந்து போகும் என்ற அளவிற்கு அவருடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடும் மழையாலும், வெள்ளத்தாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக என்ன செய்யலாம் என்று ஏதாவது ஆக்கபூர்வமாக விவாதிப்பதை விட்டு விட்டு இதெல்லாம் தேவையா? அதிலும் நேற்றைய முந்தைய தினம் மதியம் சபாநாயகர் இவ்வாறாக அறிவிக்கிறார்; "இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆதலால் உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்தலாம்". அவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி தான் முக்கியம். மக்கள் அல்ல. என்னவென்று சொல்வது?

எதற்கு இதெல்லாம்? பேசாமால் இந்திய கிரிக்கெட் அணியைக் கலைத்து விட்டு அவரவர் வேலையைப் பார்க்கலாம்.

மாணவர்களின் படிப்பு கெடுகிறது; போட்டியின் ஒளிபரப்பில் ஏகப்பட்ட குளறுபடி; தோற்று போனால் ஏதோ இடிவிழுந்தது போல வருத்தம்; வென்றால் யுத்தத்தில் வென்றது போல புகழ்மாலைகள்; மகிழ்ச்சி; வீடு, தோட்டம் என பரிசுகள்; பெட்டிங் வேறு; தேர்வாளர்கள் தேர்வில் பிரச்சினை; பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் தேர்வில் குழப்பம்; பயிற்சியாளர் தேர்வில் குழப்பம்; போட்டி நடக்கும் தினத்தன்று கேபிள் டி.வி.யினரின் அடாவடித்தனம். சில தனியார் சேனல்கள் பே சேனல்களாக மாறி (அல்லது கட்டணத்தை உயர்த்தி) போட்டிக்கு முன்பாக அடம்பிடிப்பது; இதில் ஏதோ ஐசிசி நட்டத்தில் நடப்பது போல போட்டிகளுக்கு வரிவிலக்கு வேண்டும் என கோரிக்கை வேறு! வரும் லாபத்தை என்ன செய்கின்றனர். இதெல்லாம் தேவையா? ஒரு விளையாட்டிற்குள் இவ்வளவு அரசியலா?

ஏற்கனவே சரத் பவார் வந்தாகி விட்டது. சீக்கிரம் லாலு அரசியலில் இருந்து விலகி, தீவிர அரசியலான கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார். ஏற்கனவே அவர் பிஹார் கிரிக்கெட் சங்கத் தலைவராகி விட்டார்(சரியா?). இன்னும் சில ஆண்டுகளில் அவரும் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவார். அரசியலில் இருப்பதை விட இங்கு அதிகம் சம்பாதிக்கலாம். நாடு முழுவதும் ராஜ மரியாதை வேறு! தினமும் பேட்டி, கட்டுரைகள் என விளம்பரம் வேறு. இங்கு நடக்கும் போட்டியை வைத்துப் படமே எடுக்கலாம். படத்திற்குத் தலைப்பு: 11 குசும்பர்களும் 100 கோடி இளிச்சவாயர்களும்.

ஸ்ருசல்



இன்று சேர்க்கப்பட்டவை:


நேற்று பிராணாப் முகர்ஜி கூட தனது ஆதரவை கங்குலிக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் கங்குலி, டால்மியாவைச் சந்தித்ததன் விளைவாக, டால்மியா சரத் பவாருக்கு கடிதம் எழுதி, கங்குலியை அணியில் சேர்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அவரின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் கங்குலி இது போன்று ஆதரவு கேட்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. சரி இதில் சரத் பவார் முடிவெடுக்க என்ன இருக்கிறது? பின் தேர்வுக்குழு எதற்கு?

புதன், டிசம்பர் 14, 2005

மக்காச்சோள மொபைல்போன்கள்

உலகம் முழுவதும் கைத்தொலைபேசிகளின் விற்பனை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 5 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் மொபைல் போன்கள் அரிதாகவே மக்களால் உபயோகப்படுத்தப்பட்டது. அதே இந்தியா இப்போது உலகின் மிகப் பெரிய மொபைல் சந்தைகளில் ஒன்றாகி விட்டது. சென்ற வருடம் சிறந்த போனாகப் பாராட்டப்பட்டு உபயோகப்படுத்தப்பட்ட போன்கள் இந்த வருடம் பழையதாகி விடுகின்றன. லேட்டஸ்ட் மாடல் என்று நண்பர்களுடன் பேசி பெருமைபட்டு கொள்ள உங்களது போன் ஒரு மாதமே ஒத்துழைக்கும். அதற்குள் வேறொன்று சந்தைக்கு வந்திருக்கும். அதே நேரத்தில் இந்த போன்களால் ஏற்படும் குப்பையின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனை மறுசுழற்சி செய்வது தான் பல அரசுகளுக்கும், தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் பெரிய தலைவலியாக இருக்கிறது.

சீனாவில் சென்ற ஆண்டு மட்டும் பழையனவாக 100 மில்லியன் போன்கள் குப்பையில் சேர்ந்தன. வருடத்திற்கு அங்கு மட்டும் 150 மில்லியன் போன்கள் விற்பனையாகின்றன. ஒரு போனுக்கு இரண்டு பேட்டரிகள் என்று கணக்கிட்டால் ஒவ்வொரு போனையும் தூக்கிப்போடும் போது இரண்டு பேட்டரிகளும் எறியப்படுகின்றன். அதாவது 100 மில்லியன் சார்ஜர்களும்,200 மில்லியன் பேட்டரிகளும். இதனை அப்புறப்படுத்தும், மறுசுழற்சி செய்வதும் தான் கடினமான பணி.



இந்த நேரத்தில் ஜப்பானைச் சார்ந்த என்.டி.டி. டொக்காமோ (NTT DoCoMo) என்ற தொலைதொடர்பு நிறுவனம் தாவரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் இழைகளிலிருந்து ஒரு மொபைல் போனின் மாதிரியைத் தயாரித்துள்ளது. ஆனால் LCD திரையும், கீ பேடுகள்
(Buttons) மட்டும் பழைய முறையிலேயே தயாரிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு அளவைக் குறைக்கும் நோக்கில் NTT DoCoMo நிறுவனத்தின் R&D துறையினர் இதனைத் தயாரித்துள்ளனர். பாலிலாக்டைட்ஸ் (Polylactides - PLA) என அழைக்கப்படும் இந்த பிளாஸ்டிக், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் தயாரிக்கப்படும் பாட்டில்கள் சுலபமாக மக்கும் தன்மை உடையவை. மறுசுழற்சி செய்வதிலும் எவ்விதமான கடினமும் இருக்காது. இது 2003-ம் ஆண்டிலிருந்து சில நாடுகளில் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. 2002 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கோக கோலா நிறுவனம் 5,00,000 PLA கப்கள் தயாரித்து அதில் குளிர்பானங்களை விற்றது. மற்ற பாட்டில்கள் Container என அழைக்கப்படுவது போல இவை Corntainer என அழைக்கப்படுகின்றன.

இதிலிருந்து தயாரிக்கப்பட்ட முதல் மொபைல் தொலைபேசிக்கு FOMA எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது சோதனை முறையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி மக்காச்சோளம் பற்றிய செய்தி ஒன்று.

தென், வட அமெரிக்க (கனடா, USA, மெக்ஸிகோ) நாடுகளில் வடிவமைக்கப்ப்டும் Corn Maze (மக்காச்சோள மழமழெனல்) மிகவும் பிரபலம். மக்காச்சோள பண்ணைகளின் நடுவில் சென்று வருவதற்கு விடும் பாதைகள் அமைப்பதில் உள்ள வித்தியாசமான வடிவமைப்பினை வைத்து நடைபெறும் போட்டிகள் நடைபெறுவது உண்டு. அதாவது உயரத்தில் இருந்து பார்க்கும் போது (விமானத்தில் இருந்து தான்) கிடைக்கும் காட்சியினை வைத்து சிறந்த வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்படும். அதற்காக பலர் தங்கள் பண்ணைகளில் அது போல Maze அமைக்க பயிற்சி எடுத்து, இம்மாதிரியான் போட்டிகளில் கலந்து கொள்வதுண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

முதல் பண்ணை

இரண்டாம் பண்ணை

மூன்றாம் பண்ணை


இந்த கார்ன் மேஸ்களின் மூலம் புவியியல் அமைப்பினை விளக்குவதற்கு சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடங்கள் கூட உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த Corn Maze களின் உதவியினால் புவியியல் அமைப்பைத் தெரிந்து கொள்கின்றனர். குழந்தைகளை இந்த Maze களில் நடக்க விட்டு அவர்கள் நடக்கும் பாதையினை GPS Receiver உதவியுடன் பெற்று அதனை GIS தகவலாக மாற்றி அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருட்களில் ஏற்றினால் அவர்கள் பயணித்த பாதை Map ஆக வரையப்பட்டுவிடும். ஏற்கனவே அந்த Maze ஒரு நாடு / மாநிலத்தின் வரைபடத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தால், மென்பொருளால் உருவாக்கப்படும் வரைபடமும் அதனை ஒத்து காணப்படும். இதன் மூலம் பொழுதுபோக்காக புவியியல் அமைப்புகளை கற்பிக்க முடியும்.



GPS, GIS பற்றித் தெரிய வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும். எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்.

Maze க்கு சரியான தமிழ் வார்த்தை தேடித் தேடி களைத்து விட்டேன். தெரிந்தவர்கள் சொல்லவும். எந்த அகராதியிலும் அதற்கான குறிப்பு இல்லை. மழமழெனல் என்பது சென்னை பல்கலைக்கழகம் கொடுத்த விடை. (ஏறக்குறைய ஒத்த விடை என நினைக்கிறேன்). இன்னும் சில அகராதிகளில் "சுற்றி சுற்றி செல்லும் வழி" எனக் குறிப்பிடப்பட்டுள்லது. அது தான் எல்லாருக்கும் தெரியுமே. ஒரு வார்த்தையில் இருக்கிறதா?

ஸ்ருசல்

செவ்வாய், டிசம்பர் 13, 2005

இசை மதிப்பீடு - ரங்கு தே பசந்தி

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்கள் வரிசையாக ஓடவில்லையென்றாலும் அவருடைய இசையில் பாடல்கள் குறை சொல்லும் அளவிற்கு இருந்ததில்லை. 'அன்பே ஆருயிரே' மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அந்த படத்தில் ஒலிப்பதிவு சரியில்லையென்பதும் ஒரு குறை.

ஹிந்தியிலும் எந்த படமும் இந்த இரண்டு வருடங்களில் சொல்லும்படியாக அமையவில்லை. கடைசியாக மங்கள் பாண்டே வந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. போஸ் படத்தில் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்திருந்தும் அந்த படமும் ஓடவில்லை. வரிசையாக இந்தியில் பீரியட் படங்களைக் கொடுத்து வந்த ரகுமான், இப்போது சமகால படமான ரங்கு தே பசந்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் சென்ற வியாழக்கிழமை வெளிவந்தது. இதில் அமீர்கான் நாயகனாக நடித்திருக்கிறார்.

படத்தில் மொத்தம் 10 பாடல்கள். அனைத்தும் தேன் போல இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒன்று இரண்டைத் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

1. இக்கூன்கர் (பாடியவர்: ஹர்ஸ்தீப் கார்) இசைத்தட்டின் முதல் பாடல். இது ஒரு பஞ்சாபி இறை வழிபாட்டுப்பாடல். சாதாரணமாக இசை எதுவும் இல்லாமல் பாடுவது போல இருந்தாலும், இந்தப் பாடலில் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது.

2. ரங்கு தே பசந்தி (பாடியவர்: தாலேர் மெஹந்தி, சித்ரா) பஞ்சாபி மெட்டில் அமைந்த இந்த பாடல் அதிகமாக கவராது. தாலேர் மெஹந்தியின் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது அந்த வகையில் இது அதில் பாதி கூட வராது.
ஆனால் நல்ல பீட்.

3. Lose Control (பாத்சாலா) (பாடியவர்கள்: நரேஸ் அய்யர், முகமது அஸ்லம்)

இது பீட் ரகத்தைச் சார்ந்தது. உங்களுக்கு பீட் ரகப் பாடல்கள் பிடிக்குமென்றால் இந்தப் பாடலை முதலில் கேளுங்கள். கண்டிப்பாக பிடிக்கும். ஹை-வேயில் பயணம் செய்யும் போது கேட்டால் வாகனத்தின் வேகம் அதிகரிப்பது உறுதி.

4. தூ பின் பதாயே (பாடியவர்கள்: நரேஸ் அய்யர், மதுஸ்ரீ பட்டாச்சார்யா)

இந்தப் பாடலின் ஆரம்பம் 'கண்ணைக் கொஞ்சம் திறந்தேன்' (மிஸ்டர் ரோமியோ) போல ஆரம்பிக்கிறது. நல்ல மெல்லிசைப் பாடல். மதுஸ்ரீ வழக்கம் போலவே நன்றாகப் பாடியிருக்கிறார். இவர் கையை நீட்டி பாடும் அந்த முறை தான் இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் தோன்றுகிறது. இவர் மேடையில் பாடுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா?

5. கல்பலி ஹே (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், முகமது அஸ்லம், நசீம்)

மற்றுமொரு பீட் பாடல். ஹம்மா ஹம்மா பாடல் போல இருக்கிறது. ரகுமான் நன்றாகப் பாடியிருக்கிறார்.

6. கோன் சலா (பாடியவர்: மொகித் சவுகான்)

மிக மிக அருமையான மெலோடி பாடல். முதலில் கேட்கும் போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க தேன் போல இருக்கிறது.

7. Lose Control (பாத்சாலா) (பாடியவர்கள்: பிளாசே): இது மூன்றாவது பாடலின் ஆங்கிலப் பதிப்பு. பலருக்கு பிளாசேயின் வரிகளும், பாடும் விதமும் பிடித்திருந்தாலும் எனக்கு இன்னும் அவரை அவ்வளவாக பிடிக்கவில்லை. அந்த மாதிரியான பாடல்களும் தமிழுக்கோ, இந்திக்கோ அவசியம் இல்லை என்றே எனக்குப் படுகிறது. அவர் பாடிய டோல் டோல் பாடலின் இசை மிக அருமையாக இருக்கும் அவருடைய குரலைத் தவிர. இவரின் ராஜ்யம் பாய்ஸ் அல்லது பாபாவில் தான் ஆரம்பித்தது என நினைக்கிறேன். டேட்டிங் பாடல் மட்டுமே நன்றாக வந்திருந்தது. அது கூட இசைக்காகவும், ராகத்திற்காகவும் தான் என்று நினைக்கிறேன்.

மேலும் அன்பே ஆருயிரேயில் மரங்கொத்தியே பாடலுக்கு நடுவில் வரும், "உதடு உதடு மேலே make it a Square" கூட பாடலின் தரத்தை குறைப்பதாகவே எனக்குப் பட்டது. இவருடைய பாடல்கள் எல்லா ஏ.ஆர்.ரகுமான் படங்களிலும் திணிப்படுவதாகவே எனக்குப் படுகிறது.

8. லக்கா சுப்பி (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், லதா மங்கேஷ்கர்)

ஏ.ஆர்.ரகுமானும், லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடியிருக்கும் முதல் பாடல். இந்த இசைத்தட்டு வருவதற்கு முன்பே மிகவும் பேசப்பட்ட பாடல். இதற்காக லதா சென்னை வந்து பாடிக்கொடுத்து சென்றார் என்பதும் கொசுறு செய்தி. லதாவிற்காக சில நேரங்களில் மும்பையில் ரிக்கார்டிங் வைத்திருக்கும் ரகுமான், தான் புதிதாக கட்டியிருக்கும் ஸ்டுடியோவிற்கு லதா கண்டிப்பாக வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால், அவர் சென்னைக்கு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. இருவருமே மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் முக்கியமாக ரகுமான். நல்ல மெலோடி.

பாடலின் ஆரம்பத்தில் வரும் கிதார் இசை வெள்ளைப் பூக்கள் பாடல் போலவே இருக்கிறது.

9. லல்கார் (பாடியது (?) அமீர்கான்) இது இருவர் படத்தில் வரும் 'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்' என்ற கவிதை போல வரும் பாடல்(?). அமீர்கான் வாசித்தது.

10. ரூபரூ ரோஷிணி (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர்)

இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல் இது தான் என்று அடித்துக் கூறுவேன். அருமையான பாடல். நல்ல இசை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை மிக அருமை. நரேஸ் அய்யர் நன்றாகப் பாடியிருக்கிறார்.

இந்த இசைத்தட்டில் ஆச்சர்யப்பட வைத்த விசயங்கள் இரண்டு. கிதார் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகுமான் ஆசிட்டிற்கு கிதார் இசையை இரண்டு பாடல்களில் (லக்கா சுப்பி, ரூபரூ) முழுவதுமாக உபயோகித்திருக்கிறார்.

மற்றொன்று நரேஸ் அய்யரின் குரல். இவர் தான் அன்பே ஆருயிரேயில் மயிலிறகே பாடலைப் பாடியவர். அந்தப் பாடலில் அவருடைய குரல் பலரைக் கவரவில்லை. ஆனால் இதில் அவருடைய குரல் முற்றிலும் வித்தியாசமாக, மிக நன்றாக இருக்கிறது. இவருக்கு வயது ஒரு 20-23 ருக்கும். பெங்களூரில் வைத்து சந்தித்தேன். மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழர். ரகுமான் இவரை சந்தித்தது ஒரு இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில். வெற்றிபெறும் நபருக்கு தனது படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்புக் கொடுப்பதாகச் சொன்னாராம். இவர் வெற்றி பெற்றதும் இவரிடம் ரகுமான் கேட்ட கேள்வி, "உங்களுக்கு தமிழ் பேச வருமா?" ஆம் என்ற சொன்ன நரேஸ் அய்யரை தேவைப்படும்போது அழைக்கிறேன் என்று சொன்னாராம். சொன்னது போல சில நாட்களில் அழைப்பு வந்ததாம்.

ரகுமானிடம் வளரும் கலைஞர்கள் பட்டியல் ஒன்று எப்போதும் இருக்கும். அந்தப் பாடகர்கள் நன்கு வளர்ந்து மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்பு வரும் வரை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பார். இதற்கு உதாரணமாக ஹரிணி, கார்த்திக், சுஜாதா, மின்மினி, சின்மயி, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

பட்டியலில் எப்போதும் இரண்டு - மூன்று பாடகர்கள் இருப்பார்கள். அதில் இப்போதிருப்பது நரேஸ் அய்யர், மதுஸ்ரீ மற்றும் பிளாசே என்று நினைக்கிறேன். இந்திய திரையுலகில் அதிகமான பாடகர்களை அறிமுகப்படித்தியதும் அவர் தான் என்று நினைக்கிறேன்.

பாடல்களை எழுதியிருப்பர் பிரவீன் ஜோஷ். பாடல் வரிகள் எனக்குப் புரியாத காரணத்தால், அவை எவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றன என்னால் கருத்து சொல்ல இயலாது.

எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசை

1. ரூபாரூ
2. கோன் சலா
3. லக்கா சுப்பி
4. இக்கூன்கர்
5. Lose Control

160 ரூபாய் (Audio CD) கொடுத்து நிச்சயமாக வாங்கலாம்.

ஸ்ருசல் Rang De Basanti Music Review

திங்கள், டிசம்பர் 12, 2005

'தில்லாலங்கடி' திப்புசுல்தான்

சென்ற வாரம் இந்தியா வந்த கேட்ஸ், பலரைச் சந்தித்துப் பேசினார். அவர்களில் குறிப்படத்தகுந்தவர்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கலைஞர். கேட்ஸ்-ம் கலைஞரும் என்னப் பேசுவார்கள் என கற்பனை செய்த போது உதித்த அறிக்கை. இதனைப் போன வாரமே தட்டச்சு செய்து வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அதை வலைப்பதிவில் ஏற்றமுடியவில்லை.

உலகத்தின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் தம்பி பில்கேட்ஸ் அவர்கள் நேற்று என்னை சந்தித்து உரையாடினார் . எனது வீட்டிலேயே சந்திப்பு நிகழ வேண்டும் என தம்பி கேட்ஸ் பிடிவாதமாக இருந்ததால் அவரை கோபாலபுரத்தில் வைத்து சந்தித்தேன். பல விசயங்களைப் பற்றி விவாதித்தோம். முக்கியமாக கழகத்தின் செயல்பாட்டினைப் பற்றி தம்பி கேட்ஸ் மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும் என்னை தமிழகத்தின் தலைவராகப் பார்க்காமல் உலக மக்களின் தலைவராகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மைக்ரோசாப்டின் முதல் இந்திய அலுவலகம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட வேண்டும் என தான் பிடிவாதமாக இருந்ததாகவும் ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் ஹைதாராபாத்தில் தனது அலுவலகத்தை அமைத்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அடுத்த முறை கழக ஆட்சி மீண்டும் அமையும் போது கண்டிப்பாக தமிழகத்தில் சென்னையிலோ அல்லது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலோ மைக்ரோசாப்டின் தலைமையகத்தை மாற்றுவதாகத் தெரிவித்தார்.

தம்பி பில் கேட்ஸின் தமிழ் அறிவு என்னை வியக்க வைத்தது. என்னுடைய 'தொல்காப்பிய பூங்கா' புத்தகத்தை பல முறை படித்து புலங்காகிதம் அடைந்ததாக தெரிவித்தார். எப்படி தமிழின் மீது இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது எனக் கேட்டதற்கு, என்னுடன் தமிழில் உரையாடி மகிழ வேண்டும் எனபதற்காக என்னையே அவரின் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ் படித்து வருவதாகவும் கூறி என்னை ஆச்சர்யப்பட வைத்தார்.

மேலும் அவர் தமிழில் எழுதிய சில கவிதைகளை என்னிடம் படித்துக் காட்டி என்னுடைய கருத்தைக் கேட்டார். சில திருத்தங்களைச் சொன்னேன். திருமதி மெலிண்டா கேட்ஸ் திருத்தங்களை ஆர்வத்துடன் குறித்துக் கொண்டார்.

தம்பி கேட்ஸ்க்கு தற்போது தொழிலில் கூகுள், யாகு போன்ற நிறுவனங்களின் மூலமாக பலத்த போட்டி இருப்பதால் அவற்றை சமாளிப்பதற்காக சில அறிவுரைகளையும் கூறினேன். ஆனால் இத்தனை நிறுவனங்களின் போட்டியையும் சமாளித்து, இன்னும் சந்தையில் கோலோச்சி வருவதால் தம்பி கேட்ஸிற்கு 'தில்லாங்கடி' கேட்ஸ் என்னும் பட்டத்தைச் சூட்டினேன். இனிமேல் அவர் தில்லாங்கடி என்று அன்புடன் அழைக்கப்பட வேண்டும் என கழகத் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைப் போலவே அமெரிக்காவும் கழகத்தின் தலைமையில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் அதற்காக கழகத்தின் கிளையை அமெரிக்காவிலும் நிறுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைப் படிப்படியாக ஆரம்பிக்க வேண்டி இருப்பதாலும், மேலும் கழகத்தின் நலம் விரும்பி தோழர் புஷ்ஷின் மனம் புண்படக்கூடாதெனவும், அதனை மைக்ரோசாப்ட் அளவில் ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளோம். அதற்கு 'மை.மு.க' எனப் பெயரிட்டுள்ளேன். அதாவது, 'மைக்ரோசாப்ட் முன்னேற்றக் கழகம்' என அழைக்கப்படும்.

மேலும் அவருடைய வாழ்க்கை வரலாறை 2007 ல் வெளியிட இருப்பதாகவும், அதற்கு என்னுடைய உரை வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நான் எவ்வளவு கூறியும் கேட்காமல் நான் தான் எழுத வேண்டும் என பிடிவாதமாகக் கூறியதால் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டேன். மேலும் அந்தப் புத்தகத்தில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியினை (1%) 'பில்கலைஞர்' அறக்கட்டளைக்கு கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

விண்டோசின் அனைத்துப் பதிவுகளிலும் இனி மேல் என்னுடைய புத்தகத்திலிருந்து குறிப்புகளை எடுத்து "Tip of the Day" டயலாக்கில் டிஸ்பிளே செய்வதற்கு எனது அனுமதியைக் கேட்டார். தமிழன் புகழ் உலகெங்கும் பரவட்டும் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்தேன்.

'பில்' தமிழில் உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டிய ஓர் 'சொல்'.
கேட்ஸ் அறிவாலயம் நுழைய இனி ஏதும் இல்லை கேட்ஸ்

அன்புள்ள,
மு.க

இது முற்றிலும் கற்பனையே. நகைச்சுவைக்காக மட்டுமே. கலைஞரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதிக்கப்படவில்லை. அவருடைய உரைநடை பாணி மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் சிறிதும் இல்லை.


'Changing India' பகுதி 2-ல் கேட்ஸிடம் பிராணாய் ராய் கேட்ட கேள்வி.

"கூகுள் நிறுவனம் அனைத்து மென்பொருள் தொகுப்புகளையும் இலவசமாக அளிக்கிறது. உங்களுக்கு அது போல இலவசமாக அளிக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?"

அதற்கு கேட்ஸின் பதில்

"கூகுள் எதையுமே இலவசமாக அளிப்பதில்லை. கூகுள் தேடியில் பயன்பாட்டாளர்கள் விளம்பர URL-ஐ சொடுக்கவதால் மட்டுமே கூகுள் நிறுவனம் பெரும் வருவாயை ஈட்டுகிறது. நீங்கள் சொடுக்குவதால் தானே அவர்களுக்கு லாபம். அப்படிப் பார்த்தால் அந்த லாபத்தை உங்களிடம் தானே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைத்து லாபத்தையும் அவர்களே வைத்துக் கொள்கிறார்களே? இது எந்த வகையில் சரி?



(படம் நன்றி: தினமலர்)

மேலும் கேட்ஸின் இந்தப் படமும் என்னைக் கவர்ந்தது. சாதாரணமாக அமர்ந்து கதை கேட்கும் பாணி. பலரும் அவரின் மோட்டிவ் வேறு என குறைகூறுவதும் உண்டு. ஆனால் அது முக்கியமில்லை எனத் தோன்றுகிறது. நமது அரசியல்வாதிகளோ அல்லது வேறு யாரும் செய்யத் தயங்கும் செயல் அது. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். வெள்ளிக்கிழமை எனது அலுவலத்திற்கு அடுத்த கட்டடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டிட திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். ஆனால் பார்க்க முடியவில்லை.

ஸ்ருசல்

ஸ்ருசல்