புதன், ஏப்ரல் 16, 2014

மூடாத குழிகள்

கடந்த சில நாட்களில் மட்டும், மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி மிகவும் பாதித்தது. சிறிது நேரத்திலேயே அம்மா அல்லது அப்பாவினை தேடி அலைபாயும் குழந்தைகள், அச்சிறு துவாரத்தில் மாட்டிக் கொண்டு சிறிதும் அசையமுடியாமல் இருக்கும் நிலையினை நினைத்தாலே மனம் பொங்குகின்றது.

ஈனப்பிறவிகள் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நம்மக்கள் என்பதனை பல நிகழ்ச்சிகள் சமீபகாலமாக நிரூபித்து வருகின்றன.

இது போன்று நிகழ்ச்சிகள் நடப்பது முதல் முறையல்ல. கடந்த பத்தாண்டுகளில் பல உயிர்கள் போய் விட்டன. லட்சங்கள் செலவு செய்து ஆழ்துளை கிணறு பதிப்பவர்களுக்கு, சில நூறு ரூபாய்களில், தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஏன் முடியாமல் போய்விட்டது? அடிமுட்டாள்கள்! இது போன்ற முட்டாள்களினால், பெரும்பாலும் அவர்களுக்கு எந்த கேடும் நிகழ்வதில்லை. இது போன்ற குழந்தைகள் என்ன தவறு செய்தன?

தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஒருவரும் - அரசியல்வாதிகள் முக்கியமாக - முன்வராதது மிகுந்த வருத்தமே. அவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி குறைகூறவே நேரம் இல்லை.

மனிதனத்திற்கு மதிப்பில்லை. பணத்திற்கு தான் என்பது கண்கூடு. சுற்றுச் சூழலைப் பற்றி  நமக்கு கவலையில்லை. மலைகளை கூறுபோடுகிறோம். ஆற்றுப் படுகைகளை சுரண்டுகிறோம். மரங்களை நடுவதில்லை என்பதுமட்டுமில்லாமல், காடுகளை கண்மூடித்தனமாக அழிக்கிறோம். ஆறுகள், குளங்கள், கண்மாய்களை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைக்கிறோம். கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுகிறோம், ஆறு, சமுத்திரங்களில் கழிவுகளை குற்ற உணர்ச்சி சிறுதும் இல்லாமல் சென்று சேர்க்கிறோம்.

எதற்காக? நமது வாழ்க்கைமுறை வளர்ந்திருக்கின்றதா? நிச்சயமாக இல்லை.

மருத்துவ வசதிகள் அதிகருத்துப்பது போன்ற மாயை ஏற்பட்டுள்ளது. ஆனால் நோய்களும், மருத்துவ செலவுகளும் அதனை விட அதிகரித்துள்ளன. பயணம் செய்வதற்கான வசதிகள் பெருகியுள்ளன. ஆனால், சுற்றுச் சூழல் அதிகமாக மாசடந்துள்ளது. பொழுதுபோக்கு சாதனங்கள் அதிகரித்துள்ளன. மக்களுக்கிடையேயான இடைவெளி அதனை விட அதிகரித்துள்ளது. தாய், தந்தையுடன் சேர்ந்து வாழமுடியவில்லை. உறவினர்கள், நண்பர்களை தினமும் சந்திப்பது என்ற நாட்கள் போய், மாதங்கள், வருடங்கள் கழித்து சந்திக்கும் இழிவுநிலை ஏற்பட்டுள்ளது.

எதற்காக இதெல்லாம்? யாருக்காக இப்படிப் பட்ட வாழ்வு?

இயற்கை தானே நமது வாழ்க்கையின் ஆதாரம். மனிதர்களின் ஆதாரம் மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஜீவராசிகளின் ஆதாரமும் கூட. மற்ற ஜீவராசிகளுடன் பகிர்ந்து வாழும் பொறுப்பு மட்டுமில்லாது, எதிர்கால சந்ததிகளுக்கு, இயற்கை வளங்களை சேதாரமில்லாமல் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி நினைப்பதற்கு நமக்கு ஏது நேரம்? நயன் தாராவும், சிம்புவும் மறுபடியும் சேர்ந்துவிட்டார்கள், அதிமுக, திமுகவிற்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும். இந்த ஐ.பி.எல் பட்டத்தினை யார் வெல்வார்கள்? இவ்வற்றில் தானே நமது நேரத்தினையும், எண்ணங்களையும் செல்வளிக்கிறோம்.

இச்சமூகத்தின் தற்போதைய நிலைமையையும், எதிர்காலத்தினையும் நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது.