திங்கள், மே 29, 2006

ஐ.ஐ.டியால் வந்த வினை

சென்ற சனிக்கிழமை காலையில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன்.... அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது... யாராக இருக்கும் என்று யோசித்தவாறு எட்டிப் பார்த்தேன். அரை கால் சட்டை, கண்ணாடி அணிந்து கொண்ண்டு கணினி வல்லுநர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

"சாரி... டிஸ்டர்ப் பண்ணுறதுக்கு மன்னிச்சுக்கங்க.. அந்த வீடு ரெண்டு மூணு வாரமா பூட்டியிருக்கே.. வேகண்டா இருக்கா"

"அந்த வீடா? இல்ல. ஆள் இருக்காங்க... ஆனா ஊர்ல இல்லைன்னு நினைக்குறேன்".

"அப்படியா.. நான் பக்கத்துல தான் ஸ்டே பண்ணியிருக்கேன். வேகண்டா இருந்தா வரலாம்னு நெனச்சேன்..."

"அவர் அப்ராட் போயிருக்காருன்னு நினைக்கிறேன். ஆனா எப்ப வர்றாருன்னு தெரியல..."

"ஓ அப்படியா... தாங்க்ஸ்", என்று கூறிவிட்டு கிளம்பினார்.

கதவைப் பூட்டி விட்டு மீண்டும் படுக்கச் சென்றேன்.

ஆம் என்னாயிற்று இவனுக்கு? எங்கே இருக்கான்? எப்படி இருக்கான்? என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நபர் பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். எப்போதாவது பார்த்தால் பேசிக் கொள்வோம். சில மாதங்களாக வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருந்தவர், சில வாரங்களுக்கு முன்பாக எனது வீட்டில் எனது வருகைக்காகக் காத்திருந்தார். வீட்டிற்கு நான் சென்று சேர்ந்ததும் என்னை வெளியே அழைத்துச் சென்றார். என்ன விசயமாக இருக்கும் என என்னால் யூகிக்கமுடியவில்லை.

"என்ன விசயம்?", என்றேன்.

சிறிது நேரம் அமைதி காத்தவர் பின்னர், "எங்க ஊர்ல இருந்து உனக்கு போன் எதுவும் வந்ததா", என்றார்.

"சமீபத்தில இல்லை. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வந்தது..."

"இப்போ எதுவும் இல்லைல?"

"இல்ல. என்னோட நம்பரை மாத்தி மூணு மாசம் ஆகிடுச்சு"

"நல்லவேளை. ஒரு வேளை இங்க வந்து யாரும் என் நம்பர் கேட்டால் கொடுக்காதே"

"ஏன்?"

"ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்... கொஞ்ச நாளா சில பேர் மிரட்டுறாங்க..."

"மிரட்டுறாங்களா? மிரட்டுற அளவுக்கு என்ன பிரச்சனை?"

இவனுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும் என்று யூகிக்க முடியவில்லை. எதுவும் காதல் ஏதும் இருக்குமா? இல்லையே.... வீட்டுல பொண்ணு பார்க்குறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே.. பின்ன எப்படி? என்று யோசனை ஓடியது.

"கல்யாண பிரச்சினை தான்..."

".... ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு பொண்ணு பார்த்தோம். பொண்ணு பிடிச்சிருந்தது... எல்லாம் பேசி முடிச்சிடலாம்னு வீட்டுல சொன்னாங்க. எனக்கும் பொண்ணு பிடிச்சிருந்தது..."

"பின்ன?"

"முடிவெடுக்குறதுக்கு முன்னால பொண்ணுகிட்ட பேசிடலாம்னு பேசினேன். பிடிச்சிருக்கான்னு கேட்டேன். ஒண்ணும் சொல்லாம நின்னுட்டு இருந்தா... என்னன்னு கேட்டேன்..."

......

"நான் ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணுறேன்.. என்னை பிடிக்கலைன்னு வீட்டுல சொல்லிடுங்க பிளீஸ்ன்னு சொன்னா..எனக்கு ஷாக். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாமே கொஞ்ச நேரத்துல மாறி போயிடுச்சு...ஆனா அவளே வேறொருத்தனை லவ் பண்ணுறேன்னு சொல்லுறப்போ என்ன பண்ணுறது. பையன் யாரு என்ன பண்ணுறான்னு கேட்டேன். கிளாஸ் மேட்டாம். பக்கத்து ஊராம்."

"சரி இதுல என்ன பிரச்சினை? பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துருக்கலாம்ல?"

"அது தான் நான் பண்ணுன தப்பு... நான் போய் அவங்க அப்பாகிட்ட உங்க பொண்ணு இன்னொரு பையனை லவ் பண்ணுறா. அவளுக்கு பிடிச்ச பையனையே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்"

???

"அங்க ஆரம்பிச்சது பிரச்சினை. என்னை சமாதானப்படுத்துறதுக்காக வீட்டுக்கு ஒரு வாரமா நடையா நடந்தாங்க. அவளோட அப்பா அம்மா. அப்புறம் அவளோட சொந்தக்காரங்க. வந்து கெஞ்சுனாங்க...அழுதாங்க... ஆனாலும் நான் ஏத்துக்கல... பெங்களூர் வந்துட்டேன். இங்க வந்து பேசிப் பார்த்தாங்க...இவங்க தொல்லை தாங்க முடியாமல் தான் கொஞ்ச நாளா என்னோட ஃபிரண்ட் வீட்டுல தங்கியிருந்தேன். எப்படியோ இந்த வீட்டுக்கு வந்து உன்னோட பிரண்டுகிட்ட என்னோட ரூமியோட போன் நம்பர் வாங்கி அவனுக்குப் போன் செஞ்சு என்னோட போன் நம்பரை வாங்கிட்டாங்க"

"அதுல இருந்து போன் மேல போன் போட்டு டார்ச்சர் பண்ணுனாங்க... என் பொண்ணு தெரியாம பேசிட்டா.. லவ் எல்லாம் இல்ல. சும்மா விளையாட்டுத்தனமா பேசி இருக்கா.. நீங்க தான் எப்படியாவது அதையெல்லாம் மறந்து கல்யாணம் பண்ணிக்கணும் நச்சரிச்சாங்க. இவங்க தொல்லை தாங்க முடியாம தான் ஆன்சைட் அசைண்மெண்ட் வாங்கி மூணு மாசம் அங்க இருந்தேன்."

"அப்புறம்?"

"கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்த்து, இது வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு மோட் மாற ஆரம்பிச்சுட்டாங்க... எங்க வீட்டுல உள்ளவங்கள மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்க..."

"என்னன்னு?"

"உங்க பையனை ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க இல்லாட்டி நடக்குறதே வேறன்னு...எங்க வீட்டுல, 'உங்க பொண்ணுக்கு தான் விருப்பம் இல்லியே',ன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் இல்ல. அவ அப்படி சொல்லவே இல்லை... வேணும்ணா அவகிட்டயே கேளுங்க அப்படின்னு சொல்லுறாங்களாம்.... 'கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்துட்டா நிச்சயதார்தம் செஞ்சிட்டு வரதட்சணை அதிகமாக வேணும்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டீன்றீங்கன்னு சொல்லி போலீஸ் கம்ப்ளைண்ட் செஞ்சிடுவோம்'-னு சொல்லுறாங்கலாம்"

"!!!!!"

"இது ரொம்ப ஓவரா போகவே ஊருக்குத் திரும்ப வந்தேன். என்னையும் திரும்ப வந்து பார்த்தாங்க.... 'தம்பி உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லுங்க.. எக்ஸ்ட்ரா ஐம்பது லட்சம் தர்றேன்.. வாங்கிக்கங்க... உங்களுக்கு என்ன தோணுதோ அத வச்சு என்ன வேணும்னாலும் செய்ங்க.. உங்க விருப்பம்'-ன்னு சொன்னாங்க.....அந்தப் பொண்ணும் நேர்ல வந்து அழுதது...நான் தெரியாம சொல்லிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணல.. என்னை மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொல்லி அழறா.. எனக்கு என்ன பண்ணன்னு தெரியல..."

"என்ன சொன்ன?"

"முடியாதுன்னு மறுத்துட்டேன்... இது போன கொஞ்ச நாள் கழிச்சு அவரோட அப்பா சில ஆளுங்கள கூட்டிட்டு வந்து குடும்பத்தையே தொலச்சிடுவேன்னு மிரட்ட ஆரம்பிச்சார்..."

"போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது தானே"

"எல்லாரும் அவருக்கு கொஞ்சம் வேண்டியப்பட்டவங்க. அவளோட அம்மா, ஊர் தாசில்தார் (அதற்கு இணையான ஏதோ ஒரு பதவி என்று சொல்லியதாக ஞாபகம்) வேற... போலீஸ் வேற நாங்க என்ன செஞ்சாலும் காதுல வாங்கிக்கல.. எங்க அம்மா, அப்பா வேற என்னால வீணா அங்க மாட்டிக்கிட்டாங்க. நிம்மதியே போச்சு...."

"அப்புறம் என்ன பண்ணுன?"

"என்னோட கிளாஸ் மேட் ஒருத்தன், எங்க டிஸ்டிரிக்ட் எஸ்.பியா இருக்கான். அவன்கிட்ட போய் சொன்னேன்."

"குட்"

"அவன் எல்லாம் கேட்டுட்டு நான் பார்த்துக்குறேன்னு சொன்னான.. அதுல இருந்து தான் இன்ஸ்பெக்டர் வேற வழியில்லாம ஆக்சன் எடுக்க வேண்டியாதா போச்சு.... அதுல இருந்து இப்ப யாரும் வந்து மிரட்டுறது இல்ல... அவளோட அப்பா, அம்மாவும் பயந்து ஒழுங்கா இருக்காங்க... இது எத்தனை நாளுக்குன்னு தெரியல"

"நல்லது. இவ்ளோ பணம் தர்றேன்னு சொல்றாரே அப்ப அவர்கிட்ட எவ்ளோ இருக்கும்? உன் பின்னாடி சுத்துறதுக்கு பதிலா அந்தப் பணத்தை வச்சு வேறோரு பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம். அது பெட்டர்.."

"சரி தான். ஆனா ஏற்கனவே இது மாதிரி ஒரு தடவை அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போயிருக்கு அதனால ஊர்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க... அதான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சுடனும்னு முடிவோட இருக்கார்."

"சரி.. ஆனா அதுக்காக பணத்துக்கு யாரும் ஆசைப்படாம இருப்பாங்களா... ஒரு பையன் கூடவா கிடைக்க மாட்டான்?"

"கிடைப்பான்... ஆனா ஐஐடி பையன் கிடைக்கமாட்டானே..."

"ஓஹோ... இப்ப புரியுது..."

"எங்க ஊர்ல இது ஒரு பெரிய விசயம்.. ஐஐடியனுக்கு பொண்ணு கொடுக்குறது பிரஸ்டீஜ் இஸ்யூ... அதான் இவ்ளோ முயற்சி பண்ணுறாங்க... நானே ஒரு சாதாரண காலேஜ்ல படிச்சிருந்தேன்னா இந்நேரம் விட்டுட்டு போயிருப்பாங்க... முதல்ல இருந்தே ஐஐடி பையனுக்குக் கொடுக்குறோம்னு ஊர்ல எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு, இப்போ இல்லைன்னு ஆகிடுச்சுன்னா கெளரவப் பிரச்சினை. அதான் ரொம்ப முயற்சி பண்ணுறாங்க..."



"இவ்ளோ மிரட்டுனதுக்கு அப்புறமும் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி எதிர்பார்க்குறார். ஒரு வேளை அவளை நீ கல்யாணம் செஞ்சாலும், எப்படி அவளோட அப்பா, அம்மா கூட நார்மலா நீ பேச முடியும்? உங்க அப்பா, அம்மா எப்படி அவங்க கூட பேச முடியும்?"

"இம்.. ஒண்ணும் புரியலை. அதான் ஃசேப்டிக்காக நான் வீடு மாறுறேன்.. என்னோட ரூமியை கொஞ்ச நாளைக்கு அவனோட பிரண்ட் வீட்டுல இருக்க சொல்லியிருக்கேன். யாரும் வந்து கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு...."

"சரி.. பேசாம... இது தான் நல்ல டைம்.... நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணியிருந்தா, வீட்டுல சொல்லு... உடனே ஒத்துப்பாங்க... கல்யாணம் செஞ்சிட்டு கொஞ்ச நாள் அப்ராட்ல போய் இருந்துட்டு வாங்க..."

"எங்க வீட்டுலேயும் அதான் நிலைமை. பையனுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா போதும்னு நினைக்குறாங்க. ஆனா உடனே பொண்ணுக்கு எங்க போறது?"

----

இது இன்னொரு கல்யாணக் கதை (ஆந்திரவைச் சார்ந்த உடன் பணிபுரியும் நபர்)

"எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்"

"வாழ்த்துக்கள்...பொண்ணு யாரு? அதே பொண்ணு தானா?"

"இல்ல.... இது வேற"

"அது என்ன ஆச்சு?"

"அது ஒத்து வரலை"

"ஏன்? என்ன பிரச்சினை?"

"பிரச்சினை என் சைடுல இல்ல.. அவ சைடுல தான்.... வரதட்சணை 15 லட்சம் தான் கொடுக்க முடியும்னு சொல்லுறாங்க.."

"அது நீ லவ் பண்ண பொண்ணு தானே?"

"ஆமா அவளே தான். லவ் பண்ணும் போதே வரதட்சணையா 25 லட்சம் வாங்கி தரணும்னு சொல்லியிருந்தேன். அவளும் சரின்னு சொல்லியிருந்தா.. ஆனா இப்போ 15 லட்சம் தான் தர முடியும்னு சொல்லுறாங்க... நான் என்ன பண்ணுறது... என் மேல தப்பே இல்லை... "

???????????

திங்கள், மே 22, 2006

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் களேபரத்தில் சிறிது கதி கலங்கி, பதிவு ஏதும் இடமுடியாமல் இருந்தேன். இப்போது தான் தமிழ் வலைப்பதிவுகளில் தேர்தல் காய்ச்சல் குறைந்து சகஜ நிலை திரும்பி இருக்கிறது. கடந்த மூன்று வார காலமாக கடுமையான வேலைப் பளுவும் கூட. தமிழ்மணம் வாசிப்பதே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. இது இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று ஐயமாகவும் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மிகவும் ரசித்து கேட்ட பாடல்களின் இந்தப் பட்டியலை சென்றமாதமே தயார் செய்து வைத்திருந்தாலும், முழு வடிவம் கொடுப்பதற்குக் கூட நேரமில்லாமல் போய்விட்டது. இப்போது பாடல்களைப் பார்த்தால் அனைத்துமே பழைய பாடல்கள் போலத் தோன்றுகின்றன. எனினும், அதனை மாற்றாமல் கொடுக்கிறேன்.

1. ஒரே ஒரு சோகமென்றால் இப்படி நானும் அழ மாட்டேன்

பாடியவர்: கார்த்திக்
படம்: கொக்கி
இசை: தீனா

தமிழில் கரண் நீண்ட நாட்களுக்குப் பின்பாக அதுவும் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம். படத்தின் இசையமைப்பாளர் தீனா அவ்வப்போது தனது பாடல்களால் திரும்பிப் பார்க்க வைப்பவர் தான். இவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது நன்கு பேசப்படும். அதே போல இந்தப் படத்திலும் இந்தப் பாடல் பேசப்படலாம். சோகப் பாடல் தான். கதாநாயகனின் கஷ்டங்களையும், இயலாமையையும் சொல்லும் விதமாக பாடல் எழுதப்பட்டுள்ளது.

ஒரே ஒரு சோகமென்றால்
இப்படி நானும் அழமாட்டேன்
என் ஒவ்வொரு நொடியிலும்
சோகங்கள் என்றால் என்ன செய்வேன்
என்ன செய்வேன் என்ன செய்வேன்
என்ன செய்வேன் ஏது செய்வேன்


இதைத் தவிர சில டப்பாங்குத்து பாடல்களும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன (மாணிக்கவிநாயகம், அனுராதா, மற்றும் மாலதி) பாடியது. சுமார் ரகம் தான். 'ஏலோ ஏலோ' என்று மதுஸ்ரீ பாடிய பாடல் பழைய ராகமாக இருந்தாலும், சில தடவைகளுக்குப் பிறகு பிடித்து விடுகிறது.

2. சுடும் நிலவு சுடாத சூரியன்

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
படம்: தம்பி
இசை: வித்யாசாகர்

சமீபத்தில் வந்த படங்களில் வித்தியாசமாக, மெலோடி பாடல்களை மட்டும் தாங்கி வந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. அதுவும் தொண்ணூறு ரூபாய் இசைத் தட்டுடன், மின்னலே படத்தின் வீடியோ பாடல்களும் கொடுக்கப்பட்டது. இது என்னவொரு அருமையான பாடல்!. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனும், ஹரிணியும் இணைந்து பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இருவரும் இணைந்து பாடிய 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', 'இவன் யாரோ இவன் யாரோ' இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்கள். அந்த வரிசையில் இந்த பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். ஹரிணியைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமா? பாடலின் இடையில் இரண்டாம் சரணத்திற்கு முன்பாக 'சுடும் நிலவு' அவர் உச்சரிக்கும் இடம் அற்புதம். பாடலின் நடு நடுவே வரும் 'காதலித்துப் பார்; காதலித்துப் பார்', என்ற வரியை பாடியது சுஜாதா என்று கருதுகிறேன். அது ஏன் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் சுஜாதா ஒரு பாடல் கூட இந்தப் படத்தில் பாடவில்லை. பல்லவி முடிந்ததும் வரும் வயலின் இசை (1:05 - 1:30) அருமை.

இதே படத்தில் கார்த்திக், கல்யாணி பாடிய 'சும்மா கிடந்த சிட்டுக் குருவிக்கு' என்ற பாடலும், முக்கியமாக சைந்தவி பாடிய 'என் காதல் உன்னைச் சேர' பாடலும் அருமை.

வித்யாசாகரின் இசை நாளுக்கு நாள் நல்ல மெருகேறி வருகிறது; முக்கியமாக மெலோடி பாடல்கள். கர்ணாவில் (மலரே மவுனமா) ஆரம்பித்து, 'ஜி' வரை ஏதாவது வித்தியாசமாக செய்துகொண்டே தான் இருக்கிறார். தம்பியிலும் சிறந்த பாடல்களின் மூலம் அவரது
திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் போது 'சதுரங்கம்', படத்தின் பாடல்கள் தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படத்திலும் மூன்று அருமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தது. 'என்ன தந்துவிட்டாய்' (கார்த்திக், ஸ்ரீலேகா பார்த்தசாரதி), 'விழியும் விழியும்' (மது பாலகிருஷ்ணன், ஹரிணி), ஆடுவோமே (மாணிக்கவிநாயகம்) பாடல்கள் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் ஏனோ படம் தான் இது வரை வெளிவரவில்லை.

3. போகப் போக பூமி விரிகிறதே

பாடியவர்கள்: ஹரிச்சரண், விஜய், 'அந்நியன்' புகழ் சைந்தவி, ஹரிணி சுதாகர்
படம்: பட்டியல்
இசை: யுவன் சங்கர் ராஜா

பட்டியல் பாடல்கள் முதன் முதலாக கேட்கும் போது அனைத்துமே ஒரே மாதிரியாக இருப்பது போல ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. ஆனால் கேட்க கேட்க பிடித்து விட்டது. படம் நன்றாக ஓடியிருந்தால், பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கம் போல, யுவன்சங்கர் ராஜா இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். மகனின் இசையில் இளையராஜா பாடிய பாடல் இன்னும் எனக்குப் பிடிக்கவில்லை.

யுவனும், சுவேதாவும் பாடிய 'ஏதேதோ எண்ணங்கள் வந்து', பாடல் இந்தப் படத்தின் சிறந்த பாடலாக இருந்தாலும், இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க முக்கிய காரணம், பல்லவி முடிந்தது வரும் நாதஸ்வர (போன்ற) இசை தான். 2:10 முதல் 2:28 வரை ஒலிக்கும். அருமை. இதற்காக இந்த பாடலை பல முறை 'Repeat' தெரிவு செய்து கேட்டிருக்கிறேன். சைந்தவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

ஹரிணி சுதாகரின் குரல் எங்கு ஒலிக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆங்கில வரிகளை உச்சரிக்கும் குழந்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.

3. மஞ்சள் வெயில்

பாடியவர்கள்: ஹரிஹரண், விஜய், நகுல்
படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹரிஷ் ஜெயராஜ்

கஜினியை ஒப்பிடும் போது 'வேட்டையாடு விளையாடு' படம் ஹரிஷ் ஜெயராஜூற்கு பின்னடவு தான் என கூறலாம். கெளதம் எப்படி இது போன்ற பாடல்களுக்கு ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுத்தமாகக் கவரவில்லை. கெளதமும் 'ராசி' என்ற வலையில் விழுந்து விட்டாரோ என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இந்தப் படத்திலும் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி பாடிய 'உயிரிலே' பாடல் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் பரபரப்பாக விற்பனையாகத் தான் செய்கின்றன. யார் கண்டது? அனைத்து பாடல்களும் ஹிட்டாகலாம்.

ஆனால் மஞ்சள் வெயில் என ஆரம்பிக்கும் இந்த பாடல் அருமை. கமலஹாசனின் நடிப்பு இந்தப் பாடலுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஹரிஹரண் அற்புதமாக பாடியிருக்கிறார். அதிலும் முக்கியமாக 'பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே' 'குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே' என்ற வரிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

5. இளமை

பாடியவர்கள்: அஸ்லம், தன்வி, ஷாலினி
படம்: காட் ஃபாதர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே எனது காட்பாதர் இசை மதிப்பீடு பதிவில் தெரிவித்திருந்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை பீட் சிறிதும் குறையாமல் சிறப்பாக அமைந்துள்ளது. ஷாலினி ரகுமானுக்கு பாடும் முதல் பாடல் என்றும் நினைக்கிறேன். 1:38 முதல் 2:10 வரை குழுவினரின் குரலை கேட்கும் போதே உடலெங்கும் உற்சாக அலைகள் ஓடுகின்றன.

6. சான் சிபாரிஸ்

பாடியவர்கள்: ஷாண், கைலாஸ் கெர்
படம்: ஃபனா (இந்தி)
இசை: ஜட்டின் லலித்

இந்த வாரம் ரிலீஸாகவிருக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அருமை. தேன். முக்கியமாக இந்தப் பாடல் அனைத்து பாடல்களையும் புறந்தள்ளி விட்டு நிச்சயமாக முதலிடத்தைப் பிடிக்கும் என்பதில் எனக்கு அசாத்திய நம்பிக்கை. இம்.ஹீம் இம்.ஹீம் என பாடலை ஆரம்பத்திலே ஆரம்பிக்கும் ஷான் ஆகட்டும், சுவாலல்லா என அதை பிடித்துக் கொண்டு தொடரும் கைலாஸ் கீர் ஆகட்டும் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள்.

இதே படத்தில் இடம்பெற்றுள்ள 'தேக்கோனா' என்ற பாடலும் மிக அருமை. சோனு நிகாமும், சுனிதா சவுகானும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இதே பாடல், பல்வேறு இசைக் கருவிகளுடன் 'Destroyed in Love' என்று தீம் மியுசிக்காகவும் அருமையாக கோர்க்கப்பட்டுள்ளது.

7. தையத்தா தையத்தா

பாடியவர்கள்: சாதனா சர்கம்
படம்: திருட்டுப் பயலே
இசை: பரத்வாஜ், ரேஷ்மி

திருட்டுப் பயலே படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இந்தப் பாடல் வித்தியாசமாக அமைந்து இருந்தது. சாதனா சர்கம் வழக்கம் போலவே சிறப்பாக பாடியிருக்கிறார். ஆனால் பாடலின் சரணம் சரத்குமார் நடித்த 'நட்புக்காக' படத்தில் இடம்பெற்ற 'முந்திரி முந்திரி முந்திரியாம் தோட்டத்து முந்திரியாம்' பாடலின் சரணத்தை ஒத்து அமைந்துள்ளது. 'நாட்டாமை படத்துல அந்த இடத்துல' என்ற ராகமும், இந்தப் பாடலில் வரும், 'மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை' என்று சரணம் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் ராகமும் ஒன்று போல் இருக்கிறது. இசையும் அந்தப் பாடலை போலவே அமைந்துள்ளது.

'பெண்ணுக்கு பேராசை வேறேதும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன்; என் உடமையானவன்
பசி ருசியை பகிர்ந்து கொள்பவன்'


வரிகளில் ராகம் அருமையாக உள்ளது.

8. ஜன் ஜன ஜன ஜன ஜன

பாடியவர்கள்: சுக்வீந்தர் சிங், சாதனா சர்கம்
படம்: வாட்டர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இன்னும் வாட்டர் படத்தின் பாடல்கள் இந்தியாவில்

விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் ஒரு இணையத்தளத்தின் உதவியுடன் எம்.பி3 பாடல்கள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். பாடல்கள் அனைத்தும் அருமை. முக்கியமாக இந்தப் பாடல். ரகுமான் இசையமைத்த சமீபத்திய பாடல்களில் சிறந்த பாடல் இதுவே என்று அடித்துக் கூறலாம். (ஆனால் இது நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இசையமைக்கப்பட்டது). ரங்கு தே பசந்தியில் இடம்பெற்ற 'ரூபாரூ' பாடலை விட பல மடங்கு அற்புதம். ஆரம்பத்தில் வரும் இசையும், இறுதியில் வரும் வயலின் இசையும் அற்புதம் (3:56 முதல் கடைசி வரை).

இந்தப் பாடலை பெங்களூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். அருமையாக இருந்தது. ஆனால் பட்டியலில் இருந்த பாடல், அன்று பெய்த மழையால் நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்று இசைக்கப்படவில்லை. சுக்விந்தர் சிங் உருகி பாடியிருக்கிறார். மனிதருக்கு என்னவொரு அற்புதமான குரல்! இந்த பாடலை அவர் பாடும் போது பார்க்கும் அந்த பாக்கியம் கிட்டியது. பாடும் போது என்னவொரு உற்சாகம்!. விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது அவரே எழுதிய பாடலும் என்று எங்கோ படித்த ஞாபகம். சாதனா சர்கமும் அழகாக பாடியிருக்கிறார். 3:50 முதல் 4:13 வரை கேட்டுப்பாருங்கள். படத்திலும் இந்த பாடல் மிக மிக அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

என்னுடைய பிற பாடல் சம்பந்தப்பட்ட பதிவுகளின் தொகுப்பு:

இனியவை நாற்பது
சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள் - பிப்ரவரி
சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள் - அக்டோபர்