வெள்ளி, ஜூன் 23, 2006

ஜில்லென்று ஒரு காதல் - பாடல்கள் பட்டியல்

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் சூர்யா, ஜோதிகா நடித்து கிருஷ்ணா இயக்கி வரும் ஜில்லென்று ஒரு காதல் படத்தின் பாடல்கள் இன்னும் ஒரிரு வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற மாதம் (மே மாதம்) வெளியிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அது ஜூன் மாதம் இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

பாடல்களின் பட்டியல்: (உறுதி செய்யப்படாத தகவல்)

1. ஹிப் ஹிப் ஹிப்பிடா - கிளிண்டன், கைலாஸ் கீர், ரஃபீக், ஜார்ஜ் பீட்டர்ஸ்
2. ஜில்லுன்னு - ஏ.ஆர்.ரகுமான், சைந்தவி
3. Care For Her - (Instrumental - நவீன், அல்மா)
4. முன்பே வா - நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
5. காதல் குளு குளு - கார்த்திக், ஹரிஹரண், மதுஸ்ரீ
6. ஸ்பரிசம் - உன்னி கிருஷ்ணன், சித்ரா, மகாலக்ஷ்மி அய்யர்
7. Care For Her - சுனிதா சாரதி, தன்வி, சுசித்ரா, ஃபெபி
8. இரவில் இமையில் - ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர், சைந்தவி



கொசுறு:

* சுனிதா சாரதி, தமிழில் ஏ.ஆர்.ரகுமானுக்காக பாடும் இரண்டாவது பாடல். முதல் பாடல், ஆய்த எழுத்தில் இடம் பெற்ற "நீயாரோ நான் யாரோ" பாடல். இது தவிர "வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்", என்ற சீனப் படத்தில் "From the heavens up above", என்ற பாடலைப் பாடியிருந்தார்.

* ஸ்ரேயா கோஷல் ரகுமானுக்காகப் பாடும் மூன்றாவது பாடல். முதலாவது பாடல் உனக்கு 18 எனக்கு 20 என்ற படத்தில் இடம் பெற்ற "அழகின் அழகி". இரண்டாவது பாடல், அன்பே ஆருயிரேவில் இடம் பெற்ற "தழுவுது நழுவுது" பாடல்.

* சைந்தவிக்கு இரண்டாவது படம். காட் ஃபாதரில் 'இன்னிசை' பாடலைப் பாடியிருந்தார்.

* நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனுக்கு வாய்ப்பு (நியூவில் இடம்பெற்ற 'காலையில் தினமும்', இவரது கடைசி பாடல் என்று நினைக்கிறேன்)

* கார்த்திக்கிற்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு.

* 'முன்பே வா' என்ற பாடலின் ஆரம்பம் 'அன்பே வா, முன்பே வா', என்று அமையும் என்று கேள்விப்பட்டேன்.

* வழக்கம் போல பிளாஸே, நரேஸ், மதுஸ்ரீ ஆகியோருக்கு இந்தப் படத்திலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

* ரகுமான், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

* இந்தப் படத்திலும் ஹரிணிக்கும், சுஜாதாவிற்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சுஜாதாவிற்கு வாய்ப்பு குறைந்து போனது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. 1992 முதல் பல வருடங்களாக பல ரகுமான் படங்களில் பாடி வந்தார். 'புது வெள்ளை மழை', 'நேற்று இல்லாத மாற்றம்', 'போறாளே பொன்னுத்தாய்', 'ஆத்தங்கரை மரமே', 'பூ பூக்கும் ஓசை', 'மெல்லிசையே', 'காற்றுக் குதிரையிலே', 'என் வீட்டுத் தோட்டத்தில்', போன்ற பல பாடல்கள் அவருக்குப் புகழ் சேர்த்தது. ஆனால் சூர்ய வம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் அவருக்கு தினகரன் விருது வாங்கிக் கொடுத்தது. அந்த விழாவில், "நான் பல பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்தப் பாடல் பாடிய பிறகு தான் எனக்குப் பெரும் புகழ் கிடைத்தது', என்ற தோரணையில் ஏதோ கூறினார். ஏதோ ரகுமானுக்கு அவர் பாடிய பாடல்கள் எதுவுமே வெற்றியடையாதது போல் அவர் கூறியதாகத் தோன்றியது. அவர் என்ன நினைத்து அப்படிச் சொன்னாரோ? அதன் பிறகு கூட ஒரு சில படங்களில் அவர் பாடியுள்ளார். பார்த்தாலே பரவசம் படத்தில் இடம் பெற்ற அதிசய திருமணம் பாடல்.

சனி, ஜூன் 10, 2006

அங்கீகாரத்தைத் தேடி...

"ரெக்ககனிஷன் - அங்கீகாரம் - புகழ் ஆகியவற்றிற்கு உண்மையிலேயே அலைகின்றனர் சிறு பத்திரிக்கையாளர்கள். ஆனால் வெளியில் அவ்வாறு அவர்கள் இல்லை என பிதற்றித் திரிந்து ..."

---------------------- மதுமிதாவிற்காக ------------------------

வலைப்பதிவர் பெயர்: ஸ்ருசல் (Srusal)

வலைப்பூ பெயர் : தடாகம்

சுட்டி(url): http://thadagam.blogspot.com

ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுள் தேடி

முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: செப்டம்பர் 16, 2005

இது எத்தனையாவது பதிவு: 65

இப்பதிவின் சுட்டி(url): http://thadagam.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

யாரையும் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மனதில் இருக்கும் எண்ணங்களைக் கொட்டுவதற்காக. வலைப்பதிவுகளின் வரவு, எண்ணங்களை சுதந்திரமாகவும், தெளிவாகவும் வெளியிட உதவுவதோடு, ஒத்தக் கருத்துள்ளவர்களை சந்திக்கவும் உதவி புரிந்துள்ளது.



சந்தித்த அனுபவங்கள்:

மாற்றுக் கருத்துக்கள் எனது பதிவுகளுக்கு இருந்தாலும், சிலருக்கு நேர்ந்தது போல் கசப்பான அனுபவங்கள் இது வரை இல்லை என்பது மகிழ்ச்சி தரும் விசயம். சொல்ல நினைக்கும் விசயங்களை நேர்மையாகவும், விருப்பு வெறுப்புமில்லாமல் கூறினால் இது நிச்சயமாகத் தொடரும் என்பது என்னுடைய எண்ணம்.

'யாரிடமும் சண்டையிடுவதற்காகவோ, வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதற்காகவோ இங்கு வரவில்லை; கருத்துக்கள் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும்', என்று அடிக்கடி எனக்கு நானே கூறிக்கொள்வதுண்டு. இது ஓரளவிற்கு சமச்சீராக வலைப்பதிவுகளில் வாழ்க்கையை ஓட்டுவதற்கும், விவாகாரமான தலைப்புகளில் பதிவு எழுதினாலும் ஆரோக்கியமான விவாதததிற்கும் வழிவகுக்கிறது.

பெற்ற நண்பர்கள்:

நிறைய. ஆனால் தனி மடலிலோ, மெசஞ்சரிலோ தொடர்பு கொள்ளுமளவிற்கு நண்பர்கள் இல்லையென்றாலும், ஒத்த அலைவரிசையுடைய நண்பர்கள், நலம்விரும்பிகள் நிறைய உண்டு. உறவுகளைப் பலப்படுத்துவதில் நானொரு சோம்பேறி. அதிக நெருக்கம் விலக்கத்திற்கு வழி வகுக்கும் என்று சமயங்களில் தேவையில்லாத பயம் கொண்டு நெருங்காமல் இருப்பதும் உண்டு.

கற்றவை:

ஒரே விசயம் பலருடைய பார்வையில் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது; எம்மாதிரியான விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதைப் அறிந்து கொள்ள முடிகிறது. எந்த விசயத்தை மனதில் கிரகித்துக் கொள்வது; எதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாட்டு நடப்புகளை செய்தித்தாள்களை விட விரிவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.

நாட்டில் பல செய்தித் தாள்களும், டி.வி. சானல்களும் செய்திகளைக் கொடுப்பதற்குப் பதில், செய்திகளைப் பற்றிய தங்களது கருத்துக்களைத் தான் தெரிவிக்கின்றன என்பது எனது எண்ணம். அதற்கு பதிலியாக வலைப்பதிவுகளை நாடலாம். என்ன? ஒரு செய்தி; ஒரு சேவை மையம்; பல கருத்துக்கள். மோசமில்லை!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

நிச்சயமாக இருக்கிறது; ஆனால் இன்னும் சிறிது அவசியம் என நினைக்கிறேன். இது மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து கூறுவது. ஆனால் நான் இது வரை கூற நினைத்த விசயங்களை எவ்விதமான தடங்கலும் இல்லாமல் கூற முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. புதிதாகவே நாம் பிறந்தாலும், சார்ந்திருக்கும் சமூகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வளர்வது அவசியமாவதைப் போல, உங்களது பதிவானது ஏதாவது திரட்டியின் மூலமாக பொதுவில் வைக்கும் போது அதன் சூழல் தெரிந்து எழுதுவது அவசியமாகிறது.

இனி செய்ய நினைப்பவை:

வலைப்பதிவுகளைப் பொறுத்த வரை, எதையாவது எழுத வேண்டும் என்று முயற்சி எடுத்து எழுதக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். திரை இசை, திரைப்படங்கள், கதை, புத்தக விமர்சினங்கள் தவிர மற்ற விசயங்களில் அவசியமேற்பட்டாலொழிய பதிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். வேறெந்த பெரிய குறிக்கோளும் இப்போது மனதில் இல்லை. பாதை தெரியாமல் பயணிக்கும் படகு போல சென்று கொண்டிருக்கிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

பிறந்தேன். வளர்ந்தேன். மறைந்தேன் என்று ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி தோன்றுகிறது. ஆனால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. பல எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன. அவற்றில் எதை தேர்வு செய்வது என்பதிலேயே பாதி நாட்கள் ஓடி விட்டன. ஒவ்வொரு வருடமும், ஏன்?, ஒவ்வொரு நாளும் அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. மனம் இன்னும் தெளிவடையவில்லை என்று கருதுகிறேன். மற்றவர்களுக்கும் இது ஏற்படுவது இயல்பு என நினைக்கிறேன். திருமணமானவர்களைத் தவிர :) பல விசயங்களில் ஆசையை செலுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அளவிற்கும் குறைவான சாப்பாடு, பணமிருந்தும் ஏழையாக வாழ்வது உட்பட. ஆனால் பெரும்பாலான சமயங்களில் தோல்வி தான் முடிவாக கிடைப்பது குறித்து சிறிது வருத்தமே. முயற்சி தொடர்கிறது.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

"ரெக்ககனிஷன் - அங்கீகாரம் - புகழ் ஆகியவற்றிற்கு உண்மையிலேயே அலைகின்றனர் சிறு பத்திரிக்கையாளர்கள். ஆனால் வெளியில் அவ்வாறு அவர்கள் இல்லை என பிதற்றித் திரிந்து, புகழ்பெற்ற எழுத்தாளர்களைச் சாடுவதும், தமக்குள்ளேயே அடித்துக் கொள்வதுமாகப்
பொழுதைக் கழிக்கின்றனர். பெரிய பத்திரிக்கை ஒன்று இவர்களுக்கு ஆதரவளித்து விட்டால், இவர்களின் பம்மாத்து மறைந்து ஓடி விடுகிறது என்பதே உண்மை", என்று ஓர் பத்திரிக்கையாளர் (தமிழ்) கூறினார். பதிவெழுதுபவர்களும் சிறு பத்திரிக்கையாளர்கள் போல் தான். ஆனால் இது போன்று நிகழுமாறு பார்த்துக் கொள்தல் நலம்.

---------------------- மதுமிதாவிற்காக ------------------------

மதுமிதாவின் புத்தகத்தில் என்னுடைய பதிவினை இணைப்பது கூட அங்கீகாரத்தைத் தேடி தானோ?