செவ்வாய், ஜூலை 01, 2014

இந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்

இந்த வருடத்தில், இது வரை வெளிவந்த திரைப்பாடல்களில், 'உன் சமையலறையில்' உறுதியாக, சிறந்தப் படைப்பு. நான்கே பாடல்கள் தான் நான்கும் இனிமையானவை, நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இளையராஜாவிற்கு பாராட்டுகள்; நன்றிகள்.

கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜாவின் திரைப்படங்களில் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் மனதில் ஒட்டுவதில்லை - அபூர்வமாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் விதிவிலக்கு. அவ்வாறு விதிவிலக்காக அமைந்த படங்களுக்கான ஒற்றுமை - ஓரளவிற்கேனும் நேர்த்தியாக, சிரத்தையுடன் அமைக்கப்பெற்ற படைப்புகள்; முக்கியமாக இயக்குனர் தனித்து தெரிவதுண்டு. உதாரணம்: பாலா, கவுதம் மேனன். மற்ற படங்களில் (அதாவது மனதில் ஒட்டாத பாடல்கள் அமையும் சமீப கால இளையராஜா திரைப்படங்களில்) கதையும் இருக்காது; திரைக்கதையும் நன்றாக இருக்காது; இயக்குனரும் சிறப்பு வாய்ந்தவராக இருக்க மாட்டார். எத்தனையோ படங்களை உதாரணமாகக் கூறலாம். எப்படி இளையராஜா இந்தத் திரைப்படத்திற்கெல்லாம் இசைமைக்க ஒப்புக்கொண்டார் என்று ஆச்சர்மாக இருக்கும் (தாண்டவகோனன், மேகா, ஒரு ஊர்ல, அழகர் மலை, ராஜராஜனின் போர் வாள் - இன்னும் வெளியாகவில்லை -  முதலானவை சிறு உதாரணம்). எப்படி இவர்கள் எல்லாம் ராஜாவை அணுகிறார்கள்; என்ன சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார்கள்; அவர்களுக்கு ராஜாவின் அருமை தெரியுமா? அவரின் திறமையை அறிவார்களா; எப்படி ராஜா சம்மதிக்கிறார் என்று புரிவதில்லை. ஆனால், நல்ல திரைக்கதையும், திறமை வாய்ந்த இயக்குநரும் அமைந்தால், அந்தப் பாடல்களின் வீச்சே வேறு; பின்னணி இசையைப் பற்றியும் கேட்க வேண்டாம். உதாரணம், பிதாமகன், நான் கடவுள், நீ தானே என் பொன் வசந்தம் (இந்தப் படத்தின் பாடல்களை குறை கூறும் பலரை அறிவேன். அவர்கள் இன்னும் இப்படத்தின் பாடல்களை முழுமனதோடு கேட்கவில்லை என்று உறுதியாகக் கூறுவேன்).

இந்த இயக்குனர்களின் வரிசையில், பிரகாஷ்ராஜிற்கும் தாராளமாக இடமுண்டு. இதே 'தாண்டவகோனன்' வெளியாகிய வருடத்தில் தான் 'தோணி'யும் வெளியாகியது; 'மேகா', 'ஒரு ஊர்ல' திரைப்படங்கள் வெளியாகிய காலக்கட்டத்தில் தான், இந்த 'உன் சமையலறையும்' வெளியானது. எனது கருத்து, அனைத்துப் பாடல்களும் முன்பு போல் ரசிக்கும்படியாக அமையாதது, அதனை இயற்றுபவரின் தவறல்ல; அவரை தனது படைப்புகளுக்குள் நன்றாக கவர்ந்திழுக்காத இயக்குனர்களின் தவறே அல்லது அவர்களின் ஆளுமை சார்த்ததாக கூட இருக்கலாம்.

இப்படத்தின் முதல் பாடலை ஒலிக்க விட்ட, இரண்டு மூன்று விநாடிகளிலே இது ஓர் சிறந்த பாடல் என்பது உறுதியானது. அதற்கு இம்மியளவும் குறைந்து போனதுமட்டுமல்லாமல், எனது எதிர்பார்ப்பிற்கு மேலான திருப்தியைக் கொடுத்த பாடல் - இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது. அற்புதமான பாடல்; சிறந்த மெட்டு; நல்ல குரல் தேர்வு - பாடியவர் கைலாஸ் கிர். மேலும், பாடல் மிகத் தெளிவாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது - ஒவ்வொரு கருவியும் கணீர் என்று கேட்கின்றன. பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும் நன்று - வரிகளுக்கு ஏற்ப அந்த்தந்த உணவு வகைகளை செய்யும் விதமும், அதனை உண்ணுவதாக காட்டிய விதமும், பார்ப்பவர்களுக்கே நாவில் எச்சில் ஊரும் விதமாக அமைந்திருந்தது.

அடுத்த பாடல், 'தெரிந்தோ தெரியாமலோ'. நல்லதொரு ஜோடிப் பாடல். ராஜா தனது பெரும்பாலான பாடல்களுக்கு கன்வென்ஷனல் இசைக் கருவிகளை தெரிவு செய்வதற்கு பெயர் போனவர். சில வருடங்களாக, அதனில் இருந்து மாற முயற்சித்து, வெற்றியும் பெற்றவர் - அதிலும் இரைச்சல் இல்லாமல். பாடலில் இருக்கும் மெலடியும், பாடல் வரிகளும் சிறிதும் கெடாமலே அவை அமைந்திருக்கும். இப்பாடலும் அதற்கு ஓர் உதாரணம் . கார்த்திக், என்.எஸ்.கே. ரம்யா பாடியது. கார்த்திக் வழக்கம் போலவே சிறப்பாக பாடியிருக்கிறார். என்.எஸ்.கே. ரம்யா சமீப காலமாக, ராஜா பாடல்களுக்குப் பாடியிருந்தாலும் ஏதோ அவரின் குரல் எனக்கு அந்நியமாகவே கேட்கின்றது - அதற்கு முக்கிய காரணம் அவரது உச்சரிப்பு. இங்கிலீஸ் ஈஸ்வரி போலவே பாடியிருந்தார். உதாரணம் - சாய்ந்து சாய்ந்து பாடல். ஆனால் இப்பாடலை இனிமையாக மட்டுமன்றி, எவ்விதமான உச்சரிப்பு பிழையும் இல்லாமல் பாடியிருக்கிறார். பாராட்டுக்கள்.

'ஈரமாய் ஈரமாய்' பாடலுக்கும் 'தெரிந்தோ தெரியாமாலோ' பாடலின் அனைத்து சிறப்பம்சங்களும் பொருந்தும். பாடியவர்கள் ரஞ்சித், வைபவரி. மிக இனிமையான பாடல்.

கடைசி பாடலை இளையராஜாவே பாடியிருக்கிறார். பாடல்: 'காற்று வெளியில்'. தலைவியைப் பிரிந்து வாடும் தலைவன் பாடும் பாடல். மிக எளிமையான வரிகளில், இனிமையாக அமைந்த பாடல். ராஜா மிக உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறார். 

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடித் தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு 
தூங்கவில்லை மனது...
மிக உயரத்தில் அந்த நிலவு 
மங்கலான கனவு...
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இதுஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
உன் வழியில்உதிர்ந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இதுஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
சமீபத்திய திரைப்படங்களில் ராஜாவே சொந்தக் குரலில் பிரிவின் துயரைப் பற்றி பாடும் மூன்காவது பாடல் - எனக்குத் தெரிந்து - அவரது மனைவியின் மரணத்திற்குப் பின் ('என்ன குத்தம் செஞ்சேனடி' -  'மயிலு'; 'ஜுவனே ஜுவனே' - 'மேகா'; இன்ன பிற இரு பாடல்கள்)

பழனிபாரதி, இப்படத்தின் ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் இவ்வாறாக: 'நாங்கள் ஒரு பாடலை எழுதி ராஜா அவர்களை அதற்கு இசையமைக்குமாறு அவரது அறைக்கு சென்று அமர்கிறோம். அவர் பாடலின் சூழலைக் கேட்டுவிட்டு, பாடல் வரிகளை வாசிக்குமாறு கூறுகிறார். நாங்கள் வரிகளைப் வாசிக்க, வாசிக்க அவர் அப்படியே அதற்கு ராகத்தோடு பாடுகிறார் - அதே வேகத்தில். நான், பிரகாஷ்ராஜ் இன்னும் சிலர் அப்படியே ஆனந்த்ததில் கை தட்டுகிறோம்'. என்ன ஒரு திறமை! அதனைப் பார்ப்பதற்கும் ஓர் கொடுப்பினை வேண்டும்.




வர்த்தக ரீதியாக, இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வருமான ஈட்டவில்லை என்கிறார்கள். எனக்குப் படம் பிடித்திருந்தது. வணிக ரீதியாகவும், இப்பாடல்களைப் போல், அபாரமான வெற்றியைப் பிடித்திருந்தால், நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். இன்னும் நல்ல இயக்குநர்கள், ராஜா என்கின்ற மாபெரும் கலைஞனுடன் பணிபுரிந்து அவர்களது படைப்பிற்கு மட்டுமல்ல, தமிழ் இசையுலகத்திற்கே நன்மை புரிந்த்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் மகேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் ஓர் படம் இயக்குன்றார் - அதுவும் ராஜாவுடன் இணைந்து பணிபுரிகிறார். அது ஓர் மகத்தான சாதனையை புரியும் என்று நம்புகின்றேன்.