செவ்வாய், ஜூலை 01, 2014

இந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்

இந்த வருடத்தில், இது வரை வெளிவந்த திரைப்பாடல்களில், 'உன் சமையலறையில்' உறுதியாக, சிறந்தப் படைப்பு. நான்கே பாடல்கள் தான் நான்கும் இனிமையானவை, நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இளையராஜாவிற்கு பாராட்டுகள்; நன்றிகள்.

கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜாவின் திரைப்படங்களில் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் மனதில் ஒட்டுவதில்லை - அபூர்வமாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் விதிவிலக்கு. அவ்வாறு விதிவிலக்காக அமைந்த படங்களுக்கான ஒற்றுமை - ஓரளவிற்கேனும் நேர்த்தியாக, சிரத்தையுடன் அமைக்கப்பெற்ற படைப்புகள்; முக்கியமாக இயக்குனர் தனித்து தெரிவதுண்டு. உதாரணம்: பாலா, கவுதம் மேனன். மற்ற படங்களில் (அதாவது மனதில் ஒட்டாத பாடல்கள் அமையும் சமீப கால இளையராஜா திரைப்படங்களில்) கதையும் இருக்காது; திரைக்கதையும் நன்றாக இருக்காது; இயக்குனரும் சிறப்பு வாய்ந்தவராக இருக்க மாட்டார். எத்தனையோ படங்களை உதாரணமாகக் கூறலாம். எப்படி இளையராஜா இந்தத் திரைப்படத்திற்கெல்லாம் இசைமைக்க ஒப்புக்கொண்டார் என்று ஆச்சர்மாக இருக்கும் (தாண்டவகோனன், மேகா, ஒரு ஊர்ல, அழகர் மலை, ராஜராஜனின் போர் வாள் - இன்னும் வெளியாகவில்லை -  முதலானவை சிறு உதாரணம்). எப்படி இவர்கள் எல்லாம் ராஜாவை அணுகிறார்கள்; என்ன சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார்கள்; அவர்களுக்கு ராஜாவின் அருமை தெரியுமா? அவரின் திறமையை அறிவார்களா; எப்படி ராஜா சம்மதிக்கிறார் என்று புரிவதில்லை. ஆனால், நல்ல திரைக்கதையும், திறமை வாய்ந்த இயக்குநரும் அமைந்தால், அந்தப் பாடல்களின் வீச்சே வேறு; பின்னணி இசையைப் பற்றியும் கேட்க வேண்டாம். உதாரணம், பிதாமகன், நான் கடவுள், நீ தானே என் பொன் வசந்தம் (இந்தப் படத்தின் பாடல்களை குறை கூறும் பலரை அறிவேன். அவர்கள் இன்னும் இப்படத்தின் பாடல்களை முழுமனதோடு கேட்கவில்லை என்று உறுதியாகக் கூறுவேன்).

இந்த இயக்குனர்களின் வரிசையில், பிரகாஷ்ராஜிற்கும் தாராளமாக இடமுண்டு. இதே 'தாண்டவகோனன்' வெளியாகிய வருடத்தில் தான் 'தோணி'யும் வெளியாகியது; 'மேகா', 'ஒரு ஊர்ல' திரைப்படங்கள் வெளியாகிய காலக்கட்டத்தில் தான், இந்த 'உன் சமையலறையும்' வெளியானது. எனது கருத்து, அனைத்துப் பாடல்களும் முன்பு போல் ரசிக்கும்படியாக அமையாதது, அதனை இயற்றுபவரின் தவறல்ல; அவரை தனது படைப்புகளுக்குள் நன்றாக கவர்ந்திழுக்காத இயக்குனர்களின் தவறே அல்லது அவர்களின் ஆளுமை சார்த்ததாக கூட இருக்கலாம்.

இப்படத்தின் முதல் பாடலை ஒலிக்க விட்ட, இரண்டு மூன்று விநாடிகளிலே இது ஓர் சிறந்த பாடல் என்பது உறுதியானது. அதற்கு இம்மியளவும் குறைந்து போனதுமட்டுமல்லாமல், எனது எதிர்பார்ப்பிற்கு மேலான திருப்தியைக் கொடுத்த பாடல் - இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது. அற்புதமான பாடல்; சிறந்த மெட்டு; நல்ல குரல் தேர்வு - பாடியவர் கைலாஸ் கிர். மேலும், பாடல் மிகத் தெளிவாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது - ஒவ்வொரு கருவியும் கணீர் என்று கேட்கின்றன. பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும் நன்று - வரிகளுக்கு ஏற்ப அந்த்தந்த உணவு வகைகளை செய்யும் விதமும், அதனை உண்ணுவதாக காட்டிய விதமும், பார்ப்பவர்களுக்கே நாவில் எச்சில் ஊரும் விதமாக அமைந்திருந்தது.

அடுத்த பாடல், 'தெரிந்தோ தெரியாமலோ'. நல்லதொரு ஜோடிப் பாடல். ராஜா தனது பெரும்பாலான பாடல்களுக்கு கன்வென்ஷனல் இசைக் கருவிகளை தெரிவு செய்வதற்கு பெயர் போனவர். சில வருடங்களாக, அதனில் இருந்து மாற முயற்சித்து, வெற்றியும் பெற்றவர் - அதிலும் இரைச்சல் இல்லாமல். பாடலில் இருக்கும் மெலடியும், பாடல் வரிகளும் சிறிதும் கெடாமலே அவை அமைந்திருக்கும். இப்பாடலும் அதற்கு ஓர் உதாரணம் . கார்த்திக், என்.எஸ்.கே. ரம்யா பாடியது. கார்த்திக் வழக்கம் போலவே சிறப்பாக பாடியிருக்கிறார். என்.எஸ்.கே. ரம்யா சமீப காலமாக, ராஜா பாடல்களுக்குப் பாடியிருந்தாலும் ஏதோ அவரின் குரல் எனக்கு அந்நியமாகவே கேட்கின்றது - அதற்கு முக்கிய காரணம் அவரது உச்சரிப்பு. இங்கிலீஸ் ஈஸ்வரி போலவே பாடியிருந்தார். உதாரணம் - சாய்ந்து சாய்ந்து பாடல். ஆனால் இப்பாடலை இனிமையாக மட்டுமன்றி, எவ்விதமான உச்சரிப்பு பிழையும் இல்லாமல் பாடியிருக்கிறார். பாராட்டுக்கள்.

'ஈரமாய் ஈரமாய்' பாடலுக்கும் 'தெரிந்தோ தெரியாமாலோ' பாடலின் அனைத்து சிறப்பம்சங்களும் பொருந்தும். பாடியவர்கள் ரஞ்சித், வைபவரி. மிக இனிமையான பாடல்.

கடைசி பாடலை இளையராஜாவே பாடியிருக்கிறார். பாடல்: 'காற்று வெளியில்'. தலைவியைப் பிரிந்து வாடும் தலைவன் பாடும் பாடல். மிக எளிமையான வரிகளில், இனிமையாக அமைந்த பாடல். ராஜா மிக உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறார். 

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடித் தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு 
தூங்கவில்லை மனது...
மிக உயரத்தில் அந்த நிலவு 
மங்கலான கனவு...
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இதுஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
உன் வழியில்உதிர்ந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இதுஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
சமீபத்திய திரைப்படங்களில் ராஜாவே சொந்தக் குரலில் பிரிவின் துயரைப் பற்றி பாடும் மூன்காவது பாடல் - எனக்குத் தெரிந்து - அவரது மனைவியின் மரணத்திற்குப் பின் ('என்ன குத்தம் செஞ்சேனடி' -  'மயிலு'; 'ஜுவனே ஜுவனே' - 'மேகா'; இன்ன பிற இரு பாடல்கள்)

பழனிபாரதி, இப்படத்தின் ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் இவ்வாறாக: 'நாங்கள் ஒரு பாடலை எழுதி ராஜா அவர்களை அதற்கு இசையமைக்குமாறு அவரது அறைக்கு சென்று அமர்கிறோம். அவர் பாடலின் சூழலைக் கேட்டுவிட்டு, பாடல் வரிகளை வாசிக்குமாறு கூறுகிறார். நாங்கள் வரிகளைப் வாசிக்க, வாசிக்க அவர் அப்படியே அதற்கு ராகத்தோடு பாடுகிறார் - அதே வேகத்தில். நான், பிரகாஷ்ராஜ் இன்னும் சிலர் அப்படியே ஆனந்த்ததில் கை தட்டுகிறோம்'. என்ன ஒரு திறமை! அதனைப் பார்ப்பதற்கும் ஓர் கொடுப்பினை வேண்டும்.




வர்த்தக ரீதியாக, இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வருமான ஈட்டவில்லை என்கிறார்கள். எனக்குப் படம் பிடித்திருந்தது. வணிக ரீதியாகவும், இப்பாடல்களைப் போல், அபாரமான வெற்றியைப் பிடித்திருந்தால், நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். இன்னும் நல்ல இயக்குநர்கள், ராஜா என்கின்ற மாபெரும் கலைஞனுடன் பணிபுரிந்து அவர்களது படைப்பிற்கு மட்டுமல்ல, தமிழ் இசையுலகத்திற்கே நன்மை புரிந்த்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் மகேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் ஓர் படம் இயக்குன்றார் - அதுவும் ராஜாவுடன் இணைந்து பணிபுரிகிறார். அது ஓர் மகத்தான சாதனையை புரியும் என்று நம்புகின்றேன்.

வியாழன், ஜூன் 26, 2014

தமிழ் பண்டிட்கள்

சமீபகாலமாக தமிழ் டி.வி. சானல்களில், தமிழ் உணர்வாளர்கள் மிக அதிகமாக தென்பட ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்ப்பது மிக சொற்பமான நிகழ்ச்சிகளே; அவற்றிலும் கூட இவர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்டு மனம் மிகவும் நெகிழ்ச்சியடைகிறது.

இவர்கள் பேசும் போது, தமிழைத் தவிர பிற மொழி சொற்களை உபயோகப்படுத்தமால் பேச வேண்டும் என்ற குறிக்கோளுடன் பேசுவதை கேட்பதற்கே தவம் செய்திருக்க வேண்டும். எதனால் இவர்கள் இப்படி தமிழிலேயே சதா சர்வகாலமும் பேசுகிறார்கள்? நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்களுக்கு ஆங்கிலம் புரியாது என்பதாலா அல்லது தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தில் வார்த்தைகள் இல்லை என்பதாலா அல்லது தான் மிகவும் கற்றவன் என்று மற்றவர்களுக்கு ஆங்கிலம் பேசித் தான் தெரியவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற எண்ணத்தினாலா அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேச அனுமதி மறுத்து விடுவார்கள் என்ற ஐயமா?

நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் ஒரு மணி நேரமும் இலக்கணப் பிழையில்லாமலும், மற்றவர்களுக்கு அழகாக புரியும் வண்ணம் எளிமையான ஆங்கிலத்தில் சரளமாக உரையாடக்கூடிய சொல்வண்ணமிருந்தாலும், தமிழ் நாட்டில் தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும் டி.வி.யே கதியென்று கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற சாதாரண விசயத்தினை புரிந்து கொண்டு தமிழிலேயே உரையாடும் இந்த தமிழ்ப்பற்றுள்ள, பகுத்தறிவாதிகளும், இங்கிலாந்து துரைகளுடன் தினமும் காபி, டீ அருந்துவது மட்டுமல்ல, அவர்களுடன் கபடி, பாண்டி, உள்ளே வெளியே போன்ற ஆட்டங்களை அனுதினமும் ஆடக் கூடிய வாழ்க்கை முறையை பெற்ற இந்த அறிவு ஜீவிகளை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது.

என்னே ஒரு பரந்த மனப்பான்மை, அறிவு, தமிழ்ப் பற்று.

பற்றிக் கொண்டு வருகிறது, இந்த மூடர்களை நினைத்தால். மூடர்கள் தான்.

தத்தம் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும், ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசக்கூடிய நபர்களும் - உதாரணம் ப.சிதம்பரம், கமலஹாசன் - தமிழை 99% வேற்று மொழிக் கலக்காமல் பேசும் போது, இந்த இரண்டிலுமே தேர்ச்சி பெறாத இந்த அரைவேக்காடுகள் ஏன் இப்படி பிதற்றுகிறார்கள்?

எத்தனை நிகழ்ச்சிகள் - அனுதினமும் இதே கதை தான். ரியாலிட்டி ஷோக்கள் (சூப்பர் சிங்கர்), நேர்காணல்கள் (காபி வித் டி.டி), முக்கியமாக விவாதக் களங்கள். தமிழில் ஆளுமைமிக்க கோபிநாத் நடத்த கூடிய நீயா நானாவிலும் கூட (நகரத்து வாழ் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் - சாப்ட்வேர் வல்லுநர்கள்?) ஆங்கிலம் சரளமாக புழங்குகிறது. அவர் அதனைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல், அவரே கூட, "இந்த மானே தேனே இப்படின்னு நடுவுல போட்டுக்குனன்ற" மாதிரி, சமயங்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிப்பதுமுண்டு.

எதுக்கு இதெல்லாம்? எங்க போய் முடியப் போகுதோ!

இன்னைக்கு ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். காபி வித் டி.டி - கலந்து கொண்டவர்கள் யூகி சேது, பிரதாப் போத்தன். அடேங்கப்பா, என்ன ஒரு பீட்டர் - அதிலும் பிரதாப் போத்தனாவது - சரி, தாய் மொழி தமிழில்லை; விட்டு விடலாம் - யூகி சேது...... காது பிஞ்சிடுச்சு.

அதற்கு காரணம், அவரது ஆங்கிலம் மட்டுமல்ல. என்ன ஒரு சுய புராணம்.

"கமல் எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்"

"கே.பி. என்னோட டேப்ப பார்த்துட்டு, எப்படி இப்படி 12 minutes பேசுன; இந்த நிகழ்ச்சியை (நையாண்டி தர்பார்) நீ தான் ஆங்கர் பண்ணனும் கேட்டுகிட்டார்"

"ஏ.ஆர்.முருகதாஸ், இந்த கேரக்டரை நீங்க தான் நடிக்கணும், இது ஹீரோவும் இல்லாத, வில்லனும் இல்லாத, காமெடியுமில்லாத ஒரு காரெக்டர் நீங்க பண்ணாதான் கரெக்டா இருக்கும்"

"கமல் என்னை மிகவும் மதிப்பவர்"

"ரமணா, பஞ்சதந்திரம் படத்துக்கும் அப்புறம் 100 படமாவது வந்திருக்கும். எல்லாம் reject பண்ணிட்டேன்"

முக்கியமானது...

"விஜய் சேதுபதி பண்ண அந்த சூது கவ்வும் கேரக்டர் எனக்காதான் பண்ணது. கடைசில அவர் பண்ணிட்டார்"

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சொல்லவே இல்லை. நீங்க பண்ணிட்டாலும்...

டி.டி. ஒரு கேள்வி கேட்டார்...

"உங்களை இண்டர்ஸ்டிரில வணங்காமுடின்னு சொல்றாங்களே"

அதற்கும் ஒரு பெரிய தம்பட்டமான பதிலை கொடுத்தார்.

எனக்கு என்னவோ, கேள்வி இப்படி தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

"உங்களை இண்டர்ஸ்டிரில ரொம்ப மண்டகனம் பிடிச்சவர்னு சொல்றாங்களே... அப்படியா?"

நான் சொல்றதையெல்லாம், இவர்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருப்பதனைப் போலவும், அப்படியே பார்க்க நேரிட்டாலும் உடனே திருந்தி கூடுமானவரைக்கும் தமிழில் மட்டுமே பேசப் போவது போலவும் இங்கே பதிவிடுகின்றேன். என் பணி கொட்டித் தீர்ப்பது - வழக்கம் போல்.

முக்கியமான ஒன்று: உங்களுடைய நிகழ்ச்சியை ஒமாவும், ஜார்ஜ் புஸ்ஸூம் பார்க்கவில்லை. சாதாரண மக்கள் தான். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து தான் எங்களது ஆங்கில அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையேற்ப்பட்டால், நாங்கள் ஆஜ் தக், Sahara Samay போன்ற சானல்களை பார்த்துக் கொள்வோம்.


புதன், ஏப்ரல் 16, 2014

மூடாத குழிகள்

கடந்த சில நாட்களில் மட்டும், மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி மிகவும் பாதித்தது. சிறிது நேரத்திலேயே அம்மா அல்லது அப்பாவினை தேடி அலைபாயும் குழந்தைகள், அச்சிறு துவாரத்தில் மாட்டிக் கொண்டு சிறிதும் அசையமுடியாமல் இருக்கும் நிலையினை நினைத்தாலே மனம் பொங்குகின்றது.

ஈனப்பிறவிகள் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நம்மக்கள் என்பதனை பல நிகழ்ச்சிகள் சமீபகாலமாக நிரூபித்து வருகின்றன.

இது போன்று நிகழ்ச்சிகள் நடப்பது முதல் முறையல்ல. கடந்த பத்தாண்டுகளில் பல உயிர்கள் போய் விட்டன. லட்சங்கள் செலவு செய்து ஆழ்துளை கிணறு பதிப்பவர்களுக்கு, சில நூறு ரூபாய்களில், தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஏன் முடியாமல் போய்விட்டது? அடிமுட்டாள்கள்! இது போன்ற முட்டாள்களினால், பெரும்பாலும் அவர்களுக்கு எந்த கேடும் நிகழ்வதில்லை. இது போன்ற குழந்தைகள் என்ன தவறு செய்தன?

தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஒருவரும் - அரசியல்வாதிகள் முக்கியமாக - முன்வராதது மிகுந்த வருத்தமே. அவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி குறைகூறவே நேரம் இல்லை.

மனிதனத்திற்கு மதிப்பில்லை. பணத்திற்கு தான் என்பது கண்கூடு. சுற்றுச் சூழலைப் பற்றி  நமக்கு கவலையில்லை. மலைகளை கூறுபோடுகிறோம். ஆற்றுப் படுகைகளை சுரண்டுகிறோம். மரங்களை நடுவதில்லை என்பதுமட்டுமில்லாமல், காடுகளை கண்மூடித்தனமாக அழிக்கிறோம். ஆறுகள், குளங்கள், கண்மாய்களை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைக்கிறோம். கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுகிறோம், ஆறு, சமுத்திரங்களில் கழிவுகளை குற்ற உணர்ச்சி சிறுதும் இல்லாமல் சென்று சேர்க்கிறோம்.

எதற்காக? நமது வாழ்க்கைமுறை வளர்ந்திருக்கின்றதா? நிச்சயமாக இல்லை.

மருத்துவ வசதிகள் அதிகருத்துப்பது போன்ற மாயை ஏற்பட்டுள்ளது. ஆனால் நோய்களும், மருத்துவ செலவுகளும் அதனை விட அதிகரித்துள்ளன. பயணம் செய்வதற்கான வசதிகள் பெருகியுள்ளன. ஆனால், சுற்றுச் சூழல் அதிகமாக மாசடந்துள்ளது. பொழுதுபோக்கு சாதனங்கள் அதிகரித்துள்ளன. மக்களுக்கிடையேயான இடைவெளி அதனை விட அதிகரித்துள்ளது. தாய், தந்தையுடன் சேர்ந்து வாழமுடியவில்லை. உறவினர்கள், நண்பர்களை தினமும் சந்திப்பது என்ற நாட்கள் போய், மாதங்கள், வருடங்கள் கழித்து சந்திக்கும் இழிவுநிலை ஏற்பட்டுள்ளது.

எதற்காக இதெல்லாம்? யாருக்காக இப்படிப் பட்ட வாழ்வு?

இயற்கை தானே நமது வாழ்க்கையின் ஆதாரம். மனிதர்களின் ஆதாரம் மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஜீவராசிகளின் ஆதாரமும் கூட. மற்ற ஜீவராசிகளுடன் பகிர்ந்து வாழும் பொறுப்பு மட்டுமில்லாது, எதிர்கால சந்ததிகளுக்கு, இயற்கை வளங்களை சேதாரமில்லாமல் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி நினைப்பதற்கு நமக்கு ஏது நேரம்? நயன் தாராவும், சிம்புவும் மறுபடியும் சேர்ந்துவிட்டார்கள், அதிமுக, திமுகவிற்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும். இந்த ஐ.பி.எல் பட்டத்தினை யார் வெல்வார்கள்? இவ்வற்றில் தானே நமது நேரத்தினையும், எண்ணங்களையும் செல்வளிக்கிறோம்.

இச்சமூகத்தின் தற்போதைய நிலைமையையும், எதிர்காலத்தினையும் நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது.