வியாழன், அக்டோபர் 11, 2007

தேவையற்ற ஓர் பதிவு

பொதுவாக, எனது பின்னூட்டத்தை பதிவாக எழுதியதில்லை (இவர் பெரிய மேதை). பதிவர் ஒருவரின் பதிவிற்கு பின்னூட்டமிட ஆரம்பித்த பிறகு அது பெரியதாக செல்லவதை தாமதாக உணர்ந்து அதனை வேறு வழியில்லாமலும், இதனால் எனக்கு மற்ற தமிழ்மணக் குழுவினரிடமிருந்து பலத்த அடி விழும்; அதற்கு பின்னொரு காலத்தில் ஆதாரம் வேண்டும் என்ற காரணத்தினாலும் (அடிக்கிறவன் வீரன் இல்லை. எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்கிட்டு இருக்கான் பார்த்தியா அவன் தான் வீரன் :)) அதனை இங்கே பதிகிறேன். தாமதாக உணர்ந்த காரணத்தினால் இது பின்னூட்டம் போல் இல்லாமாலும், பதிவினைப் போல் இல்லாமலும் இருப்பதை உணர முடிகிறது.

மேலும் நான் ஏற்கனவே இதனைப் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பாக என்னுடைய பதிவொன்றில் மேலோட்டமாக தொட்டு விட்டு சென்றிருந்தேன்.

பின்னணி தெரிய முதலில் மலர்கள் பதிவினைப் படிக்கவும்,

அவரின் பதிவிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

1. பெண்களுக்கு இன்னும் - ஆண்கள் போல் - சுதந்திரம் வேண்டும்
2. ஆண்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். (ஒழுக்கம் என்பது பெண்களுக்கான மட்டுமே என்பதை மீறி, அதை ஆண்களுக்கும் புகுத்த வேண்டும்)

ஏன் நீங்கள் ஒழுக்கம் கெட்ட ஆண்களை மாத்திரம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒழுக்கத்தினைப் போற்றும் ஆண்களும் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள். நீ பெரிய ஒழுக்கமுள்ளவனாக்கும்; அதை இங்க சொல்லுறீயாக்கும் என்று நினைக்க வேண்டாம். நானே தான் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளேன். நீங்கள் எப்படி வேண்டுமாலும் என்னை எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒழுக்கம் என்பது பெண்களிடம் ஆணின் நடத்தை / அல்லது ஆண்கள் விசயத்தில் பெண்ணின் நடத்தை என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டியதல்ல. அது பலவற்றை குறிக்கிறது.

1. பெற்றோரை மதித்தல் / காப்பாற்றுதல்
2. குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்தல்
3. நேர்மையாக இருத்தல்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது
4. மற்றவர்களுக்கு தேவைப்படும் (அவர்களுக்கு) போது உதவுதல்
5. மனிதன் உட்பட மற்ற ஜீவ ராசிகளுக்கு தீங்கில்லாமல் வாழ்தல்
6. நல் எண்ணங்களைப் போதித்தல்
7. எதிர்பாலரை மதித்தல்

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆதலால் மற்ற பெண்களை போகப்பொருளாக நினைப்பவன் மட்டும் கெட்டவன் அல்ல. ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, அதனை இல்லை என்று மறுப்பவன் கூட ஒழுக்கம் கெட்டவன் தான். ஆனால் இங்கே எப்போதும் பெண்களிடம் முறையாக (மனதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) நடப்பவன் / மது அருந்தாதவன் ஒழுக்கமுள்ளவன் என்றாகி விட்டது. இவ்விசயத்தில் ஒழுக்கமாக இருந்துவிட்டு, மற்ற விசயங்களில் அவன் தேர்ச்சியடையா விட்டாலும் அவன் ஒழுக்கம் கெட்டவன் தான்.

சரி, உங்களது பிரச்சினைக்கு வருகிறேன்.

1. ஆனால் அழகாக கவர்ச்சியாக உடையணிவது பெரிய தவறொன்றுமில்லை.

தவறில்லை தான். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. எப்படி, உடற்பயிற்சி செய்து தனது உடற்கட்டை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆண்மகன் ஆசைப்பட்டு, பிடிப்பான ஆடை அணிகிறானோ அது அது போல் தான் இதுவும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பெண்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் - சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் (உங்கள் பாஷையில் ஒழுக்கமுள்ளவர்கள் - ஒழுக்கமற்றவர்கள் கலவை). மிக எளிமையாக, குனிந்த தலை நிமிராமல் செல்லும் பெண்களுக்கே நிறைய சிக்கல்கள் (முன்பு போல் மோசமில்லை).

இது போன்று உடையணிந்து வருபவர்களை - சில தெளிவானவர்கள் - சரி மற்றுமொரு பெண் என்று கண்டுகொள்ளாலாமல் போய் விடலாம். என்னைப் போன்றவர்கள் 360 கோணத்தில் தலையைத் திருப்பி பார்த்துக் கொண்டே நகர்ந்து விடலாம்; மற்ற ரகத்தினர் சீண்டலாம். ஆக நீங்கள் உங்களை இந்த மூன்று ரகத்தினருக்கும் ஏற்ற மாதிரி எப்படி வேண்டுமானாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம். விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு. இங்கே 'நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறுவதெல்லாம் நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு கட்டளை இடவில்லை. கவர்ச்சி என்பதே ஓர் ஆணோ அல்லது ஓர் பெண்ணோ எதிர்பாலை கவர்வதற்காக பயன்படுத்தும் ஆயுதம் தான். ஓர் மானை போல்; மயிலை போல். 'நான் மற்றவர்களை கவருமாறு உடையணிவேன். ஆனால் அவர்கள் ஓர் எல்லைக்குள் எனது கவர்ச்சியை ரசிக்க வேண்டும் என்பது சரியா? ஆனால் இது நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது.

2. நான் எளிமையாக உடையணிந்து இருப்பதால் மட்டும் சில பெரிய கடைகளுக்கு போகும் போது எவராவது "தவறுதலாக அணுகும்"

மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும், உங்களுக்குப் பிடிக்காததை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3. தனிமை, குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் பிரிந்திருப்பதாலான சுதந்திரம், கை நிறைய சம்பளம் என்று பல காரணங்கள் இருந்தாலும் இது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை.

தனிமையினால் கூட பெண்களுக்கு சிகரெட் பழக்கம் வரும் என்பது இப்போது தான் கேட்கிறேன். இதில் நல்லது என்பது எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை? பொருளாதாரம் முன்னேறி விடுமா? உடல் நலம் மேம்படுமா? சுற்றுச் சூழல் மேம்படுமா? தெரியவில்லை.

'நாமளும் செஞ்சு பார்த்தா என்ன என்ற எண்ணம் தான்', இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும்.

சரி அப்படியானால், இப்போது புகைப்பிடிக்கும் பெண்கள், உங்களது கூற்றுப்படி, ஒழுக்கம் கெட்டவர்களாகி விடுவார்களா? அல்லது புகைப்பிடிக்கும் ஆண்கள் ஒழுக்கமுள்ளவர்களாகி விடுகிறார்களா?

4. நான் 4 நாள் சுற்றினாலோ, 4 தடவை பேசினாலோ போது எப்படிப்பட்ட பெண்களையும் மடக்கிவிடுவேன்" என்ற ஒன்றை நிறைய கேட்டிருக்கின்றேன்...

'பாரேன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து... 'ஹவ் ஆர் யூ ரேகா',-ன்னு வந்து வழிவான்னு சொல்லும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா? 'எனக்கு எத்தனை புரோபசல்ஸ் வந்திருக்கு தெரியுமா', என்று பெருமை பேசும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா?. இது பெண்கள் ஹாஸ்டல் மிகவும் சாதாரணமாக பேசப்படும் விசயம் தானே?

எல்லாமே மனித குணம் தான்.

5. நானே கியர் வண்டி ஓட்டும் போது வண்டியைத் தொடக்கூடப் பயப்படும் ஒருவனை என்னால் எப்படி ரசிக்கமுடியும்?

இயல்பு தான். தவறொன்றும் இல்லை.

6. கலாச்சாரமென்பது பெண்களை மட்டும் சார்ந்த ஒரு நடப்பு என்பதால், பாதிப்புக்குள்ளாகுவது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்...! இவை அனைத்தையும் ஒரு ஆண் செய்தால் பெரிதாக எடுத்துக்கொள்ளாது இந்த சமுதாயம்.., ஏன் பெண்களிடம் இந்த எதிர்பார்ப்பு..?

ஏனென்றால் (சில) ஆண்கள் ஆண்டாண்டுகாலமாக அப்படித்தான் இருந்து வருகிறார்கள். சமூகத்தின் அடிப்படையே பெண்கள் தான். பெண்களுக்கான கட்டுப்பாடுகள், பெரும்பாலும், தன் வீட்டுப் பெண்களை மற்ற ஆண்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இயற்றப்படுபவை தான் என்பது என் கருத்து. அது நல்ல எண்ணத்தில். சமயங்களில் அது கெட்டவர்கள் / அறியாமையில் வீழ்ந்தவர்களின் கையில் சிக்கி பெண்களுக்கு எதிராக மாறி விடுகிறது. அதற்காக தலிபான்களை நான் ஆதரிக்கிறேனா என்ன என்று கேட்காதீர்கள். அங்கு கல்வி கூட மறுக்கப்பட்டது. அது வேறு இது வேறு. உங்களால் மற்ற (தவறு செய்யும்) ஆண்களைத் தடுத்து, அடக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து விட்டு பெண்கள் இஷ்டம் போல் இருக்கலாம்.

பெண் சுதந்திரம் (கல்வி, சொத்துரிமை, நண்பர்கள் வைத்துக் கொள்தல், பேச்சுரிமை, அரசியல், வேலை வாய்ப்பு) என்பது இப்போது இந்தியாவில் பெண்களுக்கு தேவையான அளவு உள்ளது. வீட்டிற்கு வீடு சிற்சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது நாட்டின் மீதான தவறல்ல.

சுதந்திரத்திற்கும், ஆடை மற்றும் ஆண்சார் சுதந்திரத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

குறிப்பு: இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும், இப்பதிவு பல பெண்களையும் / பெண்ணுரிமை காக்கும் சில ஆண்களையும் கோபமுறச் செய்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.

குறிப்பு எண் 2: தேவையற்ற ஓர் பதிவு என்று எனது பதிவிற்கு தான் பெயரிட்டுள்ளேன்.

செவ்வாய், அக்டோபர் 09, 2007

வெறுத்து ரசித்த பாடல்கள்

சில பாடல்களை கேட்டவுடனே பிடித்து விடும்; பல கேட்டுக்கொண்டே இருந்தால் பிடித்து விடும்; சில பாடல்கள் பார்த்த பிறகு பிடித்து விடும்; சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் / பார்த்தாலும் பிடிக்காது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.

ஆனால் சில பாடல்களை மிகவும் வெறுத்து, கேட்காமல் தவிர்த்து, சில மாதங்களுக்குப் பிறகு கேட்கும் போது, அதிசயமாக, மிகவும் பிடித்து விடும். அது போன்ற அனுபவம் எனக்கு நான்கைந்து முறை ஏற்பட்டுள்ளது. அதனைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது. இப்பாடல்கள் நீங்கள் மிகவும் வெறுத்த பாடல்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆதலால் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதோ பட்டியல்.

1. யம்மாடி யாத்தாடி

பாடல்: வல்லவன்
பாடியவர்கள்: டி. ராஜேந்தர், சிம்பு, சிசித்ரா, மஹதி
இசை: யுவன் சங்கர் ராஜா

வல்லவன் படம் வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அப்படத்தில் மிகவும் வெறுத்த பாடல். சன் மியுசிக்கில் நேயர்கள், இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அவர்களைத் திட்டியிருக்கிறேன் (எவ்வளவு நல்ல பாடல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டு விட்டு, எதற்காக இதனை கேட்கிறார்கள் என்று!). குத்து பாடல் என்பதனால் பிடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆரம்பத்தில் வரும் நாதஸ்வரமும், டி.ஆர், சிசித்ராவின் குரலும் என்னை பலமுறை வெறுப்பேத்தியிருக்கின்றன.

இப்பாடலை ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பாடலின் இரு பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று மஹதியின் குரல். இப்பாடலில் மஹதியின் குரல் ஒளிந்திருந்தை நான் ஆரம்பத்தில் கவனிக்கத் தவறியிருந்தேன். பின்பு மீண்டும் கேட்ட போது, இப்பாடலில் கூட மஹதியின் குரல் நன்றாகயிருக்கிறது என்று வியந்தேன். ('நல்லவனே வல்லவனே', 'வெட்கம் எனும் வில்லனைத் தான்', 'வாழும் வரை வாழும் வரை'). ஏனோ மஹதியின் குரல் மீது எனக்கு அவர் பாட ஆரம்பத்திலிருந்தே ஒரு விதமான ஈர்ப்பு.

அதனை விட என்னை மிகவும் கவர்ந்த இன்னுமொரு இடம் சிம்புவும், சுசித்ராவும் பாடும் ஒரு சிறிய பகுதி.

அது 3:00-ல் டப்பாங்குத்து டிரம்ஸிலிருந்து, 3:08-ல் மிக அருமையாக நாதஸ்வரமாக மாறி, அதிலிருந்து 3:14-ல் மேளத்திற்கு மாறி, 3:26-ல் மீண்டும் டப்பாங்குத்திற்கு மாறுவது கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து சிம்புவிம், சுசித்ரா மிகவும் அற்புதமாக பாடியிருப்பார்கள்.

ஆதாராமா அவதாரமா
ஆயிப்புட்ட நெஞ்சுக்குள்ள

உன்னை விட்டால் என்னை விடும்
உயிர்தானமா உள்ளுக்குள்ள

உன் வாசம் தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது

நம் பேரைத் தான் ஊரெல்லாம் பேசும்
ஊமைக்கும் மொழியானது

அற்புதமான ராகம். அருமையான குரல்கள். பின்பு தான் தெரிந்தது. அதனைப் பாடியது வேறு யாருமல்ல - சுசித்ரா தானென்று. சிம்புவும் நன்றாக பாடியிருக்கிறார். எவ்வளவு அருமையாக 'ஆதாரமா', 'உன்னை விட்டால்', 'உன் வாசம்', வரிகளைப் பாடியிருக்கிறார்கள். இப்பகுதிக்காக 3:00-லிருந்து பல நூறு முறைகளுக்கு மேல் கேட்டிருக்கின்றேன். அற்புதம்!

சுசித்ராவின் பாடல்கள் ஒன்று கூட பிடித்ததில்லை. அவரை டப்பாங்குத்து பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அவர் பாடிய பாடல்களுக்கென்று ஒரு முத்திரை இருக்கிறது. ஆனால் அவராலும் நன்றாக பாடமுடியும் என்பது இப்பாடலில் தான் நான் உணர்ந்து கொண்டேன். என்ன... யாரும் அவருக்கு அவ்வாறு பாடுவதற்கு வாய்ப்பு தான் கொடுப்பதில்லை.

இப்பாடலிலும் கூட இவ்விரண்டு வரிகளில் தான் நன்றாக பாடியிருப்பார். அதிலும் 'உயிர் வாழுது', என்ற இடத்திலேயே சுசித்ரா வழக்கமான சுருதியில் பாட ஆரம்பித்து விடுவார். அது 'நீதாண்டா நீதாண்டா ஜல்லிக் கட்டு', என்று மாறும் போது இன்னும் வெறுப்படைய வைக்கும்.

2. ஏஞ்சல் வந்தாளே

படம்: பத்ரி
பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிராசாத், சித்ரா
இசை: ரமணா கோகுலா

இப்பாடல் வந்ததும் இதனை வெறுத்த முதல் நபர் நானாகத் தானிருப்பேன். விஜய்யின் படங்கள் எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்பாடலின் ஆரம்பம், அது பாடப்பட்ட விதம், வரிகள் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தினை ஓர் நாள் சன் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்பாடலை மீண்டும் கேட்கும் (பார்க்கும்) வாய்ப்பு கிடைத்தது. ரசிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் இன்னும் கூட அதன் ஆரம்பம், வரிகள், ஆண் குரல், பாடப்பட்ட விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. பிடித்ததெல்லாம் பாடலின் பிற்பாதியில் சித்ரா பாடும் பகுதி தான். அவர் பாடிய இவ்வரிகளும் (3:07), அதன் ராகமும், பின்னணியில் வரும் இசையும் மிக இனிமை.

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே
நன்றி உயிரே

நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லுமுன் அறிந்தாயே
நன்றி உயிரே

உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே

ஆஹா அற்புதம்!

சித்ராவினைப் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இப்பாடலில் அவரின் குரல் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது. அது முதல் இப்பாடலின் மீது ஓர் மயக்கம் தான். இது போன்ற மிக சாதாரணமான ஆரம்பம் மற்றும் முடிவும் இருக்கும் இப்பாடலில் இது போன்ற சிறந்த பாடல் வரிகளும், இசையும் ஒளிந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

3. தச்சுக்கோ தச்சுக்கோ

படம்: பொன்னியின் செல்வன்
பாடியவர்கள்: மாதங்கி, அனுராதா ஸ்ரீராம்
படம்: வித்யாசாகர்

பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை, 'ஊமை விழிகள்' படத்தில் வரும் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாடலினைத் தான் எப்போதும் ஞாபகப்படுத்துகிறது. இப்பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இப்பாடல் சில ஆண்டுகளாக என்னிடம் இருக்கின்றது. இது எப்போதும் என்னைக் கவர்ந்திதில்லை. சில நொடிகளில் மாற்றி விடுவேன். இது வரை இப்பாடலைப் பார்த்ததில்லை. இரு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒலிக்கவிட்டேன். ஏனோ மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை; அல்லது மாற்ற முடியாத சூழ்நிலை.

'கிருஷ்ணா', என்று மாதங்கி ஆரம்பித்து, 'தச்சுக்கோ தச்சுக்கோ', என்று பாடிய பிறகு, அனுராதா ஸ்ரீராம், 'கண்களிலே தீ', என்று மாதங்கியுடன் இணைந்து பாட ஆரம்பிப்பது அழகு!. இது போல் இப்பாடலில் சிற்சில அருமையான இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் 1:27-ல் வரும் புல்லாங்குழலும், 2:40-ல் வரும் வயலின் இசையும் அடங்கும்.

முக்கியமானது அனுராதாவின் ஸ்ரீராம்.

'கண்களிலே தீ... கன்னத்திலே பாய்... அங்கத்திலே பூ...' என்று அனுராதா ஸ்ரீராம் பாடும் ஒவ்வொரு இடமும் (0:36, 3:45) அற்புதம்.

'சுமை நான் தாங்கதான் சுகம் நீ வாங்க தான்' (1:55), என்று முதலாம் சரணத்தில் மாதங்கி பாடுமிடத்தில் ராகம் அழகு. ஆனால் இரண்டாவது சரணத்தில், அதை அனுராதா, 'விண்ணில் ஒற்றை நிலா மண்ணில் கூடல் விழா', (3:06) பாடுவது இன்னும் சிறப்பு. அற்புதம்! அதிலும் நிலா, விழா வார்த்தைகளை அனுராதா உச்சரிப்பதே அழகு. இவர் பாடிய வரிகள் என்னையறியாமல் புன்சிரிப்பை வரவழைத்தன; நல்ல இசை கேட்ட சந்தோஷத்தில். மிக அருமையான; திறமை வாய்ந்த பாடகர். சந்தேகமே இல்லை.

இப்பாடலில் பல இடங்களில் வரிகள் மோசமாக இருப்பதை அறிவேன். எனக்கு பல முறை ஏற்படும் சந்தேகம் இது. இது போன்று பாடுவதற்கு பாடகிகளுக்கு கூச்சமாக இருக்காதா? அல்லது அவ்வாறு பாடலை எழுதி ஓர் பெண்ணிடம் பாடச் சொல்லி கொடுக்கும் கவிஞருக்கு (?) அசிங்கமாக இருக்காதா?

4. வருது வருது

படம்: பிரம்மா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இப்பாடலை ஆரம்ப காலத்தில் ஓர் வயதானவரும், இளம்பெண்ணும் பாடும் பாடலாகத் தான் அறிவேன். அப்போதெல்லாம் எந்த விருப்பமான பாடலையும் கேட்கமுடியாது. எப்போதாவது ரேடியோவிலோ, டி.வி.யிலோ ஒலி/ஒளிபரப்பினால் தான் உண்டு. ஆனாலும் எப்போதும் இப்பாடலை விரும்பிக் கேட்டதில்லை.

பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு பலமுறை இப்பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, மிகவும் பிடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று. கேட்பவரை உற்சாகம் அடையச் செய்யும் வகையில் இப்பாடலின் பீட் அமைந்திருப்பது. அதுவும் பாடல் முழுவதுமே தொடர்ந்து இருப்பது மிக நன்று. இதனைத் தவிர எஸ்.பி.பி. மிக அற்புதமாகப் பாடியிருப்பார். ஜானகியைப் பற்றிக் கூறத் தேவையில்லை. முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசையில் பாடலின் பீட் மறைந்து புல்லாங்குழல், வயலின் போன்ற வாத்தியங்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கும். அது முடிந்ததும் 1:54-ல் எஸ்.பி.பி.

நாடி எங்கும்
ஓடிச் சென்று
நாளும் ஒரு
சூடேற்றும் ரூபமே

என்று குரலை ஏற்றி அற்புதமாகப் பாடியிருப்பார். அவர் அப்படிப் பாட ஆரம்பிக்கும் போது, பாடலின் பீட் மீண்டும் ஒலிக்கத் துவங்கியிருக்கும். கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். இதற்காக இன்னும் இப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு.

எஸ்.பி.பி. போன்ற அற்புதமான பாடகர்களை இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்தாமலிருப்பது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிய இழப்பு தான். மனிதர் என்ன அழகாக தமிழ் பேசுகிறார் (மேடை, பேட்டிகள் அடங்க). இங்கிருக்கும் தமிழ் நடிகர்களால் கூட அவ்வளவு கோர்வையாக, அழகாக பேச இயலாது.

5. மச்சக்காரி

படம்: சில்லென்று ஒரு காதல்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இப்படத்தில், 'மஜா மஜா', பாடலைப் போல் 'மச்சக்காரி', பாடல் எனக்கு பிடிக்காத பாடலாக இருந்தது. நியூயார்க் நகரம் கேட்காமல், இப்பாடலை நேயர்கள் கேட்கும் போதெல்லாம் அவ்வளவு எரிச்சலாக இருக்கும். இப்போதும் நியூயார்க் நகரம் பாடலை தினமும் மூன்று முறைகளாவது கேட்டு விடுவேன். ஆனால் இப்பாடல் இன்னும் முழுவதுமாகப் பிடிக்காது. ஓரளவிற்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் வசுந்தரா தாஸின் குரல். அதிலும் முக்கியமாக, 'வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா.... இன்பம் வந்தபின் இன்னும் நிற்பதேன் ஏன் தலைவா', என்ற வரிகளை பாடுமிடத்தில்.

இன்னொரு இடத்தில் அவர் பாடுமிடம் அழகாக ஒலிப்பது. (முதலாம் சரணம்: 2:34)

உதடுகள் குவித்தேன்
என் மன்னவா

உன் உதவிக்குத் தவித்தேன்
பெண்ணல்லவா

நீ முதல் முதல் குதித்தாய்
உன்(?) ரத்தமே

நான் மயக்கதில் விழுந்தேன்
என் காதலா............

காதலா என்று அவர் இழுவை கொடுத்து பாடுமிடம் மிகவும் ரசிக்க வைத்தது. 'நாம் இருவரும் இணைந்தே பார்க்கலாம்' (4:13), என்று இரண்டாம் சரணத்தில் சங்கர் பாடுமிடம் இதனுடன் ஒப்பிடும் போது அது அவ்வளவு சுவையாக இருக்காது. வசுந்தரா பாடும் இடங்களுக்காக, இப்போதெல்லாம் இப்பாடலை அடிக்கடி கேட்பதுண்டு.

உங்களுக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருந்தால் தெரிவிக்கவும்.

திங்கள், அக்டோபர் 08, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. முதல் மழை எனை நனைத்ததே

படம்: பீமா
பாடியவர்கள்: ஹரிஹரண், மஹதி, பிரசன்னா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

இப்படத்தின் பாடல்கள் எனக்கு முதன் முதலில், சன் டி.வி.யில் வந்த விக்ரம், திரிஷா பேட்டியில் தான் எனக்கு அறிமுகம். அப்பேட்டியின் நடு, நடுவே, 'ரகசிய கனவுகள் ஜல் ஜல்', என்ற பாடலின் இரு வரிகளை மட்டும் ஒளிபரப்பினார்கள். மிகவும் பிடித்து விட்டது. அதிலிருந்து இப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். வந்த பிறகும் இப்பாடலை கேட்டேன். சந்தேகமில்லை. நல்ல பாடல். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். குறிப்பாக பல்லவியும், முதல் சரணத்திற்கு முன்பாக வரும் வயலின் இசையும் நன்று. 'இறகே இறகே', என்று குழுவினர் பாடும் இடம் அழகு. ஆனால் சரணம் அவ்வளவாக கவரவில்லை. ஹரிஹரன், மதுஸ்ரீயை விட நன்றாகப் பாடியிருக்கிறார்.

ஆனால் இப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் மழை பாடல் தான் என்னுடைய தேர்வு. ஆரம்பத்தில் வரும், 'மெஹூ மெஹூ', என்று புரியாத பாஷையில் பாடல் ஆரம்பிக்குமிடத்திலிருந்தே அழகு தான். ஹாரீஸ் பெரும்பாலும் ஒன்றிரண்டு பாடல்களிலாவது அது போல் வைத்திருப்பார். பெரும்பாலும் அது என்னைக் கவராது. இப்பாடலில் சிறிது வித்தியாசமாக என்னை அது கவர்ந்ததற்குக் காரணம், குரலாக இருக்கலாம் (யாருடைய குரலென்று தெரியவில்லை). அந்த ராகமும் நன்றாக இருந்தது. அதனையே முதல் சரணத்திற்கு முன்பாக இசையாகவும் வைத்திருந்தார்.

ஹரிஹரன், மஹதி (:)) வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

முதல் மழை
எனை நனைத்ததே
முதல் முறை
ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே

இதயமும் போய்
இதமாய் மிதந்ததே

என்ற அற்புதமான பல்லவி.

இதனை ஹரிஹரண் மீண்டும் முதலாம் சரணம் முடிந்ததும் 2:46-ல் பாடுவார். அப்போது நனைத்ததே, திறந்ததே என்று பாடும் போது மஹதி அருமையாக 'ல ல லா' என்று பாடுவார். இனிமையாக இருக்கும்.

இரண்டாம் சரணம் முடிந்ததும், ஹரிஹரனோ, மஹதியோ இவ்வரியினை பாடுவார்கள் என்று நான் நினைத்திருந்த போது, 4:22-ல், 'உஹூ உஹூ', என்று 'மெஹூ மெஹூ', ஸ்டைலில் அதே பாடகர் பாடுவார். அற்புதம்.

பல பாடல்களுக்கு இது போன்ற சிறு சிறு விசயங்கள் சிறப்பு சேர்க்கின்றன.

இதே படத்தில் இடம் பெற்ற 'எனதுயிரே எனதுயிரே', பாடலும் நல்ல பாடல். ஆனால் அப்பாடலில் 1:42-ல் வரும் 'உன்னைக் காண வருகையில்' என்ற வரி ஏதோ பழைய தமிழ் பாடலினை ஞாபகப்படுத்துகிறது. ஞாபகத்திற்கு வரமறுக்கிறது. அதே போல் 'சிறு பார்வையாலே' பாடல் 'கோவில்' படத்தில் வரும் 'சிலு சிலுவென' பாடலை ஞாபகப்படுத்துகிறது.

2. கனவெல்லாம் பலிக்குதே

படம்: கிரீடம்
பாடியவர்கள்: கார்த்திக், ஜெயச்சந்திரன்
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அவற்றுள் சுவேதா, சோனு நிகாம் பாடிய 'விழியில் உன் விழியில்' பாடலும் சாதனா பாடிய 'அக்கம் பக்கம்' பாடலும் மற்ற இரு பாடல்கள். இவ்விரண்டையும் விட 'கனவெல்லாம் பலிக்குதே', பாடல் என்னை கவர்ந்தது.

இப்பாடலில் இது தான் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டு சொல்ல என்னால் இயலவில்லை. கார்த்திக்கின் குரல், நல்ல இசை, ராகம்.

மொத்தத்தில் நல்ல பாடல்.

இப்படத்தில் பிரகாஷ் சில இசையையும், ராகத்தையும் மற்ற படங்களிலிருந்து எடுத்திருக்கிறார். ஒன்று 'கண்ணீர் துளியே' பாடல் 'பூங்காற்றிலே' பாடலின் நகல். இன்னொன்று 'விழியில் உன் விழியில்' பாடல். இது எனக்கு இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. இசை 'மஜா' படத்தில் இடம்பெற்ற 'சொல்லித்தரவா', பாடலையும், 1:26-ல் வரும் இசை 'தெனாலி' பாடலில் வரும் 'சுவாசமே சுவாசமே', பாடலையும் ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக அந்த வீணை இசை.

ஜி.வி.பிரகாஷ் ஓரளவிற்கு நன்றாகவே இசையமைக்கிறார். இன்னும் முயற்சி செய்து, மாமாவின் பாடல்களை லிஃப்ட் செய்யாமல் இசையமைத்தால் நன்றாக வரலாம்.

3. பற பற பட்டாம் பூச்சி

படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்கள்: ராகுல்
இசை: யுவன் சங்கர் ராஜா

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சிலிர்ப்பான பாடல் கேட்ட உணர்வு இப்பாடல் கேட்ட போது ஏற்பட்டது. உற்சாகமான ஆனால் மென்மையான இசை; வித்தியாசமான குரல்; அற்புதமான ராகம் என அனைத்தும் சேர்ந்து இப்பாடலை சிறந்த பாடலாக்கியுள்ளன.

'பற பற பட்டாம் பூச்சி
தொட தொட பல வண்ணமாச்சே' என்று துவங்கி பாடல் முழுவதும் அந்த சிலிர்ப்பு தொடர்கிறது.

'கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கிக் கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
நிலை படகு ஆனதே'

வரிகளில் (0:19) ராகம் அற்புதம்; அழுத்தமான வரிகள்.

'எங்கோ எங்கோ ஓர் உலகம்
உனக்காக காத்துக் கிடக்கும்
நிகழ்காலம் நதியைப் போல
மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம்
நினைவில் உள்ள
காட்சி காயுமா?

ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ'

இடங்கள் (2:43-3:10) இனிமையாக இருக்கின்றன.

மொத்தத்தில் அற்புதமான பாடல். ஒளிப்பதிவு இப்பாடலுக்கு எப்படியிருக்கும் என்பதனை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இப்படத்தின் கரு மிகவும் முக்கியமாகவும், அத்தியாசமாகவும் தோன்றுகிறது. அது 'பறவையே எங்கு இருக்கிறாய்', பாடலிலும் ஒலித்ததை கேட்க முடிகிறது.

4. மின்னல்கள் கூத்தாடும்

படம்: பொல்லாதவன்
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்படத்தின் பாடல்களில் ஒன்று கூட சரியில்லை இதனைத் தவிர. சங்கர் மகாதேவன் பாடிய குத்துப் பாடல்; 'எங்கேயும்' ரீமிக்ஸ் பாடல் என்று சலிப்படையச் செய்யும் பாடல்கள். 'மின்னல்கள் கூத்தாடும்' என்று ஆரம்பிக்கும் பாடல் காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இப்பாடலின் இசைக்கருவியும், ஆரம்ப இசையும் 'சிவாஜி' படத்தின் 'ஸ்டைல்' பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பல்லவி முடிந்ததும் வரும் இசை, 'மின்னலே' படத்தின், 'வசீகரா' பாடலின் இசையை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இப்பாடல் நன்றாக வந்துள்ளதை மறுக்க முடியாது. கார்த்திக் நன்றாக பாடியிருக்கிறார்.

'உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அதை
எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே'

என்ற இடத்தில் ராகம் நன்று.

ஜெயஸ்ரீ தனக்கே உரித்தான பாணியில் பாடியிருக்கிறார்.

'காதலே ஒரு வகை
ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது
மறந்திடுமே

வவ்வாலை போல் நம்
உலகம் மாறி
தலைகீழாகத் தொங்கிடுமே'

3:31-ல் ஜெயஸ்ரீ பாடி, அதனைத் தொடர்ந்து 'உடல் கொதிக்குதே' என்று குரலை மாற்றி ஆரம்பிப்பது அற்புதம்.


5. உயிரே உயிரே

படம்: மலைக்கோட்டை
பாடியவர்கள்: ரஞ்சித், ரீட்டா
இசை: மணி சர்மா

இது திருவிளையாடல் படத்தில் வரும்'கண்ணுக்குள் ஏதோ', பாடலை நினைவுபடுத்துகிறது. போதாக்குறைக்கு அப்பாடலை பாடியவரும் ரீட்டா தான். ஆரம்பத்தில் வரும் இசை இனிமை. ஆனால் அந்த இசை, அர்ஜூனின் ஓர் படத்தில் வரும், 'வெளிநாட்டுக் காற்று தமிழ் பேசுதே' பாடலை ஒத்திருக்கிறது.

'உந்தன் கண்ணோரம்
வாழ கற்பூரம் போல
அன்பே நான் கரைந்தேனே'

வரிகளிலும் (0:43),

'நீ என் வாழ்க்கையா
என் வேட்கையா',

என்ற வரிகளிலும் (2:21) ராகம் நன்றாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தேவதையே வா' பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமை.

சங்கர் மகாதேவன் எல்லா தமிழ் படங்களிலும் ஓர் குத்து பாடல் பாடிவிடுகிறார். ஏன் வம்படியாக அனைத்துப் படங்களிலும் ஆரம்பத்தில் குத்துப் பாடல் வருகிறது என்றே தெரியவில்லை. ரஜினியில் ஆரம்பித்து, விஜயில் தொடர்ந்து இன்று அனைத்து ஹீரோக்களுக்கும் ஓர் ஆரம்ப பாடல். கமல் மட்டுமே விதிவிலக்கு. 99% பாடல்கள் கேட்பதற்கு சகிக்காது. அதிலும் சங்கர் மகாதேவன் தமிழ் திரையுலகம் பாடாய் படுத்துகிறது. விளையாடு (கிரீடம்), படிச்சு பார்த்தேன் (பொல்லாதவன்), வாழ்க்கை என்பது (தமிழ் எம்.ஏ) என்று இவர் அநியாயத்து குத்து பாடகராகி விட்டாரே! பாவமாக இருக்கிறது. அவரது பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு என்ன படமென்று கேட்டால் அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.