செவ்வாய், மே 13, 2008

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

படம்: யாரடி நீ மோகினி
பாடியவர்: கார்த்திக், ரீட்டா
இசை: யுவன் சங்கர் ராஜா

செல்வராகவனின் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு, அவரது உதவியாளரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் நன்றாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இப்பாடல் இந்த ஆல்பத்தில் தனித்து நிற்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வெண்மேகம்'(ஹரிஹரண் பாடியது) பாடல் தான் எனக்கு விருப்பமான பாடலாக இருந்தது. அப்பாடல், 'ஏய் உன் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா பாடலின்' பிரதி என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் அப்பாடலின் சரணத்தில் (2:02-ல்) வரும் கீழ்கண்ட வரிகளின் ராகமும்

"தேவதை வாழ்வது
வீடல்ல
கோவில் கடவுளின்
கால்தடம்
பார்க்கிறேன்"


இரண்டாம் சரணத்தில் (2:36 - 2:59) வரும் இசையயும் என்னை கிறங்கடித்தது.

'ஒரு நாளுக்குள் எத்தனை', என்ற இந்த பாடலின் இனிமையை சிறிது தாமதாகவே உணர்ந்தேன். கார்த்திகும், ரீட்டாவும் மிக அழகாகப் பாடியுள்ளார்கள்.

ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகிற பொழுது
தொடுவானத்தை
தொடுகிற உணர்வு

என்று கார்த்திக்கும்,

ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்
எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும்ம்ம்
வரும் நடுக்கம் - என்றாலும்
கால்கள் மிதக்கும்

என்று ரீட்டாவும் பல்லவியை மிக அழகாக ஆரம்பித்து வைக்கிறார்கள்.

சரணத்தில் வரும் ராகம் மிக அருமை (02:40)

"இது ஏதோ
புரியா உணர்வு
இதைப் புரிந்திட
முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை
ஒரு எரிமலை
பெருங்காற்றும் சேர்ந்தே
ஒன்றாய் சிரிக்கும்"


அதே ராகத்தில், இரண்டாம் சரணத்தில் வரும் வரிகள் மிகவும் கவர்கின்றன.

"தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம்
பின்பு தெரியலாம்
அது வரையில்
நடப்பது நடக்கும்"

பாடல் முழுவதும் யுவன் மெல்லிய பீட்டை அசத்தலாக தழுவவிட்டிருக்கிறார். அவருக்கே உரித்தான, அழகான பியானோ இசையையும் (01:44 - 01:59, 05:16 - 05:31) இடையில் கோர்த்து பாடலுக்கு இனிமையை கூட்டியிருக்கிறார். மொத்ததில் மிக அருமையான பாடல்.




2. நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே

படம்: உற்சாகம்
பாடியவர்: ஹரிஹரண்
இசை: ரஞ்சித் பரோர்

ரகுமான் தரத்திற்கு இணையாக, ரஞ்சித் பரோர் இசையமைத்திருக்கிறார். இதனை எனக்கு அறிமுகம் கொடுத்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி. அவர் கொடுத்த தொடுப்பில் கேட்டதும், உடனே கலாட்டாவில் பாடல்களை வாங்கினேன். என்னவொரு அருமையான பாடல்கள்! அத்தனையும் தேன். இப்பாடல், 'கண்கள் உன் கண்களோ' பாடல், 'நண்பா நண்பா', என அத்தனையும் அற்புதமான பாடல்கள். ரஞ்சித் பரோருக்கு ஒரு பெரிய ஓ! ஆனால் இத்தனை அருமையான பாடல்கள் இப்படத்தில் மாட்டிக்கொண்டதே என்ற வருத்தம் உண்டு. இவை மட்டும், ஒரு சூர்யா படத்தில் இருந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்! பாஸ்டன் பாலா நன்றாகக் குறிப்பிட்டிருந்தார்' பிரகாஷிற்கு செல்லும் சில படங்கள் இவருக்குச் செல்லட்டும் என்று. அதனை ஆமோதிக்கிறேன்.

ரஞ்சித் பரோர், ஏற்கனவே 'வி.ஐ.பி'-யில் நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அதன் பிறகு தமிழில் இசையமைக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. ஆனால், உற்சாகத்தில், விஐபி-யை விட அற்புதமான பாடல்கள். இப்பாடல்களை தினமும் எத்தனை முறை கேட்கிறேன் என்ற கணக்கே இல்லை. இப்பாடலில் அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. இசை, ஹரிஹரன் மற்றும் நந்தினியின் மயக்கும் குரல், வைரமுத்து அவர்களின் வரிகள். எத்தனை அற்புதமான வரிகள்!

'ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்


வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு
யாம் கண்டனம்'


அற்புதமான வரிகள், ராகம்! மிகச் சிறப்பு.


பல்லவியில் முதல் சில வரிகள் முடிந்ததும், 'கொதித்தாடுதே குழைந்தாடுதே' (1:08) என்று நந்தினி மயக்கும் குரலால் பாடுவதும், அதன் பின்னணியில் அற்புதமான வயலினும் அற்புதம். அதே போல் 'உள்ளாவியை நீ தீண்டாவே காற்றாக வா தலைவா'(4:20) வரியில் வரும் ராகமும், வயலின் இசையும் தேன். நந்தினி இவர் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாக்கம் தெரிகிறது. மொத்தத்தில் 2007-ன் சிறந்த பாடல்.



3. அடடா அடடா அடடா

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
பாடியவர்: சித்தார்த்
இசை: தேவி ஸ்ரீபிரசாத்

மற்றுமொரு தெலுங்கு ரீமேக் திரைப்படம். இப்படத்தின் பின்னணி இசையைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தேன். இப்படத்தின் பாடல்களை படம் பார்ப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். நன்றாக இருந்தது - ஆனால் என்னை மிகவும் கவர்ந்ததுஅந்த தீம் இசை மட்டுமே.



ஆனால் திரைப்படம் நன்றாக இருந்த காரணத்தினால் படத்தின் பாடல்கள் மறுமுறை கேட்கும் போது பிடித்து விட்டது. அதிலிருந்து இப்பாடல் எனது விருப்பமான பாடலாகி விட்டது. நன்றாக பாடியிருக்கிறார். ஆனாலும், பாடலின் நடுவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள், 'பா நி ச சா....' என்று பாடுவதும் பிடிக்கும். மொத்தத்தில் நல்ல பாடல்.



இப்படத்தில் இடம் பெற்ற 'உயிரே உயிரே பிரியாதே' என்ற பாடலும் மிக அருமையான பாடலும். அதிலும், அப்பாடலின் நடுவில் வரும் 'ஹான் ஹான் ஹான்' என்ற பெண்ணின் குரல் அற்புதம்.

4. யாரோ மனதிலே

படம்: தாம் தூம்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹரீஷ் ஜெயராஜ்

மற்றுமொரு வழக்கமான ஹரீஷ் ஆல்பம். இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அதில் இப்பாடலும் ஒன்று. படத்தில் இரண்டு மூன்று பாடல்கள் வேறு படத்தின் பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. அவற்றுள் முதல் பாடல்: 'அன்பே என் அன்பே' பாடல். இப்பாடல் 'ஓ மனமே ஓ மனமே' பாடலின் ராகத்தை ஒத்திருப்பதால், அப்பாடல் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டாவது 'ஆழியிலே முக்குழிக்கும்' பாடல் அப்படியே 'ரட்சகன்' படத்தில் இடம்பெற்ற 'கையில் மிதக்கும் காற்றாக' பாடலின் நகல் போன்று தோன்றுகிறது. 'புதிய மனதில்' என்ற பாடல் வித்தியாசமான முயற்சி. கவர்கிறது. 'சரி சரி சரி... அட அது சரி சரி'. :). ஆனால், இப்பாடலில் ஆரம்பத்திலும் (0:08), நடுவிலும் (1:30), இறுதியிலும் (4:18), 'டாட டடண்டன்' என்ற இசையோ எங்கேயோ கேட்டிருக்கிறேன். தலை காய்கிறது. இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

'யாரோ மனதிலே' என்ற இப்பாடலை தூக்கி நிறுத்தியிருப்பவர், பாம்பே ஜெயஸ்ரீ. பொதுவாக, பாம்பே ஜெயஸ்ரீ, ஹரீஸின் எல்லா படங்களிலும் பாடுவதால் எனக்கு அவர் பாடிய பாடல்கள் பெரிய ஈர்ப்பாக அமைந்ததில்லை. இப்பாடல் பெரிதாக கவரவில்லையென்றாலும், அவர் தான் பாடலுக்குப் பலம் என்று கூறலாம். ஓரளவிற்கு நல்ல இசை கூட. இப்பாடலில் 2:41-ல் வரும் 'தத்தத்தா தார தத்தத்தா' என்று வரிகளில் வரும் ராகத்தை எங்கேயோ கேட்டிருக்கிறேன். :-(




5. உன்னை கேள் உன்னை கேள்

படம்: இனிமே நாங்க தான்
பாடியவர்: இளையராஜா
இசை: இளையராஜா

தமிழில் வந்த கம்ப்யூட்டர் அனிமேட்டட் திரைப்படம். யூ டியூப்பில் ஒரு பாடலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவாயில்லையே என்று அதன் தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் போது தான் இசை இளையராஜா என்று தெரிந்து கொண்டேன். அப்போது இப்பாடலைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அற்புதமான பாடல். இசையிலும், முக்கியமாக மெல்லிசையிலும், இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார். அதற்கு இப்பாடலும் விதிவிலக்கல்ல. இசையினை விட என்னவொரு அற்புதமான குரல், இளையராஜாவினுடையது.

உன்னை கேள்
உன்னை கேள்
என்ன செய்தாய்
எண்ணிப் பார்
எண்ணிப் பார்
என்ன சொல்வாய்?


ஊருக்காக நீ ஓடி
உழைத்தாயோ - இல்லை
உன்னை மட்டுமே பார்த்துக்
கிடந்தாயோ

நன்மைகளா
தீமைகளா
செய்ததென்ன
உண்மை சொல்வாய்

நல்ல ராகம். நல்ல குரல். பல்லவி(1:12 - 1:31) மற்றும் முதல் சரணம் முடிந்ததும் வரும் இசை அற்புதம்.

'மனத்தை அழுக்காக்கி
சிரிக்கிறாய்
முகத்தை முகமூடியாக்கி
மறைக்கிறாய்'


என்னவொரு அற்புதமான வரிகள்! அழகான பாடல். YouTube வீடியோ இதோ: (1:50 முதல் பார்க்கவும்)



இப்படத்தின் பாடல்கள் கலாட்டா.காமில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.

திங்கள், மே 05, 2008

வீணையின் நாயகன்

சென்ற வாரம் அருகில் உள்ள திரையரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியன்' படத்திற்கு சென்றேன். நல்ல திரைப்படம் - நன்றாகவே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜெனிலியா பாத்திரம் தான் சிறிது ஓவர் ஆக்டிங் போல் தோன்றியது (சந்தோஷ்.... ஏன் சந்தோஷ்......... சாரி சந்தோஷ்). மற்றபடி ஓர் நல்ல படம்.

படத்திற்கு செல்வதற்கு முன்பாகவே பாடல்களை கேட்டிருக்கிறேன். இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. முக்கியமாக, ஆஹாஹாஹா..... என்று ஒரு நிமிடத்திற்கு வரும் அந்த தீம் மியூசிக். 'உனக்கும் எனக்கும்' படத்திலேயே 'உன்பார்வையில் பைத்தியம் ஆனேன்' போன்ற சிறந்த பாடல்களை கொடுத்து அசத்தியவர் தேவி ஸ்ரீபிரசாத். தேவி ஸ்ரீபிரசாத்தின் பாடல்களை விட அவரது பின்னணி இசை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர் செண்டிமெண்ட், சோகக் காட்சிகளுக்கு இசையமைக்கும் விதம். செண்டிமெண்ட் காட்சிகளுக்கும், சோகக் காட்சிகளுக்கும் வயலின், வீணை இசைக்கருவிகளை விட மிகச் சிறந்த வாத்தியம் இல்லை என்பது எனது கருத்து.

அவற்றை மிகச் சிறப்பாக உபயோகப்படுத்துவதில் தேர்ந்தவர் பின்னணி இசையின் ராஜா, இளையராஜா அவர்கள்.

அதற்குப் பிறகு, வீணையைக் கொண்டு பின்னணி இசையை கோர்ப்பவர்கள் யாருமே இல்லை என்று உறுதியாக கூறலாம். அப்படியேயாயினும், ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே சில இசையமைப்பாளர்கள் உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள் (நான் பார்த்த) அனைத்துப் படங்களிலும் வீணை வாத்தியத்திற்கு முக்கிய இடம் கொடுத்து அதிஅற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல,

ஏ.ஆர்.ரகுமான் பாடல்களிலேயே அதிகமாக வீணை இசை இடம் பெறுவதில்லை என்ற வருத்தம் உண்டு. அதிலும் பின்னணியில் சுத்தம். ஆனால் தேவி ஸ்ரீபிரசாத் அதற்கு நேர் மாறானவர். இப்படத்திலும் சில முக்கியமான காட்சிகளில் அத்தகைய இசையினைக் கொடுத்து என்னை மிகவும் கவர்ந்திழுந்திருக்கிறார். அவற்றைப் பற்றியும், அவரது இன்ன இரண்டு படங்களில் எனக்குப் பிடித்த அத்தகைய காட்சிகளின் தொகுப்பு இது. தேவி ஸ்ரீபிரசாத்திற்கு வீணையின் மீது ஏன் அத்தனை ஓர் காதல் என்று தெரியவில்லை. ஆனால் அக்காதல் ஒர் அற்புதமான ஒரு காதல் என்று அவரது பின்னணி இசையைக் கேட்கும் போது தெரிகிறது. அது போன்ற காட்சிகளில் வீணையைத் தவிர வேறு வாத்தியத்திற்கு அந்தக் காட்சியின் சோகத்தையும், வலிமையையும் உணர்த்தும் திறமை இல்லை என்று கூறுவேன்.

முதலாவதாக சந்தோஷ் சுப்ரமணியம்
----------------------------------

தன்னிடம் சொல்லாமல், தொழில் தொடங்குவதற்காக, தனது மகன் வங்கியில் கடன் வாங்குகிறான் என்பதை உணரும் ரவியின் தந்தை, பிரகாஷ் ராஜ் தனது மனைவி கீதாவிடம், அவனுக்கு அந்தப் பெண் மட்டும் பிரச்சனை இல்லை, வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறுகிறார். அப்போது அதன் அர்த்தத்தை உணரும் கீதா அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதற்கு சில தினங்களுக்கு முன்பாக, தனது வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று ரவி, தனது தாய் கீதாவை திட்டிய பிறகு ரவியுடன் பேசுவதை தவிர்க்கும் கீதாவிற்கு இதனைக் கேட்கும் போது அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுகிறது.

மறுநாள் காலையில் தாயுடன் பேசுவதற்காக ரவி தயங்கி நிற்பதையும், பின்னர் பேசாமல் சென்றதை கவலையுடன் பார்க்கும் கீதாவின் உணர்வினையும் மெருகேற்றும் விதமாக பின்னணியில் வரும் இசை அற்புதம். (05:10)




அதே போல், ஜெனிலியா, ரவி வீட்டிற்கு வரும் போது ரவி ஜெனிலியாவிற்கு அனைவரையும் அறிமுகம் செய்கிறார். அப்போது கீதாவைப் பார்த்து ஜெனிலியா, 'ஆன்ட்டி, உங்க குரல் அழகா இருக்கு ஆன்ட்டி', என்று கூறும் போது அதே இசை. அற்புதம். (00:42)




இரண்டாவதாக உனக்கும் எனக்கும்
--------------------------------

இப்படத்தின் 'உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்', பாடல் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடல்களில் சிறந்த பாடல் என்று கூறுவேன். அப்பாடல் எப்படி பின்னணி இசையாக, அருமையாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

காதலியிடம், தான் லண்டனுக்கு திரும்ப செல்வதாக சோகத்துடன் கூறும் போது வரும் இசை:



00:20-ல் 'பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்', என்ற வரிகள், வீணை இசையாக உருமாறியிருக்கிறது)

பாக்யராஜூம், பிரபுவும் ரவியினைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் போது, வெட்டி விடுவேன் என்று பிரபுவை அரிவாளை ஓங்குகிறார். எங்கே வெட்டு என்று பாக்யராஜ் கூறும் போது, 'டாட்', என்று கூப்பிடும் ரவியினைத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அழுக்கு பனியன், பாண்டில், உடல் முழுவதும் புழுதியுடனும், காயங்களுடனும் நிற்கும் ரவியினைப் பார்த்து பாக்யராஜ் கண்ணீர் வடிக்கும் காட்சிக்கு எவ்வளவு அற்புதமாக இந்த வீணை மெருகேற்றுகிறது என்று பாருங்கள்.(09:48)




அதே இசை, திரிஷா பேசுவதை கேட்கும் மகிழ்ச்சியுடன் பாக்கியராஜ் கேட்கும் போது: (07:44)



ஆர்யா - தெலுங்கு படம்
------------------------

அல்லு அர்ஜீன் நடித்த 'ஆர்யா' என்ற தெலுங்குப் படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் காதலிக்கு திருமணம். நாயகன் காதலியின் திருமணத்தில் அவரை சந்தித்து, அவரை இன்னும் தான் காதலிப்பதாக கூறி காதலியை அழ வைக்கிறார். ஆனால் தான் நடித்ததாக கூறி, காதலிக்கு திருமண வாழ்த்துக்கள் என்று ஒரு ரோஜாப் பூவினைக் கொடுக்கிறார். சில நொடிகளே வந்தாலும், அந்த வீணை இசை என்னவொரு அற்புதமான இசை! (02:00)



தேவி ஸ்ரீபிரசாத் இது போல இன்னும் நூற்றுக்கணக்கான படங்களில் மனம்
மயக்கும் இசையைக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி இத்துடன் இவ்விடுகையை முடிக்கிறேன்.