திங்கள், மார்ச் 13, 2006

வாட்டர் - திரைப்பட மதிப்பீடு (Water Movie Review)

என்னடா படமே இன்னும் வரவில்லை. அதற்கு முன்பு மதிப்பீடா என்றெல்லாம் கேட்காதீர்கள்.

சோகமான படம் என்றால் அதனை எப்படியாவது பார்க்காமல் தவிர்த்து விடுவேன். எனக்கு அது போன்ற கதைகள் சுத்தமாகப் பிடிக்காது. இன்னும் சேது, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களைப் பார்க்கவில்லை. பிதாமகன் தான் விதிவிலக்கு. வாட்டர் திரைப்படத்தின் கதை அனைவரும் அறிந்தது தான். படம் எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஆனாலும் ரகுமானின் படம் என்ற காரணத்திற்காக பார்க்கத் துணிந்தேன். சென்ற சனிக்கிழமை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தின் பாடல்களும் இன்னும் வெளிவரவில்லை. சில அயல்நாடுகளில் பாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்தியாவில் இது வரை வெளியிடப்படவில்லை. காரணம் என்ன எனத் தெரியவில்லை. ஆனாலும் தரம் குறைந்த பாடல்களை ஒரு தளத்தின் உதவியினால் mp3 ஃபார்மேட்டில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆடியோ சி.டியை வாங்கி அனுப்பும்படி நண்பரைக் கேட்டிருக்கிறேன். சரி பாடல்களைத் தான் கேட்கமுடியவில்லை. படத்தில் பாடல்கள் எப்படி எடுக்கப்படிருக்கிறது என்பதைப் பார்ப்போம் என பார்க்க ஆரம்பித்தேன்.

படம் முழுவதும் என்னைக் கவர்ந்த ஒரு விசயம். இசை என்று வழக்கம் போல சொல்ல மாட்டேன். ஒளிப்பதிவு. அட்டகாசம். அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை. இத்தனைக்கும் படம் முழுவதும் வருபவை ஒரு நதி, ஆசிரமம், வீடு, சில தெருக்கள். அவ்வளவு தான். காசியில் படப்பிடிப்பை நடத்த பலத்த எதிர்ப்பு இருந்ததால், படத்தின் பெரும்பகுதி, இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளது.

சரி, கதைக்கு வருகிறேன்.

1938-ம் ஆண்டில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. என்னவென்றே தெரியாத 8 வயது குழந்தையான, சுய்யாவிற்கு (Chuyia, சரளா) திருமணம் முடிந்த சில நாட்களிலேயே விதவை கோலம் பூணும் அவலம் ஏற்படுகிறது. அவளின் தந்தை "உன் கணவன் இறந்து விட்டான். இனி மேல் நீ விதவையாகத் தான் வாழ வேண்டும்", என அறிவுரை கூறுகிறார். உடனே அந்தப் பெண், "எத்தனை நாட்களுக்குப்பா", என அறிமாயல் கேட்கிறாள். அவளது கணவனைத் தகனம் செய்ததும் மறுவேலையாக அவளின் பெற்றோர் செய்யும் காரியம் - அவளை வாரணாசியில் உள்ள விதவைகள் இல்லம் (அ) ஆசிரமத்தில் சேர்ப்பது.



அந்த ஆசிரமத்தில், வேறுபட்ட வயதுடைய 20 பெண்களுடன் இவளும் சேர்ந்து கொள்கிறாள். அவர்களின் அன்றாடத் தொழில் கோயில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுப்பது, இறைவனை வழிபடுவது, பஜனைகளில் கலந்து கொள்வது. இது தான். ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு பணிக்கப்பட்ட ஒரே தொழில். பிச்சை எடுப்பதால் வரும் வருவாயில் ஆசிரமத்திற்கான வாடகையைக் கொடுத்து விட்டு, மீதம் இருக்கும் பணத்தில் அன்றாட செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். அன்றாட செலவுகள் என்றால் என்ன? உணவு மட்டும் தான். அதிலும் பொறித்த உணவுகள் உண்ணக் கூடாது. பலரும் இளமையிலேயே (7,9) விதவைக் கோலம் பூண்டு 20-70 வருடங்களாக அங்கேயே வாழ்ந்து வருபவர்கள். ஆசிரமம் என்றால் பெரிய ஆசிரமம் அல்ல. மூன்று அறைகள், ஒரு பெரிய மத்திய கூடம். அவ்வளவு தான். காலையில் நதியில் குளிப்பது, பஜனை பாடுவது, வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது........ ஐயோ, நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. இரு கை, கால்களை இழந்து வாடும் ஜீவன்கள் கூட, சிலரின் உதவியினால், பல விசயங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கூட இவர்களுக்கு இல்லை.


அந்த ஆசிரமத்தின் தலைவி, விரக்தியினால் பாதிக்கப்பட்டு மற்றவர்களை தனது சந்தோஷத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நடத்துகிறார். அவரிடம் வந்து மாட்டிக்கொள்ளும் இந்த குழந்தை, ஆசிரமத்தில் சகுந்தலாவையும் (சீமா பிஸ்வாசை), கல்யாணியையும் (லிசா ரே) சந்திக்கிறாள். அவர்களின் அரவணைப்பு இவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. கல்யாணி, 9 வது வயதில் கணவனை இழந்து, கிட்டத்தட்ட 15 வருடங்களாக அங்கு வாழ்பவர். யார் சொல்லியும் கேட்காமல், மற்றவர்கள் செய்வது போல் மொட்டை போட்டுக்கொள்ளாமல் கனவுகளுடன் வாழ்ந்து வருபவர். சமயத்தில், அந்த ஆசிரமத்தலைவியின் வற்புறுத்தலால், பல பெரிய மனிதர்களின் படுக்கையையும் பங்கிட வேண்டிய நிலை கல்யாணிக்கு (லிசா ரே) ஏற்படுகிறது.

ஒரு நாள், காந்தியின் அறப்போராட்டத்தினால் கவரப்பட்ட நாராயண் (ஜான் ஆபிரகாம்) அவரது சொந்த ஊரான வாரணாசிக்கு வரும்போது, கல்யாணியைச் சந்திக்கிறார். இருவரும் காதல் வயப்படுகின்றனர். கல்யாணியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்கும் கொடுக்கிறார், நாராயண். தனது தந்தை, தாயின் அனுமதியினையும் பெறுகிறார். இதனை அறிந்த ஆசிரமத் தலைவி, கல்யாணிக்கு மொட்டை அடித்து அறையில் வைத்து பூட்டுகிறார். இன்னொரு பெரியவரின் வார்த்தைகளினால் தெளிவடையும் சகுந்தலா (இந்திய பிரிட்டிஸ் அரசாங்கம் விதவைகளின் மறுமணத்தை ஆதரித்து இயற்றிய சட்டம்), கல்யாணியை விடுவித்து, அவரது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளுமாறு அனுப்புகிறார். நாராயணின் தாய், தந்தையைக் காண அவருடன் செல்லும் கல்யாணி வழியில் சில உண்மையை அறிகிறார்.

அவர் நாராயணுடன் சேர்ந்தாரா, சுய்யா என்ன ஆனாள் என்பதை மனதைப் பாதிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார், தீபா மேத்தா. எனக்கு தீபா மேத்தாப் பற்றியும், இவரின் படைப்புகள் பற்றியும் சில கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றிக் கூற இது சரியான தருணம் அல்ல; இடமும் அல்ல.

என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. ஒரே இடத்தில் வாழ்நாள் முழுவதும்? எத்தனை ஜீவன்கள் இது போல வாழ்வின் சுகங்களை அறியாமல் உயிரை விட்டிருக்கும்?. அதுவும் அந்தப் படத்தில் வரும் மூதாட்டியின் (வகீதா ரஹ்மான் என்று நினைக்கிறேன்) பாத்திரம்!. வாழ்வில் எதையும் அறியாதவர். ஏழு வயதில் யாரென்றே தெரியாத ஒருவரின் மரணத்திற்காக, ஆசிரமம் அனுப்பப்பட்டவர். அவருக்குப் பணிக்கப்பட்ட தொழிலை எழுபது ஆண்டுகளாகச் செய்பவர். வாழ்வில் சிறு இன்பத்தைக் கூட காணதவர். அவருக்கு கடைசி வரையில் இருக்கும் ஒரே ஆசை ஏழு வயதில் சாப்பிட்ட இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது. ஆனால் அவர்கள் பொறிக்கப்பட்ட எந்த பண்டத்தையும் சாப்பிடக்கூடாது. கடைசியில் சுய்யா கொடுக்கும் லட்டுவினை ஆசையுடன் சாப்பிட்டு உயிரை விடுவது மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. வாழ்வின் சூத்திரம் தான் என்ன? எத்தனை பேர் இது போன்ற சின்னச் சின்ன ஆசைகளுடன் உயிரை விட்டிருப்பார்கள். இது அங்கு இன்னமும் தொடருகிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் நமது நாட்டில் கணவனை இழப்பவர்களின் நிலை முன்பு போல மோசம் இல்லையெனிலும், இன்னும் பலர் அது போன்ற சமுதாயக் கட்டுபாட்டினை மீற முடியாமல் மனதில் சோகத்தினையும், விரக்தியையும், சமூகத்தின் தூற்றலையும் சந்தித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றனர்.

படத்தில் 'வைஷ்ணவ ஜன தோ' பாடல் வருமிடம் அற்புதம். அஜய் சக்ரவர்த்தி ('இசையில் தொடங்குதம்மா', புகழ்) பாடியிருக்கிறார். அற்புதம். சுய்யா, லிசா ரேயின் நடிப்பு அபாரம். பின்னணி இசைக் கோர்த்த மைக்கேல் டன்னா தனது பணியை திறம்படச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கைல்ஸ் நட்ஜென்ஸிற்கு சிறப்புப் பாராட்டு. அற்புதம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

படம் முடிந்ததும் காட்டப்பட்டக் குறிப்பு: இன்னும் இந்தியாவில் 50+ மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

நிச்சயமாகத் திரையிடப்பட வேண்டிய திரைப்படம். ஏன் சில மத அமைப்புகள் இதற்குத் தடையிடுகின்றன எனத் தெரியவில்லை. இதை மதத்தின் மீதான எதிர்ப்பாகக் கருதாமல், பெண்ணிணத்திற்கு இழைக்கப்படும் கொடுமையாகக் கருதினால் அனைவருக்கும் நல்லது. சில சமூக விரோதிகள், சுயநலத்திற்காக இட்ட கட்டுப்பாடுகள் இன்னும் பல கோடி மக்களின் வாழ்வை சீரழிப்பது வருத்தத்தைக் கொடுக்கிறது. இது சுயநலம் கூட என்று சொல்ல முடியாது. தான் இறந்த பிறகு, தனது மனைவி நன்றாக வாழக்கூடாது என நினைக்கும் கணவனை என்னவென்று சொல்வது? சுயநலத்தைத் தவிர கொடூரமான வார்த்தை ஏதாவது இருக்கிறதா? தனக்கு எய்ட்ஸ் வந்திருக்கிறது என்று அறிந்தும், மனைவியுடன் உறவு கொள்ளும் கணவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

1 கருத்து :

Geetha Sambasivam சொன்னது…

There are so many widow's hostels in Northern parts of India. We saw one in Mathra in 2003 September when we were touring Mathra and other places. Most of them are Bengalis and sent by their parents.Some ashramams are supporting them financially and physically. The didn"t even think this as a blunder to those women. May be the women there are brainwashed by their relations and others.