வெள்ளி, மார்ச் 17, 2006

இது 'ஈ' படத்தின் விமர்சனம் அல்ல. 'ஈவது விலக்கேல்' என்று தர்மத்தைப் பற்றிக் கூறுவதற்காகவும் அல்ல. ஜாலியாக நான்கு பவுண்டரிகள். நாலு விசயம் பற்றிப் படித்துப் படித்து எனக்கே சோர்ந்து விட்டது. ஆனாலும் சுதர்சன் கோபால், சில நாட்களுக்கு முன்பாக "உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. யாரும் உன்னைக் கூப்பிடமாட்டேன்றாங்க. பிழைச்சுப்போ", என மின்னஞ்சல் தட்டி விட்டிருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கவும், உங்களை சலிப்படையக்கூடாது எனவும் ஜாலியாக நான் அடித்த சில பவுண்டரிகள் இதோ.



அ) மாற்றிக் கொள்ள விரும்பும் நாலு விசயங்கள்

1. ஏதாவது தமிழ்படம் பார்க்கும் போது, படத்தின் மீது ஏற்படும் கோபத்தினால், இனிமேல் எந்தத் தமிழ் படத்திற்கும் வரக் கூடாது என முடிவு கட்டிவிட்டு மீண்டும் அடுத்த வார இறுதியில் ஏதாவது ஒரு குப்பை படத்திற்காக, தியேட்டர் வாசலில் நிற்பது. போன வாரம் கூட கள்ளத்தனமாகக் காதலியைப் பார்த்து உதை வாங்கினாலும், நாளை மீண்டும் 'பட்டியல்' போடச் சொல்கிறது மனசு.

2. இந்த மாதத்திற்கு இனிமேல் புத்தகமோ, இசைத் தட்டுகளோ எதுவும் வாங்கக் கூடாது என நினைத்து விட்டு மீண்டும் லேண்ட்மார்க்-ல் சென்று நிற்பது.

3. நண்பர்களிடம் அரசியல், மதம், ஜாதி பற்றி என்ன நேர்ந்தாலும் விவாதம் செய்யக்கூடாது என தீர்மானித்து விட்டு, பேச்சு ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் நானும் விவாதத்தில் கலந்து கொள்வது. சிறிது நிமிடங்களுக்குப் பிறகு எனக்கே "சே. இன்னைக்கும் ஆரம்பித்து விட்டோமா?", எனத் தோன்றும்.

4. என்னுடைய கேர்ள் பிரண்ட் ;) இல்லாத போது தானே இந்த மாதிரி எல்லாம் கதை விட முடியும். நாலாவது என்ன சொல்வது எனத் தெரியவில்லை; அதனால் தான்.



ஆ) பள்ளி / கல்லூரியில் வேடிக்கையான நாட்கள்

எல்லாருக்கும் பள்ளியிலும், கல்லூரியிலும் ஜாலியாக கிண்டலடிக்க ஏதாவது ஒரு ஆசிரியர் கிடைப்பார். நான் என்ன புண்ணியம் செய்தேனோ, நான் படித்த பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் இன்றும் கூட நினைத்துக் கொள்ளும் படி சில ஆசிரியர்கள் கிடைத்துள்ளனர்.

1. எனது 11, 12-ம் வகுப்பு இயற்பியல் ஆசிரியரை சுத்தமாக யாருக்கும் பிடிக்காது. அவர் மாணவர்களை அடிப்பதற்காக ஓர் சிறிய கம்பை வைத்திருப்பார். வகுப்புத் தலைவன் எனது நண்பன் தான். ஒரு நாள் என்னை இம்போஷிஷன் எழுதச் சொன்னார் என்ற கடுப்பில், மாலையில் வீட்டிற்குத் திரும்பும் போது, "என்னடா கம்பு இது. காய்ஞ்ச தென்னங்குச்சியை வச்சிக்கிட்டு அடிச்சிட்டு இருக்கார்", என சொல்லி, எனது நண்பன் வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் கேளாமல் அந்தக் கம்பை ஒடித்து வெளியே எறிந்து விட்டேன். மறுநாள் வகுப்பில், "யார் யார் இம்போஷிஷன் எழுதல. எழுந்திருங்க", எனக் கேட்டார். எழுதாத மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களைத் திட்டி விட்டு, வெளியே நிற்கச் சொல்லி அனுப்பி விட்டார்.

"ஹா. இவருக்கு எங்க என்னை எல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது", என நான் என்னுடைய சீட்டிலேயே அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து, என்னை அவர் பெயர் சொல்லி அழைக்க, நான் தெரியாதது போல் பின்புறம் திரும்பிப் பார்த்தேன்.

உடனே அவர், "ஏலே. உன்னைத் தான்லே. தெரியாதது மாதிரி பின்னாடி திரும்பிப் பார்க்குற. இம்போஷிஷன் எழுதினியா?", என மறுபடியும் கேட்டார்.

நான் மெதுவாக எழுந்து, "இல்ல சார்", என்றேன்.

"பின்ன தைரியமா உள்ள உட்கார்ந்துருக்க.... வெளிய வாலே", என்றார்.

பின்னர் வகுப்புத் தலைவனான எனது நண்பனை நோக்கி, "லீடர் அந்தப் பிரம்பை (தென்னங்குச்சி தான்) எடு", என்றார்.

எனக்கோ 'திக்'கென்றது. அய்யோ நேத்து தானே ஒடிச்சு வெளியே போட்டோம். அதையும் இவன் வேறு சொல்லிட்டான்னா என்னை அடிப் பின்னிடுவாரே என்று நினைத்தேன். அவனோ என்னைத் திரும்பிப் பார்த்தான்.

பின்னர் சில விநாடிகள் தேடிப் பார்ப்பது போல் பார்த்து விட்டு அவரிடம், "சார், பிரம்பைக் காணும் சார்", என்றான்.

"பிரம்பைக் காணுமா? எவன்லே எடுத்தது", என மாணவர்களைத் திரும்பிக் கேட்க. யாரும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தனர்.

மறுபடியும் எனது நண்பனிடம் திரும்பி, "உன்னைத் தான் அடிக்கணும்லே. ஒழுங்கா சொல்லிடு யாரு எடுத்தாங்கன்னு", என்றார்.

அவனோ என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க, நானோ, "டாய் சொல்லிடாதடா என்னப் பொளந்திடுவார்", என்று பரிதாபமாகப் பார்க்க. அவனது நிலைமையோ அதை விடப் பரிதாபம்.

பின்னர் அவனிடம், "ஸ்டாப் ரூமில் ஒரு கம்பு இருக்கு அதை எடுத்திட்டு வாலே", என்றார். அவன் ஒரு காய்ச்ச வேப்பங்குச்சியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான். "அதுக்கு அந்த தென்னங்குச்சியே பரவாயில்லையே", என நினைத்துக் கொண்டிருக்கும் போதே 'சட்டு சட்டு', என அடிகள் விழுந்தன. என்னைக் கதறக் கதற அடித்த, சில விநாடிகளில் அந்தக் கம்பும் உடைந்து விட்டது. எனக்கோ யப்பா பிழைச்சோம் என்ற சந்தோஷம்.

உடனே லீடரிடம் திரும்பிய அவர், "உன்னைத் தான் அடிக்கனும்லே. அந்தக் கம்பை எங்கே?", எனத் திரும்பக் கேட்டார். ஆஹா விடமாட்டார் போல என்பது போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டே அவரைப் பார்த்தேன்.

பின்னர் என்ன நினைத்தாரோ, "போலே போய் 10 ரவுண்ட் கிரவுண்டை சுத்து", என்றார். ஆஹா. வச்சாருடா என நினைத்துக் கொண்டே மைதானத்தை சுற்ற ஆரம்பித்தேன். மைதானத்தில் பொண்டு பொடிசுகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க, பெரிய பையன் ஒருவன் மட்டும் ஓடினால் அசிங்கமாக இருக்குமே என்று மெதுவாக நடந்தேன். எனது வகுப்பு வரும் போது மட்டும் ஓடுவது போல் பாவ்லா காட்டி விட்டு, மற்ற இடங்களில் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போல நடந்தேன்.

இதையும் எப்படியோ அவர் கவனித்து விட்டார் போலும். அடுத்த முறை வகுப்பிற்கு அருகில் வரும் போது, கையை வகுப்பின் கதவில் ஸ்டைலாக வைத்துக் கொண்டு "நீ செய்ற திருட்டுத்தனத்தைக் கண்டுபிடித்து விட்டேன்", என்ற பெருமைக்கு அடையாளமாகப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். எனக்கோ, "மாட்டுனடா இன்னைக்கு", என்ற பயம் வேறு. ஆனாலும் ஒரு தைரியம். "இதெல்லாம் எங்கப் பார்த்திருக்கப் போறாரு. ஒரு வேளை போதும்னு சொல்லி உள்ளக் கூப்பிடுவாறோ?", என்ற நினைப்பு.

வகுப்பின் அருகில் வந்ததும், என்னைப் பார்த்து, "ஏலே. என்ன பண்ணுற? ஓடுறான்ன, நடக்குற? எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? ஒழுங்கா ஓடுனா 10 ரவுண்ட். இல்லாட்டி இந்த பீரியட் ஃபுல்லா ஓடுவ, ஞாபகம் வச்சுக்க..." என்றார். முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு, இப்போது ஓட்டம் பிடித்தேன்.

என் நேரம், சிறிது நேரம் கழித்து அங்கே வந்த மற்றொரு ஆசிரியர் (8-ம் வகுப்பெடுப்பவர்), அவரிடம், "என்ன சார் பையன் ஓடுறான்", என கேட்க, அதற்கு நமது இயற்பியலார் விளக்க, நமது 'விளக்கம்கேட்டார்', "இவனா சேட்டை பண்ணிக்கிட்டே இருப்பானே சார். அன்னைக்கு நைட் ஸ்டடியில பேசிக்கிட்டே இருந்தான் சார்", என்றார். ஆஹா வத்தி வச்சுட்டாரா என்று நினைத்துக் கொண்டே அருகில் சென்றேன். "ஏய் பார்த்தியா. உன்னைப் பத்தி எல்லாரும் கம்ப்ளயிண்ட் பண்ணுறாங்க... உன்னை கண்ட்ரோல் பண்ண முடியாம", என்று பெருமையடித்தார். நல்ல வேளை, பெல் அடித்துத் தொலைத்தார்கள்.

அப்போது அங்கு வந்த எனது வகுப்பு ஆசிரியை, "சார். ஏன் சார் பையனை ஓட விடுறீங்க", என அவரிடம் கேட்க, அடித்தது ஆரம்பமா என எனது மனசுக்குள் கலக்கம். நம்ம வாத்தியார் விளக்க, எனது வகுப்பாசிரியையோ, "சார் நல்ல பையன் சார். அப்படியெல்லாம் பண்ண மாட்டான் சார். பாவம் விட்டிடுங்க சார்", என்று சர்டிபிகேட் கொடுத்து என்னைப் பார்த்து "சார் சொல்ற மாதிரி நடந்துக்கணும்", என்றார். "சரிங்க டீச்சர்", என்றேன். உடனே வாத்தியார், "டீச்சர்(?) சொல்றாங்கன்னு விடுறேன். இனிமேலுக்கு ஏதாவது பண்ணுண அப்புறம் என்ன நடக்குன்னே எனக்குத் தெரியாது", என்று ஒரு ஹீரோவைப் போல சொல்லிவிட்டுச் டீச்சரிடம், "டீச்சர். நீங்க சொல்றீங்கன்னு இவனை இப்படியே விடுறேன். இல்லாட்டி பனிஷ்மெண்ட் வேற மாதிரி இருக்கும்", என்று அவரிடம் பேசிக்கொண்டே சென்று விட்டார்.

சில மாதங்கள் கழித்து ஏதோ ஒரு தேர்வு முடிந்து, விடைத்தாள்களைத் திருத்திக் கொடுத்தார். இப்போது, அவருக்கு என்னைப் பிடிக்காது. எனக்கோ அவரை சுத்தமாகப் பிடிக்காது. ('மின்னலே' டயலாக்). விடைத்தாளை வாங்கிய எனக்கோ அதிர்ச்சி. அப்படியெல்லாம் கதை சொல்ல மாட்டேன். ஆனால், அவ்வளவு குறைவாக மதிப்பெண்கள் எடுத்ததில்லை. இதுவரை பெயில் ஆனதில்லை. இம்முறை முதல்முறையாக பெயில் மார்க். 68 மதிப்பெண்கள். ஆஹா வேலையைக் காட்டிடாருடா என நினைத்து விடைத்தாளைத் திருப்பிப் பார்த்தேன். நிறைய கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைத்துப் போட்டிருப்பது தெரிந்தது. மற்ற மாணவர்கள் அவரிடம் விளக்கி மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.




நானும் வரிசையில் நின்று, "சார். இந்தக் கேள்விக்கு சரியா தான் சார் எழுதியிருக்கிறேன். ஒரு மார்க் தான் போட்டிருக்கிறீங்க"

"தப்புலே. அதுக்கு ஒரு மார்க் கொடுத்ததே பெரிசு. வேற?"

"எத்தனை மார்க் எடுத்திருக்க?", என்று புன்சிரிப்புடன் கேட்டார்.

"68 சார்"

"ஹீம். பெயில் மார்க் வாங்கியிருக்கே. ஒழுங்காப் படிக்காட்டி இப்படித் தான் ஆகும். சேட்டை பண்ணுனா முட்டை மார்க் தான் வாங்குவே?", என்றார்.

அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

"பேசுலே", என்றார்.

சிறிது விநாடிகள் கழித்து,

"சார் இது பத்து மார்க் கொஸ்டீன் சார். ஆனா நீங்க 5 மார்க் கொஸ்டீன்னு நெனச்சு 3 மார்க் தான் போட்டிருக்கீங்க", என்றேன்.

வெடுக்கென்று என்னிடமிருந்து பேப்பரை இழுத்து,

"உனக்கு 3 மார்க் போட்டதே சாஸ்திலே. நீ எழுதுனது தப்பு. உனக்கு சைஃபர் மார்க் தான் போடனும்", என்று சொல்லி அந்த 3 மார்க்குகளையும் அடித்து முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு, முட்டை போட்டார்.

"போலே போய் உட்காரு. ஒரு தடவை பெயில் ஆகு. அப்பத்தான் உனக்கு அறிவு வரும்..."

இப்போது மார்க் 65. இனிமேலும் இவரிடம் மார்க் கேட்டால், மொத்த மார்க்கே 10 வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று நினைத்து அமைதியாக எனது இடத்தில் வந்து அமர்ந்தேன்.

2. எனது கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வர முதலில் பஸ் நிலையம் வரை சைக்கிளில் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் பிடித்து வீடு வந்து சேர வேண்டும். ஒரு நாள் கல்லூரி முடிந்த பிறகு, உடனிருந்த நண்பனின் பேச்சைக் கேட்டு பஸ்ஸிற்காக வைத்திருந்த காசை செலவழித்து விட்டேன். "பஸ் நிலையம் வந்ததும் உனக்கு சில்லறை மாற்றித் தருகிறேன்", என்றான். சரின்னு சொல்லி நானும் நம்பி காசைக் கொடுத்தேன் . சிறிது நேரம் கழித்து பஸ் நிலையத்திற்குப் புறப்பட்டோம். நான் சைக்கிளை மிதித்தேன். 'சீக்கிரம் போடா, சீக்கிரம் போடா எங்க ஊர் பஸ் போய்விடும்', என்று நண்பன் சொல்ல, முக்கால் மணி நேரம் வேக வேகமாக சைக்கிளை மிதித்தேன். பஸ் நிலையத்திற்கு 300 மீட்டர் அருகில் வரும் போது, சைக்கிள் தடால் என்று ஆடியது. பார்த்தால் பின்புறம் பார்டியைக் காணும். "மாப்ளே எங்க ஊர் பஸ் வந்திடுச்சு. இதை விட்டா வேற பஸ் எனக்குக் கிடையாது. எப்படியாவது ஊர் போய் சேருடா", என வேகமாகக் கூறிவிட்டு கண்ணுக்கு முன்னாடி ஓடிப் போய் சாலையின் மறுபுறம் இருந்த நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டான் நண்பன். "அடப்பாவி! உன்னை நல்லவன் நெனச்சு காசு கொடுத்தேனேடா. இப்படி பண்ணிட்டேயே... இனிமேல நான் எப்படி ஊருக்குப் போறது", என என்னை நானே நொந்து கொண்டு, வேறு வழியில்லாமல் சைக்கிளிலேயே மிதித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

3. கல்லூரியில் எனது டேட்டாபேஸ் ஆசிரியர் என்ன சொன்னாலும், ஆர்வமாகக் கேட்பது போல மண்டையை ஆட்டிக் கொண்டிருப்பேன். அவருடன் எனக்கு நல்லப் பழக்கமும் உண்டு. அவர் வகுப்புகள் எப்போதும் மதிய உணவு இடைவேளை முடியும் போது தான் வரும். அவர் வேறு பாடங்களை என்னைப் பார்த்தே நடத்துவராதலால், நானும் கவனிக்கிறோனோ இல்லையோ, கண்ணை அசைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். திடீரென்று, ஒரு நாள், பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து திடீரென்று ஓர் கேள்வி கேட்டார். சரி, அவர் ஏதோ சொல்கிறார் என நினைத்து நானும் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தேன். "யோவ். உன்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கேன். மண்டையை ஆட்டிட்டு இருக்க. எந்திரியா", எனத் திட்ட ஆரம்பித்தார். "சே. அசிங்கமாப் போச்சே", என என்னை நானே திட்டிக்கொண்டு பதில் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

அதே ஆசிரியர், "C லாங்குவேஜ் கற்றுக்கொள்ள வேண்டும்", என ஆசைப்பட்டு, என்னை அவரது விட்டிற்கு வாரா வாரம் வரச் சொல்வார். இது ஒரு மூன்று மாதங்கள் நடந்தது. அவரது ஊரோ 35 கி.மீட்டர் தள்ளி இருந்தது. அங்கு சென்று, பஸ் நிலையத்தில் இறங்கி, ஒன்றரை கி.மீட்டர் நடந்து தான் அவரது வீட்டை அடைய வேண்டும். வீட்டிற்கு சென்றதும், "எதாவது சாப்பிடுறியா", எனக் கேட்டு காபி கொடுப்பார். பின்னர் கம்ப்யூட்டரை ஆன் செய்து, "இந்தப் புரோகிராம் எப்படின்னு சொல்லிக்குடுய்யா", என்று ஏதாவது கேட்பார். நான் சொல்ல ஆரம்பித்தால், "ஒரு சாம்பிள் புரோகிராம் போட்டு சொல்லிக்கொடேன்", என்பார். நான் புரோகிராம் செய்ய ஆரம்பித்ததும் "இதப் செஞ்சிக்கிட்டு இரு. அதுவரைக்கும் நான் தூங்கிகிட்டு இருக்கேன். முடிஞ்சதும் எழுப்பு", எனக் கூறிவிட்டு, சட்டையை கழற்றி அருகில் வைத்து விட்டு, நடு ஹாலில் தரையில் அப்படியே காலை நீட்டி படுத்துறங்கிவிடுவார்.

எனக்கோ, "அடப்பாவமே, நமக்கு இதெல்லாம் தேவையா? சனிக்கிழமையும் அதுவுமா, அங்க இருந்து வந்து இப்படி இவர் தூங்குறதைப் பார்க்கத்தான் வந்தோமா?" என சுயபரிதாபம் ஏற்படும். புரோகிராம் போட்டுவிட்டு எழுப்பவும் முடியாது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். சிறிது நேரம் கழித்து, "சார்.. முடிஞ்சது பாருங்க", என்றால் தூக்கக்கலக்கத்தோடு "சொல்லுப்பா எப்படி ஒர்க் பண்ணுது", என்பார். நான் சொல்வதை கேட்பது போல சிறிது நேரம் கேட்டு விட்டு, "போதும்பா மிச்சத்த அடுத்த வாரம் பார்த்துக்கலாம்", எனக் கூறிவிட்டு அவரது பைக்கில் என்னை ஏற்றி பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் சேர்த்து விடுவார்.

எனது வீட்டில் வேறு போன் இருந்துத் தொலைத்தது. நான் ஏதாவது ஓர் வாரம் செல்லாவிட்டாலும், வீட்டிற்குப் போன் செய்து, "அவனை வரச் சொல்லுங்க", என்று வீட்டில் சொல்லிவிடுவார். நான் போக மாட்டேன் என்று சொன்னாலும், வீட்டில் "வாத்தியாரே கூப்பிடுறார். போய்ட்டு வர்றதுக்கு என்ன?", என்று அவருக்கு சப்போர்ட் வேறு. என் தலைவிதி.

4. நான் படித்தக் கல்லூரி ரொம்ப ஸ்டிரிக்டான கல்லூரி. கணிப்பொறி துறையாதலால், ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணி நிரந்திரமும் கிடையாது. அந்த டேட்டாபேஸ் ஆசிரியருக்கோ ஹெ.ஓ.டி, பிரின்சியைப் பார்த்தாலே பயம் தான். அவர் இல்லாத நேரத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பார். ஸ்டாப் ரூமில் பெரும்பாலும் சில ஆசிரியைகளுடன் (அனைவரும் அதற்கு முந்தைய வருடம் தான் டிகிரி முடித்தவர்கள்) இவரும் உட்கார்ந்திருக்கும் நேரம் பார்த்து, யாராவது மாணவர்கள் சென்றால் அவ்வளவு தான். அதவும் சரியாகப் படிக்காத மாணவர்கள் கேட்கவே வேண்டாம். "யோவ் அறிவிருக்காயா; சொன்னா புரியாதாயா, அது இருக்காயா", எனக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள் மாலை வகுப்பு முடிந்ததும், அவரைப் பார்க்க வேண்டும் என அழைத்திருந்ததால் அவரை பார்க்க ஸ்டாஃப் ரூமிற்குச் சென்றேன். பல ஆசிரியைகள் அருகில் அமர்ந்திருந்தனர். அங்கு லேப் அஸிஸ்டெண்ட் ராஜாவும் இருந்தான். ராஜா மிகவும் சின்னப் பையன். வயது 20 தான் இருக்கும். யாருக்கும் பயப்படவே மாட்டான். அங்கு அவரை விட ஒன்றிரண்டு வருடங்கள் அதிகமாகவே பணிபுரிபவன். அவரும் அவனை மடக்க வேண்டும் என்று ஏதாவது கேட்பார். அவனோ அதைப் பற்றி சட்டை செய்யாமல் ஏதாவது பதில் சொல்வான். "யோவ் ராஜா. இங்க வாய்யா உன்னைய என்ன சொன்னேன்..", என்றால் "இம். என்ன சொன்னீங்க. உங்களுக்கு வேற வேலை இல்ல சார்", என்ற ரீதியில் தான் பதில் சொல்வான்.

உள்ளே நுழைந்த என்னைப் பார்த்து, "வாப்பா உன்னை எதுக்கு வரச்சொன்னேன்னா...", என ஆரம்பித்தவர், என்னைப் பின் தொடர்ந்து வந்த எம்.சி.ஏ மாணவனைப் பார்த்து விட்டார். ஏதோ அவர் சொல்லி அவன் செய்யவில்லை போலும். அது தான் தருணம் என அவனைப் பிடித்து,

"யோவ் அறிவிருக்காயா. இப்ப வர்ற. உன்னை எப்பய்ய வரச் சொன்னேன்", என ஆரம்பித்தார்.

"சார்......", என அந்த மாணவன் இழுக்க

"அதெல்லாம் தெரியாது. இன்னைக்கு இருந்து முடிச்சிட்டு தான் போகணும்", என்றார்

"சார். டிரையினுக்கு டைம் ஆகிடுச்சு. ஊருக்குப் போகணும்", என்றான்.

"என்னய்யா டைம் ஆகிடுச்சு. கொடுத்த அஸைன்மெண்டை செய்யத் தெரியாது. ஊருக்கு மட்டும் கரெக்ட் டயத்துக்குப் போகத் தெரியுது. எந்த ஊர்யா உனக்கு", என்று அதிகாரமாகக் கேட்டார்.

"விருதுநகர் சார்"

"எப்படியா போற"

"டிரையின்ல சார்"

"டிரைய்ன் எத்தனை மணிக்குய்யா?"

"இன்னும் அரை மணி நேரத்துல சார்"

"எங்கய்யா போய் ஏறுவ?", என்றார்.

உடனே அருகிலிருந்த ராஜா

"சார் விருதுநகருக்குப் போறதுக்கு சிவகாசி ஸ்டேசன்ல ஏறாம விருதுநகர்லயா போயா டிரெய்ன் ஏறுவாங்க, என்ன சார் கேள்வி கேட்குறீங்க", எனக் கூற, அருகில் அமர்ந்திருந்த ஆசிரியைகள் அனைவரும் கொல் என சிரித்து விட்டனர். சிரிப்பு அடங்க வெகு நேரமாகி விட்டது. "ஆஹா அசிங்கமாப் போச்சே", என நினைத்து, ராஜாவை அருகில் அழைத்து அவனிடம் மெதுவாக,

"யோவ் ராஜா"

"என்ன சார்?"

"யோவ் ராஜா நான் போட்டிருக்குற இந்த செருப்பால கூட என்னை அடி. இந்த மாதிரி லேடிஸ் ஸ்டாஃப் இருக்கும் போது என்னை அவமானப்படுத்தாத...", என பரிதாபமாகக் கேட்டார்.

"பின்ன என்ன சார். இருக்குறது சிவகாசி. போக வேண்டியது விருதுநகர். சிவகாசிக்கு அடுத்த ஸ்டேசன் விருதுநகர். சிவகாசில ஏறாம எங்க போய் சார் ஏறுவாங்க? என்ன சார் கேள்வி கேட்குறீங்க", என்றான்.

"யோவ் கிறுக்கா. அதுக்கு இப்படியாய்யா சத்தம் போட்டு பேசுவ. போய்யா போய் வேலையைப் பார்", என அனுப்பினார். இந்த ஆசிரியரைப் பற்றி இன்னும் பல கதைகள் உள்ளன.

இ) பெங்களூரில் மாற்ற விரும்பும் விசயங்கள்

1. அனைத்து வாகனங்களிலிருந்தும், ஒலிப்பானை கழற்றி எறிந்து விட்டு, யாராவது ஒலி எழுப்பவேண்டுமானால் ஜன்னலைத் திறந்து, "எனக்கு வழி விடுங்கள்; ஓரமாகப் போங்கள்", எனக் கத்தச் செய்வது. பிரேக்கின் மீது கால் இருக்கிறதோ இல்லையோ, எப்போதும் ஒலிப்பான்கள் மீது கை இருக்கிறது.

2. ஃபோரம் போன்ற ஷாப்பிங் மால்களுக்கு நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு உடையை சுருக்கிப் போட்டு விட்டு, பின்னர் கூட்டமாக சேர்ந்து கொண்டு, "ஷாப்பிங் மால்களில் ஈவ் டீசிங் அதிகரித்து விட்டது", என கோஷம் போடும் சிலப் பெண்கள் (போன வாரம் கூட இங்கு போராட்டம் நடத்தினர், சில கல்லூரிப் பெண்கள்). ஆண்கள் மீது தவறில்லை எனக் கூறவரவில்லை. தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், ஈவ் டீசிங் போன்ற விசயங்களைத் தடுப்பதில் பெண்களுக்கும் பொறுப்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது எனக் கூறுகிறேன். இவர்கள் இப்படி ஆடை அணிவதனால் (இதனால் மட்டுமே அல்ல!), ஒழுங்காக வந்து போகும் மற்ற பெண்கள் துன்பப்பட வேண்டிய நிலைமை.

3. எந்த கடைக்குச் சென்றாலும் அது பொன்னுசாமியாக இருக்கட்டும், நாயுடு மெஸ்ஸாக இருக்கட்டும், உடுப்பியாக இருக்கட்டும், பெரிய ஹோட்டலாக இருக்கட்டும், எங்கு பார்த்தாலும், "மச்சான். எப்படிடா ஸ்டர்ட்ஸ் புரோகிராம் எழுதுறது", "டேய் அதுல ஒண்ணும் இல்லடா........" என்று அளந்து விடும் சாப்ட்வேர் என்ஜினியர்கள். பிரஷர் / ஒரு வருடம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள நபர்கள் என்றால், கடையில் உட்கார்ந்து இண்டர்வியூ பற்றிப் பேசிக்கொண்டிருப்பது.

"என்கிட்ட வந்து கேட்டாடா. எவ்வளவு வேணும்ணு. நான் 3 லக்ஸ் கொடுங்க. இல்லாட்டி ஓக்கேன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனவ 3.5 லக்ஸ்க்கு ஆஃபர் லெட்டர் கொடுத்துட்டா."

"சரி அங்க ஜாயின் பண்ணுறியா?"

"அங்கெல்லாம் எவன்டா ஜாயின் பண்ணுவான்? IBM-லேயும் ஆஃபர் இருக்கு. யோசிக்கணும்"

4. எத்தனை செல்போன் எண்கள் மாற்றினாலும், அதனை எப்படியாவது மோப்பம் பிடித்து, கால் செய்யும் தனியார் வங்கி, கல்சன்டன்ஸி நிறுவனங்கள். எனது நண்பர் இது போன்று வரும் அழைப்புகளை வித்தியாசமாக கையாளுவார்.

"சார். நாங்க சிட்டி பேங்குல இருந்து கால் பண்ணுறோம்"

"சொல்லுங்க பாஸ்"

"சார் உங்களோட credit history base பண்ணி உங்களுக்கு பெர்சனல் லோன் சேங்க்ஷன் ஆகிருக்கு. வாங்க விருப்பமா?"

"எவ்ளோ பாஸ்?"

"சார் 2 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரைக்கும்"

"அப்படியா பாஸ்? எனக்கு ஒரு 50 லட்சம் வேணும். அரேஞ்ச் பண்ணிட்டு போன் பண்ணுறீங்களா?"

"................"

அதன் பிறகு அவர் எங்க லயன்ல இருக்கப் போகிறார்.

இன்னொருத்தர்.

"சார் எங்களோட புது கிரிடிட் கார்ட். லைஃப் டைம் பிரீ கார்ட் சார்....." பேசிக்கொண்டே போய், "வாங்கிக்கோங்க சார்..........."

"அல்ரெடி என்கிட்ட ஒரு கார்ட் இருக்கே"

"சார் இது லைஃப் டைம் பிரீ கார்ட் சார்............"

சிறிது விநாடிகள் மவுனத்திற்குப் பிறகு.

"கரெக்ட் தான். எனக்கும் ஒரு கார்ட் தேவைப்படுது, ஆனா என்னொட்ட இந்த கார்ட்ல ஒரு பிராபளம் இருக்கே"

"என்ன சார்"

"இல்ல இந்த கார்ட யூஸ் செஞ்சு ப்ர்சேஸ் பண்ணி இதுவரை பணம் கட்டல. பரவாயில்லையா?"

"எந்த பேங்க் சார்"

"உங்க பேங்க் தான்"

ஈ). நான் அழைக்க விரும்பும் நபர்கள்:

எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் எழுதிவிட்டனர். யாரை அழைப்பது எனத் தெரியவில்லை. மேலும் யாரையும் துன்பப்படுத்த விரும்பாதலால், இத்தோடு விட்டு விடுகிறேன்.

குறிப்பு: சிவகாசி, விருதுநகர் - மாற்றப்பட்ட ஊர் பெயர்கள்.

5 கருத்துகள் :

Sud Gopal சொன்னது…

//ஆனாலும் சுதாகர் சில நாட்களுக்கு//

கிர்ர்ர்..கிர்ர்ர்..உங்களை டேகியது சுதாகர் இல்லை....சுதர்சன்

உங்களோட டச் கொஞ்சம் ஜாஸ்தி இருக்கும் பதிவு.வார இறுதியில பின்னூட்டறேன்.

ஸ்ருசல் சொன்னது…

சுதர்சன் மன்னிக்கவும்.

ஆம். சுதாகர் இல்லை. சுதர்சன் தான். எழுத்துப் பிழை. உடனே மாற்றி விடுகிறேன்.

Udhayakumar சொன்னது…

பெங்களூரைப் பற்றி சொன்னது 100 க்கு 100 உண்மை. ஹார்ன் அடிப்பவனின் மண்டைமேல் கொட்டவேண்டும்னு ரொம்ப நாளா ஆசை. கூடிய விரைவில் அது நிறைவேறும்ணு நம்பரேன்.

பெயரில்லா சொன்னது…

Nanba ,irunthalum unga JUDGE MAIYA nee ippadi otta kudathuda.Dai ellorudaiya school life ore mathiri iruukeda.
Bangaloroda Landamrke sathamum figurum thanda.Atha eppadi matha.mudincha tru pannuda.

Athu yaruda thutuu kudukkama unna cyclela aluthavittathu.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

ஏங்க.. ஒரு பேச்சுக்கு நாலு வார்த்தை எழுத சொன்னாருன்னா, நாலு பக்கம் எழுதிட்டு..ம்ம்... படிக்க நல்லா இருந்ததுங்கற ஒரே காரணத்துனால தப்பிச்சீங்க..