சனி, மார்ச் 11, 2006

நான் ரசித்த திரைப்படக் காட்சிகள் - முதல் பாகம்

நான் ரசித்த திரைப்படக் காட்சிகள் - முதல் பாகம்

இது நான் ஏற்கனவே நட்சத்திர வாரத்திற்காக முடிவு செய்திருந்த பதிவு அல்ல. இன்று பதிவதிற்காக வைத்திருந்த இடுகையை வெளியிடுவதற்கு தயக்கமாக இருப்பதால், திடீரென்று முடிவு செய்து காலையில் தயாரித்தது.

இசையும், சினிமாவும் அனைவருடைய வாழ்வின் அங்கம். இரண்டும் விரும்பாமல் வாழ்வது மிகக் கடினம். இப்போது ஒரு வயது நிரம்பாத குழந்தைகள் கூட சினிமா பாட்டிற்கு தலையாட்டி, தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கம் தலையைத் திருப்புவதைப் பார்க்கலாம் முடியும்.

நான் அதிகாமாக சினிமா பார்க்காவிட்டாலும் கூட, ஏறக்குறைய அனைத்து சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் விரல் நுனியில் இருக்கும். இதற்குக் காரணம், சிறுவனாக இருக்கும் போது, என்னை அதிகமாகத் தொட்ட ஊடகங்களான ரேடியோவும், செய்தித்தாள்களும். ஒரு செய்தித்தாள் விடாமல் படித்து விடுவேன். தினமலர், தினகரன், தினத்தந்தி, மாலை முரசு, மாலைமலர் என. கல்லூரி வரை இதுவே நிலை. அப்படிப்பட்ட நிலையில் சினிமா என்னைப் பாதிக்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யப்பட்டிருப்பேன் என நினைக்கிறேன். சரி விசயத்திற்கு வருகிறேன். இதோ எனக்குப் பிடித்த சினிமாக் காட்கள் - பின்னணி இசையின் அடிப்படையில்.

1. ஜென்டில்மேன்

ஏ.ஆர்.ரகுமான் அப்போது தான் பிரபலமடைந்து வந்து கொண்டிருந்தார். ஷங்கருக்கு முதல் படம். கே.டி.குஞ்சுமோன் ஏற்கனவே வசந்த காலப் பறவைகள், சூரியன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தார். பாடல்கள் படம் வருவதற்கு முன்பாக பெரிய ஹிட். இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. தினமணியில் வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். சினிமாவிற்காக வரும் 4 பக்கத்தில், மூன்றாவது பக்கத்தில் சிறந்த ஆடியோ பாடல்கள் பட்டியல் இடம்பெறும் (பத்து படங்கள்). அதில் ஒரே சமயத்தில் மூன்று படங்கள் ரகுமானுடையது முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தது. 1. கிழக்குச் சீமையிலே 2. ஜென்டில்மேன் 3. திருடா திருடா. மூன்றும் மெஹா ஹிட்.

என்னை பாதித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட, என்னை சிந்திக்க வைத்த வசனங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றன. ஒரே தினத்தில் அர்ஜூன் இரண்டு மரணங்களைச் சந்தித்து திதி கொடுத்துக் கொண்டிருப்பார். மருத்துப் படிப்பில் சேர முடியாமல், போய் விட்டதே என்ற ஆத்திரம் ஒரு புறம். அதே காரணத்திற்காக உயிரை விட்ட, நண்பனின் மரணம். தனது படிப்புச் செலவிற்கு பணம் திரட்டுவதற்காக தற்கொலை செய்து கொண்ட தாயின் இறப்பு, அமைச்சரின் ஆணவப் பேச்சு இவையெல்லாம் சேர்த்து இவரை அழுத்த உடனே அரிவாளைத் தூக்கிக் கொண்டு எழுவார்.

அப்போது நம்பியார் பேசும் வசனமும், பின்னணியில் வரும் பெண் குரலின் ஹம்மிங்கும் அருமையாக இருக்கும். அந்த வசனத்தை, அந்த பின்னணியில் கேட்பதற்கே சுகமாக இருக்கும். இப்போது கேட்டாலும் அந்தக் காட்சி ஏதோ மாதிரியான உணர்வை உண்டாக்கிவிடும்.

"இப்படி ஒன்ன மாதிரி ஒவ்வொருத்தனும் அருவாளைத் தூக்கிட்டா இந்த நாடு என்ன ஆகும்னு தெரியுமா? இவன் ஒருத்தனை வெட்டுனா போதுமா? இவனை வெட்டுனா இன்னொருத்தன் வருவான். இவங்க எல்லாம் வெட்ட வெட்ட புறப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. ... இன்னொரு முனியம்மா சாகக்கூடாது. இன்னொரு ரமேஷ் சாகக்கூடாது அதுக்கு என்ன வழின்னு யோசி. எப்படி போறதுன்றது முக்கியம் இல்ல. எங்க ய் சேர்றோம்ன்றது தான் முக்கியம். ... நீ போய் சேர்ற இடம் கோயிலா இருக்கட்டும்", என்று சொல்லி அறிவுரை செய்வார். டச்சிங்காக இருக்கும். சொன்னது போல இதற்கு அழகு சேர்ப்பது பின்னணி ஹம்மிங். சுனாமி நிவாரண நிதிக்காக, சன் டி.வி ஒரு நிமிடக் காட்சியை அடிக்கடி ஒரு மாதமாக ஒளிபரப்பு செய்தது. இதே ஹம்மிங்கை அதற்கு உபயோகப்படுத்தியிருந்தது, ஒரு வாரமாக அது எந்தப் படம் எனத் தெரியாமல் விரக்தியில் அலைந்து கொண்டிருந்தேன். பின்னர் தான் அது ரகுமான் படம். ரகுமான் படத்தில் என்ன படம் என ஒவ்வொன்றாக யோசித்து கண்டுபிடிக்க முடிந்தது.

2. அண்ணாமலை

இந்தப் படம் ஒரு கமர்ஷியல் சினிமாவாக இருந்தாலும், அதில் இடம்பெற்ற சிலக் காட்சிகள் இப்போது பார்த்தாலும் நன்றாகத் தானிருக்கின்றன. ஏலத்தில் கேட்ட தொகையை கட்டுவதற்காக தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்திருப்பார், சரத்பாபு. அப்பொழுது, அதனை வங்கியிலிருந்து வாங்கி வரும் ஜனகராஜ், ரஜினியிடம் கொடுப்பார். ரஜினி அதை வாங்கிவிட்டு, மனோரமாவைப் பார்பார். குஷ்பூவைப் பார்ப்பார். ஜனகராஜைப் பார்ப்பார். பின் மனோரமாவை அழைத்து அந்தப் பத்திரத்தை சரத்பாபுவிடம் கொடுக்கச் சொல்வார். அப்போது, மனோரமா ரஜினியிடம் "நீ கோடி கோடியாகக் கொட்டும் போது கூட இவ்வளவு சந்தோசப்படலை...", என்று கூறிவிட்டுச் செல்வார். அந்தக் காட்சியும், அதில் இடம் பெறும் வயலின் இசையும் அற்புதமாக இருக்கும். அதே வயலின் இசை, படத்தின் பிற்பகுதில் மூன்று-நான்கு இடங்களில் இடம்பெறும். (ஒன்று மகளை அடித்து விட்டு மனோரமாவிடம் பேசும் போது, ரஜினி மகள், குஷ்பூவிடம் ஒரு பையனின் கார் கண்ணாடியை உடைத்து விட்டேன் எனக் கூறுமிடம்).

தேவா, அதே வயலின் இசையை, அப்படியே மாற்றாமல் பாட்ஷா படத்திலும் உபயோகப்படுத்தியிருந்தார் (ரஜினி - சரண்ராஜ் காட்சிகள்).

3. காதல் மன்னன்

இதைப் பற்றி ஏற்கனவே எனது இனியவை நாற்பது இடுகையிலும் தெரிவித்திருந்தேன். இரண்டாம் பாதியில் அஜீத்தும் - மானுவும் (சரி தான் என்று நினைக்கிறேன்).\ சந்திக்கும் சில காட்சிகளில் இந்த வயலின் இசை இடம் பெறும். அற்புதமாக இருக்கும். மானு பத்திரிக்கை கொடுக்க வரும்போது, அதற்கு முன்பாக மெஸ்ஸில் சந்திக்கும் போது என ஞாபகம் இருக்கிறது.

4. கன்னத்தில் முத்தமிட்டால்

'சட்டென நனைந்தது நெஞ்சம்' என்ற அருமையான குறும்பாடல், இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது; மாதவன், சிம்ரனிடம் மணம் புரிந்து கொள்ள சம்மதம் கேட்குமிடத்தில். அருமையான பாடல், மின்மினி பாடியது. இது தான் மின்மினி ரகுமானுக்குக் கடைசியாகப் பாடியது என நினைக்கிறேன். அதன் பிறகு அவர் குரல் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்று நினைக்கிறேன்.

இதனைக் கேட்க விரும்புவோர், எனக்கு மின்னஞ்சல் தட்டி விடுங்கள். அந்த காட்சியும், பாடலும் மிக அருமையாக இருக்கும்.

5. முதல்மரியாதை

இதில் இரு காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டுமே பெரும்பாலும் அனைவரும் தெரிவிக்கும் காட்சி தான். 1. சிவாஜி கல்லைத் தூக்கும் காட்சி. 2. சிவாஜி ராதா வீட்டில் சாப்பிடும் காட்சி.

முதல் காட்சியில், ஒரு அருமையான கிடார் இசையும், கிளாப் இசையும் இடம்பெற்றிருக்கும். இரண்டாம் காட்சியில் சிவாஜி ராதாவிடம் சாப்பாட்டின் அருமையை விவரிக்கும் போது, "பூங்காற்று திரும்புமா" எனற பாடல் முதலில் சோகமாக பின்னணியில் இசைக்கப்படும் (வயலின் என்று நினைக்கிறேன்), சிறிது விநாடிகள் கழித்து மீண்டும் வேகமாக அதே ராகம், தபேலாவில் இசைக்கப்படும். அந்தக் காட்சி முடியும் தருவாயில் மீண்டும் அதே ராகம் புல்லாங்குழலில் இசைக்கப்படும். ஒரே ராகம் மூன்று வித்தியாசமான மனநிலைக்கு ஏற்றபடி, மூன்று இசைக்கருவில். அழகாக இருக்கும்.

6. இருவர்

இந்த திரைப்படம் சரியாக ஓடாவிட்டாலும் அற்புதமான இயக்கத்திற்காகவும், ஒளிப்பதிவிற்காகவும் (ஈஸ்ட்மென் கலர் போலிருக்கும்), இசைக்காகவும் அடிக்கடி பார்ப்பேன். இதில் ஓரிடத்தில் தனது மனைவி போலிருக்கும் சினிமா நடிகை ஐஸ்வர்யா ராயை, மோகன்லால் காரில் வைத்து ஏற்றிச் செல்வார். அப்போது ஐஸ்வர்யா, மோகன்லாலிடம் 'என்னை புஷ்பா எனக் கூப்பிடுங்கள்', என்பார். அதற்கு மோகன்லால் மறுக்கவே, காரில் இருந்து குதித்து விடுவார். குதித்தவரைக் காப்பாற்றி கட்டி அணைப்பார், மோகன்லால். அப்போது ஹரிணியின் குரலில் அற்புதமான ஓர் பின்னணி இசை ஒலிக்கும்.

"பூவோடு வண்டு கண் தூங்கிப் போன நேரத்தில்
ஆறோடு அலைகள் கண் தூங்கிப் போன நேரத்தில்
விண்ணோடு மீன்கள் கண் தூங்கிப் போன நேரத்தில்
என்னோடு காதல் உன் காதல் மலர்ந்து கொண்டதே

ல ல லா..... லலலா ..........."

என்று ஒரு நிமிடம் வரும். அற்புதமாக இருக்கும்.

இரண்டாம் காட்சியில், மோகன்லாலின் பண்ணையார் வேஷம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு இன்னொரு நபரிடம் கொடுக்கப்படும். அவர் போலீஸ் வேடம் தரிப்பார். அப்போது ஒரு கிடார் இசை, சீரியஸாக வரும். அற்புதம் அற்புதம்.

7. 7G ரெயின்போ காலனி.

ரவி, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். சோனியாவின் தம்பியை அவர் ஆட்டத்திற்கு சேர்க்க மறுக்கவே, சோனியா சில சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு தனியாக விளையாடுவார். அப்போது பின்னணியில் P.B.ஸ்ரீனிவாஸின் குரலில் வரும் பாடல் அற்புதமாக இருக்கும்.

"இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்.
இருவிழிப் பார்வை விளக்குகள் ஏற்றும் ...."

என்று ஆரம்பித்து அடுத்த காட்சியில் ரவியின் வீட்டில் மீண்டும் தொடரும்.

"அணைக்கின்ற போது, எரிகின்ற தீயோ
பாதையின் ஓரம் பனித்தின்னும் பூவோ
இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்"

எனச் செல்லும். அற்புதம். என்னவொரு இசை, குரல்!

இதற்காகவே இந்த படம் வந்த சமயத்தில் ஞாயிறன்று டி.வி முன் அமர்ந்து அடிக்கடி சேனல்களை மாற்றிக் கொண்டிருப்பேன். எப்படியாவது இரண்டு, மூன்று முறைவாது வந்துவிடும்.

குறிப்பு: அவசரத்தில் வெளியிட்ட பதிவு. இதே போல குறிப்பிடப்பட வேண்டிய பல காட்சிகள் உள்ளன (பின்னணி இசையில் மட்டுமே). உங்களுக்கு விருப்பமிருந்தால், இன்னும் பல பாகங்களாகத் தொடர்கிறேன்.

2 கருத்துகள் :

பூனைக்குட்டி சொன்னது…

நல்லாயிருந்துச்சுங்க ஸ்ருசல், நிச்சயமாத் தொடருங்க.

ஸ்ருசல் சொன்னது…

நன்றி மோகன்தாஸ், கண்டிப்பாகத் தொடருகிறேன்.