திங்கள், நவம்பர் 07, 2005

கால் சென்டரில் ஓர் இரவு

ஊரே உறங்கிக் கொண்டிருக்க, குர்கானில் உள்ள ஓர் கால்சென்டரில் 1000 கால்செண்டர் ஏஜெண்ட்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனத்திற்காக சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அங்குள்ள ஒரு குழுவினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் கடவுள்.

கதைகள் படிப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று. மனித உறவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு நாள் / ஒரு வாரம் செலவு செய்வது வீண் விரயம் என நினைப்பவன். அப்படியே படித்தாலும் அது பெரும்பாலும் சயின்ஸ் பிக்சனாகவோ அல்லது புகழ்பெற்றக் கதையாக மட்டுமே இருக்கும். (பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற வகைகள் வேறு.)

இந்த வருட ஆரம்பத்தில் அப்படி நான் படித்தப் புத்தகம் "Five Point Someone". அந்தப் புத்தகத்தை கடையில் தற்செயலாக எடுத்து திரும்ப வைக்கும் போது அதன் தலைப்பு என்னைக் கவர்ந்தது "What not to do at IIT". அதனை எழுதியவர் சேத்தன் பகத் என்ற முன்னாள் ஐஐடி மாணவர். நல்ல புத்தகம். மூன்று ஐஐடி மாணவர்கள் (அலோக், ஹரி, இன்னொருவர் பெயர் மறந்து விட்டது), அவர்களின் பேராசிரியர் செரியன் மற்றும் அந்த பேராசிரியர் குடும்பத்தினைப் பற்றிய கதை. அந்த பேராசிரியரின் மகன் தன் தந்தையைப் போல ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் 3 மூன்று வருடங்களாக முயன்றும் இடம் கிடைக்காமல் போகவே தற்கொலை செய்து கொள்கிறார். பேராசிரியரின் மகளை அந்த மூன்று மாணவர்களில் (ஹரி என நினைக்கிறேன்) ஒருவன் காதலிக்கும்படியாக கதை செல்லும். அதனைப் பற்றி கண்டிப்பாக யாராவது புத்தக விமர்சனம் எழுதியிருக்கலாம் (கூகுள் செய்யம்). புத்தகத்தில் பிடித்தது கடைசிப் பக்கங்கள். அதிலும் அந்த பேராசிரியர் (செரியன்) விழாவில் தன் மகனைப் பற்றியும், ஐஐடியில் சேர விரும்புவோர்களைப் பற்றியும் பேசுவது.

ஐஐடி பற்றிய என்னுடைய பதிவினைக் காண இங்கே சொடுக்கவும்

அவரின் இரண்டாவது புத்தகத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்த ஆசிரியரிடமிருந்து ஓர் மின்னஞ்சல். One Night @ the call center புத்தகம் முடிவு பெற்றாகி விட்டதாகவும் $18 அனுப்பினால் ஆசிரியர் கையொப்பமிட்ட புத்தகம் அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கலாமா அல்லது சில மாதங்கள் காத்திருக்கலாமா என யோசித்து, காத்திருக்கலாம் என முடிவெடுத்தேன். தீபாவளி விடுமுறை விட்டு வந்ததும் சனிக்கிழமை புத்தகக் கடைக்கு சென்றேன். அந்தப் புத்தகம் வந்திருந்தது. விலை அவரின் முந்தைய புத்தகத்தைப் போலவே 95 தான்.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே கதையையும் சொல்லி விடுகிறார் ஆசிரியர். கதையை இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் வலைத்தளத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி அருகில் உள்ள குர்கான் நகரில் உள்ள ஒரு கால் சென்டரில் ஒரு இரவில் நடப்பதைப் பற்றியது தான் கதை. கதையில் வரும் பாத்திரங்கள் அந்த கால் சென்டரின் ஒரு குழுவில் பணிபுரியும் ஆறு பேர் மற்றும் அவர்களின் மேனேஜர் பக்ஷி. கதை நாயகன் ஷியாம், அவன் முன்னாள் நண்பி பிரியங்கா, வுரூம் மல்கோத்ரா, ராதிகா, இஷா, மற்றும் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

சியாமும், பிரியங்காவும் 4 வருடக் காதலர்கள். இடையில் ஏற்பட்ட சண்டையால் பிரிவு. பிரிவு வாட்டுகிறது. பிரியங்காவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு.

வரூம் மல்கோத்ரா ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு பின்னர் பணத்திற்காக கால் சென்டர் பணிக்கு வருகிறார்.

ராதிகா காதலித்து மணம் புரிந்தவள். அவள் கணவன் கல்கத்தாவில் பணிபுரிகிறான். மாமியார் தொல்லை. கணவனுக்கு கள்ளத் தொடர்பு. (இது அந்த இரவு தான் தெரிய வருகிறது)

இஷா மாடலிங் வாய்ப்பிற்காக அலைந்து கொண்டிருக்கிறாள். அவள் மேல் வுரூமிற்கு காதல். ஆனால் அவளுக்கு மாடலிங் தான் உலகம்.

முன்னாள் ராணுவ வீரர் தன் மகன், பேரனைப் பிரிந்து வாழ்கிறார்.

இப்படி இவர்கள் அனைவருக்கும் குடும்ப பிரச்சினை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை அவர்கள் மேனேஜர் பக்ஷி மற்றும் வேலை நிரந்திரமின்மை.

அந்த சிக்கல்களிலிருந்து அவர்கள் எப்படி ஒரே நாள் இரவில் மீண்டு வருகிறார்கள் என்பதே கதை. தினமும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் அவர்களுக்கு அன்று இரவு கடவுளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பின்பு அவர்கள் எனன செய்கின்றனர் என்பதனைப் பற்றி 300 பக்கங்களில் விவரித்துள்ளார் ஆசிரியர்.

கதை சாதாரணமானது தான் என்றாலும் சுவாரசியமாகவே செல்கிறது. ஆனால் உரையாடல்களில் எகத்தாளமும், குறும்பும் சாதாரணமாகத் தெறிக்கிறது. உதாரணத்திற்கு பெண்களைப் பற்றியும், அவர் மானேஜரைப் பற்றியும் சியாம் மனதில் கொடுக்கும் பதில்கள். மேலும் கால் சென்டர் ஊழியர்களின் டேட்டிங், துணையை சுலபமாக மாற்றும் குணம், அவர்களின் வேலைப் பளு, ஆகியவற்றையும் குறிப்பிடத்தக்க அளவில் தொட்டிருக்கிறார். கால் சென்டரைப் பற்றிய முன் அனுபவம் இல்லாமல் வெறும் கேள்வி ஞானத்தினை மட்டுமே கொண்டு இது போன்ற படைப்பினைக் கொடுப்பது சாதாரணமான விசயமல்ல. அந்தப் பணியை திறம்பட செய்திருக்கிறார். இந்தக் கால இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். (அவருக்கும் 35 வயது தான் என நினைக்கிறேன்)

இன்னும் பல சுவாரசியமான விசயங்கள் என்னைக் கவர்ந்தன. வரூம் மல்கோத்ரா, பத்திரிக்கையில் பணிபுரியும் போது அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு "ஏன் அரசியல்வாதிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை?". சமூகத்தில் தொழில் அதிபர்கள், பொறியியல் வல்லுனர்கள், திரை துறையினர், அரசுத் துறை ஊழியர்கள் என பலரும் தற்கொலை செய்வது கொல்வது போல் ஏன் அரசியல்வாதிகள் மட்டும் தற்கொலை செய்து கொள்வதில்லை? என அமையுமாறு அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார்.

ஆனால் கிளைமேக்ஸில் அவர் பயன்படுத்தும் உத்திகளில் உடன்பாடு இல்லை. கால் சென்டரில் அழைப்புகள் குறைவதால் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுக்கும் போது, தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வரூம் ஒரு யோசனை சொல்கிறான். அவன் யோசனைபடி அனைத்து வாடிககையாளர்களுக்கும் தொலைபேசி செய்து அவர்களின் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கியிருக்கிறது என இவர்கள் சொல்வது ஒப்புக்கொள்ளமுடியாத ஒன்று. அதுவும் அதற்கு மைக்ரோசாப்ட் வோர்ட் rand() உத்தியைப் பயன்படுத்தியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம். கம்ப்யூட்டர் வாங்கிய அனைவருமே முட்டாள்களாக இருக்க மாட்டார்களே! முடிவானது, Contact (By Carl Sagan), Digital Fortress (By Dan Brown) புத்தகங்களின் முடிவினைப் போலவே சப்பென்று இருந்தது.

சில பாத்திரங்களுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. மேலும் அந்த கடவுள் பாத்திரம் சொல்லும் விசயங்களும் வித்தியாசமானது ஒன்றும் அல்ல.

"ஒரு இரவில் நடப்பதனைப் பற்றி ஒரு புத்தகம் முழுவதும் கூறமுடியுமா?" என்று ஆசிரியர் ரயிலில் பிரயாணம் செய்யும் போது கேட்கும் கேள்விக்கு இன்னும் சிறிது அழுத்தம் கொடுத்து அவர் மனசாட்சியிடம் கேட்டிருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு வித்தியாசமான முயற்சி தான். அவரின் முந்தைய புத்தகத்துடன் ஒப்பிடும் போது 65 மதிப்பெண்களே கொடுப்பேன் இந்தப் புத்தகத்திற்கு.

ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொடுத்திருந்த லிங்கில் இருந்த படம் நன்றாக இருந்தது. ஆனால் புத்தகத்தில் அட்டைப் படத்தில் அணுகுண்டிற்கு பயன்படுத்தப்படும் குறியீடு போல ஒரு நட்சத்திரம் வரையப்பட்டிருந்தது ஏனோ? அதே குவாலிஸ் படத்தினைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

போன புத்தகத்தினைப் போல் பெரும்புகழை பெற்றுத் தராவிட்டாலும் இந்த புத்தகம் ஓரளவிற்கு புகழை (அவருடைய வித்தியாசமான முயற்சிக்காகவாவது) தேடித் தரும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ருசல்

6 கருத்துகள் :

Boston Bala சொன்னது…

---கதைகள் படிப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று---

இப்படி சொல்லிவிட்டே, இரண்டு புத்தகங்கள் படிச்சுட்டீங்க போல :-))

சுவாரசியமான அறிமுகங்கள்.

பெயரில்லா சொன்னது…

Dear Srusal

Thanks for your intro - S.Thirumalairajan

Aruna Srinivasan சொன்னது…

சுவாரசியமான விமரிசனம்.

ஸ்ருசல் சொன்னது…

பாலா, திருமலை, அரூணா மூவருக்கும் என்னுடைய நன்றி.

ஸ்ருசல்

மீனாக்ஸ் | Meenaks சொன்னது…

முதல் நூலை விட இந்த இரண்டாம் நூல் சுமார் ரகம் தான் என்றாலும் ஷ்யாம்-ப்ரியங்கா வின் டேட்டிங் அனுபவங்களின் போது நிகழும் உரையாடல்கள் மிகவும் ரசிக்க வைத்தன என்பது என் கருத்து.

ஸ்ருசல் சொன்னது…

ஆம் மீனாக்ஸ், ஒப்புக் கொள்கிறேன்.

காதல் பற்றி எழுத அவருக்கு நன்றாக வருகிறது.