புதன், நவம்பர் 09, 2005

ஊடகங்களில் விளம்பரம்

குமுதம் என்று கேட்டால், தி சென்னை சில்க்ஸ் அட்டை படம் போட்ட புத்தகம் தான் கிடைக்கிறது. அந்த அட்டையைத் தூக்கிப் பார்த்தால் மட்டுமே, அஸின் சிரித்துக் கொண்டிருக்கும் படம் தெரிகிறது. அட்டைப் படத்தில் நடிகைகள் ஆக்கிரமித்தது போய் இப்போது விளம்பரங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கி விட்டன. புத்தகங்களைப் புரட்டும் போது, முதல் பக்கமே விளம்பரமாக இருப்பதும், தொலைக்காட்சித் தொடர்களில் அரை மணி நேர நிகழ்ச்சியில் வரும் 10 நிமிட விளம்பரங்களும், ஒவ்வொரு பாடலுக்குமிடையில் வரும் 3 நிமிட விளம்பர இடைவேளையும், டி.டி யில் ஓவருக்கு 5 பந்துகள் வீசப்படும் கிரிக்கெட் பந்தயங்களும் அலுப்பைத் தருகின்றன.

நாட்டு நடப்பிற்கும், பொழுது போக்கிற்கும் இப்போது நாம் அதிகம் நம்பி வருவது ஊடகங்களையே. ஊடகங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி பெற்று, இன்று மனித வாழ்வின் ஓர் அத்தியாவசியமான அங்கமாகி விட்டது. ஒரு நாள் செய்தித் தாள் வராமலிருந்தாலோ, தொலைக்காட்சி தெரியாவிடிலோ, இணையத் தொடர்பு இல்லாவிடிலோ, அன்றைய தினம் முழுவதும் வெறுமையாகிப் போவதை உங்களில் பலரும் உணர்ந்திருப்பீர்கள். பண்டிகைக்கு மறுதினம் செய்தித் தாள்கள் வராமல், பேயறைந்தது போல இருந்த நிலையை தொலைக்காட்சிகளும், இணையங்களும் மாற்றி உள்ளன என்பதனை மறுக்க முடியாது. ஆனால் இந்த ஊடகங்ளினால் மனிதனின் அறிவு வளர்கிறதோ இல்லையோ, விளம்பரத்துறையும் அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் நன்கு வளர்ச்சியடைந்து வருகின்றது. விளம்பரங்கள் இல்லாத நாளிதழோ, வார / மாத இதழோ, தொலைக்காட்சி சானலோ, வலைப் பக்கமோ காண்பது மிகவும் அரிது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் விளம்பரங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டதாகவே தோன்றுகிறது.

விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் இல்லாமல் எந்த ஒரு ஊடகம் சார்ந்த நிறுவனமும், ஊடகங்களில் விளம்பரம் செய்யாமல் எந்த ஒரு நிறுவனமும் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. ஏன் ஊடக நிறுவனங்களே தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை, பிற ஊடகங்களில் இட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு குங்குமம் விளம்பரங்கள் சன் டி.வியிலும், F.M விளம்பரங்கள் விகடன் இதழ்களிலும், ஸ்டார் மூவிஸ், HBO பட விளம்பரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் சாதாரணமாகத் தென்படும் விசயங்களே.

இப்போதெல்லாம் வார இதழ்களில், செய்திப் பக்கங்கள் எங்கு இருக்கின்றன என தேட வேண்டியதிருக்கிறது. விளம்பரங்களைத் தவிர்த்து விட்டு பக்கங்களை வேகமாகத் திருப்பும் போது, 'கற்றதும் பெற்றதும்'-ம் சேர்ந்து திருப்பப்பட்டு விடுகின்றன. பின் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது.

இந்த வாரம் எத்தனைப் பக்கங்கள் விளம்பரங்களாக அச்சிடப்பட்டுள்ளன என வார இதழ்களில் எண்ணிப் பார்த்ததில்...

ஆனந்த விகடன் - 25 முழு, 2 அரை பக்கங்கள் (மொ. பக்கங்கள்: 192)

குமுதம் - 19 முழு, 8 அரை பக்கங்கள் (144)
கல்கி - 11 முழு பக்கங்கள் (56)
அவுட்லுக் - 34 முழு, 2 அரை பக்கங்கள் (82)
துக்ளக் - 8 முழு பக்கங்கள் (38)
இந்தியா டுடே(த)- 9 முழு பக்கங்கள் (58)

இது தீபாவளிக்கு அடுத்த வாரத்தில் வந்த வார இதழ்களில் கணக்கிடப்பட்டவை. பண்டிகையின் போது இது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தனைக்கும் யாரும் அந்த விளம்பரங்களை உற்று நோக்குவது போல் தெரியவில்லை. முன், பின் அட்டை விளம்பரங்கள் மட்டுமே கண்ணில் படுகின்றன. மற்றவை பார்க்கப்படாமலேயே தவிர்க்கப்படுகின்றன.

நாளிதழ்களில் உள்ள விளம்பரங்கள் மட்டுமே ஓரளவிற்கு கவனிக்கப்படுகின்றன. அந்தக் காலங்களில் அரசு டெண்டர்களும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே நாளிதழ்களில் இடம் பெற்று வந்தன. அதுவும் இப்போது மாறி, நாளிதழ்களிலும் மற்ற விளம்பரங்கள் வரத் துவங்கி விட்டன. டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில், மொத்தம் வரும் 16 பக்கங்களில் தினமும் சராசரியாக 10 கால் பக்க விளம்பரங்கள் வருகின்றன. இன்று கூட 5 முழு பக்க விளம்பரங்கள், 5 அரை பக்க விளம்பரங்கள், மற்றும் 12 கால் பக்க விளம்பரங்கள் வந்திருந்தது. (Bangalore Times & Times Ascent தவிர்த்து)

தொலைக்காட்சிகளில் இதன் நிலைமை இன்னும் மோசமே. சில நேரங்களில் அனைத்துச் சானல்களிலும், ஒரே நேரத்தில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருப்பது எரிச்சலையேத் தருகின்றது. ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்களும் மனதைக் கவர்கின்றன. சீரியல்களுக்கு இந்த விளம்பரங்களே பரவாயில்லை என்றும் சில நேரம் தோன்றுகின்றது. ஆனாலும் விளம்பரங்களின் ரசிப்புத் தன்மை இந்தக் கட்டுரையின் மையக் கருத்தில் இருந்து மாறுபடுவதால், அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பே சானல்கள் என்று சொல்லி, வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களும் விளம்பரங்களை சகட்டு மேனிக்கு ஒளிபரப்புவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. இலவச சேவையாக இருந்தால் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளலாம். பணத்தையும் கட்டி விட்டு ஏன் நேயர்கள் மேல் விளம்பரங்களைத் திணிக்க வேணடும்? சில இந்திய செய்தி சானல்களில் கூட விளம்பரங்களின் நேர அளவு கூடிக்கொண்டே செல்கிறது. CNN-லும், BBC-லும் மிகக் குறைந்த அளவிற்கே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

விளம்பரங்களினால் சில நன்மைகளும் இருக்கின்றன. வார இதழ்களுக்கு நாளிதழ்களைப் போல வாசகர்கள் இல்லாதக் காரணத்தினாலும், அதிகமான பக்கங்கள் (கலர் பக்கங்கள் உட்பட) கொண்ட புத்தகங்கள் 5-10 ரூபாய் விலைக்கு கொடுக்கப்படுவதாலும் ஏற்படும் பணச்சுமையை சமாளிக்க இந்த விளம்பரங்கள் உதவும். ஆனாலும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வது நல்லதே. சில தொலைக்காட்சி சானல்களுக்கும், முக்கியமாக எல்லா பே சேனல்களுக்கும் இது பொருந்தாது என்பது என் கருத்து.

இணையத்தில், Spam மின்னஞ்சல்கள், பெரும்பாலான (செய்தி, தேடிகள், சினிமா, இசை சார்ந்த) வலைப்பக்கங்களில் வரும் விளம்பரங்கள், Spyware, Adware என்று இதன் எல்லை பரந்து கிடக்கின்றது. இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளில் குறைந்தது 60 சதவீத கணினிகள் ஏதாவது Adware சம்பந்தப்பட்ட சாப்ட்வேர்கள் ஒளிந்து ஓடிக்கொண்டிருக்கின்றன என ஒரு சர்வே தெரிவிக்கின்றது. மேலும் இந்த Spyware, Adware துறை 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருமானத்தையும், Anti-Spyware, Anti-Adware, Anti-Spam துறைகளும் பல பில்லியன் டாலர்கள் வருமானத்தைக் கொடுக்கும் துறைகளாகிவிட்டன.

இந்தக் கட்டுரை வெறும் பார்வை மட்டுமே. தீர்வு என்று ஒன்று இதற்குக் கொடுப்பது சிறிது கடினமே.

ஸ்ருசல்

1 கருத்து :

பழூர் கார்த்தி சொன்னது…

நல்ல பதிவு.. ஆனந்த விகடனும், குமுதமும் ரொம்பவே மாறி விட்டன... விளம்பரங்களும், சினிமா செய்திகளுமே பக்கங்களை நிரப்புகின்றன :-)