திங்கள், செப்டம்பர் 19, 2005

ஐஐடி என்ன செய்ய வேண்டும்?

ஐஐடி பற்றிய அறிமுகம் தேவையில்லை. உலகத் தரம் வாய்ந்த கல்விக் கூடம். இங்கே படித்த மாணவர்களில் பலர், உலகின் பல பெரிய நிறுவனங்களின் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கே படித்த மாணவர்களில் 90% மாணவர்கள், வெளிநாட்டிற்கு மேல்படிப்பிற்க்காகவும், பெரிய நிறுவனங்களில் பணிபுரியவும் செல்கின்றனர். இத்தகைய பெருமையுடைய கல்விக்கூடத்தில் பயில போட்டி இருப்பதில் வியப்பு இல்லை.

ஐஐடி, JEE எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கின்றது.
சுமார் 2000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் 1,50,000 மேற்பட்ட மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுகிறார்கள். நுழைவுத்தேர்வுக்கான், ஆயத்த பணிகளை 90% மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகின்றனர்.

சமீபத்தில், ஐஐடி (இந்திய தொழிட்நுட்ப கல்லூரி) கூட்டமைப்பு, மாணவர் சேர்க்கை விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
  • இந்த ஆண்டில் இருந்து, இரண்டு முறைகளுக்கு மேல் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது.
  • குறைந்தது, 65% சராசரி மதிப்பெண்களாவது 12-ம் வகுப்பில் பெற்று இருக்க வேண்டும்.

இப்படி சில...

இதற்கு, மாணவர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம். மாணவர்களுக்கு எப்படியும் ஐஐடி-ல் அனுமதி பெற்று விட வேண்டும் என்ற வேட்கை தான். சிலர் 2-4 ஆண்டுகள் முயற்சி செய்து ஐஐடி அனுமதி பெறுவதும் உண்டு.

மாணவர்களின் இந்த விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால், ஐஐடி-ஐப் பொருத்தவரை, சில விசயங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

1. படித்து முடித்ததும் ஐஐடி மாணவர்கள் மேற்கொள்ளும் பணி.

2. பெற்றோர்களின் உந்துதல். (இதனைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்)

ஐஐடி மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்

1946 ல், சர்க்கார் கமிட்டியின் பரிந்துரையின்படி, அப்போதைய பிரதமர் நேரு அவர்களால், நான்கு மண்டலங்களில் (முதலில் காரக்பூரில்; கிழக்கு மண்டலத்தில், பின்னர் பம்பாய், சென்னை, கான்பூர், டெல்லி ஆகிய இடங்களில்) ஐஐடி ஆரம்பிக்கப்பட்டது.

"ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளர்ச்சிக்கு அதனுடைய (அதன் மாணவர்களின்) ஆராய்ச்சியின் வாயிலாக உறுதுணையாக இருக்க வேண்டும்; இந்தியா தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறவும் ஐஐடி பாடுபடவேண்டும். சிறந்த அறிவியலார்களையும், கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டும்" என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், என்ன நடந்து கொண்டு இருக்கிறது? இங்கு படிக்கும் (பெரும்பாலான) மாணவர்களுக்கு, நாட்டுக்கு சேவை புரியும் எண்ணத்தை விட, நாடு கடந்து செல்ல வேண்டும் என்ற வேட்கை மிக அதிகமாக உள்ளது. 95% மாண்வர்கள், தங்களுடைய படிப்பு முடிந்ததும், வெளிநாட்டிற்க்குச் செல்கின்றனர்; எதற்கு? 90% பேர் மேல்படிப்பிற்கென சொன்னாலும், படிப்பு முடிந்ததும் பெரும்பாலானோர் திரும்பி வருவதில்லை. மேல்படிப்பிற்குச் செல்வதில் தவறே இல்லை. ஆனால் திரும்பி வராமல் அங்கேயே இருப்பது தான் தவறு. இப்படியே சுமார், 80000 பேர் அங்கேயே தங்கி விட்டனர். இது இந்த நாட்டிற்கு மிக பெரிய இழப்பு.

இந்தியாவில், அங்கு கிடைப்பது போல் வருமானம் / வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை தான். ஆனால், அதையே காரணம் காட்டி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பித்தல் சரியாக இருக்காது.

தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த, அங்கே பணி புரியட்டும்.

ஆனால், ஐஐடி-ல் சேர்வதற்கும், வெளிநாடு சென்று படிப்பதற்கும், அங்கு பணிபுரிவதற்கும், அந்த நாட்டு குடியுரிமை பெறுவதற்கும் காட்டும் ஆர்வத்தை இந்தியா திரும்புவதற்கும் காட்டினால் நலம்.

இந்தியா இழந்து கொண்டிருப்பது சாதாரண நபர்கள் அல்ல. நாட்டின் தலைசிறந்த அறிவியாலர்களை. ஆனால் அவர்கள் அந்த நாட்டில் தங்களுடைய அடையாளத்தை இழப்பதற்கு (இந்திய குடியுரிமை) அவர்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அங்கு இருக்கும் அனைவரும் தங்களின் பொருளாதாரத்தை நன்கு உயர்த்தி, அந்த நாட்டின் பொருளாதாரம், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழி வகுத்துள்ளனர். ஆனால் அவர்களின் தரம் உயர வழி வகுத்த நாடு உயரவும் அவர்கள் பாடு படவேண்டும். அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு அனுப்பும் பணமும், 10-20 வருடங்கள் கழித்து சில நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கும் நன்கொடையும், நாடு அவர்களுக்கு செய்த உதவிக்கு ஈடாகாது.

பல கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு கல்லூரி படிப்பு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. பல லட்சக்கணக்கான பேருக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு, சிறந்த கல்வி, மற்றும் வசதி அவர்களுக்கு கிடைக்கின்றது என்பதனையும் அவர்கள் மறந்து விடக் கூடாது.

அவர்கள் சொல்லலாம்; எங்களின் திறமையினால் தான் நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறோம் என்று; மறுக்க முடியாது. ஆனால் அவர்களை இவ்வாறாக உயர்த்த, இந்த சமுதாயம் (கெட்ட / நல்ல விசயங்கள்), நமது கல்விமுறை, போட்டி, நமது நாட்டின் அரசியல் சீர்கேடு முதலானவைகளும் முக்கிய காரணிகள்.

அதே நேரத்தில், மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணமானது, இந்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றது. இவர்கள் அயல்நாட்டிற்கு சென்று சம்பாதிப்பதற்காகவும், அந்த நாடுகள் வளர்ச்சி பெறவும் மட்டும் இந்தப் பணம் செலவிடப்படவில்லை. பணத்தை விட அவர்களின் சேவை இங்கு தேவை என்பதை அவர்கள் நினைவு கொள்தல் வேண்டும்.

இந்த ஜனநாயக நாட்டில் (?), யாரையுமே இங்கு தான் வாழ வேண்டும் என வலியுறுத்த முடியாது. அவர்கள் கூறும், அரசியல் சீரழிவு, ஊழல், லஞ்சம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதியின்மை போன்றப் பல பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக, இந்த நாட்டை விட்டு செல்வது மட்டும் தீர்வாகாது. அதே நேரத்தில், பலர், இங்கிருந்து கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. Infosys நாராயண மூர்த்தி, நந்தன் நில்கேனி, அருண் சோரி, K.V.காமத் (ICICI), உள்பட பலர். இன்னும் பலர், ஐஐடி களில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை சொற்பமே. மற்றவர்களைப் போல, நந்தன் நில்கேனியும் வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், நாம் Infosys என்ற சிறந்த நிறுவனத்தை பெற்றிருக்க மாட்டோம். Infosys, தற்போது 30000 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது மட்டுமன்றி பொருளாதாரம் உயரவும் வழி வகுத்துள்ளது. ஐஐடிகளில் படித்தவர்களில் 50% இங்கு தங்கி இருந்தாலே நிச்சயமாக Infosys போல பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் துவக்கப்பட்டு சாதனைகள் பல செய்திருக்க முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு முன்னாள் ஐஐடி மாணவர், சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். அப்போது, ஓர் ஐஐடி ஆசிரியர், "இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஐஐடி மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிவதை ஊக்கப்படுத்த மாட்டோம்" என்றார்.

இது அவரின் பொறுப்பற்றத்தன்மைக்குச் சான்று. அந்த மாணவரின் மறைவு பெரிய இழப்புத் தான். ஆனால் இந்தியா போன்ற பெரிய, வளர்ந்து வரும் நாட்டில் இது போன்ற சில நிகழ்வுகள் சில நேரங்களில் தவிர்க்க முடியாததது. முதலில் இத்தகய ஆசிரியர்கள் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும். நம் நாட்டிற்கும் ஒரு வழி கிடைக்கும்.

என்ன தீர்வு:

ஐஐடி, சேர்க்கை விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஐஐடி மாணவர்கள், மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல எந்த தடையும் இல்லை. அவர்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த, அங்கு பணிபுரியவும் எந்த தடையும் இல்லை. ஆனால், 10 வருடங்களில் அவர்கள் தாய்நாடு திரும்ப ஆவண செய்ய வேண்டும்.

இந்தியா மாறாது; இது வாழ்வதற்கு உகந்த நாடு அல்ல என்று அங்கிருந்து கூவுவதை விடுத்து, அதை மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி செயலில் இறங்குவது சாலச் சிறந்தது.

ஐஐடி ஆசிரியர்கள், மாணவர்களை இந்தியா திரும்புவதற்கான அவசியத்தை எடுத்துரைத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த மாறுதல்கள் மிக மிக அவசியம்.

இல்லையென்றால், ஐஐடிகள், வெளிநாடுகளுக்கு தலைசிறந்த வல்லுனர்களை ஏற்றுமதி செய்யும் வெறும் மனித தொழிற்சாலைகளாகி விடும்.



ஸ்ருசல்

9 கருத்துகள் :

Voice on Wings சொன்னது…

10 வருடங்களுக்குப் பிறகு கட்டாயமாக நாடு திரும்ப வேண்டுமென்ற நிபந்தனை சற்று கடுமையாக உள்ளது. அவர்களது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகவுமுள்ளது. மேலும், அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்புக்களும் இங்கு கிடைக்காமல் போகலாம்.

அதற்கு மாற்றாக, நாடு திரும்பாதப் பட்சத்தில், அவர்கள் அனுபவித்த மானியக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தரவேண்டுமென்று கட்டாயப் படுத்தலாம்.

Unknown சொன்னது…

இந்தப் பதிவு நான் ஐ.ஐ.டியில் பயிலவில்லை எனினும் குற்றவுணர்வைத் தூண்டுகின்றது.

//ஐஐடிகள், வெளிநாடுகளுக்கு தலைசிறந்த வல்லுனர்களை ஏற்றுமதி செய்யும் வெறும் மனித தொழிற்சாலைகளாகி விடும்//.

உங்கள் பதிவில் தெளிவாகப் பேசுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நியாயமான ஆதங்கம்..

பெயரில்லா சொன்னது…

@voice on wings ,

10 வருடங்கள் என்பது மிகவும் அதிகம் என்பது என் எண்ணம்.. 10 வருடங்களில் தேவைக்கும் அதிகமாகவே பொருளீட்டி இருப்பார்கள்.. மேலும் வேலையில் மிகப்பெரிய பதவியில் இருப்பார்கள்..

ஐ.ஐ.டி போன்றவைகள், மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு நடப்பவை..., இவற்றின் மூலம் படித்தவர்கள், தாங்களாகவே மனமுவந்து தங்களால் முடிந்ததை பங்களிக்க வேண்டும், அந்த அளவு மனமுதிற்சி இல்லாவிடில், அதை இத்தகைய சட்டங்களில் மூலமே செயல் படுத்தவேண்டும்

ஐ.ஐ.டி என்பது, பணக்கார நகர்புற இளைஞர்களுக்கு என்பது எழுதப்படாத விதி போல் இருக்கின்றது...

என்னுடன் படித்த பல கிராமப்புர மாணவர்கள், நன்கு திறன் இருந்தும், கல்லூரி முடிக்கும் வரை ஐ.ஐ.டி பற்றிய ஒரு விழிப்புணர்வு கூட இல்லாமல் இருந்தது எவ்வளவு கொடுமை தெரியுமா...

நல்ல தரமான கல்வி, ஒரு சாரார் மட்டும் பயன்படுதிக்கொண்டே செல்வது தடுக்கப்பட வேண்டும்...

-
செந்தில்/Senthil

Dr.Srishiv சொன்னது…

சிலர் அதில் விதிவிலக்கு தோழர், இங்கு நான் பயிலும் ஐஐடியிலேயே நான் அறிந்து இரண்டு மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி பெரிய அளவில் புகழடைந்துவருகின்றனர்,, இருவரும் அமெரிக்கா சென்றவர்கள் தான், ஆனால் மேற்படிப்பு முடித்து தாயகம் திரும்பி சொந்தமாக தொழில் ஆரம்பித்து நாட்டிற்கு சேவை செய்கின்றனரே? :)
ஸ்ரீஷிவ்...:)

Voice on Wings சொன்னது…

செந்தில், எவரும் கட்டாயமாக தாயகம் திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அவரது தனி மனிதச் சுதந்திரத்தில் செய்யப்படும் தலையீடுதான். ஆகவே, 10 வருடங்கள் அதிகமா குறைவா என்ற கேள்விக்கே இடமில்லை. (நீங்கள் ஒரு யாத்திரீகனாக இருந்து கொண்டு இப்படிக் கூறலாமா? :) )

அரசு அவர்களுக்காக செலவளித்த பணத்தை திருப்பியளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமாகப் படுகிறது எனக்கு.

ஸ்ருசல் சொன்னது…

ஸ்ரீசிவ்,

>>>>>சிலர் அதில் விதிவிலக்கு தோழர், இங்கு நான் பயிலும் ஐஐடியிலேயே நான் அறிந்து இரண்டு மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி பெரிய அளவில் புகழடைந்துவருகின்றனர்,, இருவரும் அமெரிக்கா சென்றவர்கள் தான், ஆனால் மேற்படிப்பு முடித்து தாயகம் திரும்பி சொந்தமாக தொழில் ஆரம்பித்து நாட்டிற்கு சேவை செய்கின்றனரே? :)
ஸ்ரீஷிவ்...:)
<<<<<<<<

ஆம் நானும் அதைத் தான் கூறியிருக்கிறேன். அனைவருமே அங்கு தங்கிவிடுவதாகவும், யாருமே இந்தியாவில் தொழில் துவங்கவதுமில்லை எனக் குறிப்பிடவில்லை. இங்கேயே இருந்து பணிபுரியும் பலரைத் தெரியும்.

ஸ்ருசல்

ஸ்ருசல் சொன்னது…

அன்பு கூறியதைப் போல 10 ஆண்டுகள் என்பது அதிகமா, இல்லையா என்பது அதிக முக்கியத்துவமில்லாதது. அவசியமானது, நாட்டிற்கு ஐஐடி மாணவர்களின் சேவையே. இந்தியா திரும்ப முடியாது, இந்தியாவிற்கு சேவை செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் ஏன் ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பதே என் கேள்வி?

வேறு பல சிறந்த (தனியார் மற்றும் அரசு) கல்வி நிலையங்கள் நாட்டில் உள்ளன. அங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.

இதுவும் மக்களின் தயவில் ஓட்டு பெற்று விட்டு எம்.எல்.ஏ ஆகவோ மந்திரியாகவோ ஆகிவிட்டு தொகுதிக்கு எந்த உதவியும் செய்யாமல் போவதைப் போலத் தான்.
மற்ற லட்சக்கணக்கான நபர்களைத் தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் 1000 அல்லது 2000 பேரை மட்டுமே தேர்வு செய்து ஐஐடி க்கு அனுப்புகிறோம். அப்படி அனுப்பப்படுகிறவர்களில் பெரும்பாலோனோர் நாட்டிற்கும் ஏதும் செய்யவில்லையென்றால் எப்படி?

நான் இங்கே அனைத்து மாணவர்களையும் குறிப்பிடவில்லை என்பதனைத் தாங்கள் உணரவேண்டும்.

"அவர்கள்" என நான் கூறுவது, வெளிநாடுகளுக்குச் சென்று விட்டு இந்தியாவிற்கு திரும்பாத ஐஐடி மாணவர்களை மட்டும் தான்.

ஸ்ருசல்

பெயரில்லா சொன்னது…

Good one - Senthil