சனி, மார்ச் 11, 2006

Tower of silence - டவர் ஆஃப் சைலன்ட்ஸ்

டவர் ஆஃப் சைலன்ட்ஸ் - எனக்குப் பிடித்த திரைப்படக் காட்சிகள் (பின்னணி இசைத் தொகுப்பு):

சில நாட்களுக்கு முன்பாக, அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஓர் பறவையைப் பார்த்ததும் நண்பர், "அந்தக் கழுகு கட்டடத்தில் அமர்ந்தால், கட்டிடம் சிறப்பாக அமையும்", எனக் குறிப்பிட்டார். நான், "அது கழுகு அல்ல. பருந்து", என்றேன். அப்போது ஆரம்பித்தது விவாதம்.

எச்சரிக்கை: இறப்பு சம்பந்தமான தகவல்கள் பின்வருவதால், விருப்பமில்லாதவர்கள் தொடர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக எனக்குப் பிடித்த சினிமா காட்சிகள் (பின்னணி இசைத் தொகுப்பு) என்ற இடுகையை இட்டுள்ளேன். அதனைப் பார்க்கவும்.

விதவிதமான கழுகுகளைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் இடையில் "பிணம் தின்னிக் கழுகு" எனக் குறிப்பிட்டார். அப்போது தான் 'டவர் ஆஃப் சைலன்ஸ்' பற்றியும் கேள்விப் பட்டேன். என்ன இது வித்தியாசமாக இருக்கிறது என செய்த "தேடலின்" முடிவு, இந்தக் கட்டுரை. நான் அதற்கு முன்பு அதைப் பற்றி நான் கேள்வி பட்டதேயில்லை. சென்னையில் இருப்போர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. இந்த வகைக் கழுகுகளைப் பள்ளியில் படிக்கும் போது, கலிங்கத்துப் பரணியில் படித்ததாக ஞாபகம். மேலும் சில ஆங்கிலப் படங்களில், போர் நடக்கும் தருவாயில் வானில் அந்த வகைக் கழுகுகள் வட்டமடிப்பதைக் காட்டுவார்கள். அந்த வகைக் கழுகுகளுக்கும், பார்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை அறிய முடிகிறது. பார்சி மதத்தை ஸோராஸ்டிரானியசம் (Zoroastrianism) என்றும் அழைப்பது வழக்கம்.

ஈரான்

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் உட்பட எல்லா மதத்தினரும் இறந்த பின்பு உடலை புதைப்பதோ, எரிப்பதோ தான் வழக்கம். சில நகரங்களில், குறிப்பிட்ட மதத்தினர், உடலை ஆற்றில் மிதக்க விடுவதும் உண்டு. ஆனால், பார்சிகள் மட்டும் இரண்டு முறையையும் பின்பற்றுவதில்லை. மாறாக நகரத்தின் ஓரத்தில் உள்ள உயரமானக் கட்டிடங்களில் இறந்த உடலை அப்படியே வைத்து விடுகின்றனர். இப்படி வைக்கப்பட்ட உடலை, ஒரு வகையான கழுகுகள் தின்கின்றன. சிறிது நாட்களுக்குப் பிறகு, இப்படி கழுகினால் தின்னப்பட்டது போக மீதமிருக்கும் எலும்புகள், அந்தக் கட்டிடத்தின் மையப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தக் கட்டிடத்திற்குப் 'டாக்மா' அல்லது ஆங்கிலத்தில் 'டவர் ஆஃப் சைலன்ஸ்' (Tower Of Silence') என்று பெயர். இதற்கு பார்சி மதம் சம்பந்தமாக சில விளக்கங்கள் இருந்தாலும், பரவலாக கூறப்படும் விளக்கம்; "புதைப்பதால் மண் மாசுபடுகிறது; எரிப்பதால் காற்று மாசுபடுகிறது; கங்கை போன்ற நதிகளில் உடலை வைத்துவிடுவதால், நீர் மாசுபடுகிறது; இறந்த பின்பு இந்த பூமியை மாசுபடுத்தக் கூடாது என்ற காரணத்திற்காகத் தான், இந்த முறையைப் பின்பற்றுகிறோம்", என்கின்றனர். மேலும் இவர்களின் கடவுள், 'ஆகாயம் (காற்று), நீர், பூமி (நிலம்), தாவரங்கள், கால்நடைகள், மனிதன், தீ ஆகிய ஏழு பூதங்களின் பாதுகாவலன் என்று இவர்கள் கருதுவதால், அவற்றை மாசுப்படுத்தக்கூடாது என்ற நோக்கிலும் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். சிலர் இதனை வாழ்வின் கடைசி தானம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

டோக்மாவனது, இரண்டு அடுக்குக் கட்டிடங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டிடத்திலுள்ள படிகள் வழியாக, குறைந்தது 25-50 மீட்டர் உயரமுள்ள, ஒரு பெரிய கோபுரத்தின் உச்சிக்குச் செல்லமுடியும். இங்கு தான் இறந்தவரின் உடல் வைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு உச்சிக்கும், கட்டிடத்திற்கும் செல்ல அனுமதி பெற்ற நபர்(கள்), "Carriers of the Dead" என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி வாழ்பவர்கள் (இப்போது அது சாத்தியமா எனத் தெரியவில்லை). அவர்கள் தான், உடலை கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, அதன் உச்சியிலேயே வைக்கப்படுகின்றனர்.

சூரியன், மற்றும் கழுகுகளின் உதவியினால், இந்த உடலானது அழிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு வருடம் வரை இதற்கு அனுமதி. வழக்கமாக 50 வருடங்கள் வரை எடுக்கும் இதர முறைகளைப் போலல்லாமல், இதன் மூலம் அதிகபட்சமாக ஒரு வருடத்திலேயே கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட டாக்மா-வை இத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தியும், 6 அடி மட்டுமே மீதங்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

மும்பை

இது போன்ற கட்டிடங்கள் இந்தியாவில் 4-5 இருக்கும் எனத் தெரிகிறது. இதில் முக்கியமானது மும்பையில் உள்ளது. பார்சிக்களில் பெரும்பாலோனோர் மும்பையில் வசிக்கின்றனர். சென்னையில் கூட முதலில் கட்டப்பட்டது என நினைக்கிறேன். ஆனால், இது வரை உபயோகப்படுத்தப்படவில்லை. காரணம், இங்கு வைக்கப்படும் முதல் உடல், ஓர் குழந்தையின் உடலாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால். அப்போதைய காலகட்டத்தில் அது நடக்காததால், உடலை புதைக்கும் முறையை கையாண்டனர், என அறிகிறேன். இது தான் இந்தியாவின் பல நகரங்களில் உள்ள நடைமுறை. இப்போதும் வெளிநாடுகளில் வாழும் பலர், இறந்த உடலை புதைக்கவோ, அல்லது எரிக்கவோ செய்கின்றனர். சிலர் உடலை எரித்து விட்டு, சாம்பலை மட்டும் டாக்மாவிற்கு அனுப்புகின்றனர். நான் செய்த தேடலின் விளைவாக இதற்குக் கிடைத்த உதாரணம் Persis Khambatta என்ற இந்தியர். இவர் Star Trek, Nighthawks என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். சிலர் மட்டும், உடலை டாக்மா இருக்கும் தங்களது நாடுகளுக்கு (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) அனுப்பி இறுதிச் சடங்கை செய்கின்றனர். பார்சிக்களின் பிறப்பிடம் ஈரானாக இருந்தாலும் அங்கு இந்த முறை இப்போது முற்றிலும் அழிந்து விட்டது. இருக்கும் சில டோக்மாக்கள் அருங்காட்சியகங்களாக மாறிவிட்டது.

ஈரானில் முஸ்லீம்களின் படையெடுப்பிற்குப் பிறகு, அங்கிருந்த பெர்ஷியர்களிடம் இந்த வழக்கம் அமுலில் இருந்தாலும், 200 ஆண்டுகளுக்கு முன்பாக, அந்த வழக்கம் கைவிடப்பட்டது. காரணம் ஈரான் முஸ்லீம் அமைப்பினர், பெர்ஷியர்களை உடல்களைப் புதைக்கும் படி கேட்டுக்கொண்டதே காரணம் என அறியப்படுகிறது.

ஆனால் முஸ்லீம் நாடான, பாகிஸ்தானில் இன்னும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு அங்குள்ள அமைப்பினர் எவ்வித எதிர்ப்பும் காட்டுவதில்லை. மாறாக, இந்த கட்டிடத்திற்கும், பெர்ஷியர்களின் பழக்க வழக்கங்களுக்கும் உரிய மரியாதை அளித்து வருகின்றனர்.

இந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கே இதைப் பற்றி பல விதமான கருத்துக்கள் இருந்தாலும், இதனை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும், என நினைப்பவர்களால், இதனை பிற்கால கட்டத்தில் முற்றிலுமாக செயல்படுத்தமுடியாமல் போய்விடும் எனத் தெரிகிறது. காரணம், உடலை அழிக்கவல்ல ஒரு குறிப்பிட்ட கழுகு இனத்தின் வீழ்ச்சி. இவற்றின் எண்ணிக்கை கடந்த 10-20 வருடங்களில் 95% குறைந்துள்ளது. வேகமாக அழியும் இனங்களின் பட்டியலிலும் இந்த கழுகுகள் இடம் பெற்றுள்ளன. கேன்சர் நோய்க்கு மருந்தாக "Diclofenac" என்ற மருந்து பரவலாக உபயோகப்படுத்தப்பட்டது. இந்த மருந்தை உட்கொண்ட நபர்களினால், இந்த கழுகுகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய அரசும் சென்ற ஆண்டு முதல் இந்த மருந்தை விற்பனை செய்வதற்குத் தடை செய்துள்ளது. இதற்கு மாற்றாக இன்னொரு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த முடிவு எந்த அளவிற்கு கழுகு இனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரியவில்லை. மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ள முடிவாகத் தோன்றுகிறது.

வரலாறு பாடங்களில் 'பார்சிகள்' என புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அவர்களைப் பற்றித் துளி கூடத் தெரியாது. இவர்களின் வரலாறு கி.மு.விற்குச் செல்கிறது. ஈரானில் பெர்ஷியர்கள் என அழைக்கப்பட்டு வந்த இவர்கள், பின்னர் ஏற்பட்ட முஸ்லீம்களின் படையெடுப்பினைத் தாக்குபிடிக்கமுடியாமலும், தங்களது மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், கி.பி. 600 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்குக் கடற்கரையான குஜராத்தை வந்தடைந்தனர். அப்போது குஜராத்தின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர் மன்னர் சஞ்சன். அவர்களை ஏற்றுக்கொண்டு குஜராத்தில் வாழ்வதற்கும் அனுமதித்தார். இப்படியாக படிப்படியாக வளர்ச்சியடைந்து, இப்போது மீண்டும் மெல்ல வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த மதத்தை உலகம் முழுவதும் 1,50,000 பேர் பின்பற்றி வருகின்றனர். இவற்றில் பாதிக்கும் மேலே இந்தியாவில் அதிலும் குறிப்பாக மேற்குப் பகுதியில் (பம்பாய், குஜ்ராத்) பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 1961-ல் ஒர் லட்சத்திற்கும் மேலாக இருந்தாலும், இப்போது மிகவும் குறைந்து வருகிறது. குஜராத்தில் வாழ்ந்து வந்தவர்கள், ஆங்கிலேயர்கள், பம்பாய் நகரத்தை நிர்மாணித்த போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பெரும்பாலோனோர் பம்பாய் நகரத்திற்குப் புலம்பெயர்ந்தனர். சென்னையிலும் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. பார்சிக்களில் இப்போது அதிகமானோர், கலப்பு திருமணம் செய்து கொள்வதினால், இவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் கலப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லை. மற்ற மதங்களிலிருந்து பார்சி மதத்தை தழுவுபவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஓர் பார்சி ஆண் மட்டும் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அதனை ஏற்றுக்கொள்கிறது. இது பெண்களுக்குப் பொருந்தாது. இப்போது ஏற்படும் திருமணங்கள் பெரும்பாலும் கலப்புத் திருமணங்களாக இருப்பதால் இவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் வசிக்கும் பாதி பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிகிறது. எண்ணிக்கையை கனிசமாக அதிகரிக்க, பார்சிக்கள் விரைவிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று பார்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தது முதல் இது வரை 26 குழந்தைகள் பிறந்திருப்பதாக அந்த அமைப்புத் தெரிவிக்கிறது.

இவர்களின் புனித நூல் அவஸ்தா என்றழைக்கப்படுகிறது.

இப்போது இந்த வகைக் கழுகுகளின் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறையத் துவங்கி விட்டதால், டவரில் வைக்கப்படும் உடல்கள் அழிவதற்கு பல நாட்கள் ஆகின்றன. இந்தக் குறையை நீக்க, நவீன அறிவியல் முறைப்படி மிகப் பெரிய சூரிய கண்ணாடிகளை வைத்து உடலை அழிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.

இவர்களின் எண்ணிக்கை, இந்தியாவின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் மிகக் கீழே இருந்தாலும், இந்தியப் பங்குச் சந்தை மார்க்கெட்டில் 15% இவர்களின் கையில் தான். ரத்தன் டாட்டா, ஆதித்ய கோத்ரஜ் போன்றோர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொழிலதிபர்கள். மறைந்தவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள். ஹோமி ஜகாங்கீர் பாபா (பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவர்), பெரோஸ் காந்தி

குறிப்பு: கட்டுரையில் வரலாற்றுப் பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும். பல தகவல்களை வேண்டுமென்றே கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளேன்.


படித்து முடித்துவிட்டீர்களா? இதோ உங்களுக்காக எனக்குப் பிடித்த சினிமா காட்சிகள் (பின்னணி இசைத் தொகுப்பு) என்ற இடுகையையும் இட்டுள்ளேன். அதனையும் பார்க்கவும்.

3 கருத்துகள் :

துளசி கோபால் சொன்னது…

புனே நகரிலும் நிறைய பார்ஸிகள் இருக்கிறார்கள். அங்கேயும் இதுபோல ஒரு ஏற்பாடு இருக்கிறது.
( அங்கெ 5 வருடங்கள் வசித்தபோது தெரிஞ்சுக்கிட்டது)

Radha Sriram சொன்னது…

Hi srusal,

nicely written post. very informative. we had parsi neighbors when we were living in Ahmedabad, and came to know about the tower of silence from them.....

Radha

ஸ்ருசல் சொன்னது…

நன்றி ராம்.