"சாரி... டிஸ்டர்ப் பண்ணுறதுக்கு மன்னிச்சுக்கங்க.. அந்த வீடு ரெண்டு மூணு வாரமா பூட்டியிருக்கே.. வேகண்டா இருக்கா"
"அந்த வீடா? இல்ல. ஆள் இருக்காங்க... ஆனா ஊர்ல இல்லைன்னு நினைக்குறேன்".
"அப்படியா.. நான் பக்கத்துல தான் ஸ்டே பண்ணியிருக்கேன். வேகண்டா இருந்தா வரலாம்னு நெனச்சேன்..."
"அவர் அப்ராட் போயிருக்காருன்னு நினைக்கிறேன். ஆனா எப்ப வர்றாருன்னு தெரியல..."
"ஓ அப்படியா... தாங்க்ஸ்", என்று கூறிவிட்டு கிளம்பினார்.
கதவைப் பூட்டி விட்டு மீண்டும் படுக்கச் சென்றேன்.
ஆம் என்னாயிற்று இவனுக்கு? எங்கே இருக்கான்? எப்படி இருக்கான்? என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நபர் பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். எப்போதாவது பார்த்தால் பேசிக் கொள்வோம். சில மாதங்களாக வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருந்தவர், சில வாரங்களுக்கு முன்பாக எனது வீட்டில் எனது வருகைக்காகக் காத்திருந்தார். வீட்டிற்கு நான் சென்று சேர்ந்ததும் என்னை வெளியே அழைத்துச் சென்றார். என்ன விசயமாக இருக்கும் என என்னால் யூகிக்கமுடியவில்லை.
"என்ன விசயம்?", என்றேன்.
சிறிது நேரம் அமைதி காத்தவர் பின்னர், "எங்க ஊர்ல இருந்து உனக்கு போன் எதுவும் வந்ததா", என்றார்.
"சமீபத்தில இல்லை. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வந்தது..."
"இப்போ எதுவும் இல்லைல?"
"இல்ல. என்னோட நம்பரை மாத்தி மூணு மாசம் ஆகிடுச்சு"
"நல்லவேளை. ஒரு வேளை இங்க வந்து யாரும் என் நம்பர் கேட்டால் கொடுக்காதே"
"ஏன்?"
"ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்... கொஞ்ச நாளா சில பேர் மிரட்டுறாங்க..."
"மிரட்டுறாங்களா? மிரட்டுற அளவுக்கு என்ன பிரச்சனை?"
இவனுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும் என்று யூகிக்க முடியவில்லை. எதுவும் காதல் ஏதும் இருக்குமா? இல்லையே.... வீட்டுல பொண்ணு பார்க்குறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே.. பின்ன எப்படி? என்று யோசனை ஓடியது.
"கல்யாண பிரச்சினை தான்..."
".... ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு பொண்ணு பார்த்தோம். பொண்ணு பிடிச்சிருந்தது... எல்லாம் பேசி முடிச்சிடலாம்னு வீட்டுல சொன்னாங்க. எனக்கும் பொண்ணு பிடிச்சிருந்தது..."
"பின்ன?"
"முடிவெடுக்குறதுக்கு முன்னால பொண்ணுகிட்ட பேசிடலாம்னு பேசினேன். பிடிச்சிருக்கான்னு கேட்டேன். ஒண்ணும் சொல்லாம நின்னுட்டு இருந்தா... என்னன்னு கேட்டேன்..."
......
"நான் ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணுறேன்.. என்னை பிடிக்கலைன்னு வீட்டுல சொல்லிடுங்க பிளீஸ்ன்னு சொன்னா..எனக்கு ஷாக். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாமே கொஞ்ச நேரத்துல மாறி போயிடுச்சு...ஆனா அவளே வேறொருத்தனை லவ் பண்ணுறேன்னு சொல்லுறப்போ என்ன பண்ணுறது. பையன் யாரு என்ன பண்ணுறான்னு கேட்டேன். கிளாஸ் மேட்டாம். பக்கத்து ஊராம்."
"சரி இதுல என்ன பிரச்சினை? பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துருக்கலாம்ல?"
"அது தான் நான் பண்ணுன தப்பு... நான் போய் அவங்க அப்பாகிட்ட உங்க பொண்ணு இன்னொரு பையனை லவ் பண்ணுறா. அவளுக்கு பிடிச்ச பையனையே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்"
???
"அங்க ஆரம்பிச்சது பிரச்சினை. என்னை சமாதானப்படுத்துறதுக்காக வீட்டுக்கு ஒரு வாரமா நடையா நடந்தாங்க. அவளோட அப்பா அம்மா. அப்புறம் அவளோட சொந்தக்காரங்க. வந்து கெஞ்சுனாங்க...அழுதாங்க... ஆனாலும் நான் ஏத்துக்கல... பெங்களூர் வந்துட்டேன். இங்க வந்து பேசிப் பார்த்தாங்க...இவங்க தொல்லை தாங்க முடியாமல் தான் கொஞ்ச நாளா என்னோட ஃபிரண்ட் வீட்டுல தங்கியிருந்தேன். எப்படியோ இந்த வீட்டுக்கு வந்து உன்னோட பிரண்டுகிட்ட என்னோட ரூமியோட போன் நம்பர் வாங்கி அவனுக்குப் போன் செஞ்சு என்னோட போன் நம்பரை வாங்கிட்டாங்க"
"அதுல இருந்து போன் மேல போன் போட்டு டார்ச்சர் பண்ணுனாங்க... என் பொண்ணு தெரியாம பேசிட்டா.. லவ் எல்லாம் இல்ல. சும்மா விளையாட்டுத்தனமா பேசி இருக்கா.. நீங்க தான் எப்படியாவது அதையெல்லாம் மறந்து கல்யாணம் பண்ணிக்கணும் நச்சரிச்சாங்க. இவங்க தொல்லை தாங்க முடியாம தான் ஆன்சைட் அசைண்மெண்ட் வாங்கி மூணு மாசம் அங்க இருந்தேன்."
"அப்புறம்?"
"கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்த்து, இது வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு மோட் மாற ஆரம்பிச்சுட்டாங்க... எங்க வீட்டுல உள்ளவங்கள மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்க..."
"என்னன்னு?"
"உங்க பையனை ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க இல்லாட்டி நடக்குறதே வேறன்னு...எங்க வீட்டுல, 'உங்க பொண்ணுக்கு தான் விருப்பம் இல்லியே',ன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் இல்ல. அவ அப்படி சொல்லவே இல்லை... வேணும்ணா அவகிட்டயே கேளுங்க அப்படின்னு சொல்லுறாங்களாம்.... 'கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்துட்டா நிச்சயதார்தம் செஞ்சிட்டு வரதட்சணை அதிகமாக வேணும்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டீன்றீங்கன்னு சொல்லி போலீஸ் கம்ப்ளைண்ட் செஞ்சிடுவோம்'-னு சொல்லுறாங்கலாம்"
"!!!!!"
"இது ரொம்ப ஓவரா போகவே ஊருக்குத் திரும்ப வந்தேன். என்னையும் திரும்ப வந்து பார்த்தாங்க.... 'தம்பி உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லுங்க.. எக்ஸ்ட்ரா ஐம்பது லட்சம் தர்றேன்.. வாங்கிக்கங்க... உங்களுக்கு என்ன தோணுதோ அத வச்சு என்ன வேணும்னாலும் செய்ங்க.. உங்க விருப்பம்'-ன்னு சொன்னாங்க.....அந்தப் பொண்ணும் நேர்ல வந்து அழுதது...நான் தெரியாம சொல்லிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணல.. என்னை மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொல்லி அழறா.. எனக்கு என்ன பண்ணன்னு தெரியல..."
"என்ன சொன்ன?"
"முடியாதுன்னு மறுத்துட்டேன்... இது போன கொஞ்ச நாள் கழிச்சு அவரோட அப்பா சில ஆளுங்கள கூட்டிட்டு வந்து குடும்பத்தையே தொலச்சிடுவேன்னு மிரட்ட ஆரம்பிச்சார்..."
"போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது தானே"
"எல்லாரும் அவருக்கு கொஞ்சம் வேண்டியப்பட்டவங்க. அவளோட அம்மா, ஊர் தாசில்தார் (அதற்கு இணையான ஏதோ ஒரு பதவி என்று சொல்லியதாக ஞாபகம்) வேற... போலீஸ் வேற நாங்க என்ன செஞ்சாலும் காதுல வாங்கிக்கல.. எங்க அம்மா, அப்பா வேற என்னால வீணா அங்க மாட்டிக்கிட்டாங்க. நிம்மதியே போச்சு...."
"அப்புறம் என்ன பண்ணுன?"
"என்னோட கிளாஸ் மேட் ஒருத்தன், எங்க டிஸ்டிரிக்ட் எஸ்.பியா இருக்கான். அவன்கிட்ட போய் சொன்னேன்."
"குட்"
"அவன் எல்லாம் கேட்டுட்டு நான் பார்த்துக்குறேன்னு சொன்னான.. அதுல இருந்து தான் இன்ஸ்பெக்டர் வேற வழியில்லாம ஆக்சன் எடுக்க வேண்டியாதா போச்சு.... அதுல இருந்து இப்ப யாரும் வந்து மிரட்டுறது இல்ல... அவளோட அப்பா, அம்மாவும் பயந்து ஒழுங்கா இருக்காங்க... இது எத்தனை நாளுக்குன்னு தெரியல"
"நல்லது. இவ்ளோ பணம் தர்றேன்னு சொல்றாரே அப்ப அவர்கிட்ட எவ்ளோ இருக்கும்? உன் பின்னாடி சுத்துறதுக்கு பதிலா அந்தப் பணத்தை வச்சு வேறோரு பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம். அது பெட்டர்.."
"சரி தான். ஆனா ஏற்கனவே இது மாதிரி ஒரு தடவை அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போயிருக்கு அதனால ஊர்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க... அதான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சுடனும்னு முடிவோட இருக்கார்."
"சரி.. ஆனா அதுக்காக பணத்துக்கு யாரும் ஆசைப்படாம இருப்பாங்களா... ஒரு பையன் கூடவா கிடைக்க மாட்டான்?"
"கிடைப்பான்... ஆனா ஐஐடி பையன் கிடைக்கமாட்டானே..."
"ஓஹோ... இப்ப புரியுது..."
"எங்க ஊர்ல இது ஒரு பெரிய விசயம்.. ஐஐடியனுக்கு பொண்ணு கொடுக்குறது பிரஸ்டீஜ் இஸ்யூ... அதான் இவ்ளோ முயற்சி பண்ணுறாங்க... நானே ஒரு சாதாரண காலேஜ்ல படிச்சிருந்தேன்னா இந்நேரம் விட்டுட்டு போயிருப்பாங்க... முதல்ல இருந்தே ஐஐடி பையனுக்குக் கொடுக்குறோம்னு ஊர்ல எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு, இப்போ இல்லைன்னு ஆகிடுச்சுன்னா கெளரவப் பிரச்சினை. அதான் ரொம்ப முயற்சி பண்ணுறாங்க..."

"இவ்ளோ மிரட்டுனதுக்கு அப்புறமும் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி எதிர்பார்க்குறார். ஒரு வேளை அவளை நீ கல்யாணம் செஞ்சாலும், எப்படி அவளோட அப்பா, அம்மா கூட நார்மலா நீ பேச முடியும்? உங்க அப்பா, அம்மா எப்படி அவங்க கூட பேச முடியும்?"
"இம்.. ஒண்ணும் புரியலை. அதான் ஃசேப்டிக்காக நான் வீடு மாறுறேன்.. என்னோட ரூமியை கொஞ்ச நாளைக்கு அவனோட பிரண்ட் வீட்டுல இருக்க சொல்லியிருக்கேன். யாரும் வந்து கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு...."
"சரி.. பேசாம... இது தான் நல்ல டைம்.... நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணியிருந்தா, வீட்டுல சொல்லு... உடனே ஒத்துப்பாங்க... கல்யாணம் செஞ்சிட்டு கொஞ்ச நாள் அப்ராட்ல போய் இருந்துட்டு வாங்க..."
"எங்க வீட்டுலேயும் அதான் நிலைமை. பையனுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா போதும்னு நினைக்குறாங்க. ஆனா உடனே பொண்ணுக்கு எங்க போறது?"
----
இது இன்னொரு கல்யாணக் கதை (ஆந்திரவைச் சார்ந்த உடன் பணிபுரியும் நபர்)
"எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்"
"வாழ்த்துக்கள்...பொண்ணு யாரு? அதே பொண்ணு தானா?"
"இல்ல.... இது வேற"
"அது என்ன ஆச்சு?"
"அது ஒத்து வரலை"
"ஏன்? என்ன பிரச்சினை?"
"பிரச்சினை என் சைடுல இல்ல.. அவ சைடுல தான்.... வரதட்சணை 15 லட்சம் தான் கொடுக்க முடியும்னு சொல்லுறாங்க.."
"அது நீ லவ் பண்ண பொண்ணு தானே?"
"ஆமா அவளே தான். லவ் பண்ணும் போதே வரதட்சணையா 25 லட்சம் வாங்கி தரணும்னு சொல்லியிருந்தேன். அவளும் சரின்னு சொல்லியிருந்தா.. ஆனா இப்போ 15 லட்சம் தான் தர முடியும்னு சொல்லுறாங்க... நான் என்ன பண்ணுறது... என் மேல தப்பே இல்லை... "
???????????