வெள்ளி, ஜனவரி 27, 2006

ரங்கு தே பசந்தி - திரைப்பட மதிப்பீடு

மொழி புரியாமல் ஒரு படத்தைப் பற்றி விமரிசனம் செய்யலாமா? செய்யலாம். தவறில்லை என நினைக்கிறேன்.

Rang De Basanti Review
கதைக் களம் ஒன்றும் புதிதல்ல. இதைப் போல படங்கள் நூற்றுக்கணக்கில் ஹிந்தியிலும், தமிழிலிலும் வந்திருக்கின்றன. ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ஊடகங்களில்? காரணம் அமீர்கான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றும் வாலிபர்கள். அமீர்கான், சித்தார்த், குணால் கபூர், மற்றும் ஷர்மன் ஜோஷி. இவர்களின் தோழி சோகா அலி கான். சோகா அலி கானின் காதலர் மாதவன்; இந்திய விமானப்படையின் போர் விமானி, நால்வரின் நண்பர் மற்றும் தந்தையை இழந்தவர். ஒரு தேசிய கட்சியின் தொண்டராக அதுல் குல்கர்னி (ரன் படத்தின் வில்லன்) வருகிறார்.

இங்கிலாந்தில் இருந்து பகத்சிங்கின் வாழ்க்கையைப் பற்றி டாக்குமெண்ட்ரி படமெடுக்கும் நோக்குடன் இந்தியா வருகிறார், சூ என்ற ஆங்கிலேயப் பெண். அவரின் இந்த முடிவிற்குக் காரணம், ஆங்கிலேயர்கள் படையில் அதிகாரியாகப் பணிபுரியும் அவரின் தாத்தா. பகத்சிங்கைப் பிடிக்கும் பணியில் நியமிக்கப்பட்டிருந்த அவரது தாத்தா, அப்போது ஏற்பட்ட நிகழ்வுகளை டைரி குறிப்புகளாகப் பதிந்து வருகிறார். பிற்காலத்தில் அதைப் படிக்கும் சூ, இந்தியர்களின் தேசப்பற்றை வியந்து, பகத்சிங் வாழ்க்கை நிகழ்வுகளை டாக்குமெண்ட்ரியாக எடுக்கவேண்டும் என்று இந்தியா வருகிறார்.

ஆனால் இந்த காலத்து இந்தியர்கள், பெற்ற சுதந்திரத்தின் அருமையையும், அதற்காகப் பாடுபட்டவர்களைப் பற்றிய எந்த உணர்வுமின்றி இருப்பதைப் பார்த்து வருத்தமடைகிறார். ஆனாலும், தனது டாக்குமெண்ட்ரிக்காக சோகா அலிகான் மூலமாக நாயகர்கள் நான்கு பேரையும் சந்திக்கிறார். அவர்களிடம் நடிக்கவும் சம்மதம் வாங்குகிறார். அவர்களுடன் அதுல் குல்கர்னியும் இணைகிறார். அதுவரை எந்த விதமான குறிக்கோளும் இல்லாமல் சுற்றி வந்த நான்கு பேரும், படத்தில் நடிக்கும் போது ஓரளவிற்கு மாறுதல் அடைகின்றனர். அந்த நேரத்தில் ஏற்படும் மாதவனின் மரணம், அவர்களின் வாழ்க்கை பாதையை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது.

இந்தியில் தேசப்பற்று படங்களை விடமாட்டார்கள் போலிருக்கிறது. அமீர்கான் கூட பல தேசப்பற்று படங்களில் நடித்துவிட்டார்; சமீபத்தில் தோல்வியடைந்த மங்கள் பாண்டே உட்பட. ஆனாலும் அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. 'தில் சாத்தா ஹை' மாதிரி இளமையான படமாக இருக்கும் என சென்ற எனக்கு கதையளவில் ஏமாற்றம் தான். அந்த ஈர்ப்பு இல்லையென்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் மோசமில்லை. படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

படத்தில் அமீர்கானுக்கு வழக்கமான நடிப்பு தான். மாதவன் மரணத்திற்குப் பின்பு அழும் காட்சியில் நன்றாக செய்திருந்தார். சித்தார்த் (பாய்ஸ்) பரவாயில்லாமல் செய்திருந்தார். ஷர்மன் ஜோஷி நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த ஆங்கிலப் பெண்ணும் நன்கு நடித்திருந்தார்.

பகத்சிங் சம்பந்தப்பட்டக் காட்களையும், சமகால காட்சிகளையும் ஒருங்கிணைத்து காட்டியிருந்தது, இந்திக்கு வேண்டுமானால் புதியதாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழில் ஹே ராம் இதைப் போலவே படமாக்கப்பட்டிருந்தது போல் நினைவு.


Rang De Basanti Review படத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இசை மற்றும் ஒளிப்பதிவைக் குறிப்பிடலாம். இசை கேட்கவே வேண்டாம். பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஒரு பாடலைத் தவிர அனைத்தும் பின்னணியிலேயே வந்தது. அருமையான 9 பாடல்களை வீணடித்த இயக்குநரை எவ்வளவு அடித்தாலும் தகும். ஒரு வேளை இது போன்ற திரைப்படத்திற்கு, காட்சியமைப்பு இவ்விதத்தில் தான் இருக்க வேண்டும் என இயக்குநர் நினைத்தாரோ என்னவோ? அதற்கு ஏன் ரகுமான்? ரகுமான் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார். கடலடியில் தவமயிருந்து எடுத்த முத்தை யாராவது மீண்டும் கடலில் தூக்கியெறிந்தால் எப்படியிருக்கும்? படத்தின் டைரக்டர் ராகேஷ், 'ரகுமானுக்கு பல கதைகள் சொன்னேன். ஆனால் இந்தக் கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார்' என்றார். ஆனாலும் இது போன்ற முடிவை இயக்குநர் எடுப்பார் என்று ரகுமானுக்குத் தெரியுமா? ரகுமானும் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் 'எனக்குப் பிடித்த பாடல் ரூபாரூ. அனைத்து பாடல்களும் பதிவான பிறகு ஏற்பட்ட களைப்பிற்குப் பிறகு கடைசியாக செய்த பாடல். இந்த களைப்பு நீங்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இசையமைத்தது' என்ற ரீதியில் கூறியிருந்தார். அந்த உழைப்பிற்கு இன்னும் சிறிது மரியாதை செய்திருக்கலாம். 'லுக்கா சுப்பி' பாடலும், காட்சியின் ஒத்திசைவும் சிறப்பாக அமைந்திருந்தது. மனதை தொடும் விதத்தில் அமைந்திருந்தது.

ஆனாலும் சிறந்த பாடல்களை வீணடித்தது மனதைக் காயப்படுத்தியது. இன்னும் அந்த வருத்தம் நீடிக்கிறது.

படத்தின் இடையில் ஏற்பட்ட மின்வெட்டினால் ரசிகர்கள் 'லைட் தே பசந்தி', 'டார்ச் தே பசந்தி' என்று கத்தினார்கள். எனக்கு படத்தைப் பார்த்து முடித்ததும் 'சங்கு தே பசந்தி' (பாடல்களின் காட்சியமைப்பினால்) எனக் கூறவேண்டும் எனத் தோன்றியது.

இசை மதிப்பீடு - ரங்கு தே பசந்தி

ஸ்ருசல்

5 கருத்துகள் :

Movie Fan சொன்னது…

Thanx for the wonderful review..

I'd like to watch the movie only becaz of two reasons..

1. AR's music
2. Confidence with Ameerkhan's taste

But from ur review its clear, Rahman's comeback songs were wasted ...So Sad ...

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

ஸ்ருசல்,

விமர்சனத்திற்கு நன்றி.

//அமீர்கான் ஏற்கனவே 'த லெஜெண்ட் ஆஃப் பகத்சிங்' என்ற படத்தில் நடித்திருந்தார். //

இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார் என்று ஞாபகம்.

//ஒரு பாடலைத் தவிர அனைத்தும் பின்னணியிலேயே வந்தது. அருமையான 9 பாடல்களை வீணடித்த இயக்குநரை //


இதே போன்று மணிரத்னம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திலும் பெரும்பான்மையான பாடல்களை (பாதி மட்டும்) பின்னணியிலேயே ஓடவிட்டார். குறிப்பாக "விடைகொடு எங்கள் நாடே". இது இயக்குநரின் சுதந்திரம்தான் என்றாலும் இசையமைப்பாளரின் உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் பார்வையாளர்களையும் எரிச்சல் மூட்டுவதுமாகும்.

ஸ்ருசல் சொன்னது…

சுரேஷ் கண்ணன்,

தவறுக்கு மன்னிக்கவும். அந்த திரைப்படம் நான் பார்க்கவில்லை. ஆனால் இசை ரகுமான் என்பது மட்டும் உறுதியாகத் தெரியும்.

இருவரும் இணைந்து நடித்த மற்றுமொரு தேசப்பற்று படம். 1947 Earth. (தீபா மேத்தா) அந்த ஞாபகத்தில் எழுதி விட்டேன்.

நன்றி, தவறை சுட்டிக்காட்டியதற்கு.

இடுகை திருத்தப்பட்டுள்ளது.

ஸ்ருசல்.

சீனு சொன்னது…

//சித்தார்த் (பாய்ஸ்) பரவாயில்லாமல் செய்திருந்தார்//
அடடா! இந்த படத்தில் அமீர்கானை ஓரங்கட்டிவிட்டார்.

//இசை கேட்கவே வேண்டாம். பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஒரு பாடலைத் தவிர அனைத்தும் பின்னணியிலேயே வந்தது. //

ஐயோ! பின்னனி இசை கர்ன கொடூரமாக இருந்தது (அல்லது, எனக்கு புரியவில்லை).

ஸ்ருசல் சொன்னது…

சீனு,

பின்னணி இசை உண்மையிலேயே நன்றாக இருந்தது. முக்கியமான படங்களுக்கு மட்டுமே ரகுமான் நேரடியாக பின்னணி இசை கோர்க்கிறார் என நினைக்கிறேன்.

உம். மணிரத்னம், சங்கர்.

மற்ற படங்களுக்கு அவரது உதவியாளர்கள் தான் பெரும்பாலும் இசை கோர்ப்பது வழக்கம் என்பது என்னுடைய கணிப்பு.

அந்த வகையில் ரங்கு தே பசந்தி ரகுமானால் பின்னணி இசை கோர்க்கப்பட்டது.

வேண்டுமானால் சாம்பிளுக்கு ஒரு பின்னணி இசை அனுப்புகிறேன். திரும்ப கேட்டுப் பார்க்கவும்.

ரகுமானே ஒரு இடத்தில் ரிச ரிச ரிச என ஆரம்பிக்கும் விதத்தில் குரல் கொடுத்திருப்பார். நன்றாக இருந்தது.

நன்றி.


நீங்கள் கேட்ட பாடல்களை ('சட்டென நனைந்தது', 'பூவோடு வண்டு', அனுப்பிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்.