செவ்வாய், ஜனவரி 31, 2006

தேடிக் கிடைப்பதில்லை டியனன்மென் சதுக்கம்!

சென்ற வாரம், உலகத்தின் மிகப் பெரிய இணையத் தேடியான கூகுள் இரு விசயங்களுக்காக அதிகமாக விவாதிக்கப்பட்டது.

1. அமெரிக்க அரசின் ஓர் உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.
2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது.

Google Office

1. அமெரிக்க அரசின் ஒரு உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.

அமெரிக்க அரசு (அரசுசார் நிறுவனம்), முன்னணி தேடிகளான கூகுள் (Google), யாகூ (Yahoo) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், அதன் பயனாளர்கள் உபயோகப்படுத்திய 1 மில்லியன் தேடல் வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியது. அந்த வார்த்தைகள், எம்மாதிரியான விசயங்களுக்காக (முக்கியமாக போர்னோகிராபி) அமெரிக்க மக்களால் தேடிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன் என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு யாகூ அரசு கேட்பதை கொடுக்க ஒப்புக்கொண்டது. ஆனால் கூகுள் மட்டும், "இது பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் விசயம்", எனக் கூறி கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளது. "இன்று என்ன என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது எனக் கேட்கப்படும். இன்னும் சில நாட்கள் கழித்து, யார் யார் என்ன என்ன தேடினார்கள்? அந்த விபரங்கள் வேண்டும் எனக் கேட்டால் அதையும் கொடுக்க வேண்டிய நிலை வரும்" எனவும் வாதிடப்பட்டது.



பொதுவாக அனைத்து தேடிகளும், அவற்றிற்கு வரும் தேடல் வார்த்தைகளை (Search Queries) சேமித்து வைப்பது வழக்கம். கூகுளும் அவ்வாறே செய்து வந்துள்ளது. அரசு, இது சம்பந்தமாக ஏதேனும் கொள்கை வகுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பாக தேடிய விசயங்கள் கூட இன்னும் அழிக்கப்படாமல் கூகுளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது பற்றி, சமீபத்தில் வந்த "The Google Story" என்ற புத்தகத்தின் "Porn Cookie Guy" (பக்கம் 165-ல்) அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த புத்தகம் பற்றி எழுத வேண்டும் என பல வாரங்களாக நினைத்திருந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். புத்தகம் சுமார் தான்)

"Computer users searching for pornography online may be mistaken in concluding that they are viewing it anonymously and privately. Google maintains electronic records of all searches, which can be traced back to specific computers. If someone has a Gmail account or has regiastered for any other Google Service, the firm's electronic records could be used to trace porn searches to specific individuals.

Not suprisingly, both Google and its biggest competitior, Yahoo, profit handsomely by selling sex related ads. Pornography, withing limits, is protected by the First Amendment in thw U.S. In countries where online pornography is banned, including Germany and India, Google and Yahoo abide by statutes."
அதாவது ஒவ்வொரு முறையும் கூகுள் தேடி உபயோகிக்கப்படும் போதும், தேடுபவரின் IP Address-ம், தேடக் கொடுத்த வார்த்தைகளும் சேமிக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு, தேடுபவரை சுலபமாக அடையாளம் காணமுடியும். அதுமட்டுமல்லாமல், Gmail-ம் இன்ன பிற சேவைகளும் (Google Services)-ம் இணைக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை இன்னும் சுலபமாக்குகிறது. மேலும் இந்தத் தகவல்கள் என்றுமே அழிக்கப்படுவதில்லை.

இதுவே, இப்போது கூகுளுக்கும், அதன் பயனாளர்களுக்கும் வினையாக அமைந்துள்ளது. கூகுளுக்கு இது எப்படி சிக்கலாக அமைய முடியும்? அரசு கேட்கும் விபரங்களைக் கொடுத்தால், கூகுளின் மீதான நம்பகத்தன்மை பயனாளர்களிடம் குறைந்துவிடும். ஒரு வேளை கொடுக்க மறுப்பது நம்பகத்தன்மை உயர்த்துவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம். (இது என்னுடைய யூகம் மட்டுமே)

வழக்கில் வெற்றிபெற்றால், நல்ல பெயர் கிடைக்கும். தோல்வியுற்றால், மக்களுக்கு உண்மையாக இருப்பதற்கு பாடுபட்டதற்காக மக்களிடம் மதிப்பு கூடும்.

எதற்காக கூகுள் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டும்? அவ்வாறு செய்வதால் தானே சிக்கல்?. அரசு கேட்கும் போது, சுலபமாக "எங்களிடம் அந்த தகவல் இல்லை", என சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, "இருக்கிறது. ஆனால் தர இயலாது." எனக் கூறுவது வீண் வேலை தான். அப்படியென்றால் அவர்கள் அந்தத் தகவல்களை வைத்து என்ன தான் செய்கிறார்கள்?

இப்போது எட்வெர்ட் என்ற அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர், இது போல தனிநபர் பற்றிய விபரங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு சேமித்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஒரு வேளை அவரும் வில்லங்கமாக கூகுள் தேடியை உபயோகப்படுத்தியிருப்போரோ? யார் கண்டது புஷ் கூட உபயோகப்படுத்தியிருக்கலாம்.

2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது

கூகுளின் சீனத் தளத்திற்கு (google.cn), சீன அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. "கூகுள் தேடி, விடைகளை பயனாளர்களுக்குக் கொடுக்கும் போது, சில விடைகளை (சீனா, தைவான் அரசியல், புரட்சி சார்புடைய மற்றும் இன்ன பிற விசயங்களை) பகுத்து கொடுக்கவேண்டும்", என்பது அந்த கட்டுபாடு. இதற்கு கூகுளும், அனைவரும் ஆச்சர்யப்படும்படியாக, ஒப்புக்கொண்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலர் அந்த நிறுவனத்தின் இரட்டை வேடத்தை எதிர்த்தும், இன்னும் பலர் அதன் வியாபாரத் தந்திரத்தை ஆதரித்தும் பேசிவருகின்றனர். இது தான் ஒரு பன்னாட்டு தேடி நிறுவனத்தின், முதல் முழுமையான சீனத் தளம். மற்ற முன்னணி நிறுவனங்களான யாகுவும், மைக்ரோசாப்ட்-ம் கூட இன்னும் முழுமையான சீனப் பதிப்பினை ஆரம்பிக்காத நிலையில், கூகுளின் முயற்சி அதன் சந்தை பங்கினை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.



கூகுள் google.com-ல் tiananmen square என்று தேடினால் 1989-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். அவற்றில் குறிப்பிடத்தக்கது விக்கிபீடியாவினுடையது. (விக்கிபீடியாவும், பிளாக்ஸ்பாட்டும் சீனாவில் முழுமையாக தடைசெய்யப்பட்ட தளங்கள்)

அதே சமயத்தில் www.google.cn என்ற தளத்தில் தேடினால் உங்களுக்கு அந்த சம்பவம் தொடர்பாக எந்த சுட்டியும் கிடைக்காது. இன்னும் விரிவாக 'tiananmen square 1989' என்றோ அல்லது 'Tiananmen Square' என்றோ கொடுத்தாலும், அது சம்பந்தமாக சுட்டிகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், சீன மக்களால் அந்த தளத்தினை பார்வையிட முடியாது. உபயம் சீன இணைய சேவை நிறுவனங்கள் (ISP).

இதே போல நீங்கள் images.google.com லும், images.google.cn லும் தேடி வித்தியாசத்தை அறியலாம்.

இப்போது கூகுள், சீனா அரசின் உத்தரவுக்குக் கட்டுபட்டு இம்மாதிரியான விசயங்களை பகுக்கிறது. நாளைக்கே, "யார் யார் 'புரட்சி', 'தைவான்' என தேடியது? அந்த விபரங்களைக் கொடுங்கள்", எனக் கேட்டால் கூகுள் என்ன செய்யும்", என சிலர் கேட்கிறார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பத்திரிக்கையாளரின் விபரத்தை (ஒரு யாகூ மின்னஞ்சல் முகவரியை ஆதாராமாக கொண்டு), யாகூ நிறுவனம் அரசுக்குக் கொடுத்தது. அந்தத் தகவலை வைத்து, சீன அரசு அந்த பத்திரிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் விதித்தது.

ஆனால் சில சீனர்கள், "இது ஒன்றும் பெரிய விசயமே அல்ல; இந்த தடைகள் பெரிய மாறுதலையும் உண்டு செய்யப்போவதில்லை. எங்களுக்குத் தேவையான விசயங்களை Google.com-லோ அல்லது மின்னஞ்சலிலோ பெற்றுக்கொள்வோம். விக்கிபீடியா போன்ற தளங்கள், எந்த தேடியின் வழியாகச் சென்றாலும் தடை செய்ய்ப்பட்டுள்ளன. என்ன தான் கூகுள் பகுக்காத விடையை (தளத்தின் முகவரியைக்) கொடுத்தாலும் அந்த தளங்கள் முற்றிலுமாக சீனா இணைய நிறுவனங்களால் (ISP's DNS) தடைசெய்யப்பட்டுள்ளன. ஆதலால் ஒரு வித்தியாசமும் இல்லை", என்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று ஒரு சீனர்,

"சீனா ஒன்றும் அனைவரும் நினைப்பது போல் மோசமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தும் சரியாகிவிடும். அமெரிக்கர்கள் தங்களுக்கு தான் பேச்சுரிமை இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். நீங்கள் பேசுவதை கேட்க யாருமே தயாராக இல்லையெனும் போது, பேச்சுரிமை இருந்து என்ன பயன்? சில கோடீஸ்வரர்கள் தான் (பத்திரிக்கை, டி.வி அதிபர்கள்) அமெரிக்க ஜனாதிபதியை நிர்ணயம் செய்கிறார்கள்"
என்கிறார்.

'I think those Americans think they have freedom of speech, but it's useless if when you talk nobody listens to you because a certain group of billionnaires control the media and trick the democratic process every 4 years.'

ஸ்ருசல்

1 கருத்து :

மணியன் சொன்னது…

//'I think those Americans think they have freedom of speech, but it's useless if when you talk nobody listens to you because a certain group of billionnaires control the media and trick the democratic process every 4 years.'//

இது இந்தியா உட்பட எல்லா குடியரசு நாடுகளுக்கும் பொருந்தும்.என்ன, இவர் இவ்வளவு ஊழல் செய்தார், அவர் அவ்வளவு அட்டூழியம் செய்தார் என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஊழல் செய்தவர்களையும் அட்டூழியம் செய்தவர்களையும் பதவி இறக்கவா முடிந்தது ? :(