செவ்வாய், டிசம்பர் 13, 2005

இசை மதிப்பீடு - ரங்கு தே பசந்தி

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்கள் வரிசையாக ஓடவில்லையென்றாலும் அவருடைய இசையில் பாடல்கள் குறை சொல்லும் அளவிற்கு இருந்ததில்லை. 'அன்பே ஆருயிரே' மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அந்த படத்தில் ஒலிப்பதிவு சரியில்லையென்பதும் ஒரு குறை.

ஹிந்தியிலும் எந்த படமும் இந்த இரண்டு வருடங்களில் சொல்லும்படியாக அமையவில்லை. கடைசியாக மங்கள் பாண்டே வந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. போஸ் படத்தில் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்திருந்தும் அந்த படமும் ஓடவில்லை. வரிசையாக இந்தியில் பீரியட் படங்களைக் கொடுத்து வந்த ரகுமான், இப்போது சமகால படமான ரங்கு தே பசந்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் சென்ற வியாழக்கிழமை வெளிவந்தது. இதில் அமீர்கான் நாயகனாக நடித்திருக்கிறார்.

படத்தில் மொத்தம் 10 பாடல்கள். அனைத்தும் தேன் போல இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒன்று இரண்டைத் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

1. இக்கூன்கர் (பாடியவர்: ஹர்ஸ்தீப் கார்) இசைத்தட்டின் முதல் பாடல். இது ஒரு பஞ்சாபி இறை வழிபாட்டுப்பாடல். சாதாரணமாக இசை எதுவும் இல்லாமல் பாடுவது போல இருந்தாலும், இந்தப் பாடலில் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது.

2. ரங்கு தே பசந்தி (பாடியவர்: தாலேர் மெஹந்தி, சித்ரா) பஞ்சாபி மெட்டில் அமைந்த இந்த பாடல் அதிகமாக கவராது. தாலேர் மெஹந்தியின் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது அந்த வகையில் இது அதில் பாதி கூட வராது.
ஆனால் நல்ல பீட்.

3. Lose Control (பாத்சாலா) (பாடியவர்கள்: நரேஸ் அய்யர், முகமது அஸ்லம்)

இது பீட் ரகத்தைச் சார்ந்தது. உங்களுக்கு பீட் ரகப் பாடல்கள் பிடிக்குமென்றால் இந்தப் பாடலை முதலில் கேளுங்கள். கண்டிப்பாக பிடிக்கும். ஹை-வேயில் பயணம் செய்யும் போது கேட்டால் வாகனத்தின் வேகம் அதிகரிப்பது உறுதி.

4. தூ பின் பதாயே (பாடியவர்கள்: நரேஸ் அய்யர், மதுஸ்ரீ பட்டாச்சார்யா)

இந்தப் பாடலின் ஆரம்பம் 'கண்ணைக் கொஞ்சம் திறந்தேன்' (மிஸ்டர் ரோமியோ) போல ஆரம்பிக்கிறது. நல்ல மெல்லிசைப் பாடல். மதுஸ்ரீ வழக்கம் போலவே நன்றாகப் பாடியிருக்கிறார். இவர் கையை நீட்டி பாடும் அந்த முறை தான் இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் தோன்றுகிறது. இவர் மேடையில் பாடுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா?

5. கல்பலி ஹே (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், முகமது அஸ்லம், நசீம்)

மற்றுமொரு பீட் பாடல். ஹம்மா ஹம்மா பாடல் போல இருக்கிறது. ரகுமான் நன்றாகப் பாடியிருக்கிறார்.

6. கோன் சலா (பாடியவர்: மொகித் சவுகான்)

மிக மிக அருமையான மெலோடி பாடல். முதலில் கேட்கும் போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க தேன் போல இருக்கிறது.

7. Lose Control (பாத்சாலா) (பாடியவர்கள்: பிளாசே): இது மூன்றாவது பாடலின் ஆங்கிலப் பதிப்பு. பலருக்கு பிளாசேயின் வரிகளும், பாடும் விதமும் பிடித்திருந்தாலும் எனக்கு இன்னும் அவரை அவ்வளவாக பிடிக்கவில்லை. அந்த மாதிரியான பாடல்களும் தமிழுக்கோ, இந்திக்கோ அவசியம் இல்லை என்றே எனக்குப் படுகிறது. அவர் பாடிய டோல் டோல் பாடலின் இசை மிக அருமையாக இருக்கும் அவருடைய குரலைத் தவிர. இவரின் ராஜ்யம் பாய்ஸ் அல்லது பாபாவில் தான் ஆரம்பித்தது என நினைக்கிறேன். டேட்டிங் பாடல் மட்டுமே நன்றாக வந்திருந்தது. அது கூட இசைக்காகவும், ராகத்திற்காகவும் தான் என்று நினைக்கிறேன்.

மேலும் அன்பே ஆருயிரேயில் மரங்கொத்தியே பாடலுக்கு நடுவில் வரும், "உதடு உதடு மேலே make it a Square" கூட பாடலின் தரத்தை குறைப்பதாகவே எனக்குப் பட்டது. இவருடைய பாடல்கள் எல்லா ஏ.ஆர்.ரகுமான் படங்களிலும் திணிப்படுவதாகவே எனக்குப் படுகிறது.

8. லக்கா சுப்பி (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், லதா மங்கேஷ்கர்)

ஏ.ஆர்.ரகுமானும், லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடியிருக்கும் முதல் பாடல். இந்த இசைத்தட்டு வருவதற்கு முன்பே மிகவும் பேசப்பட்ட பாடல். இதற்காக லதா சென்னை வந்து பாடிக்கொடுத்து சென்றார் என்பதும் கொசுறு செய்தி. லதாவிற்காக சில நேரங்களில் மும்பையில் ரிக்கார்டிங் வைத்திருக்கும் ரகுமான், தான் புதிதாக கட்டியிருக்கும் ஸ்டுடியோவிற்கு லதா கண்டிப்பாக வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால், அவர் சென்னைக்கு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. இருவருமே மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் முக்கியமாக ரகுமான். நல்ல மெலோடி.

பாடலின் ஆரம்பத்தில் வரும் கிதார் இசை வெள்ளைப் பூக்கள் பாடல் போலவே இருக்கிறது.

9. லல்கார் (பாடியது (?) அமீர்கான்) இது இருவர் படத்தில் வரும் 'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்' என்ற கவிதை போல வரும் பாடல்(?). அமீர்கான் வாசித்தது.

10. ரூபரூ ரோஷிணி (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர்)

இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல் இது தான் என்று அடித்துக் கூறுவேன். அருமையான பாடல். நல்ல இசை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை மிக அருமை. நரேஸ் அய்யர் நன்றாகப் பாடியிருக்கிறார்.

இந்த இசைத்தட்டில் ஆச்சர்யப்பட வைத்த விசயங்கள் இரண்டு. கிதார் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகுமான் ஆசிட்டிற்கு கிதார் இசையை இரண்டு பாடல்களில் (லக்கா சுப்பி, ரூபரூ) முழுவதுமாக உபயோகித்திருக்கிறார்.

மற்றொன்று நரேஸ் அய்யரின் குரல். இவர் தான் அன்பே ஆருயிரேயில் மயிலிறகே பாடலைப் பாடியவர். அந்தப் பாடலில் அவருடைய குரல் பலரைக் கவரவில்லை. ஆனால் இதில் அவருடைய குரல் முற்றிலும் வித்தியாசமாக, மிக நன்றாக இருக்கிறது. இவருக்கு வயது ஒரு 20-23 ருக்கும். பெங்களூரில் வைத்து சந்தித்தேன். மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழர். ரகுமான் இவரை சந்தித்தது ஒரு இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில். வெற்றிபெறும் நபருக்கு தனது படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்புக் கொடுப்பதாகச் சொன்னாராம். இவர் வெற்றி பெற்றதும் இவரிடம் ரகுமான் கேட்ட கேள்வி, "உங்களுக்கு தமிழ் பேச வருமா?" ஆம் என்ற சொன்ன நரேஸ் அய்யரை தேவைப்படும்போது அழைக்கிறேன் என்று சொன்னாராம். சொன்னது போல சில நாட்களில் அழைப்பு வந்ததாம்.

ரகுமானிடம் வளரும் கலைஞர்கள் பட்டியல் ஒன்று எப்போதும் இருக்கும். அந்தப் பாடகர்கள் நன்கு வளர்ந்து மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்பு வரும் வரை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பார். இதற்கு உதாரணமாக ஹரிணி, கார்த்திக், சுஜாதா, மின்மினி, சின்மயி, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

பட்டியலில் எப்போதும் இரண்டு - மூன்று பாடகர்கள் இருப்பார்கள். அதில் இப்போதிருப்பது நரேஸ் அய்யர், மதுஸ்ரீ மற்றும் பிளாசே என்று நினைக்கிறேன். இந்திய திரையுலகில் அதிகமான பாடகர்களை அறிமுகப்படித்தியதும் அவர் தான் என்று நினைக்கிறேன்.

பாடல்களை எழுதியிருப்பர் பிரவீன் ஜோஷ். பாடல் வரிகள் எனக்குப் புரியாத காரணத்தால், அவை எவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றன என்னால் கருத்து சொல்ல இயலாது.

எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசை

1. ரூபாரூ
2. கோன் சலா
3. லக்கா சுப்பி
4. இக்கூன்கர்
5. Lose Control

160 ரூபாய் (Audio CD) கொடுத்து நிச்சயமாக வாங்கலாம்.

ஸ்ருசல் Rang De Basanti Music Review

4 கருத்துகள் :

Boston Bala சொன்னது…

பாடல்களை இனிமேல்தான் கேட்க வேண்டும். கேட்ட பிறகு என்னுடைய எண்ணங்களையும் பதிகிறேன். பதிவுக்கு நன்றி.

வெளிகண்ட நாதர் சொன்னது…

ரஹமான் பாடல்கள் எனக்கு ஒரு காலத்தில் அமிர்தம், ரிலீஸ் ஆன் அடுத்த நாளே கேசட் வாங்கி கேட்டு விடுவேன். இப்பொழுதெல்லாம் அவர் பாடல்களில் அதிக ஆர்வம் இருப்பதில்லை, இருந்தாலும் இதை வாங்கி கேட்டுப் பார்க்கிறேன்!

ஸ்ருசல் சொன்னது…

பாலா,

எப்படி இருக்கிறீர்கள்?. ரொம்ப நாட்களாக பார்க்கவே முடியவில்லை. தீபாவளி எப்படி இருந்தது?

நாதா,

உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ரகுமானின் ரசிகர்களுக்குள்ளேயே பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கின்றனர். ஆனால் மங்கள் பாண்டே, அ ஆ இன்ன பிற படங்களுடன் ஒப்பிடும் போது இது சிறப்பாகவே வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

ஸ்ருசல்

ARIVUMANI, LISBON சொன்னது…

nice review!!

For ur note, I am great fan of Madhushree & Saadhanaa & Naresh ayyer.. Especially for their outstanding pronounsation (whatever may be the language)..