சனி, டிசம்பர் 31, 2005

இந்த வருடம் எப்படி?

மற்றுமொரு ஆங்கில வருடம் கழிந்து விட்டது. எல்லா பத்திரிக்கைகளிலும் கடந்த 53 வாரங்கள் எப்படிக் கழிந்தன என்பது பற்றிய கட்டுரைகள் பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் Attrition Rate (நிறுவனத்தை விட்டு வெளியேறுவோர், புதிதாக வேலைக்குச் சேர்பவர்களின் விகிதம்) வழக்கம் போல குறைந்து விட்டது. நண்பர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மின்னஞ்சல்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த 365 நாட்களின் முக்கியமான நிகழ்ச்சிகளாக இதைத் தான் கூறுவேன்.


  • தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம்

  • லாலு, சிவசேனா, பா.ஜ.க.வின் வீழ்ச்சி (பீஹார் மாநில தேர்தல் வெற்றியைத் தவிர்த்துப் பார்த்தால்)

  • ஒரிசா மாநிலம் பெற்ற அந்நிய முதலீடு (~50000 கோடிக்கு POSCO என்ற தென் கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்றது). இதை ஆதரித்தும், எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்து வருவது வேறு விசயம்.

  • அம்பானி சகோதரர்களின் பிரிவு

  • பங்கு சந்தையின் வரலாறு காணாத Sensex உயர்வு. ஜஸ்வந்த் சிங் நிதியமைச்சராக இருக்கும் போது அடுத்த ஆண்டு 7000 புள்ளிகளைத் தொட்டுவிடும் என்றார்கள். இப்போது அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

  • தனியார் விமான நிறுவனங்களுக்கு அயல்நாட்டு சேவை அனுமதி

  • இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • இந்தியா - சீனா உறவில் ஏற்பட்ட சிறிய மேம்பாடு

  • லஞ்ச விவாகரத்தில் எம்.பிக்கள் வெளியேற்றபட்டது (நல்ல முன்னுதாரணம். இன்னும் பலர் குற்றம் புரிய வேண்டும் என்பது என்னுடைய ஆசை அல்ல. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முயற்சி)


மேலும் இந்த ஆண்டோடு ரிலேட்டிவிட்டி தியரி வெளியிடப்பட்டு 100 வருடங்கள் ஆகின்றன.

மற்றபடி அரசியல் அளவில் சென்ற வருடத்திற்கும், இந்த வருடத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. தமிழின் பெயரால் இன்னும் சிலர் அரசியல் செய்ய ஆரம்பித்திருப்பது வருத்தத்திற்குரியது. கிரிக்கெட்டிலும் அரசியலின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. மன்மோகனின் அரசு பெரிய மாறுதல்களை செய்து விட வில்லை. பழைய பா.ஜ.க அரசின் கொள்கைகள் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டம் வெறும் பெயரளவில் நிறைவேற்றப்பட்டது. சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள் கூட மக்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்களை விளைவித்து விடவில்லை. அண்டை மாநிலங்களில் அத்தகைய அழிவுகள் கூட மறக்கப்பட்டு சின்ன சின்ன விரோதங்கள் இன்னும் மனதில் வைத்திருக்கப்படுகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கைகள் கூட மொழி ஆதிக்கவாதிகளின் பிடியில் கட்டுண்டு, முரண்பாடான, விரும்பத்தகாத விசயங்களை அச்சிடுவது வருத்தமடையச் செய்தது. ஜனநாயகத்தின் அத்தியாவாசியமான, கடைசி நம்பிக்கை பேச்சுரிமையை பாதிக்கும் விதமாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் இனி நடக்காது என நம்புவோமாக. வெள்ளப் பாதிப்புகளைப் பேசுவதை விட, சவுரவ் கங்குலி நீக்கப்பட்டது போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது நல்ல முன்னேற்றம்.

ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர் மஞ்சுநாத் கொலை செய்யப்பட்டது ஒரு பெரிய கறை. பெங்களூரில் BPO பணியாளர் பிரதீபாவின் கொலை கண்டிக்கப்பட வேண்டிய விசயம் என்றாலும், உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டதற்கு மஞ்சுநாத்திற்குக் கிடைத்த தண்டனை வருத்தத்திற்குரியது. இது உண்மையாக இருப்பவர்களின் அடிப்படை நம்பிக்கையை சிறிது அசைத்துப் பார்க்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு நாட்டின் அழிவு இது போன்ற நிகழ்ச்சிகளில் தான் தொடங்குகிறது. இனி வரும் வருடங்களில் இது போல நிகழாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதே நேரத்தில் வருட கடைசியில் ஐ.ஐ.சி-ல் நடந்த தாக்குதல் பெங்களூர் நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பற்றாகுறைக்கு நேற்று மனித வெடிகுண்டுகள் பற்றிய கடிதம் ஒன்றும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல்களும் நேற்று சில நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதும் பலரை கவலை கொள்ளச் செய்துள்ளது. எங்களது அலுவலகம் அமைந்துள்ள தொழில்நுட்ப வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அனைவரும் அலுவல்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். பெங்களூரில் தாக்குதல் நடத்தினால் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களின் கணிப்பு எனக் கூறப்படுகிறது. இந்தியாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும், முயற்சியும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. எப்போது இதை நிறுத்துவார்கள்? இந்தியாவை சீரழிக்க தீவிரவாதிகள் வேண்டாம்; சில அரசியல்வாதிகளே போதும் என்பதை எப்போது அவர்கள் புரிந்து கொண்ட பின்பு தான் என நினைக்கிறேன்.

மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்தும், தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பதிலேயே இந்த வருடத்தின் பெரும்பகுதி போய்விட்டது. ஆனாலும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன என்று உறுதியாகக் கூறலாம். பல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், Service Mode ல் இருந்து விடுபட்டு, தங்களின் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது நல்ல மாறுதல். அதன் எண்ணிக்கை சொற்பமே என்றாலும், எதிர்காலத்தில் மிகுந்த நன்மைபயக்கும் விசயமாகும். இத்தனை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தும், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றியும், இந்தியாவில் இருந்து எந்த மென்பொருட்களும் (ஒன்றிரண்டைத் தவிர்த்து) சர்வதேச நிறுவனங்களைக் கவரவில்லை. அனைவரும் அதற்கான முதல் படி இது.

பீஹாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது நல்ல மாற்றம். இன்னும் சில ஆண்டுகள் கழித்தே அவரின் ஆட்சி எம்மாதிரியான மாற்றத்தை பீஹார் மக்களுக்குக் கொடுத்துள்ளது என்பதைக் கூற முடியும். அதே போல மேற்கு வங்காளத்திலும் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அது அந்த மாநிலத்திற்கு நல்லதே. அவர்களின் ஆட்சி மிகச் சிறப்பாகவே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் (25 வருடங்கள் ஆண்டு விட்டார்கள்), இன்னொரு கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பார்க்கலாம் அந்த மக்கள்.

ஆனால் பொருளாதார ரீதியாக நல்ல ஆண்டு தான். அதிகமான அந்நிய முதலீடுகள். தமிழகத்திற்கு வோல்க்ஸ்வோகன் முதலான நிறுவனங்கள் வருவதற்காக ஒப்பந்தங்கள் செய்துள்ளன. பில் கேட்ஸ் தமிழகத்தில் முதலீடு செய்ய உறுதி கூறியுள்ளார். ஆனாலும் தகவல் தொழில்நுட்பத்தில் கர்நாடாகவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவே. அடுத்த வருடத்தில் இந்த இடைவெளி குறைய வேண்டும் என்பது என் அவா. அல்லது ஒரே இடத்தில் குவியாமல் முதலீடு நாட்டின் பல நகரங்களுக்கும் செல்ல வேண்டும். மேலும் ஆறு, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட வேண்டும். திரைத் துறையில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். பயம் மற்றும் அதிருப்தியில் யாருமே திரைப்படம் எடுக்காமல் போய்விட்டால் மக்கள் என்ன செய்வார்கள்? அனைவருக்கும் பைத்தியம் தான் பிடிக்கும். விளையாட்டு அல்ல; இது இன்றைய நிலையில் உண்மையும் கூட.

தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் (ஏகாதிபத்தியம்) அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது. தொலைத் தொடர்பு, மருந்து, தொலைகாட்சி நிறுவனங்கள், சாலை போக்குவரத்து, எண்ணெய் முதலான துறைகளில். அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து முரண்பாடுகள் இருந்தால் ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி மிகவும் முக்கியம். ஆங்கில செய்திச் சேவையில் கோலேச்சி கொண்டிருந்த (சேவை தரமாகவே இருந்தாலும்) என்.டி.டி.விக்கு போட்டி வந்திருப்பதும் ஆரோக்கியமான விசயம். ராஜ் தீபக்-ன் சி.என்.என். ஐ.பி.என் சேனலில் உடனடி விசேசங்கள் காணக்கிடைக்கவில்ல என்றாலும் செய்தியின் தரத்தில் குறை இருக்காது என நம்புகிறேன். அதே போல தமிழ் செய்தி சேவையில் கூட சன் டி.வி, ஜெயா டி.வி நிறுவனங்களுக்குப் போட்டியாக இன்னும் சில சேனல்கள் வந்தால் நன்றாக இருக்கும். அதற்குண்டான தடைகள் நீக்கப்படவேண்டும். கூகுளுக்குக் கூட போட்டி வந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம். போட்டி எல்லோரையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கச் செய்து, தரத்தினை மேம்படுத்த உதவுகிறது. போட்டி இல்லையென்றால் வளர்ச்சி இல்லை. எங்கு வளர்ச்சி இல்லையோ அங்கு ஆரோக்கியமும், சந்தோசமும் இல்லை.

எனக்கு இது வழக்கம் போல மற்றுமொரு சாதாரண வருடம் தான். வலைப்பதிய ஆரம்பித்தது, பெரிய மாறுதல் எனக் கூறுவேன். எண்னங்களை வெளியிட ஓர் சிறந்த வடிகாலாக இந்த வலைப்பதிவுகள் அமைந்துள்ளன. ரகுமானை நேரில் சந்தித்து, பேசும் வாய்ப்பு கிட்டியது. சச்சின் 35 சதங்கள் அடித்ததில் மகிழ்ச்சி. வழக்கம் போல திரை இசை என்னுடைய பொழுதுபோக்கு நேரத்தில் பெரும் பங்கு வகித்தது. திரைஇசையில் யுவன் (கண்ட நாள் முதல், அறிந்தும் அறியாமலும், புதுப்பேட்டை, கள்வனின் காதலி, ஒரு கல்லூரியின் கதை, அகரம்), ஹாரிஸ் (அந்நியன், கஜினி) நன்றாக செயல்பட்டு வருவது ஆரோக்கியமான விசயம். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, டிஸ்யூம் பட பாடல்கள் மூலமாக கவனிக்க வைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே சுக்ரனுக்கு இசையமைத்தவர். வருட கடைசியில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்த ரங்கு தே பசந்தி பாடல்கள் மிகவும் கவர்ந்தது. புதுபேட்டையில் வரும் 'ஒரு நாளில் வாழ்க்கை என்றும்' பாடலில் வரும் வயலின் இசை மிகவும் பிடித்திருந்தது. ஆறரை கோடி பாடல் (அ.ஆ), ரூபாரூ (ரங்கு தே பசந்தி) சுட்டும் விழிச்சுடரே பாடல், ரா ரா பாடல், ஏலே ஏலே மாட்டித் தான் பயலே (அறிந்தும் அறியாமலும்), மேற்கே மேற்கே (கண்ட நாள் முதல்), மிகவும் பிடித்த பாடல்கள்.

தி சென்னை சில்க்ஸ்-ன் விவாஹா விளம்பரம் மிக அழகாகவும், இனிமையாகவும் இருந்தது. நிறைய முறை ரசித்துப் பார்த்தேன் (இப்போதும் கூடத் தான்). இது பின்னணி பாடகி சின்மயி பாடி சுரேஸ் பீட்டர்ஸ் இசையமைத்தது.

பல நல்ல புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

பலருக்கு ஒவ்வொரு வருடமும் எப்போது இந்த வருடம் முடியும் என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்து விடும். உயிருக்குயிரானவர்களின் பிரிவு, பண இழப்பு, விபத்து, தொழிலில் ஏற்படும் தோல்வி அந்த வருடத்தினை மறக்க முடியாமல் செய்து விடுகின்றன. புதுவருடாமாவது நன்மையை பயக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து விடும். இது மனதளவில் தன்னம்பிக்கை வளர்வதற்கும் உந்து சக்தியாக விளங்கும்.

பலர் புதிய வருடம் பல மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்காக, தங்களின் பழக்க வழக்கங்களை மாற்ற முயல்வதும் உண்டு. அது பெரும்பாலும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிப்பதும் உண்டு. புதுவருடம் நன்றாக இருக்க வேண்டும் என வருடத்தின் கடைசி நாள் நினைத்து, முதல் நாளில் மிகவும் ஜாக்கிரதையாக மனைவியிடன் சண்டை போடாமல் அல்லது அதிகம் காட்டமாகப் பேசாமல், நிதானமாக செயல்படுவதும் உண்டு. இந்த வருடம் நன்றாக இருக்க வேண்டும்; நான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வேன்; மற்றவர்களிடம் வீணாக சண்டை போட மாட்டேன்; நான் மாறி விடுவேன் என்ற நம்பிக்கையின் வீச்சு முதல் நாள் அதிகமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக அது மறைந்து விடும். நாட்கள் அப்படியே மாறாமல் தான் இருக்கும். நமது மனநிலை தான் சில நாட்களில் மாறிவிடும். புதிய கோணத்தில் பார்த்து, அந்த வீச்சும், ஆர்வமும் குறையாமல் பார்த்துக் கொண்டால் வருடம் முழுவதும் மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தான்.

எனக்கு புது வருடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியில் சுற்றத் தவறுவதில்லை. எங்கே சுற்றுவது? எல்லா இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. The Forum Mall, Garuda Mall, ஹோட்டல்கள், இந்த அலுவலகம்; இப்படி எல்லா இடங்களிலும்; M.G.Road செல்லவும் பயம் :)

வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஸ்ருசல்

கருத்துகள் இல்லை :