வெள்ளி, டிசம்பர் 16, 2005

என்.டி.டி.வியின் பிதாமகன்

கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாட்டைத் தவிர மற்ற அனைத்து விசயங்களும் விவாதிக்கப்படுகின்றன. சில நாட்களாக விளையாட்டுச் செய்திகளில் அரசியல் செய்திகள் ஆக்கிரமித்துள்ளன. அரசியல் விசயங்களே அதிகம் தென்படும் தலைப்புச் செய்திகளில் விளையாட்டுத் துறையான கிரிக்கெட் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. கங்குலியை கிரிக்கெட் வாரியம் தூக்கியதும் தான் தாமதம், கொல்கத்தாவினர் (சிலர் தான். அனைவரும் அல்ல) கோஷங்களை ஆரம்பித்து கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்துள்ளனர்.

கங்குலியைத் தூக்கியது சரியா தவறா என்பதைப் பற்றி பின்னர் விவாதிக்கலாம். ஆனால் இந்த விசயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் அவசியம்தானா எனத் தோன்றுகிறது? அதிலும் முக்கியமாக என்.டி.டி.வி, மூச்சுக்கு முன்னூறு முறை கங்குலியை நீக்கியது சரியா தவறா என விவாதம் நடத்துகிறது. தலைப்புச்செய்திகளில் மூன்று நாட்களாக அதைத் தான் வாசிக்கின்றனர். இன்னும் கூட என்.டி.டி.வி-ன் வலைத்தளத்தில் முக்கிய செய்தியாக அது தான் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறிது நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் போட்டிகளிலிருந்து கங்குலியை நீக்கியதும் என்.டி.டி.வி "சச்சின் 2, 2, 0 ரன்களே குவித்துள்ளார் அவரை ஏன் நீக்கவில்லை" என்ற தோனியில் என ஓர் செய்தி தொகுப்பினை ஒளிபரப்பியது. அதாவது கங்குலியை மட்டும் வைத்துவிட்டு சச்சினை விட்டு விட்டதாகக் குறிப்பிட்டது. பல விசயங்களில் ஓரளவு நடுநிலைமையோடு செயல்பட்டு வரும் என்.டி.டி.வி, இந்த விசயத்தில் கங்குலிக்கு சாதகமாகவே செய்தி வெளியிட்டு வருகிறது. கல்கத்தாவில் நடைபெறும் போராட்டங்களை LIVE ஆகவும், அவருடைய ஆதரளவாளர்களின் பேட்டியையும் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறது. இப்போது காம்பீர் அவசியமா, லக்ஷ்மண் அவசியமா என சொல்பவர்களின் பேட்டியைத் தேடித் தேடி ஒளிபரப்பவும் செய்கிறது. கங்குலி அணியில் மீண்டும் இடம்பெறச் செய்யாமல் ஓயாது போலத் தெரிகிறது. இனிமேல் என்.டி.டி.வி-யை 'Never give up Dada Television' என்று அழைக்கலாம். ஆரம்பத்திலிருந்து கங்குலிக்கு சாதகமாகவே என்.டி.டி.வி செய்திகளை வெளியிடுவதும், பிரணாய் ராய் கல்கத்தாவைச் சார்ந்தவர் என்பதும், என்.டி.டி.வி-ல் கல்காத்தாவினரின் ஆதிக்கம் மிகுந்திருப்பதும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கங்குலி ஒரு சிறந்த வீரர் என்றால் நாடு முழுவதுமே போராட்டம் நடந்திருக்குமே? ஏன் அது கல்கத்தாவில் மட்டும் நடக்கிறது. அதுவும் போராட்டத்தில் சேப்பலையும், கிரண் மோரையையும் தேச துரோகிகள் அளவிற்கு கொண்டு சென்று கோஷம் எழுப்பவது கங்குலியின் எதிர்காலத்தைத் தான் பாதிக்கும். கங்குலியை ஏன் அவர்கள் ஒரு பெங்காலி வீரராகப் பார்க்கின்றனர். அவர் மட்டும் தான் அணியில் ஆடுகிறாரா? இத்தனை நாள் கங்குலியும், டால்மியாவும் கோலோச்சும் போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? பாலாஜியும், கும்ளே, ராபின் சிங்கு போல பல நல்ல வீரர்கள் அணியை விட்டு அனுப்பப்படும் போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? அவர்களுக்கு கங்குலி மட்டும் அணியில் ஆடி மற்ற பத்து பேர் ஆடாவிட்டாலும் போதுமா? கங்குலி அனைத்துப் போட்டிகளிலும் இடம் பெற்று இந்தியா எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறாவிட்டாலும் போதுமா?

10 வருடமாக இந்தியாவிற்காக விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்த வீரரை நடத்திய விதம் சரியல்ல எனக் கூறுகின்றனர் பலர். அதே கேள்வி தான். 10 வருடமாக இந்தியாவிற்காக விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் நடந்து கொள்ளும் விதம் தான் நன்றாக இருக்கிறதா?

சேப்பல் விவாகாரம் உச்சத்தில் இருந்த போது ஜிம்பாப்வேக்கு எதிராக சதத்தை எடுத்து விட்டு அவர் மீடியாவிற்கு கொடுத்த பேட்டியின் அழகை என்னவென்று சொல்வது?. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரகளையும், பிரச்சினைகளும், சிக்கல்களும். இவ்வளவும் டால்மியாவும், கங்குலியும் வந்த பின்னர் தான் என்று நினைக்கிறேன். பயிற்ச்சிக்கு தாமதமாக வருவதும், இவருடைய விளையாட்டு உபகரணங்களை மற்றவர்களைச் சுமந்து வரச் சொல்வதும், பயிற்சியாளரின் கருத்துகளைக் காதில் வாங்காமல் இஷ்டத்திற்கு முடிவெடுப்பதும், அணி வீரர்களின் தேர்வில் தனது ஆதிக்கத்தை செலுத்தியதும், வீரர்களை நடத்திய விதமும், மைதானத்தில் நடந்து கொண்ட விதமும் (பல முறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்), அப்போதெல்லாம் டால்மியாவின் உதவியுடன் ICC யை எதிர்கொண்டு அவற்றை ரத்து செய்யச் செய்த விதமும் பலமுறை விவாதத்திற்கு வந்துள்ளதை அனைவரும் அறிவர். அணியில் பிரித்தாளும் கொள்கை முறையில் விரோதத்தை வளர்த்ததாக பலர் குற்றம் சாட்டினரே? ஸ்டீவ் வாக்கே இப்போது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லியிருந்தாரே?

இத்தனை ஆண்டுகள் விளையாட்டிற்குப் பிறகு, இவர் ஒழுக்கத்திலும், விளையாட்டிலும் சிறந்தவராக இருந்தால் யார் நினைத்தாலும் இவரை வெளியேற்ற முடிந்திருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ராகுல் டிராவிட் மீதோ, சச்சின் மீதோ இந்த மாதிரி அவதூறோ அல்லது குற்றச்சாட்டோ வந்ததுண்டா?

எதற்கெடுத்தாலும் டால்மியாவுடன் சேர்ந்து கொண்டு அனைவரையும் புல்லைப் பார்ப்பது போல பார்த்து, நோகடித்து வீட்டிற்கு அனுப்பினாரே? மனதை நோகடிக்கும் எத்தனை பேட்டிகள்? யாரையும் மதிக்காமல் நடந்து கொண்ட விதம். இப்போது அழுவதிலும், குமுறுவதிலும் என்ன நியாயம்? ஒரு வேளை இப்போது நன்றாகப் பழகலாம். ஒரு வேளை மீண்டும் டால்மியாவிற்கு தலைமைப் பதவியோ, கங்குலிக்கு கேப்டன் பதவியோ கிட்டினால் அவர் அப்போதும் பழைய முறையில் தான் நடந்து கொள்வார் என்பது என்னுடைய யூகம்.

இங்கு கங்குலியின் விளையாட்டுத் திறன் மட்டும் பார்க்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே சேப்பலும் கூட அவரின் ஒழுக்கத்தைப் பற்றியும், தலைமைப் பண்பையும் (மற்றவர்களை வழிநடத்தும் திறன்) முதலானவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசி வந்தார். இவரால் எத்தனை இளம் வீரர்கள் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பபட்டார்களோ?

இத்தனை நாட்களாக கங்குலி அணியில் வேண்டும் என தீர்மானத்த தேர்வுக்குழுவினரின் முடிவுக்கு ஆதரளித்தவர்கள் இப்போது அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று முடிவெடுக்கும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? இது போல பலருக்கும் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளதே? ஒரு போட்டியில் சேர்க்கப்படுவதும், வாய்ப்பே தரப்படாமல் தூக்கப்படுவதும் புதிதன்றே. அவ்வாறாக முடிவெடுக்கப்பட்ட போதெல்லாம் கங்குலி எப்போதாவது தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுண்டா? அல்லது இப்போது போராட்டம் நடத்தும் நபர்கள் தான் ஏதாவது சொல்லியதுண்டா?

தேர்வுக்குழு செய்த ஒரே தவறு அவரை முதல் டெஸ்டிற்கு எடுத்தது தான் எனக் கூறுவேன். இந்த இரண்டு போட்டிகளில் என்ன ஆராய்ந்து விட்டார்கள்? ஆனால் இந்த முடிவு பழைய தேர்வுக்குழு எடுத்ததே. அப்போது தான் 3-2 என்ற கணக்கில் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் உள்ளே வருவதை எதிர்த்ததில் கிரண் மோரேயும் ஒருவர். சரத் பவார் வந்ததும் அந்த மூன்று நபர்களையும் தூக்கி எறிந்தார். ஆனால் அவர்களின் முடிவை தூக்கி எறியமுடியாதே. அதனால் தான் என்னவோ அவர் முதல் போட்டிக்கு வைத்துக் கொள்ளப்பட்டார்.

இதனால் சிறிய அனுதாப அலை ஏற்பட்டுள்ளது என்பதோ உண்மை தான். அணியில் இருந்து வெளியேற்றப்படும் இவர் முதல் நபர் அல்ல. இவரைப் போல, ஏன் இவரை விட மிக நன்றாக விளையாடிய பல நபர்கள் அணியில் இருந்து பல முறை ஏன் என்று காரணம் சொல்லப்படாமலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் கங்குலி கோடி கோடியாக சம்பாதித்து விட்டார். பல வீரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரே ஒரு "ஒரு நாள் போட்டியிலோ" அல்லது "டெஸ்ட் போட்டியிலோ" தொலைத்து விட்டு ரஞ்சி ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

இவருக்கு இன்னும் அணியில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறதே தவிர நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த 40, 39 ரன்களைப் பெற்றது போல இந்த 5 ஆண்டுகளில் இவ்வளவு கவனமாக விளையாடியது போலத் தெரியவில்லையே? இவர் ஒன்றை மட்டும் இப்போது புரிந்து கொண்டிருப்பார். இவரின் உண்மையான சகாக்கள் என்று இப்போது தெரிந்திருக்கும்.

ஆனால் ஒன்று; அணியில் இடம் பெற வேண்டி ரஞ்சி போட்டிகளில் இனி வெளுத்து வாங்குவார். அணியில் இடம்பெற குட்டிகரணம் போடுவார்.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கங்குலி நீக்கப்பட்டதற்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய பாராளுமன்றத்திலும் இதனைப் பற்றி விவாதிக்க சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அனுமதி அளித்துள்ளார். இதனைப் பற்றி விவாதிக்காவிட்டால் நாட்டின் ஒருமைப்பாடே குலைந்து போகும் என்ற அளவிற்கு அவருடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடும் மழையாலும், வெள்ளத்தாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக என்ன செய்யலாம் என்று ஏதாவது ஆக்கபூர்வமாக விவாதிப்பதை விட்டு விட்டு இதெல்லாம் தேவையா? அதிலும் நேற்றைய முந்தைய தினம் மதியம் சபாநாயகர் இவ்வாறாக அறிவிக்கிறார்; "இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆதலால் உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்தலாம்". அவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி தான் முக்கியம். மக்கள் அல்ல. என்னவென்று சொல்வது?

எதற்கு இதெல்லாம்? பேசாமால் இந்திய கிரிக்கெட் அணியைக் கலைத்து விட்டு அவரவர் வேலையைப் பார்க்கலாம்.

மாணவர்களின் படிப்பு கெடுகிறது; போட்டியின் ஒளிபரப்பில் ஏகப்பட்ட குளறுபடி; தோற்று போனால் ஏதோ இடிவிழுந்தது போல வருத்தம்; வென்றால் யுத்தத்தில் வென்றது போல புகழ்மாலைகள்; மகிழ்ச்சி; வீடு, தோட்டம் என பரிசுகள்; பெட்டிங் வேறு; தேர்வாளர்கள் தேர்வில் பிரச்சினை; பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் தேர்வில் குழப்பம்; பயிற்சியாளர் தேர்வில் குழப்பம்; போட்டி நடக்கும் தினத்தன்று கேபிள் டி.வி.யினரின் அடாவடித்தனம். சில தனியார் சேனல்கள் பே சேனல்களாக மாறி (அல்லது கட்டணத்தை உயர்த்தி) போட்டிக்கு முன்பாக அடம்பிடிப்பது; இதில் ஏதோ ஐசிசி நட்டத்தில் நடப்பது போல போட்டிகளுக்கு வரிவிலக்கு வேண்டும் என கோரிக்கை வேறு! வரும் லாபத்தை என்ன செய்கின்றனர். இதெல்லாம் தேவையா? ஒரு விளையாட்டிற்குள் இவ்வளவு அரசியலா?

ஏற்கனவே சரத் பவார் வந்தாகி விட்டது. சீக்கிரம் லாலு அரசியலில் இருந்து விலகி, தீவிர அரசியலான கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார். ஏற்கனவே அவர் பிஹார் கிரிக்கெட் சங்கத் தலைவராகி விட்டார்(சரியா?). இன்னும் சில ஆண்டுகளில் அவரும் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவார். அரசியலில் இருப்பதை விட இங்கு அதிகம் சம்பாதிக்கலாம். நாடு முழுவதும் ராஜ மரியாதை வேறு! தினமும் பேட்டி, கட்டுரைகள் என விளம்பரம் வேறு. இங்கு நடக்கும் போட்டியை வைத்துப் படமே எடுக்கலாம். படத்திற்குத் தலைப்பு: 11 குசும்பர்களும் 100 கோடி இளிச்சவாயர்களும்.

ஸ்ருசல்



இன்று சேர்க்கப்பட்டவை:


நேற்று பிராணாப் முகர்ஜி கூட தனது ஆதரவை கங்குலிக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் கங்குலி, டால்மியாவைச் சந்தித்ததன் விளைவாக, டால்மியா சரத் பவாருக்கு கடிதம் எழுதி, கங்குலியை அணியில் சேர்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அவரின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் கங்குலி இது போன்று ஆதரவு கேட்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. சரி இதில் சரத் பவார் முடிவெடுக்க என்ன இருக்கிறது? பின் தேர்வுக்குழு எதற்கு?

5 கருத்துகள் :

Pot"tea" kadai சொன்னது…

ஆமா...இப்போ "இந்தியா"ல champions trophy - னு ஏதோ ஒன்னு நடக்குதாமே! மெய்யாலுமா?

பெயரில்லா சொன்னது…

//11 குசும்பர்களும் 100 கோடி இளிச்சவாயர்களும்.//

:-)))

பெயரில்லா சொன்னது…

all bengalis are like pranay roy and ganguly

ஸ்ருசல் சொன்னது…

பெட்டிக்கடை,

ஆம். சென்னையில் நடக்கும் ஹாக்கி போட்டி அது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஹாலந்து மற்றும் இன்ன பிற நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வரும் போட்டி.

இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. ஆனால் ஆஸ்திரேலியாவிடமும், நேற்று ஹாலந்திடமும் தோற்றது.

ஸ்ருசல்

ஸ்ருசல் சொன்னது…

பெயரிலி-2 க்கு,

அந்த மாதிரி பொதுப்படுத்த முடியாது. அங்கும் இந்த மாதிரியான செயலுக்குக் கண்டிப்பாக எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதில் சந்தேகமே இல்லை.