songs 2007 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
songs 2007 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 17, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

சென்ற மாதம் ரகுமானின் அழகிய தமிழ் மகன் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், அதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. ஆடியோ சி.டியே பதினைந்து நாட்கள் கழித்து தான் கைக்கு கிடைத்தது. அதன் பிறகு அதனை நானகைந்து முறைகளுக்கு மேல் கேட்க முடியவில்லை. நேரம் கிடைக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை. கேட்பதற்கு சுவாரசியமாக இல்லை; இரண்டு பாடல்களைத் தவிர. ஆனால் அவ்விரண்டு பாடல்களைத் தவிர, மிக ஆச்சர்யப்படும் விதத்தில், இன்னும் மூன்று பாடல்கள் மிகவும் பிடித்துப் போயின. அவற்றின் பட்டியல். இவை சிறிது பழைய பாடல்களும் கூட. நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்க 99% வாய்ப்பிருக்கிறது.

1. அழகு குட்டி செல்லம்

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்

இயக்குநர் வசந்த்தின் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆசை, நேருக்கு நேர். ரிதம் முதலிய படங்களைக் குறிப்பிடலாம். சாதாரண தேவாவையே, நல்ல பாடல்கள் இயற்றவைத்தவர் (அவை பிற மொழிப் பாடல்களின் நகல்களாக இருந்தாலுமே). ஆனால் இப்படத்தின் பாடல்களைப் பற்றி பெரிய எதிர்ப்பார்ப்பு எனக்கு எதுவும் இல்லை. காரணம் யுவன் சங்கர் ராஜா. யுவன் இவ்வருடத்தில் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரின் சமீபத்திய படங்களில் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டுமே சிறப்பாகவும் மற்றவை மிக சாதாரணமாகவும் அமைந்திருந்தது. வேல் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த படம். ஆதலால் ஓர் தயக்கம் இருந்தது.

'அழகு குட்டி செல்லம்
உனை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
என் நெஞ்சம் உடைந்து போனேன்

.....'

என்று இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில நொடிகளுக்கு எவ்விதமான நல்ல எண்ணமும் ஏற்படவில்லை. ஆனால் 00:36-ல்

அம்மு நீ என் மொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேசத் தெரியலை

எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை

இருந்தும் நமக்குள்
இது என்ன
புதுப் பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

வரிகளின் ராகமும், அதன் பின்னணியில் மெல்லிய 'கொட்டு' போன்ற இசையும், எனது எண்ணத்தை முழுவதுமாக மாற்றின. அதுவும் சங்கர் மகாதேவன் 'இருந்தும் நமக்குள் இது என்ன', என்று குரலை உயர்த்தி பாடுவதை கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கிறது.

இது பாதி தான். சரணத்தில், 2:29-ல்

எந்த நாட்டைப்
பிடித்து விட்டாய்
இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை
தோரணை

வரிகளில் ராகமும், சங்கர் மகாதேவன் அதனை பாடிய விதமும் அற்புதம். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மெல்லிய 'கொட்டுடன்', 'மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச', என்று தொடர்வது மிக இனிமை.

மொத்தத்தில் யுவன் மற்றும் சங்கருக்கு ஓர் பெரிய சபாஷ். இதே படத்தில் இடம்பெற்றுள்ள, 'ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்', என்ற பாடலும் மிக சிறந்த பாடல். அது இன்னுமொரு 'துள்ளுவதோ இளமை' ('கண் முன்னே'), 7G ரெயின்போ காலனி ('நாம் வயதுக்கு வந்தோம்') வகை பாடல் போல் ஒலித்தாலும், சில இடங்களில் மிக அற்புதமாக வந்துள்ளது. முக்கியமாக அத்னன் சாமியின் குரல், இப்பாடலுக்கு பெரிய பலம். மிக அருமையாகப் பாடியுள்ளார்.

பல நாட்களாக, இப்பாடலில் இடம்பெற்ற 'காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது' (00:25) வரிகளை என்னையுமறியாமல் உச்சரித்துக்கொண்டிருந்தேன்.


2. புத்தம் புது காத்து தான்


படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், சங்கர் மகாதேவன்

ப்ரியா, தனது 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலமாக பலரையும் கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல், அப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம். அவரது இசை ரசனையை, அப்படத்தின் பாடல்கள் மூலம் அறிய முடிந்தது. அப்படத்தின், 'மேற்கே மேற்கே', பாடல் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்களில் ஒன்று. எப்போது கேட்க வாய்ப்பு கிடைத்தாலும், 'Forward', செய்யாமல் கேட்பேன்.

அதே ப்ரியா + யுவன் கூட்டணி. அதன் காரணமாக, 'கண்ணாமூச்சி ஏனடா', படத்தின் பாடல்களை 'வேல்', போல் இருக்கும் என்று என்னால் கருத முடியவில்லை. முதல் பாடலில் இருந்து அனைத்துப் பாடல்களும் என்னைக் கவர்ந்தது. யுவனின் ஒரு பாடல், இரு பாடல் சூத்திரத்தை இப்படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு உடைத்துள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவற்றில் மிக மிகப் பிடித்த பாடல், 'புத்தம் புது காத்து தான்' பாடல். ஏன், இந்தப் பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்த பாடலே இது தான்.

என்னவொரு அற்புதமாக பாடல். பாடல் முழுவதுமே.

'ஹே ஹே', என்று ஒலிக்கும் ஆரம்பம் முதலே. இது தான், அழகு; அது தான் அழகு என்று சொல்ல முடியாது. பாடல் முழுவதுமே இனிமை. சங்கர் மகாதேவனும், விஜய் ஜேசுதாஸ் இருவருமே அற்புதமாக பாடியிருக்கிறார்கள்.

புத்தம் புது காத்து தான்
என்னை வாவான்னு அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லு தான்
அட ஆமான்னு சிரிக்குறதே...

என்று ஆரம்ப வரிகளிலேயே ராகம் அழகு.

அதனைத் தொடர்ந்து, 0:27-ல் விஜய் பாடியுள்ள இவ்வரிகள் தான் என்னை மிக மிகக் கவர்ந்தவை.

தென்னம் இளம் நீரால்
என் வாயெல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்

அற்புதம்! மிகவும் உணச்சிவயப்படச் செய்த வரிகளா?. என்ன சொல்வது? நல்ல இசை கேட்ட ஆனந்தப் பெருக்கு என்பார்களே. அது! யுவனுக்கு நன்றி.

இது போதாதென்று, அதனைத் தொடர்ந்து, சங்கர் மகாதேவன் தன் பங்கிற்கு,

சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹே
சாற்றுகிற போதிலே
இங்கு யாருக்கும் யாரோடும்
எப்போதும் பகையில்லையே
ஹே
புத்தம் புது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பல்லவி முழுவதுமே சிறப்பாக அமைந்த அற்புதமான பாடலை கேட்கிறேன். யுவனுக்கு பாராட்டுக்கள். சென்ற பதிவில், சங்கர் மகாதேவனை, யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று குறைபட்டிருந்தேன். அதைப் போக்கும் விதமாக, சென்ற பாடல், இந்த பாடல், மற்றும் அடுத்த பாடல் என மூன்று அற்புதமான பாடல்கள் சங்கருக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் யுவனிடமிருந்து. 2:27-ல் ஒலிக்கும் இசை, 'அறிந்தும் அறியாமலும்', படத்தின் 'ஏலே ஏலே', பாடலின் நடுவில் வரும் இசையை ஒத்திருக்கிறது.

இப்பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன என்ற கணக்கே இல்லை.

3. மேகம் மேகம்

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிச்சரண், சுவேதா

இப்பாடலும் கண்ணாமூச்சி ஏனடா படத்திலிருந்து தான். பொதுவாக, Shuffle-ல் வைத்து பாடல்கள் கேட்கும் வழக்கம் எனக்கிருந்தாலும், இப்படத்தின் பாடல்கள் ஒன்று வந்தாலும், இந்தப் படத்தில் இம்மூன்று பாடல்களை முழுவதுமாக கேட்டு விட்டு தான் அடுத்த பாடலுக்குத் தாவுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படி ஒரே படத்தில் மூன்று, நான்கு பாடல்கள் பிடித்திருக்கிறது.

பாடலின் ஆரம்பம், ஏதோ ஓர் ஹிந்தி பாடலினைப் போல் தான் ஒலிக்கிறது. ஆனால் அதே இசை 00:11-ல் மிக அற்புதமாக மாறுகிறது. சுவேதா மிக அருமையாக பாடியிருக்கிறார். கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது. முதலாம் சரணத்தில் பாட ஆரம்பித்து, சரணம் முழுவதுமே இவரே பாடுவதற்கு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இவரது குரல், சுஜாதாவின் குரலை ஞாபகப்படுத்துகிறது.

பாதையின் ஓரத்தில் நடந்து
நானும் போகையில்
முகத்தை காட்ட மறுத்திடும்
ஒற்றைக் குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின்
ஆட்டம் இனறும் தொடருதே
முதன் முதலில் வாழ்வில் தோன்றும்
வண்ணக்குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலைக் கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்

சரணம் முழுவதும் வரும் ராகமும், சுவேதாவின் குரலும் மிக இனிமை. அதே போல், சுவேதாவின் குரலில், பல்லவி (2:42; 4:16) இன்னும் இதமாக இருக்கிறது. 'கூவுதே', என்று உச்சரிக்கும் இடமும், 'சென்று பார்க்கிறேன்', வார்த்தைகள் புன்சிரிப்புடன் உச்சரிப்பதும், 'வானவில் தானா', வரிகளை உச்சரிக்கும் இடமும், 'போதும் போதும்', வரிகளை உச்சரிக்கும் இடமும் இனிமையோ இனிமை.

முதலாம சரணத்திற்கு முன்பு வரும் (1:28) இசையும், இரண்டாம் சரணத்திற்கு முன்பு வரும் கிடார் இசையும் அருமை.

4:38-ல் சுவேதாவின் குரலுடன், குழுவினரின் குரலை சேர்த்து, 'நெஞ்சில் ராட்டினம், எனைச் சுற்றித்தான் தூக்க', ஒலிக்க வைத்திருப்பது, மிக அழகு. அற்புதமான பாடல்.

4. சஞ்சாரம் செய்யும் கண்கள்

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், மதுஸ்ரீ

இன்னுமொரு நல்ல பாடல்; இப்படத்திலிருந்து. இப்பாடலில் மிக அழகானது என்று இரண்டு விசயங்களைக் குறிப்பிடுவேன்.

1. முதலாம் சரணத்திற்கு முன்பு, 1:03 முதல் 1:24 வரை ஒலிக்கும், வயலினிசை. இனிமையோ இனிமை. யுவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பான வயலினிசைகள் அமைகின்றன.

2. மதுஸ்ரீயின் குரல். எனக்கு மதுஸ்ரீயின் குரல், சில பாடல்களில் முற்றிலும் பிடிக்கவில்லை. அவை அனைத்துமே ரகுமானுக்கு பாடியவை. மயிலிறகே, வாஜி வாஜி பாடல்கள் உதாரணம். ஆனால் அவர் பிற பாடகர்களுக்குப் பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை. அவரது குரல், அப்பாடல்களுக்கு வளம் சேர்த்தவை. உதாரணம். ஜி படத்தில் இடம் பெற்ற 'டிங் டாங் கோயில்' பாடல், 'பீமா' படத்தில் இடம் பெற்ற 'ரகசிய கனவுகள்', பாடல். 'ரகசிய கனவுகள்', பாடலில் அவரது குரல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதுவும், 3:52-ல் வரும்

'எனது இரவினில் கசிகிற
நிலவொளி நீயே
படர்வாயே

நெருங்குவதாலே
நொறிங்கி விடாது
இருபது வருடம்'

இடத்தில் அவரது குரல், வாவ்! அதே போல், இப்பாடலுக்கும் இவரது குரல் வளம் சேர்த்துள்ளது. மற்ற இரு பாடல்களை போலவே, இப்பாடலிலும் யுவனின் இசை அற்புதம். சில இடங்களில் ராகம் மிக அருமை. 1:55-ல் வரும் இவ்வரிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

'நதிவோடிட நீ அங்கே
நான் இங்கே என
நின்று நின்று விட

படகாகிடும் பார்வைகள்
ஒன்றே சேர்க்காதோ?

5. கேளாமல் கையிலே

படம்: அழகிய தமிழ் மகன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி

இப்படத்தின் பாடல்கள் மேல் ஆரம்பத்திலிருந்தே எவ்விதமான எதிர்பார்ப்புமில்லை எனக்கு. காரணம் விஜய் படம் என்பதால். அதனை உறுதி செய்வது போல், 'மதுரைக்குப் போகாதடி', 'வலையப்பட்டி தவிலே', 'மர்லின் மன்றோ', பாடல்களும் அமைந்தன. விதிவிலக்காக, 'எல்லா புகழும்', பாடலும், 'கேளாமலே கையிலே', பாடலும் அமைந்துள்ளன. ஆனால் இப்பாடல் தான் படத்தின் ஒரே சிறந்த பாடல்.

சில இடங்களில் ராகமும், வரிகளும் ஒத்திசைக்கவில்லை. உதாரணத்திற்கு, 3:59-ல்

'பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தமாய நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்'

குறிப்பிடலாம். கேட்பதற்கு இனிமையாக இல்லை.

ஆனால், சில இடங்களில், அது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

'கேளாமல் கையிலே', என்று சைந்தவி பாடும் அனைத்து இடங்களுமே இனிமையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் அவர் 'கேளாமல்', என்று பாடியபிறகு, வரும் வயலின் இசையும், அதனைத் தொடர்ந்து, 'கேட்டு ரசித்த பாடலொன்றை', என்று மீண்டும் பாடுவதும் நன்று.

அதே, 'கேளாமல்'-ஐ, 1:42-ல் சிறிது வித்தியாசப்படுத்தி பாடுவதும், 3:25-3:51 வரை குழுவினருடன் இணைந்து பாடுவதும் மிக மிக அருமை. அற்புதம்!

அதே போல்,

'மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா' ,என்ற இடத்தில் ராகம் மிகவும் அற்புதம்.

இப்படத்தின் பாடல்கள் மீது எனக்கு எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லையென்றாலுமே, ஒரு சில பாடல்கள் இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. அதிலும், மர்லின் மன்றோ பாடலில் வரும் பெண் குரலும், அதன் ராகமும் சுத்தம்!

ஹே சாட்டர்டே நைட்
பார்ட்டிக்கு போகலாம்
வாறியா?

ஆண்டவா? என்ன குரல் இது; அது பாடப்பட்ட விதம்! சில யுவன் சங்கர் பாடல்களில் (செல்வராகவன் படங்களில்) வரும் பெண் குரல் போல் ஒலிக்கிறது. ரகுமான் சார்! யுவன் ('கற்றது தமிழ்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'சத்தம் போடாதே'), ஒரு பக்கம் அடிப் பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் போது, ரகுமான் இது போன்ற பாடல்கள் தருவது மிகவும் வருத்தம்.

செவ்வாய், அக்டோபர் 09, 2007

வெறுத்து ரசித்த பாடல்கள்

சில பாடல்களை கேட்டவுடனே பிடித்து விடும்; பல கேட்டுக்கொண்டே இருந்தால் பிடித்து விடும்; சில பாடல்கள் பார்த்த பிறகு பிடித்து விடும்; சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் / பார்த்தாலும் பிடிக்காது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.

ஆனால் சில பாடல்களை மிகவும் வெறுத்து, கேட்காமல் தவிர்த்து, சில மாதங்களுக்குப் பிறகு கேட்கும் போது, அதிசயமாக, மிகவும் பிடித்து விடும். அது போன்ற அனுபவம் எனக்கு நான்கைந்து முறை ஏற்பட்டுள்ளது. அதனைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது. இப்பாடல்கள் நீங்கள் மிகவும் வெறுத்த பாடல்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆதலால் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதோ பட்டியல்.

1. யம்மாடி யாத்தாடி

பாடல்: வல்லவன்
பாடியவர்கள்: டி. ராஜேந்தர், சிம்பு, சிசித்ரா, மஹதி
இசை: யுவன் சங்கர் ராஜா

வல்லவன் படம் வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அப்படத்தில் மிகவும் வெறுத்த பாடல். சன் மியுசிக்கில் நேயர்கள், இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அவர்களைத் திட்டியிருக்கிறேன் (எவ்வளவு நல்ல பாடல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டு விட்டு, எதற்காக இதனை கேட்கிறார்கள் என்று!). குத்து பாடல் என்பதனால் பிடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆரம்பத்தில் வரும் நாதஸ்வரமும், டி.ஆர், சிசித்ராவின் குரலும் என்னை பலமுறை வெறுப்பேத்தியிருக்கின்றன.

இப்பாடலை ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பாடலின் இரு பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று மஹதியின் குரல். இப்பாடலில் மஹதியின் குரல் ஒளிந்திருந்தை நான் ஆரம்பத்தில் கவனிக்கத் தவறியிருந்தேன். பின்பு மீண்டும் கேட்ட போது, இப்பாடலில் கூட மஹதியின் குரல் நன்றாகயிருக்கிறது என்று வியந்தேன். ('நல்லவனே வல்லவனே', 'வெட்கம் எனும் வில்லனைத் தான்', 'வாழும் வரை வாழும் வரை'). ஏனோ மஹதியின் குரல் மீது எனக்கு அவர் பாட ஆரம்பத்திலிருந்தே ஒரு விதமான ஈர்ப்பு.

அதனை விட என்னை மிகவும் கவர்ந்த இன்னுமொரு இடம் சிம்புவும், சுசித்ராவும் பாடும் ஒரு சிறிய பகுதி.

அது 3:00-ல் டப்பாங்குத்து டிரம்ஸிலிருந்து, 3:08-ல் மிக அருமையாக நாதஸ்வரமாக மாறி, அதிலிருந்து 3:14-ல் மேளத்திற்கு மாறி, 3:26-ல் மீண்டும் டப்பாங்குத்திற்கு மாறுவது கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து சிம்புவிம், சுசித்ரா மிகவும் அற்புதமாக பாடியிருப்பார்கள்.

ஆதாராமா அவதாரமா
ஆயிப்புட்ட நெஞ்சுக்குள்ள

உன்னை விட்டால் என்னை விடும்
உயிர்தானமா உள்ளுக்குள்ள

உன் வாசம் தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது

நம் பேரைத் தான் ஊரெல்லாம் பேசும்
ஊமைக்கும் மொழியானது

அற்புதமான ராகம். அருமையான குரல்கள். பின்பு தான் தெரிந்தது. அதனைப் பாடியது வேறு யாருமல்ல - சுசித்ரா தானென்று. சிம்புவும் நன்றாக பாடியிருக்கிறார். எவ்வளவு அருமையாக 'ஆதாரமா', 'உன்னை விட்டால்', 'உன் வாசம்', வரிகளைப் பாடியிருக்கிறார்கள். இப்பகுதிக்காக 3:00-லிருந்து பல நூறு முறைகளுக்கு மேல் கேட்டிருக்கின்றேன். அற்புதம்!

சுசித்ராவின் பாடல்கள் ஒன்று கூட பிடித்ததில்லை. அவரை டப்பாங்குத்து பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அவர் பாடிய பாடல்களுக்கென்று ஒரு முத்திரை இருக்கிறது. ஆனால் அவராலும் நன்றாக பாடமுடியும் என்பது இப்பாடலில் தான் நான் உணர்ந்து கொண்டேன். என்ன... யாரும் அவருக்கு அவ்வாறு பாடுவதற்கு வாய்ப்பு தான் கொடுப்பதில்லை.

இப்பாடலிலும் கூட இவ்விரண்டு வரிகளில் தான் நன்றாக பாடியிருப்பார். அதிலும் 'உயிர் வாழுது', என்ற இடத்திலேயே சுசித்ரா வழக்கமான சுருதியில் பாட ஆரம்பித்து விடுவார். அது 'நீதாண்டா நீதாண்டா ஜல்லிக் கட்டு', என்று மாறும் போது இன்னும் வெறுப்படைய வைக்கும்.

2. ஏஞ்சல் வந்தாளே

படம்: பத்ரி
பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிராசாத், சித்ரா
இசை: ரமணா கோகுலா

இப்பாடல் வந்ததும் இதனை வெறுத்த முதல் நபர் நானாகத் தானிருப்பேன். விஜய்யின் படங்கள் எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்பாடலின் ஆரம்பம், அது பாடப்பட்ட விதம், வரிகள் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தினை ஓர் நாள் சன் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்பாடலை மீண்டும் கேட்கும் (பார்க்கும்) வாய்ப்பு கிடைத்தது. ரசிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் இன்னும் கூட அதன் ஆரம்பம், வரிகள், ஆண் குரல், பாடப்பட்ட விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. பிடித்ததெல்லாம் பாடலின் பிற்பாதியில் சித்ரா பாடும் பகுதி தான். அவர் பாடிய இவ்வரிகளும் (3:07), அதன் ராகமும், பின்னணியில் வரும் இசையும் மிக இனிமை.

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே
நன்றி உயிரே

நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லுமுன் அறிந்தாயே
நன்றி உயிரே

உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே

ஆஹா அற்புதம்!

சித்ராவினைப் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இப்பாடலில் அவரின் குரல் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது. அது முதல் இப்பாடலின் மீது ஓர் மயக்கம் தான். இது போன்ற மிக சாதாரணமான ஆரம்பம் மற்றும் முடிவும் இருக்கும் இப்பாடலில் இது போன்ற சிறந்த பாடல் வரிகளும், இசையும் ஒளிந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

3. தச்சுக்கோ தச்சுக்கோ

படம்: பொன்னியின் செல்வன்
பாடியவர்கள்: மாதங்கி, அனுராதா ஸ்ரீராம்
படம்: வித்யாசாகர்

பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை, 'ஊமை விழிகள்' படத்தில் வரும் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாடலினைத் தான் எப்போதும் ஞாபகப்படுத்துகிறது. இப்பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இப்பாடல் சில ஆண்டுகளாக என்னிடம் இருக்கின்றது. இது எப்போதும் என்னைக் கவர்ந்திதில்லை. சில நொடிகளில் மாற்றி விடுவேன். இது வரை இப்பாடலைப் பார்த்ததில்லை. இரு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒலிக்கவிட்டேன். ஏனோ மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை; அல்லது மாற்ற முடியாத சூழ்நிலை.

'கிருஷ்ணா', என்று மாதங்கி ஆரம்பித்து, 'தச்சுக்கோ தச்சுக்கோ', என்று பாடிய பிறகு, அனுராதா ஸ்ரீராம், 'கண்களிலே தீ', என்று மாதங்கியுடன் இணைந்து பாட ஆரம்பிப்பது அழகு!. இது போல் இப்பாடலில் சிற்சில அருமையான இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் 1:27-ல் வரும் புல்லாங்குழலும், 2:40-ல் வரும் வயலின் இசையும் அடங்கும்.

முக்கியமானது அனுராதாவின் ஸ்ரீராம்.

'கண்களிலே தீ... கன்னத்திலே பாய்... அங்கத்திலே பூ...' என்று அனுராதா ஸ்ரீராம் பாடும் ஒவ்வொரு இடமும் (0:36, 3:45) அற்புதம்.

'சுமை நான் தாங்கதான் சுகம் நீ வாங்க தான்' (1:55), என்று முதலாம் சரணத்தில் மாதங்கி பாடுமிடத்தில் ராகம் அழகு. ஆனால் இரண்டாவது சரணத்தில், அதை அனுராதா, 'விண்ணில் ஒற்றை நிலா மண்ணில் கூடல் விழா', (3:06) பாடுவது இன்னும் சிறப்பு. அற்புதம்! அதிலும் நிலா, விழா வார்த்தைகளை அனுராதா உச்சரிப்பதே அழகு. இவர் பாடிய வரிகள் என்னையறியாமல் புன்சிரிப்பை வரவழைத்தன; நல்ல இசை கேட்ட சந்தோஷத்தில். மிக அருமையான; திறமை வாய்ந்த பாடகர். சந்தேகமே இல்லை.

இப்பாடலில் பல இடங்களில் வரிகள் மோசமாக இருப்பதை அறிவேன். எனக்கு பல முறை ஏற்படும் சந்தேகம் இது. இது போன்று பாடுவதற்கு பாடகிகளுக்கு கூச்சமாக இருக்காதா? அல்லது அவ்வாறு பாடலை எழுதி ஓர் பெண்ணிடம் பாடச் சொல்லி கொடுக்கும் கவிஞருக்கு (?) அசிங்கமாக இருக்காதா?

4. வருது வருது

படம்: பிரம்மா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இப்பாடலை ஆரம்ப காலத்தில் ஓர் வயதானவரும், இளம்பெண்ணும் பாடும் பாடலாகத் தான் அறிவேன். அப்போதெல்லாம் எந்த விருப்பமான பாடலையும் கேட்கமுடியாது. எப்போதாவது ரேடியோவிலோ, டி.வி.யிலோ ஒலி/ஒளிபரப்பினால் தான் உண்டு. ஆனாலும் எப்போதும் இப்பாடலை விரும்பிக் கேட்டதில்லை.

பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு பலமுறை இப்பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, மிகவும் பிடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று. கேட்பவரை உற்சாகம் அடையச் செய்யும் வகையில் இப்பாடலின் பீட் அமைந்திருப்பது. அதுவும் பாடல் முழுவதுமே தொடர்ந்து இருப்பது மிக நன்று. இதனைத் தவிர எஸ்.பி.பி. மிக அற்புதமாகப் பாடியிருப்பார். ஜானகியைப் பற்றிக் கூறத் தேவையில்லை. முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசையில் பாடலின் பீட் மறைந்து புல்லாங்குழல், வயலின் போன்ற வாத்தியங்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கும். அது முடிந்ததும் 1:54-ல் எஸ்.பி.பி.

நாடி எங்கும்
ஓடிச் சென்று
நாளும் ஒரு
சூடேற்றும் ரூபமே

என்று குரலை ஏற்றி அற்புதமாகப் பாடியிருப்பார். அவர் அப்படிப் பாட ஆரம்பிக்கும் போது, பாடலின் பீட் மீண்டும் ஒலிக்கத் துவங்கியிருக்கும். கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். இதற்காக இன்னும் இப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு.

எஸ்.பி.பி. போன்ற அற்புதமான பாடகர்களை இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்தாமலிருப்பது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிய இழப்பு தான். மனிதர் என்ன அழகாக தமிழ் பேசுகிறார் (மேடை, பேட்டிகள் அடங்க). இங்கிருக்கும் தமிழ் நடிகர்களால் கூட அவ்வளவு கோர்வையாக, அழகாக பேச இயலாது.

5. மச்சக்காரி

படம்: சில்லென்று ஒரு காதல்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இப்படத்தில், 'மஜா மஜா', பாடலைப் போல் 'மச்சக்காரி', பாடல் எனக்கு பிடிக்காத பாடலாக இருந்தது. நியூயார்க் நகரம் கேட்காமல், இப்பாடலை நேயர்கள் கேட்கும் போதெல்லாம் அவ்வளவு எரிச்சலாக இருக்கும். இப்போதும் நியூயார்க் நகரம் பாடலை தினமும் மூன்று முறைகளாவது கேட்டு விடுவேன். ஆனால் இப்பாடல் இன்னும் முழுவதுமாகப் பிடிக்காது. ஓரளவிற்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் வசுந்தரா தாஸின் குரல். அதிலும் முக்கியமாக, 'வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா.... இன்பம் வந்தபின் இன்னும் நிற்பதேன் ஏன் தலைவா', என்ற வரிகளை பாடுமிடத்தில்.

இன்னொரு இடத்தில் அவர் பாடுமிடம் அழகாக ஒலிப்பது. (முதலாம் சரணம்: 2:34)

உதடுகள் குவித்தேன்
என் மன்னவா

உன் உதவிக்குத் தவித்தேன்
பெண்ணல்லவா

நீ முதல் முதல் குதித்தாய்
உன்(?) ரத்தமே

நான் மயக்கதில் விழுந்தேன்
என் காதலா............

காதலா என்று அவர் இழுவை கொடுத்து பாடுமிடம் மிகவும் ரசிக்க வைத்தது. 'நாம் இருவரும் இணைந்தே பார்க்கலாம்' (4:13), என்று இரண்டாம் சரணத்தில் சங்கர் பாடுமிடம் இதனுடன் ஒப்பிடும் போது அது அவ்வளவு சுவையாக இருக்காது. வசுந்தரா பாடும் இடங்களுக்காக, இப்போதெல்லாம் இப்பாடலை அடிக்கடி கேட்பதுண்டு.

உங்களுக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருந்தால் தெரிவிக்கவும்.

திங்கள், அக்டோபர் 08, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. முதல் மழை எனை நனைத்ததே

படம்: பீமா
பாடியவர்கள்: ஹரிஹரண், மஹதி, பிரசன்னா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

இப்படத்தின் பாடல்கள் எனக்கு முதன் முதலில், சன் டி.வி.யில் வந்த விக்ரம், திரிஷா பேட்டியில் தான் எனக்கு அறிமுகம். அப்பேட்டியின் நடு, நடுவே, 'ரகசிய கனவுகள் ஜல் ஜல்', என்ற பாடலின் இரு வரிகளை மட்டும் ஒளிபரப்பினார்கள். மிகவும் பிடித்து விட்டது. அதிலிருந்து இப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். வந்த பிறகும் இப்பாடலை கேட்டேன். சந்தேகமில்லை. நல்ல பாடல். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். குறிப்பாக பல்லவியும், முதல் சரணத்திற்கு முன்பாக வரும் வயலின் இசையும் நன்று. 'இறகே இறகே', என்று குழுவினர் பாடும் இடம் அழகு. ஆனால் சரணம் அவ்வளவாக கவரவில்லை. ஹரிஹரன், மதுஸ்ரீயை விட நன்றாகப் பாடியிருக்கிறார்.

ஆனால் இப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் மழை பாடல் தான் என்னுடைய தேர்வு. ஆரம்பத்தில் வரும், 'மெஹூ மெஹூ', என்று புரியாத பாஷையில் பாடல் ஆரம்பிக்குமிடத்திலிருந்தே அழகு தான். ஹாரீஸ் பெரும்பாலும் ஒன்றிரண்டு பாடல்களிலாவது அது போல் வைத்திருப்பார். பெரும்பாலும் அது என்னைக் கவராது. இப்பாடலில் சிறிது வித்தியாசமாக என்னை அது கவர்ந்ததற்குக் காரணம், குரலாக இருக்கலாம் (யாருடைய குரலென்று தெரியவில்லை). அந்த ராகமும் நன்றாக இருந்தது. அதனையே முதல் சரணத்திற்கு முன்பாக இசையாகவும் வைத்திருந்தார்.

ஹரிஹரன், மஹதி (:)) வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

முதல் மழை
எனை நனைத்ததே
முதல் முறை
ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே

இதயமும் போய்
இதமாய் மிதந்ததே

என்ற அற்புதமான பல்லவி.

இதனை ஹரிஹரண் மீண்டும் முதலாம் சரணம் முடிந்ததும் 2:46-ல் பாடுவார். அப்போது நனைத்ததே, திறந்ததே என்று பாடும் போது மஹதி அருமையாக 'ல ல லா' என்று பாடுவார். இனிமையாக இருக்கும்.

இரண்டாம் சரணம் முடிந்ததும், ஹரிஹரனோ, மஹதியோ இவ்வரியினை பாடுவார்கள் என்று நான் நினைத்திருந்த போது, 4:22-ல், 'உஹூ உஹூ', என்று 'மெஹூ மெஹூ', ஸ்டைலில் அதே பாடகர் பாடுவார். அற்புதம்.

பல பாடல்களுக்கு இது போன்ற சிறு சிறு விசயங்கள் சிறப்பு சேர்க்கின்றன.

இதே படத்தில் இடம் பெற்ற 'எனதுயிரே எனதுயிரே', பாடலும் நல்ல பாடல். ஆனால் அப்பாடலில் 1:42-ல் வரும் 'உன்னைக் காண வருகையில்' என்ற வரி ஏதோ பழைய தமிழ் பாடலினை ஞாபகப்படுத்துகிறது. ஞாபகத்திற்கு வரமறுக்கிறது. அதே போல் 'சிறு பார்வையாலே' பாடல் 'கோவில்' படத்தில் வரும் 'சிலு சிலுவென' பாடலை ஞாபகப்படுத்துகிறது.

2. கனவெல்லாம் பலிக்குதே

படம்: கிரீடம்
பாடியவர்கள்: கார்த்திக், ஜெயச்சந்திரன்
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அவற்றுள் சுவேதா, சோனு நிகாம் பாடிய 'விழியில் உன் விழியில்' பாடலும் சாதனா பாடிய 'அக்கம் பக்கம்' பாடலும் மற்ற இரு பாடல்கள். இவ்விரண்டையும் விட 'கனவெல்லாம் பலிக்குதே', பாடல் என்னை கவர்ந்தது.

இப்பாடலில் இது தான் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டு சொல்ல என்னால் இயலவில்லை. கார்த்திக்கின் குரல், நல்ல இசை, ராகம்.

மொத்தத்தில் நல்ல பாடல்.

இப்படத்தில் பிரகாஷ் சில இசையையும், ராகத்தையும் மற்ற படங்களிலிருந்து எடுத்திருக்கிறார். ஒன்று 'கண்ணீர் துளியே' பாடல் 'பூங்காற்றிலே' பாடலின் நகல். இன்னொன்று 'விழியில் உன் விழியில்' பாடல். இது எனக்கு இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. இசை 'மஜா' படத்தில் இடம்பெற்ற 'சொல்லித்தரவா', பாடலையும், 1:26-ல் வரும் இசை 'தெனாலி' பாடலில் வரும் 'சுவாசமே சுவாசமே', பாடலையும் ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக அந்த வீணை இசை.

ஜி.வி.பிரகாஷ் ஓரளவிற்கு நன்றாகவே இசையமைக்கிறார். இன்னும் முயற்சி செய்து, மாமாவின் பாடல்களை லிஃப்ட் செய்யாமல் இசையமைத்தால் நன்றாக வரலாம்.

3. பற பற பட்டாம் பூச்சி

படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்கள்: ராகுல்
இசை: யுவன் சங்கர் ராஜா

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சிலிர்ப்பான பாடல் கேட்ட உணர்வு இப்பாடல் கேட்ட போது ஏற்பட்டது. உற்சாகமான ஆனால் மென்மையான இசை; வித்தியாசமான குரல்; அற்புதமான ராகம் என அனைத்தும் சேர்ந்து இப்பாடலை சிறந்த பாடலாக்கியுள்ளன.

'பற பற பட்டாம் பூச்சி
தொட தொட பல வண்ணமாச்சே' என்று துவங்கி பாடல் முழுவதும் அந்த சிலிர்ப்பு தொடர்கிறது.

'கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கிக் கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
நிலை படகு ஆனதே'

வரிகளில் (0:19) ராகம் அற்புதம்; அழுத்தமான வரிகள்.

'எங்கோ எங்கோ ஓர் உலகம்
உனக்காக காத்துக் கிடக்கும்
நிகழ்காலம் நதியைப் போல
மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம்
நினைவில் உள்ள
காட்சி காயுமா?

ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ'

இடங்கள் (2:43-3:10) இனிமையாக இருக்கின்றன.

மொத்தத்தில் அற்புதமான பாடல். ஒளிப்பதிவு இப்பாடலுக்கு எப்படியிருக்கும் என்பதனை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இப்படத்தின் கரு மிகவும் முக்கியமாகவும், அத்தியாசமாகவும் தோன்றுகிறது. அது 'பறவையே எங்கு இருக்கிறாய்', பாடலிலும் ஒலித்ததை கேட்க முடிகிறது.

4. மின்னல்கள் கூத்தாடும்

படம்: பொல்லாதவன்
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்படத்தின் பாடல்களில் ஒன்று கூட சரியில்லை இதனைத் தவிர. சங்கர் மகாதேவன் பாடிய குத்துப் பாடல்; 'எங்கேயும்' ரீமிக்ஸ் பாடல் என்று சலிப்படையச் செய்யும் பாடல்கள். 'மின்னல்கள் கூத்தாடும்' என்று ஆரம்பிக்கும் பாடல் காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இப்பாடலின் இசைக்கருவியும், ஆரம்ப இசையும் 'சிவாஜி' படத்தின் 'ஸ்டைல்' பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பல்லவி முடிந்ததும் வரும் இசை, 'மின்னலே' படத்தின், 'வசீகரா' பாடலின் இசையை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இப்பாடல் நன்றாக வந்துள்ளதை மறுக்க முடியாது. கார்த்திக் நன்றாக பாடியிருக்கிறார்.

'உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அதை
எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே'

என்ற இடத்தில் ராகம் நன்று.

ஜெயஸ்ரீ தனக்கே உரித்தான பாணியில் பாடியிருக்கிறார்.

'காதலே ஒரு வகை
ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது
மறந்திடுமே

வவ்வாலை போல் நம்
உலகம் மாறி
தலைகீழாகத் தொங்கிடுமே'

3:31-ல் ஜெயஸ்ரீ பாடி, அதனைத் தொடர்ந்து 'உடல் கொதிக்குதே' என்று குரலை மாற்றி ஆரம்பிப்பது அற்புதம்.


5. உயிரே உயிரே

படம்: மலைக்கோட்டை
பாடியவர்கள்: ரஞ்சித், ரீட்டா
இசை: மணி சர்மா

இது திருவிளையாடல் படத்தில் வரும்'கண்ணுக்குள் ஏதோ', பாடலை நினைவுபடுத்துகிறது. போதாக்குறைக்கு அப்பாடலை பாடியவரும் ரீட்டா தான். ஆரம்பத்தில் வரும் இசை இனிமை. ஆனால் அந்த இசை, அர்ஜூனின் ஓர் படத்தில் வரும், 'வெளிநாட்டுக் காற்று தமிழ் பேசுதே' பாடலை ஒத்திருக்கிறது.

'உந்தன் கண்ணோரம்
வாழ கற்பூரம் போல
அன்பே நான் கரைந்தேனே'

வரிகளிலும் (0:43),

'நீ என் வாழ்க்கையா
என் வேட்கையா',

என்ற வரிகளிலும் (2:21) ராகம் நன்றாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தேவதையே வா' பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமை.

சங்கர் மகாதேவன் எல்லா தமிழ் படங்களிலும் ஓர் குத்து பாடல் பாடிவிடுகிறார். ஏன் வம்படியாக அனைத்துப் படங்களிலும் ஆரம்பத்தில் குத்துப் பாடல் வருகிறது என்றே தெரியவில்லை. ரஜினியில் ஆரம்பித்து, விஜயில் தொடர்ந்து இன்று அனைத்து ஹீரோக்களுக்கும் ஓர் ஆரம்ப பாடல். கமல் மட்டுமே விதிவிலக்கு. 99% பாடல்கள் கேட்பதற்கு சகிக்காது. அதிலும் சங்கர் மகாதேவன் தமிழ் திரையுலகம் பாடாய் படுத்துகிறது. விளையாடு (கிரீடம்), படிச்சு பார்த்தேன் (பொல்லாதவன்), வாழ்க்கை என்பது (தமிழ் எம்.ஏ) என்று இவர் அநியாயத்து குத்து பாடகராகி விட்டாரே! பாவமாக இருக்கிறது. அவரது பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு என்ன படமென்று கேட்டால் அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

திங்கள், மே 21, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. பிரே ஃபார் மீ பிரதர் (Pray for me Brother)

இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், பிளாசே, மற்றும் குழுவினர்.

இப்பாடலின் காரணத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இப்பாடல் இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பாக பல இணையத்தளங்களில் விற்பனைக்காக இருந்தது. நானும் வாங்கி ஒலிக்க முயற்சி செய்த போது, விண்டோஸ் மீடியா பிளேயர் பழைய பதிப்பினை நான் உபயோகித்த காரணத்தினால் DRM சோதனை செய்ய இயலாமல் தயங்கி நின்றது. அலுவலகத்தில் மீடியா பிளேயரினை புதுப்பிக்க இயலாமல் கஷ்டப்பட்ட போது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் சென்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு தான் பாடலைக் கேட்க முடிந்தது. இது மிகச் சிறந்த பாடல் இல்லாவிடிலும், நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு வந்த சிவாஜி பாடலை விட சிறந்த பாடலிது.

2:35-ல் யாஹி யோகோ யாஹி யோகோ என்ற இடங்கள் இனிமையாக ஒலிக்கின்றது. 3:30 குழுவினரின் ஓசை அற்புதம்.

2. மனசு மருகுதே

திரைப்படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்

ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.

எதுக்கு தெரியலை
விவரம் புரியலை
....
மனசு மருகுதே

எதுக்கு தெரியுமா?
எனக்கு தெரியலை...

அற்புதமான ராகம்.

3. காற்றின் மொழி

திரைப்படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா

மொழி சமீபத்தில் வந்த சிறந்த படங்களில் ஒன்று (விஜய் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் :)).

'காற்றின் மொழி' என்று ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுஜாதாவின் மென்மையான் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. வித்யாசாகரின் இசை பெரும்பாலும் சாதாரண இசைக்கருவிகளைச் சார்ந்திருக்கும். அதற்கு இப்பாடல் ஓர் சிறந்த உதாரணம். ரகுமான் கூட சில நாட்களுக்கு முன்பாக, 'கணினியின் உதவியில்லாமல் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன்', என்று கூறியிருந்தார். அவ்வகையில், வித்யாசாகர் எப்போதோ தேர்ந்து விட்டார் எனக் கூறலாம். அவருடைய சமீப கால பாடல்கள் அனைத்துமே இது போல மிக எளிமையாக தான் இருக்கின்றன. உ.ம். தம்பி, ஜி.

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ

திரைப்படம்: சென்னை - 28
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. சரண்

இப்பாடல் ஒரு வகையில், இளையராஜா, கார்த்திக் ராஜா இசையில் பாடிய 'யாரோ யார் யாரோ' பாடலின் கருத்தை சிறிது ஒத்திருக்கிறது.ஆரம்பத்தில் வரும் வயலின் இசை அழகு.

5. காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்

திரைப்படம்: பச்சைக்கிளி முத்துசரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர்

இவ்வாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா (சரியாக ஞாபகம் இல்லை) விளையாடிய போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன். அப்போது ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படத்தின் டிரைலர் காட்டப்பட்டது. அதிலிடம் பெற்ற இசையால் கவரப்பட்டு இப்பாடல் வந்ததும் ஆவலுடன் இசைத்தட்டு வாங்கினேன். எல்லா பாடல்களையும் ஒரு முறை ஒலிக்கவிட்டு, பிடிக்காமல் வீட்டிலேயே வைத்துவிட்டேன். ஆனால் ஐ.பாடில் மட்டும் ரிப் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள், மற்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது, இப்பாடலும் ஒலித்தது.

நானும், சரி தான், 'உன்னாலே உன்னாலே' படம் என்று நினைத்து பின்னர் ஒலிக்கவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறு நாள் மீண்டும் இப்பாடலை ஒலிக்க விட எனது ஐ-பாடில் முயற்சித்த போது, 'உன்னாலே உன்னாலே' ஆல்பத்தில் இப்பாடல் எங்கும் இல்லை. 'பச்சைக்கிளி' கண்ணில் பட்டது. ஆனால் அதில் இருக்காது என்று நம்பி முயற்சி செய்யவே இல்லை. சோர்ந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு நாள் அதிசயம் நிகழ்ந்தது. அதே போல் மீண்டும் ராண்டமாக பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த போது இப்பாடல் ஒலித்தது. குறித்து வைக்க படத்தின் பேரைப் பார்த்த போது ஆச்சர்யம். என்னவொரு அற்புதமான பாடலை இத்தனை நாட்களை கையில் வைத்திருந்தும் கேட்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சரி பாடலுக்கு வருகிறேன்.

நரேஷ் அய்யரின் குரலா இது? அற்புதம். ரகுமானுக்குப் பல பாடல்கள் பாடியிருந்தாலும், ஹாரீஸின் இசையில் இவரது குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.

1:26 -ல் வரும்

எதிர்காலம் என்னை வந்து முட்டுமோ..
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் விடுமோ
அரியாத ஒஉது ஆசான், அகம் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்

ஏ மல்லிச்சரமே .... உன் கண்கள் இன்று...

அற்புதம்! அற்புதம்.

6.முதல் நாள் இன்று எதுவோ ஒன்று

உன்னாலே உன்னாலே..
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கே.கே. மஹாலக்ஷ்மி

நீண்ட நாட்களாக உன்னாலே உன்னாலே பாடல்களை கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் 'ஜூன் போனால்' (Blue Rise பாடலின் அச்சு அசலான நகல்) கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படத்தில் இப்பாடலும், ஹரிணி பாடிய 'உன்னாலே உன்னாலே' பாடலும் சிறந்த பாடல்கள். வழக்கம்
போல், ஹரிணியின் குரல் அற்புதம். அதிலும் 3:05-ல்

'சரியென்று தெரியாமல்,
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்...'

இனிமை!

'முதல் நாள்' பாடலில்,

2:57 'உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை'

இடத்தில் வரும் ராகம் நன்று. கே.கே. வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார். மஹாலக்ஷ்மி பரவாயில்லை. நிச்சயம் பாம்பே ஜெயஸ்ரீயை விட நன்று.

7. ஒரே கனா

திரைப்படம்: குரு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா, மெட்ராஸ் கரோலே குழுவினர்.

இதே பாடலை சென்ற பதிவிலும் தெரிவித்திருந்தேன். இன்னும் இப்பாடல் மீதான மோகம் குறையவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போது, புத்துணர்ச்சி ஊட்டுகிறது இப்பாடல். சோர்ந்திருக்கும் தருணங்களில் புத்துயிர் ஊட்டும் பாடல்களில் இப்பாடலுக்கு, என்னுடைய பிளே லிஸ்டில் இனி எப்போதும் இடமுண்டு. இப்பாடல்களைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இந்தி பதிவினை விட, தமிழ் பதிவு பிடிக்க காரணம், தமிழில் பாடலில் அர்த்தம் புரிய முடிவதால் தான்.

சென்ற பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.

இப்பாடல் தமிழில் இன்னும் அற்புதம். மெட்ராஸ் கரோலே குழுவினர் மிக மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். சொல்வதற்கு வார்த்தையில்லை.

ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்

வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்

நீ என்னைக்
கொஞ்சம்
கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்'

அற்புதமான ராகம், உயிரைக் கொல்லும் வரிகள், உயிரை உருக்கும் குரல்கள்!

குறிப்பு: அடுத்த வாரம் முதற்கொண்டு ரகுமான், வட அமெரிக்காவில் சில மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். முடிந்தால் சென்று கண்டுகளிக்கவும்.