ஞாயிறு, ஜூலை 15, 2012

இளையராஜா - ஓர் சகாப்தம் - பகுதி 1

எனது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் பலர். ஆசிரியர்கள், குடும்பத்தார்கள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், சமூக அக்கறை உள்ள தனி மனிதர்கள் மற்றும் எதிரிகள் என பற்பலர் உண்டு. அவர்களில் தினமும் யாரைப் பற்றி நினைக்கிறேனோ இல்லையோ, இளையராஜாவினைப் பற்றி நினைக்காமல் இருப்பது இல்லை.

எண்ணற்ற பல தமிழர்களின் வாழ்வினைப் போல, எனது வாழ்விலும் சினிமா பாடல்களுக்கென்று மிகவும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. சிறு வயது முதல், தெருவிலும், வீட்டிலும், பக்கத்து வீட்டு தொலைக்காட்சிகளிலும், திரையரங்குகளிலும், திருமண மண்டபங்களிலும், பேருந்துகளிலும், டீ கடைகளிலும் எண்ணற்ற பாடல்களை கேட்டு லயித்திருக்கிறேன்.


நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு திருவிழா நாளில், அதிகாலை 4 மணிக்கு "அழகான பொண்ணு தான்; அதற்கேத்த கண்ணு தான்" பாடலை கேட்டு நீண்ட நேரம் தூங்காமல் இருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த பாடலை அவ்வளவு ரசித்ததற்கு காரணம், அது ரீமிக்ஸ் செய்யப்பட்டது (பாடிய விதம்; இசை) என்பது நீண்ட நாட்களுக்கு பின்பு தான் தெரிந்தது. தீபன் சக்ரவர்த்தி அதற்கு இசைமையத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

"காதலிக்க நேரமில்லை" படத்தினை முதல் முதலாக திரையரங்கில் பார்த்து விட்டு, இரண்டு மூன்று நாட்களுக்கு 'நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா' என்று பாடிக்கொண்டிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்போதும் அந்தப் பாடலை கேட்கும் போது அது தான் ஞாபகம் வரும்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டில் 'புன்னகை மன்னன்' பாடல்களை பல முறை கேட்டிருக்கிறேன். அந்தப் படத்தில் இப்போது எனக்கு பிடித்தமான பாடல் வேறு என்றாலும், அந்த காலகட்டத்தில் 'கவிதை கேளுங்கள்' பாடல் மீது எனக்கு தனி பிரியம்.

ஒன்பதாம், பத்தாம் வகுப்பிற்கு பின்பு, ரகுமான் பாடல்களினால் தான் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டேன். தெருவில் முதன் முதலாக பெரிய ஸ்பீக்கர்களில் "காதல் ரோஜாவை" பாடலில் உண்டான அதிர்வினை கேட்டு நின்றது இன்னும் கண்களில் நிற்கிறது.

ஏதோ ஒரு திருமண மண்டபத்தில், "தைய தையா" உருவாக்கிய பரவசமும், வீட்டில் சும்மா ஏதோ படித்துக் கொண்டிருந்த போது, "நெஞ்சினிலே" என்று ஜானகி பாடிய போது ஏற்பட்ட உணர்வும் அந்தப் பாடலில் முதலாவது சரணத்திற்கு முன்பாக வயலின் இசையை கேட்ட போது ஏற்பட்ட மயக்கம் சொல்லி மாளாது. இது போன்று ரகுமான் பாடல்கள் பல புது விதமான உணர்வுகளை கொடுத்திருக்கிறது. 'வெண்ணிலவே வெண்ணிலவே' (மின்சார கனவு) பாடலின் நடுவில் வரும் வயலின் இசையிலும், ஜூன்ஸ் படத்தில் வரும் "நிசரிஸா" என்ற பின்னணி இசையிலும் பித்து பிடித்து அலைந்திருக்கிறேன். அதற்காகவே ஜூன்ஸ் படத்தினை பல முறை பார்த்தேன்.

ஓரளவிற்கு வளர்ந்து, கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு, டீ கடையில் ஒரு டீயினை வாங்கி வைத்து மணிகணக்கில் அமர்ந்திருப்பேன். காரணம் - ஒன்று பத்திரிக்கை வாசிப்பது இரண்டு திரைப்பாடல்கள். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை எப்படா பொழுது போகும் என்றிருக்கும். 10-10.30 க்கு எல்லாம் கொழும்பு வானொலி நிலையம் ஒலிபரப்பை முடித்து மீண்டும் 3:30 - 4 மணிக்கு தான் தொடங்குவார்கள். அது வரை என்ன செய்வதென்பதே தெரியாது. மாலை பத்திரிக்கையும் 4 மணியளவில் தான் வரும். 4 மணிக்கு ரோட்டிற்கு (கடைகள் இருக்குமிடம்) சென்று ஒரு டீயினை வாங்கி கொண்டு, ஒரு பக்கம் மாலை மலரையோ, மாலை முரசுவையோ படிப்பதும் மறுபுறம் கொழும்பு வானொலி இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பதும் ஆனந்தம். ஜீன்ஸ் படம் வந்த புதிதில், ஒரு டீயை வைத்துக் கொண்டு மூன்று-நான்கு முறை அப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதுவும் 'கண்ணோடு காண்பதெல்லாம்' பாடலினை கேட்ட போது ஏற்பட்ட பரவசம் சொல்லி மாளாது. டீ கடைக்காரருக்கும் அந்த பாடலே விருப்பமான பாடலானது மிகவும் வசதியாக போனது. அவர் கடையில் இருந்தால் அந்தப் படத்தின் பாடல்களை தான் கேட்பார் அதுவும் அந்தப் பாடலுக்கு சத்தம் அதிகமாக வைத்து கேட்பார். 

இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்றாலும், என்னுடைய நண்பர்கள் (என்னை விட 10 வயது வரை பெரியவர்கள்), ராஜா பாட்டு மாதிரி எல்லாம் உங்க ரகுமான் பாட்டு போட முடியுமா என்று வெறுப்பேற்றுவார்கள். ஏன், நல்லா தானே இருக்கு; எதுக்கு இவங்களுக்கு பிடிக்கலை என்பது பல ஆண்டுகளாக எனக்கு புதிராக இருந்தது. அடிக்கடி விவாதம் நடக்கும். அப்போது உதாரணமாக, 'பூவே செம்பூவே', 'நான் தேடும் செவ்வந்தி பூவிது' போன்ற பாடல்களை குறிப்பிடுவார்கள். "நல்ல பாட்டு தான்; ஆனா அதை விட சூப்பர் பாட்டெல்லாம் ரகுமான் போடுறார்ல", என்று கூறுவேன்.

இந்தியன் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அக்கடான்னு நாங்க உடை போட்டா, மாயா மச்சிந்திரா, பச்சை கிளிகள் தோளோடு, கப்பலேறி போயாச்சு, டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் (கேசட்டில் இருந்த அதே வரிசை என்று நினைக்கிறேன்). எனது நண்பர்களில் ஒருவரின் கடையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்தியன் பாடல்கள் எனக்கு இப்போதும் மிகவும் விருப்பமான படம்.

இப்படி இது வேலைக்கு சென்று சில ஆண்டுகளும் தொடர்ந்தது. புது புது இசையமைப்பாளர்கள் அவ்வப்போது மனதினை கவர்ந்ததுண்டு. ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர், வித்யாசாகர், கார்த்திக் உட்பட.

ஆனால் எப்போது இப்படி இளையராஜா பாடல்களின் மீது இப்படி ஒரு பிடிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. சிறு வயது முதலே அவரது பாடல்களை கேட்டு வருகிறேன். அவரது பல பாடல்கள் என்னை கவர்ந்திழுத்ததுண்டு. எனது சொந்த செலவில் நான் பதிவு செய்த ஒரே கேசட்டில் பாதிக்கும் மேல் ராஜாவின் பாடல்கள் தான். ஆனாலும் ராஜா மற்றவர்களைப் போல ஓர் இசைக்கலைஞர் என்ற எண்ணம் தான் இருந்தது. அதனையும் தாண்டி அவர் கடவுளுக்கு இணையானவர் என்ற எண்ணம், கடந்த பத்து ஆண்டுகளில் தான் ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், புதிய பாடல்களின் தரமின்மையினால் அதிகமாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் கேட்க கிடைத்த வாய்ப்பு. கடந்த மூன்று ஆண்டுகளில் இளையராஜா மீதான மரியாதை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. அவரின் ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போது ஏற்படும் வியப்பு, பெருமை, இனம்புரியாத உணர்வு எழுத்தில் வடிக்க முடியாதது. தமிழகத்திற்கும், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழிசைக்கும் கிடைத்த மாபெரும் சொத்து அவர்.

ஒரு மனிதனுக்குள் எப்படி இவ்வளவு உணர்வுகள், இசை மீது காதல், ஆதிக்கம்  இருக்க முடியும்? இவற்றை விட கோடிக்கணக்கான ரசிகர்களை வயது,  வளர்ந்த சூழல், கல்வி, பதவி, ஜாதி/மதம், இருப்பிடம் இப்படி எல்லாவிதமான வேறுபாடுகளையும் மறக்கடித்து தனது இசையின் கட்டிப்போட்டிருக்கிறார். எத்தனையாயிரம் பாடல்கள்? இன்னும் அவற்றில் பாதியை கூட கேட்டிருக்க மாட்டேன். ஒவ்வொரு பாடலிலும் எவ்வளவு விசயங்கள்; நேர்த்தி. சாதாரண பாடலில் (காட்சியமைப்பினால்) கூட வியக்கவைக்கும் அளவிற்கு சங்கதிகள், இசை. இவரை போன்ற ஓர் கலைஞனை இதுவரை இவ்வுலகம் கண்டதில்லை; காணப் போவதுமில்லை. 

பல பாடல்களை நிச்சயமாக ஒரு நாளிலோ, இரண்டு நாட்களிலோ இசையமைத்து முடித்திருப்பார். அப்படி சில நாட்களில் முடிக்கப்பட்ட பாடல்கள் தான் நான் கேட்டு வியந்து கொண்டிருக்கும் இந்தப் பாடல்கள் என்று நினைத்தாலே, ஏற்படும் வியப்பு இன்னும் தொடர்கிறது. கேட்டு ரசித்த பாடல்களில் கூட அடிக்கடி ஏதாவது ரகசியத்தை வைத்திருக்கிறார். அது அவ்வப்போது வந்து செவிகளில் வந்து விழுந்து ஆச்சர்யப்படுத்துகின்றன. எப்படி இந்தப் பாடலை இத்தனை நாட்களாக சரியாக பார்க்காமல் தவறினோம் என்று நினைத்திருக்கிறேன். இது வாரா வாரம் நடக்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது.


எந்த இசைக்கருவினைத் தேர்வு செய்து பாடலினை இயற்றினாலும், அந்தக் கருவியில் இருந்து வரும் நாதமானது நமது உயிரினை சாதாரணமாக உலுக்கி சென்றுவிடும். அதற்கு காரணம் இசைக்கருவி மட்டுமல்ல. அதை விட அதற்கு அவர் ஊட்டிய உயிர். அதனை நூற்றுக்கணக்கான பாடல்களில் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முன்பு கேட்ட பாடலை இப்போது கேட்கும் போதும், கேட்காத ஒரு பாடலை கேட்கும் போதும் அதனை உணர்கிறேன்.

அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் என்ன புண்ணியம் செய்தவர்கள். அவருடைய இசையை வாசிக்கும் வரம் பெற்றவர்கள்; பாடும் பேறு பெற்றவர்கள். அப்பப்பா! எனது வாழ்நாள் லட்சியமே, ஒரு முறையாவது அவரை நேரில் சந்தித்து ஆசி வாங்குவது தான். என்னைப் போல எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்களுக்கு வாழ்க்கையின் மேல் ஓர் பற்றினை உண்டாக்கியதில் ராஜா அவர்களுக்கு மிக, மிக முக்கியமான பங்கு உண்டு. அவரையும், அவரது பாடல்களையும் வாழ்வு முடியும் வரை மறக்க இயலாது.




என்னுடைய இனியவை நாற்பது பதிவினில் ஏற்கனவே பல இளையராஜாவின் பாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது அவர் மீது இருந்த மரியாதை இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்பாடல்களில் சில.

1. தேவனின் கோவில் மூடிய நேரம் தெய்வமே
2. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
3. செண்பகமே செண்பகமே
4. ஆணென்ன பெண்ணென்ன
5. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மலரும் நினைவுகள் நான் சொல்வது
6. இசையில் தொடங்குதம்மா
7. ஒரு கணம் ஒரு யுகமாக தோன்ற வேண்டுமோ
8. பூவே பூச்சூடவா
9. அஞ்சலி அஞ்சலி
10. கடவுள் உள்ளமே கருணை இல்லமே
11. கேட்கலியோ கேட்கலியோ
12. மன்றம் வந்த தென்றலுக்கு
13. அம்மா என்றழைக்காத
14. வா வா கண்ணா வா
15. பழமுதிர்சோலை
16. மேகம் கருக்கையிலே
17. காளிதாசன் கண்ணதாசன்

இவற்றுடன் இன்னும் பல நூற்றுக்கணக்கான பாடல்களை சேர்க்க விரும்புகின்றேன். அவற்றைப் பட்டியலாக தொட்டுவிடாமல் பல பதிவுகளாக பதிய விரும்புறேன். அதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் நேரம் எடுத்து குறிப்பிட விரும்புகிறேன். பல பாடல்களை என்னால் வார்த்தைகளால் முழுவதுமாக குறிப்பிட்டுவிட முடியாது என்பதனை நன்கு அறிவேன். ஆனாலும் முயற்சி செய்யப் போகிறேன்.

இன்று நான் எழுத நினைத்திருக்கும் பாடல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பாடல். வைதேகி காத்திருந்தாள் தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களுள் ஒன்று. சுந்தர்ராஜன் - இளையராஜாவின் கூட்டணியில் உருவான மற்றுமொரு மாபெரும் வெற்றிப்படம். 


விஜயகாந்தின் வித்தியாசமான பாத்திரம், கணவனை இழந்த பெண்ணாக ரேவதி மிக யதார்த்தமாக நடித்திருந்த விதம், கவுண்டமணி / செந்திலின் பெட்ரோமாஸ் / ஆத்தங்கரை போன்ற  மிகச் சிறந்த நகைச்சுவை காட்சிகள், கதைக்களம் நடக்கும் அற்புதமான கிராமம், எல்லாவற்றுக்கும் மேலாக ராஜாவின் மிக, மிக அற்புதமான பாடல்கள், பின்னணி இசைக்கோர்வை என அனைத்துமே குறிப்பிடத்தகுந்தவை.


இனியவை நாற்பது எழுதும் போது கூட ”மேகம் கருக்கையிலே” பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்படத்தின் ஒவ்வொரு பாடலும் அற்புதமானது. * ஒவ்வொரு * பாடலும். "ராசாத்தி உன்னை" பாடல், அப்படம் வந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் தமிழகத்தினை கட்டிப் போட்டிருக்கிறது. இரவு தூங்கும் போது, கேட்கக் கூடிய பாடல்களில் இப்பாடலுக்கு கண்டிப்பாக முக்கியமான இடமுண்டு.  அதனைத் தவிர, "காத்திருந்து காத்திருந்து", "அழகுமலர் ஆட" ஆகிய இரண்டு பாடல்களும் மிகவும் அற்புதமான பாடல்கள்.

ஆனால், "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ" பாடலினைக் கேட்கும் போதெல்லாம் ஓர் இனம் புரியாத பூரிப்பு.

ஜெயச்சந்திரன் அவர்கள் ஆ... என்று ஆலாப் முடித்ததும் அவருடன் சேரும் வீணையின் இசை, வீணை முடிந்ததும் ஜெயச்சந்திரன் அவர்கள் "இன்றைக்கும் ஏன் இந்த ஆனந்தமே" என்ற ஆரம்பிக்கும் போதே நமக்கும் ஆனந்தம் தொற்றிக்கொள்கிறது.

முதலாவது சரணத்திற்கு முன்பாக, புல்லாங்குழலைத் தொடர்ந்து வரும் வீணையின் இசையும், வயலினைத் தொடர்ந்து வரும் வீணையின் இசையும், அவற்றைத் தொடர்ந்து, "பூங்குயில் சொன்னது" என்று சரணத்தை ஜெயச்சந்திரன் அவர்கள் ஆரம்பிப்பதும் அற்புதம்.


இன்றைக்கு ஏன் இந்த
ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என்
மனமே
கனவுகளின் சுயம் வரமோகண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏன் இந்த
ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என்
மனமே....
பூங்குயில் சொன்னது
காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய
பாயினில் பெண் மனம்பூத்திடும் வேளையிலே
நாயகன் கை தொடவும் வந்த
நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும்
இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏன் இந்தஆனந்தமே...

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ
காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
அங்கத்தில் ஏழு ஸ்வரம்
இன்பத்தில் நூறு வரம்
மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்
இன்றைக்கு ஏன் இந்தஆனந்தமே...
இரண்டாவது சரணத்தை வாணி ஜெயராம் அவர்கள் "மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ" என்று ஆரம்பிக்கும் போது, ஆஹா... அதிலும் "ஆடிய" என்ற வார்த்தைக்கு அவர் கொடுக்கும் உச்சரிப்பு.. சுகம். நாயகியின் உற்சாகத்தை, மகிழ்ச்சியை அதனை விட இனிமையாக தெரிவிக்கமுடியாது.

இந்த சமயத்தில் ரேவதியைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ரேவதி எவ்வளவோ நல்ல தமிழ் படங்களில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதில் இப்படத்திற்கும் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு. அவ்வளவு நளினமாக அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இப்பாடலில் கூட, இரண்டாவது சரணத்திற்கு முன்பாக அந்த குங்குமச் சிமிழின் அருகில் அவர் உதிர்க்கும் அப்புன்னகை அவ்வளவு அழகு.

என்னைப் பொறுத்தவரை, வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் அவர்களின் மிகச் சிறந்த பாடல் இது. இருவரும் அவ்வளவு அற்புதமாக பாடியிருக்கிறார்கள். பலமுறை எனக்கு ராஜா அவர்களின் மீது கோபமும், வருத்தமும் ஏற்படுவதுண்டு. அது எஸ்.பி.பி போன்ற மிகச் சிறந்த பாடகர் இருக்கும் போது எதற்காக மனோ போன்றவர்களை ஊக்குவிக்கிறார் என்பது அது. ஆனால் இப்பாடலில் ஜெயச்சந்திரனுடனைய குரலைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தியிருக்காது என்பது எனது எண்ணம் அது எஸ்.பி.பி அவர்களையும் சேர்த்து தான்.

இப்படத்தின் பாடல்களைத் தவிரவும் ராஜா அவர்கள் பின்னணி இசையில் தனி முத்திரையைப் பல இடங்களில் பதித்திருக்கிறார். முக்கியமாக ரேவதி, தனது வீட்டில் வாடகைக்கு இருப்பவரிடம் காதல் கொள்ளும் காட்சிகளில் வரும் இசை மிக இனிமையானது. கோவிலில் சந்திக்கும் போது (1:13:00) ஒலிக்கும் மணியோசையும், வீணையின் நாதமும் அருமையாக இருக்கும். அதே வீணையின் ஒலியை, அடுத்து அவர்கள் இருவரும் ரேஷன் கடையில் பேசிக்கொள்ளும் போதும் (1:16:40) தொடர்வதும், அதனை ஆலாப்பாக மாற்றியிருப்பதும் அற்புதம்.

1:20:00 காட்சியில் உசிலைமணியின் கடையில் உசிலைமணி "அவன் கையாலேயே உனக்கு குங்குமச்சிமிழ் கிடைச்சிருக்கு" என்றதும் அதே இசை அதற்கு அத்தனை இசைவாக இருக்கும். ஆனால் இந்த வீடியோவில் அது இல்லை.

நான் இன்னும் பல பக்கங்கள இப்படத்தின் இசையினைப் பற்றி எழுதிக்கொண்டே போக இயலும். ஆனால் நேரத்தினை கருத்தில் கொண்டு இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன். இது போல ராஜா அவர்கள் இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்களையும், காட்சிகளுக்கு இசையினையும் நமக்கு தந்தருளியிருக்கிறார். அவற்றை வரும் பகுதிகளில் காண்போம்.

நன்றி.


8 கருத்துகள் :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இளையராஜா என்ற மேதைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் போதுமானதல்ல என்பது என்போன்றவர் கருத்து. நல்ல பதிவு; தொடருங்கள்; சாதனைக் கலைஞனைப் பற்றி தெரியாதவர் தெரிந்து கொள்ளட்டும்

Massy spl France. சொன்னது…

ராஜாவின் இசை மீது இவ்வளவு காதலா? ம்... நடக்கட்டும். உங்களுக்குள்ளும் ஒரு இசை ஞானி யாராவது ஒளிந்திருப்பாரோ! எதற்கும் தேடிப் பாருங்கள்.
பகிர்வுக்கு நன்றி.

ஷர்புதீன் சொன்னது…

இசையில் தொடங்குதம்மா என்ற ஹே ராம் படப்பாடல் பாமர மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்றே நினைக்கிறேன்., அஜய் சக்ரவர்த்தியின் கிழட்டு கம்பீர குரலில் ...சான்சே இலை... மொட்டை மொட்டைதான்!

shabi சொன்னது…

அது எஸ்.பி.பி போன்ற மிகச் சிறந்த பாடகர் இருக்கும் போது எதற்காக மனோ போன்றவர்களை ஊக்குவிக்கிறார் என்பது அது///// இப்ப இருக்க ஹிந்தி பாடகர்களுக்கு மனோ 1000 மடங்கு பெட்டர்..... (உதித்......)

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு.என் வாழ்க்கையின் அதிகமான நேரம் இளையராஜாவால் தான் இனிமை ஆகிறது.மிக அருமையான இசையமைப்பாளர்.

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு.என் வாழ்க்கையின் அதிகமான நேரம் இளையராஜாவால் தான் இனிமை ஆகிறது.மிக அருமையான இசையமைப்பாளர்.

சேக்காளி சொன்னது…

அந்த சகாப்தம் தான் உங்கள் (வலை)பக்கம் என்னை இழுத்து வந்து விட்டது நண்பரே.

சேக்காளி சொன்னது…

//எஸ்.பி.பி போன்ற மிகச் சிறந்த பாடகர் இருக்கும் போது எதற்காக மனோ போன்றவர்களை ஊக்குவிக்கிறார்//
"தேன்மொழி எந்தன் தேன்மொழி"
என்ற பாடலை கேட்ட பின்பு எப்படி இதனை "சொல்ல துடிக்குது(உங்கள்) மனசு".