ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

நீ தானே என் பொன் வசந்தம் - இசை மதிப்பீடு

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் - இவ்வருடத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் - நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் கடைசியாக, இம்மாதத் தொடக்கத்தில் வெளியாகியது. அதற்கு முன்பாகவே அவ்வப்போது பத்து வினாடிகள் ஓடும் டிரைலர்களில் சேர்க்கப்பட்டிருந்த பாடல்கள் / இசை மாதிரிகள் அந்த எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்தன.

எனது நண்பர் மூலமாக, குறுந்தகட்டினை இந்தியாவிலிருந்து அனுப்ப சொல்லியிருந்தேன். அது வருவதற்கு சில நாட்களாகும் என்பதால் அது வரை யுடியூப்பில் கேட்டு காலத்தை தள்ளிக் கொண்டிருந்தேன். பாடல்கள் ஆரம்பத்தில் கேட்ட போது சிறிது ஏமாற்றத்தை அளித்தாலும், மூன்று, நான்கு பாடல்கள் எனக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். சோனி நிறுவனத்தினார், அப்படத்தின் பாடல்களை ஒரே யுடியூப் வீடியோவில் வெளியிட்டிருந்தது மிகவும் வசதியாக போனது.

இளையராஜா அவர்கள் மட்டுமல்லாமல், மற்ற எந்த இசையமைப்பாளரின் இசையும் மதிப்பிடுவதற்கு நான் இசை ஞானம் உடையவன் அல்ல. ஆனாலும், இசையை ரசிப்பவன் என்ற முறையில் என்னை கவர்ந்தது, நான் கேட்ட மற்ற திரைப்படப் பாடல்களின் அடிப்படையில் இதனை மதிப்பிடுகின்றேன்.

என்னோடு வா வா என்று (8.5/10)
பாடியவர்கள்: கார்த்திக்

இப்பாடலில் ஆரம்பத்தில் வரும் இசையினை பல நிகழ்ச்சிகளுக்கும், இப்படத்தின் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்தியிருந்திருந்தார்கள் என்பதனால் இப்பாடல் மீது ஒரு மோகம். அதனை இப்பாடல் முற்றிலுமாக முழுமையடைய செய்திருக்கிறது. கார்த்திக் வழக்கம் போல மிகவும் நன்றாக பாடியிருக்கிறார்.

குறிப்பிட்டது போல, ஆரம்பத்தில் வரும் இசையும், முதலாவது சரணத்திற்கு முன்பாக வரும் இசையும் நன்றாக இருக்கிறது.

வானம் மெல்ல (7/10)
பாடியவர்கள்: இளையராஜா, பெலே ஷிண்டே

எனது நண்பர்கள் பலருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. இது இந்த ஆல்பத்தின் சிறந்த பாடலாக கூட இதனை அவர்கள் கருதுகிறார்கள். எனக்கு ஏனோ இப்பாடல் மீது இன்னும் பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை.

இளையராஜாவின் குரலில் ஏகப்பட்ட பாடல்கள் மிகவும் வித்தியாசமாக, இனிமையாக ஒலித்திருக்கின்றன. அவரது குரலுக்காகவே கேட்ட பாடல்கள் பல. சில படங்களில் பெண் குரலை விட அதே பாடலை இளையராஜாவின் குரலில் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். ஆனால் இப்பாடல் ஓர் விதிவிலக்கு. ஏனோ இப்பாடலுக்கு அவரது குரல் ஒட்டவில்லை - பெண் குரலும் தான். மற்றபடி கேட்பதற்கு நல்ல ஓர் இன்னிசை. இரண்டாவது சரணத்திற்கு முன்பாக வரும் இசை மிக அருமை - அது என்ன இசைக் கருவியோ தெரியவில்லை எனக்கு.

பெண்கள் என்றால் பொனம் மெல்ல (8/10)

பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா

இப்படத்தின் பாடல்கள் வந்த புதிதில் ஒவ்வொரு பாடலையும் சாம்பிளுக்காக கேட்ட போது, இப்பாடல் ஆரம்பத்தில் ஒலித்த விதம் வித்தியாசமாக இருந்தது. மேலும் மிகவும் பிடித்த பாடல்களை கேட்டு கொண்டிருந்த போது, இப்பாடலை கவனிக்கவும் நேரமில்லை. ஆதலால் இப்பாடல் வந்த போதெல்லாம், அடுத்த பாடலுக்கு தாவிக்கொண்டிருந்தேன். ஆனால் பாடலின் ஆரம்பத்தை தவிர இப்போது இப்பாடல் மிகவும் பிடித்து விட்டது.

யுவன் வழக்கம் போல நன்றாக பாடியிருக்கிறார்.

மதி கெட்ட என்னிடம்
மனம் வந்து சொன்னது
மரணத்தைப் போல் இந்த
பெண் இவள் என்றது
மிக அருமையான ராகம்.

அதனை,
தீயை போன்ற பெண்ணிவள்
என்று தெரிந்து கொண்டதே
என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு
ஏராளம்
என்று தொடர்ந்து,

பெண்கள் என்றால் பொய்யா 
பொய்யா பொய் தானா?

 என்று முடித்திருப்பது அற்புதம்.

புடிக்கலை மாமு (6/10)

பாடியவர்கள்: கார்த்திக், சுராஜ் ஜெகன்

படத்தில் ஹீரோவிற்கு ஓப்பனிங் பாடல் என்று நினைக்கிறேன். இப்பாடலில் இரு பகுதி - வெஸ்டர்ன் பகுதி மற்றொன்று கிராமத்து குத்து வகை. முதல் பகுதி நன்றாகவே இருக்கிறது. இரண்டாவது folk வகை தான் மனதில் ஒட்டவில்லை.


சற்று முன்பு (7/10)


பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே


பலருக்கு இப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு இன்னும் அவ்வளவாக பிடிக்கவில்லை. அதற்கு காரணம், இப்பாடலை பாடிய விதம். "இங்கிலீஸ் ஈஸ்வரி" மாதிரி ரம்யா வார்த்தைகளை கடித்து, குதறியிருக்கிறார். ஸ்டைலாம்மா.... தாங்கமுடியவைல்லை. பாடல் நல்ல இனிமையாக இருந்தாலும், பாடிய விதம் இப்பாடலுக்கு கரும்புள்ளியாக இருக்கும் - குறைந்தது எனது பார்வையில்.




சாய்ந்து சாய்ந்து(9/10)


பாடியவர்: யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே


அருமையான மெலோடி. யுவன் சங்கர் ராஜா தனக்கே உரித்தான ஸ்டைலில் பாடியிருக்கிறார். பலருக்கு அவர் பாடிய விதம் பிடிக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரது குரலில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது.

என் தாயை போல
ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்

இப்பாடலின் பகுதியை ரம்யா பாடியிருக்கிறார். போன பாடல் போல, மிகவும் கேவலமாக பாடவில்லை என்றாலும், இதிலும் அங்கே, அங்கே அவரது "இங்கிலீஸ் ஈஸ்வரி" வாடை மிகவும் அடிக்கிறது.

ஆள் யாரும் பார்க்காமல்
தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும்
கொல்வேன்....

நீங்க இப்படி பாடி எங்களை எல்லாம் கொல்லாமல் இருந்தால் மிகவும் புண்ணியாமாக போகும்.




முதல்முறை பார்த்த ஞாபகம் (9.5/10)

பாடியவர்: சுனிதா சவுகான்

பெண்கள் என்றால் பொய்யா பொய்யா பொய் தானா என்று ஆண் பாடுவது போல் பெண் பாடும் பாடல் ஆனால் காதலில் ஏற்படும் வருத்தத்தை கூறாமல் பிரிவினை உரைக்கும் பாடல்.

என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. மற்ற பாடல்களைப் போல இப்பாடலையும் ஆரம்பத்தில் அவ்வளவாக கேட்காமலிருந்தேன். ஆனால் நடுவில் ஒரு முறை எதேச்சயாக கேட்ட போது, என்னையுமறியாமல் மனதில் ஒட்டிக்கொண்டது. அற்புதமான பாடல். இளையராஜா இந்த வகை பாடலை இதற்கு முன்பு இயற்றியது போல் தெரியவில்லை (பீட்ஸ், ஸ்டிலிஸான பெண் குரல், காதல் பிரிவு).

ஆரம்பத்தில் இப்பாடல் ஆரம்பிக்கும் விதம் இருக்கிறதே. ஆஹா அற்புதம்!. பாடகர் சுனிதா சவுகான் மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறார். ஆனாலும் இப்பாடலினை நேகா பசன் பாடியிருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

சரணத்திற்கு முன்பாக வரும் இசையும் மிகவும் இனிமை. மொத்தத்தில் இப்பாடல், இசை, ராகம், குரல், பாடியவிதம் என் அத்தனையும் மிகவும் அழகாக ஒன்று சேர்ந்திருக்கின்றன.



காற்றைக் கொஞ்சம் (10/10)

பாடியவர்: கார்த்திக்

இப்பாடலினை இது வரை நூறு தடவைகள் கேட்டிருப்பேன், அவ்வளவு இனிமை; அருமை.

"நான நான நன நனா" என்று கோரஸ் முடிந்ததும்,

காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன்
பூப்பறித்து
கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து
உன்னை சந்திக்க
மெத்தை ஒன்றை
தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி
வைக்க சொன்னேன்
கண்ணை மூடி
உன்னை சிந்திக்க
என கார்த்திக் ஆரம்பித்து,

சுற்றும் பூமி
நிற்க சொன்னேன்
உன்னை தேடி
பார்க்க சொன்னேன் 
என்னை பற்றி
கேட்க சொன்னேன்
என் காதல்
நலமா என்று

என்று சிறிது டோன் மாற்றி, மீண்டும், "காற்றைக் கொஞ்சம்" என்று பின்னணியில் ஒரு வயலினுடன் தொடர்ந்து சரணத்திற்கு முந்தைய இசைக்கு போகும் இடம் அற்புதம்.

சரணத்திற்கு முந்தைய இசையிலும், ராஜா அமுத பானத்தையே கொடுத்திருக்கிறார். 01:36 - 02:11 அவ்வளவு இனிமை.

அத்தோடு முடிந்துவிடவில்லை. இரண்டு சரணங்களும் காதில் தேன் போல் பாய்கின்றன.

தள்ளி தள்ளி
போனாலும்
உன்னை எண்ணி
வாழும் ஓர்
ஏழை எந்தன்
நெஞ்சத்தை
பாரடி........
தங்க மெத்தை
போட்டாலும்
உன் நினைவில்
எந்நாளும்
தூக்கமில்லை
ஏன் என்று
சொல்லடி........

ஆஹா, கேட்பதற்கு எவ்வளவு இதமாக இருக்கின்றன! அதிலும் "போனாலும்", "ஓர்", "நெஞ்சத்தை", "எந்நாளும்", "ஏன் என்று" என்ற இடங்களில் அதற்கு ஏற்றார் போல் வரும் இசை அற்புதம்.

மொத்ததில் மிக, மிக அற்புதமான பாடல்.



ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பல பாடல்கள் பிடித்து விட்டன; இன்னும் சிலருக்கு, ராஜாவின் பாடல்களில் இருந்து சிறிது வித்தியாசமாக இருக்கிறது. அந்த கருத்து அனைத்து பாடல்களையும் இன்னும் சில முறை கேட்ட பிறகு மாறிவிடும் என்று கருதுகிறேன். பொதுவாக இது போன்ற அனுபவம் ராஜாவின் பாடல்களுக்கு புதிது. சில முறை கேட்ட பிறகு பிடிக்கும் என்பது. பொதுவாக ரகுமானின் பாடல்களை தான் பல முறை கேட்க வேண்டும் - பல பாடல்கள் முதல்முறையே பிடித்திருக்கின்றன. எனக்கு அந்த அனுபவம் திருவாசகம் பாடலகளில் ஏற்பட்டது.

ஆனாலும், இளையராஜாவின் நூற்றுக்கணக்கான பாடல்களில் அநாயசமாக இருக்கும் அந்த உயிர்நாதம் ஒரு சில இடங்களைத் தவிர இப்படத்தின் பாடல்களில் குறைவது போல் தோன்றுவதனை மறுப்பதிற்கில்லை.

பாடல்கள் எவ்விதத்தில் இருந்தாலும், இசைக்கோர்வை மிகவும் வித்தியாமாக, இனிமையாக இருக்கின்றது. எத்தனை வகையான இசைக்கருவிகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு நோட்களை ஒலிக்கின்றன - ஆனால் இனிமையாக. பல இசைமைப்பாளர்கள் ஒரிரு இசைக்கருவியினை வைத்து பாடல் முழுவதுமே இசையமைத்திருப்பார்கள் - பெரும்பாலும் அவை ஒரே மாதிரியே பாடல் முழுவதும் ஒலிக்கும். அந்த வகையில் இந்த ஆல்பம்  மிகவும் வித்தியாசப்பட்டிருக்கிறது.

இன்னும் நாட்கள் செல்ல, செல்ல அவ்வளவாக கவராத பாடல்களும் மனதை மயக்க வாய்ப்பிருக்கின்றன. என்ன ஆச்சர்யம் என்றால், ராஜா அவர்கள் ஒரிரு நாட்களில் எழுதிய இசையின் ஆழத்தை ஓரளவு உணர்ந்து கொள்வதற்கே பல நாட்களாகின்றன.

இப்படத்தினை பற்றி இன்னும் பல வருடங்கள் பேசிக்கொண்டிருப்போம் என்பது எனது கருத்து.

9/10 (ஒன்றிரண்டு பாடல்களை கணக்கில் கொள்ளவில்லை)




கருத்துகள் இல்லை :