செவ்வாய், டிசம்பர் 20, 2011

2011 சிறந்த பாடல்கள்

இந்த ஆண்டும், சென்ற ஆண்டும் பதிவெழுத தோன்றவில்லை என்று கூறினால் அது உண்மையில்லை - எழுதவேயில்லையே என்று நினைத்தது பலமுறை. ஆனாலும் சோம்பல் என்னை தடுத்தது தான் உண்மை. சில மணி நேரம் கிடைத்தாலும், கூக்குள், அமேஸான், யு டியூப், விகடன் போன்ற தளங்களை பார்க்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. அதில் அப்படி ஒரு சுகம்.

கடந்த 10 ஆண்டுகள் தமிழிசைக்கு சோதனை காலம் என்று கூறினால் அது மிகையாது. ராஜாவின் திறமைக்கு அவருக்கு அமையும் படங்கள் எல்லாம் தூசு; அதனில் முன்பு போல் அதிகமாக ஜீவனை காண முடிவதில்லை. ராஜா அளவிற்கு இல்லாவிட்டாலும், அவருக்கு மாற்றாக அறுதியிட்டு கூறமளவிற்கு திறமைபடைத்த ரஹ்மான், தமிழிலிலேயே காணமுடிவதில்லை - பாவம், ஹிந்தியில் இன்னும் நல்ல கதையம்சத்துடன் படம் எடுக்கிறார்கள் போலிருக்கிறது - Blue, Jhodha Akbar, Delhi 6, Ghajini, Yuvraj, Jhootha Hi Sahi, Rockstar, ADA - உள்குத்து. தமிழிலும் முன்பு போல் அவரது அற்பணிப்பினை காணமுடிவதில்லை. ’சில்லென்று ஒரு காதல்’ போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு. விண்ணைத் தாண்டி வருவாயா மற்றொன்று.

ஹாரீஸ் பரவாயில்லை. ஆனாலும், ஒரே பாடலை பத்து படங்களுக்கு இசையமைத்தது போன்ற உணர்வினை தவிர்க்க முடியவில்லை. ஆனால், இவர் பாடகளில் ஒலியமைப்பு அற்புதமாக அமைகிறது. வார்த்தைகள், வாத்திய கருவிகளின் ஒலிப்பு தெளிவாக கேட்கிறது.

ஜி.வி.பிரகாஷ் போன்றோர்கள் எப்போதாவது தனது சொந்த உழைப்பினால் நல்ல பாடல்கள் தருகிறார்கள்.

தமனின் ’வந்தான் வென்றான்’ படத்தில் இரு பாடல்கள் நன்றாக இருந்தாலும், அவர் Auto-Tuner வைத்துக் கொண்டு, மியுசிக் டைரக்டர் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார். இன்னும் வளர வேண்டும்.

யுவன் ஒருவர் தான் நம்பிக்கை ஊட்டுகிறார். ஆனாலும் அவருடைய உழைப்பினையும் அவ்வப்போது சிம்பு போன்றவர்கள் கெடுத்து விடுகிறார்கள் - Where is the party நல்ல உதாரணம். அவருடைய படங்களில் சமீபத்தில் மிகவும் லயித்தது ”குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும்”. அற்புதமான பாடல்கள்.

இக்காரணங்களால், முன்பு போல் ஒரு ஆல்பம் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கும் நிலை குறைந்து விட்டது. ஒரு ஆல்பத்தை பல மாதங்கள் கேட்கும் நிலையும் இல்லை. இப்போதும் இருக்கிறது - வேறொரு காரணத்திற்காக - அது, வேறு நல்ல பாடல்களே இல்லாத காரணம். உதாரணம் - எந்திரன், ராவணன் வந்த பிறகும் வேறு வழியில்லாமல் விண்ணை தாண்டி வருவாயா கேட்க வேண்டிய நிலை. ரஹ்மான் வந்த புதிதில், ஒரே நேரத்தில் அவருடைய கிழக்கு சீமையிலே, திருடா திருடா, ஜென்டில்மேன் படங்கள், தினமணியின் டாப் 10 படங்கள் (இசை) வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தன. அதே போல் மூன்று படங்களின் பாடல்களும் முத்துக்கள். ஒரே நபரால் எப்படி “மானூத்து மந்தையிலே” ஐயும், “கொஞ்சும் நிலவினையும்”, “என் வீட்டுத் தோட்டத்தையும்”, “சிக்குபுக்கு ரயிலையும்” இசையமைக்க முடிந்தது என்று வியப்பாக இருக்கும். அது போன்ற வியப்பினை ரஹ்மான் பாடல்களில் அபூர்வமாக தான் கேட்க முடிகிறது. சமீபத்திய உதாரணம் - ஆரோமலே.

இருந்தாலும் இந்த ஆண்டில் சில நல்ல பாடல்கள் வந்தன. அவற்றை கேட்டு மகிழ்ந்தேன். அப்பாடலை இயற்றிய இசையமைப்பாளர்களுக்கு நன்றி. நான் ரசித்த சில பாடல்கள் இதோ.

1) ஒரு மலையோரம்

படம்: அவன் இவன்
பாடியவர்கள்: ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ, மற்றும் பிரியங்கா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பிதாமகன் அல்லது நான் கடவுள் அளவிற்கு இல்லாவிடிலும், ஓரளவிற்கு பாடல்கள் நன்றாக இருக்கும் என்று நினைத்ததற்கு நல்ல பலன். படமும் அவ்வளவே. பாலாவின் படம் என்று எழுத்தில் தெரிந்து கொண்டால் தான் உண்டு. அம்பிகாவின் பாத்திரம் (படத்தில் அவர் விளக்குவது அல்ல) மாத்திரம் தான்  தனித்து தெரிந்தது - ”போடா, அப்புறம் என்ன புறங்கையை நக்க சொல்லுறியா?”.

அப்படத்தின் பாடல்களில், இப்பாடல் வித்தியாசமாக, மிக இனிமையாக இருந்தது. இப்பாடல், கேட்ட பாடல் போல் ஒலித்தாலும், இது வித்தியாசமாக இருந்ததற்கு முக்கிய காரணம் மூன்று சிறுமிகளின் குரல்கள். ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ, மற்றும் பிரியங்கா.

இவர்கள் அனைவரும் விஜய் டி.வியில் ஒளிபரப்பான, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றவர்கள். நித்யஸ்ரீ மற்றும் பிரியங்கா இந்த இளம்வயதிலேயே அற்புதமாக பாடும் திறமைபடைத்தவர்கள்.






சித்ரா மற்றும் மனோ போன்ற ஓரவஞ்சனை படைத்த, உதாவாக்கரை நடுவர்களைக் கொண்டு, “அல்கா” என்ற பெண்ணை வென்றவராக அறிவித்தார்கள். எதிர்பார்த்த, ஆனால், தாங்கமுடியாத கொடூரம் -  மற்றவர்களின் திறமைக்காக பார்க்க வேண்டிய கட்டாயம்.

அதிலும், விஷ்ணு சரண் என்ற பையன், முறையான சங்கீத பயிற்சி இல்லாமல் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரிலேயே நன்றாக பாடக்கூடியவர். ஆனால் நடுவர்களாலும், நிகழ்ச்சியின் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதனால் அடிக்கடி இம்சிக்கப்பட்டவர். அந்த அனந்த் வைத்தியாநாதனை, படத்தில் ஆர்யாவின் அம்மாவும், விஷாலின் அம்மாவும், ”ஸ்ரீகாந்த்” என்று அவரை திட்டியும், அடிக்கும் போது, எனக்கு ஏற்பட்ட அற்ப சந்தோஷத்திற்கு அளவில்லை.

அந்த நிகழ்ச்சியில் உண்மையான வெற்றியாளர்களாக வந்திருக்க வேண்டியவர்கள் பாடிய மற்றுமொரு நல்ல பாடல் (இம்முறை அவர்களாலேயே முதலாவதாகப் பாடப்பட்டது). படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் மிகவும் இனிமையான பாடல். இப்பாடலில் கூட பிரியங்காவின் இனிமையான குரலையும், ஸ்ரீநிஷாவின் குரல் வேரியேசியனையும் (மாற்றுச் சொல் வேண்டும் இங்கே) அறிய முடியும்.



பாடலில் ஒரே குறை, வழக்கம் போல, ராஜா வீட்டு பாடல்களில் ஒலிக்கும் மலையாள வாடை.

2) மழை வரும் பொழுதிலே

படம்: வெப்பம்
பாடியவர்: சூசன்
இசை: ஜோஸ்வா ஸ்ரீதர்

சமீபத்தியா பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். அதிசயமாக ஜோஸ்வா ஸ்ரீதரிடமிருந்து. இவரின் ”காதல்” மிகவும் கவாராவிடிலும், இரு பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

சில பாடல்கள் மட்டும் கேட்ட இரு விநாடிகளில் பிடிக்கும். இப்பாடல் அந்த ராகத்தை சார்ந்தது. என்னவொரு அருமையான ராகம், இசை, மயக்கும் குரல். இப்பாடகர், ”விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் வரும் ஹோஸானா பாடலின் கோரஷில் பிரமாதப்படுத்தியிருந்தார். நல்ல தெரிவு. பாடலும் மிகவும் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2:30-2:50 வரை பின்னணியில் வரும் வயலின் அருமை.







3) ஏலே ஏலமா

படம்: ஏழாம் அறிவு
பாடியவர்கள்: கார்த்திக், ஷாலினி, ஸ்ருதி ஹாசன், விஜய் பிரகாஷ்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

மிகவும் எதிர்பார்த்த திரைப்படம். ஓடவும் வேண்டும், ஓடவும் கூடாது என்று நினைத்த திரைப்படம். மற்ற பாடகள் மிகவும் சாதாரண ரகம். ஆனால் ஏலே ஏலமா மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஹாரீஸ் நன்றாக உழைத்தால், அது பாடலில் நன்கு தெரிகிறது. இல்லையென்றால், இன்னொரு பாடலைப் போல் அப்பட்டாமாக தெரிகிறது. ஹாரீஸின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ஒலிப்பதிவில் உள்ள தெளிவு. முன்பு ரகுமான் அதற்கு பிரபலம். ஆனால் சமீப காலங்களில் அவரது பாடல்களில் அது ஒரு குறையே.  ராக்ஸ்டார் விதிவிலக்கு. ஆனாலும், ராக்ஸ்டாரை விட, ஹாரீஸின் பாடல்களில் தெளிவு இருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நல்ல பீட்; இனிமையான ராகம். நல்ல கோரஸ். விஜய் பிரகாஸ் நன்றாக பாடியிருக்கிறார்.

பாடலில் என்னை கவர்ந்த இன்னுமொரு விசயம் - ஸ்ருதியின் குரல். அற்புதம். ஸ்ருதி பாடிய, “வாரணம் ஆயிரம்” பாடலும் அவருடைய வித்தியாசமான குரலுக்காகவே பிடிக்கும். இப்பாடலிலும் அவர் பாடியது சில வரிகள் தான். ஆனால் அவை தனித்து, இனிமையாக ஒலிக்கின்றன. “என்ன் ஜன்னல் கதவில் இவ்வன் பார்வை பட்டு தெரிக்க.. ஒரு மின்னல் பொழுதிலே....” அற்புதமாகப் பாடியிருக்கிறார்.





4) என்னமோ ஏதோ

படம்: கோ
பாடியவர்கள்: ஆலாப் ராஜ், பிரஷாந்தினி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

மற்றுமொரு நல்ல பாடல் ஹாரீஸிடம் இருந்து. சென்ற பாடலுக்கு கூறிய அனைத்து சிறப்பம்சங்களும் இப்பாடலுக்கும் பொருந்தும் - ஸ்ருதியின் குரலைத் தவிர. 2:00 வரும் ஹம்மிங் பிரமாதம்.




5) Nadaan Parindey

படம்: ராக்ஸ்டார்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், மொஹித் சவுகான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்த வருடத்தில் வெளியான ஒரே ஏ.ஆர்.ரகுமான் ஆல்பம் இது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பம். ஏமாற்றவில்லை. சமீபத்திய வழக்கத்திற்கு மாறாக, ஒலிப்பதிவு துல்லியமாக இருக்கிறது (இன்னும் ஹாரீஷ், இளையராஜா மற்றும் யுவன் ஆல்பங்களின் அளவிற்கு இல்லை). எனக்கு நான்கு, ஐந்து பாடல்கள் பிடித்திருக்கிறது. அதில் இப்பாடலுக்கு முதலிடம்.



இப்படத்தில் இடம் பெற்ற ’சதா ஹக்’ பாடலும் அமோக வரவேற்பினைப் பெற்றது.



6) மலர் வில்லிலே அம்பொன்றொன்று விட்டானே


படம்: பொன்னர் சங்கர்

பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், தர்ஷனா
இசை: இளையராஜா

ராஜாவிற்கு ஒரு சில படங்கள் வந்தாலும், என்னை கவர்ந்தது இப்பாடல் மட்டுமே. ஸ்ரேயா வழக்கம் போல் தனது திறமையால் பாடலை தூக்கி நிறுத்துகிறார். ராஜாவின் சமீப கால பாடல்கள் அவ்வளவாக நன்றாக  அமைவதில்லை - பாலா மற்றும் சில இயக்குனர்களின் படங்கள் விதிவிலக்கு. அப்படியும் நன்றாக சில பாடல்களை ”சில” மலையாள பாடகர்களும், பாடகிகளும் பாடி அதன் சிறப்பை குறைத்து விடுகிறார்கள் என்பது எனது கருத்து. அது போல் இல்லாமல், ஸ்ரேயா - அவரது முக்கியமான பாடகர்களில் ஒருவர் - வின் குரலில் இப்பாடல் கேட்பதற்கு அற்புதம்.

ஆரம்பத்தில் சுமாராக ஆரம்பித்தாலும், இரண்டு சரணங்களிலும் கம்பீரமாக நிற்கிறார் ராஜா. முக்கியமாக 03:22 -ல் (மற்றும் அதே போல இரண்டாவது சரணத்திலும்)

நிலவில் மஞ்சமது
தேய்ந்து விடக் கூடும்
மலரில் மஞ்சம் கூட
வாடி விடும்
மலரில் மஞ்சம் கூட
ஏக்கம் கொள்ளக் கூடும்
மடியில் மஞ்சம் ஒன்று
இட வேண்டும்

மிக இனிமை. ராகமும், பாடிய விதமும்.




7) விழிகளிலே விழிகளிலே


பாடியவர்கள்: கார்த்திக், சின்மயி

படம்: குள்ள நரிக் கூட்டம்
இசை: செல்வகணேஷ்


நம்பிக்கை இல்லாமல் பார்த்த திரைப்படம் இது - ஆனால் எனது எதிர்பார்ப்பைக் காட்டிலும் நன்றாகவே இருந்தது. அதிலும் இப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் மிகவும் நன்றாகவே இருந்தது.








இது வரை எனக்கு இது போல் இல்லைஇருதய அறையில்நடுக்கம்.
கனவுகள் அனைத்தும்உன் போல் இல்லைபுதிதாய் இருக்குது எனக்கு
அற்புதம்!


நன்றி!

கருத்துகள் இல்லை :