திங்கள், ஏப்ரல் 02, 2007

அத்திப் பூத்தாற் போல்

இந்தத் தலைப்பில், தற்போதுள்ள நிலையில் பல விசயங்கள் எழுதலாம். நான் இப்போது வலைப்பதிவதே அத்திப் பூத்தது போலாகி விட்டது. பல வருடங்களாக பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து விலகி, புது இடத்திற்கு மாறி வந்தது இதற்கு தலையாயக் காரணம். பழைய நிறுவனத்தில் பல வருடங்களாக இருந்ததால் அலுவலகத்திலேயே வலைப்பதிவது வழக்கம். பெரும்பாலும் வார இறுதி நாட்களில், அலுவலகத்தில் அதிகமாக ஊழியர்கள் நடமாட்டமில்லாத நேரத்தில், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நேரத்தில் பதிவது உண்டு. ஆனால் இப்போது நிலைமையே மாறி விட்டது. இந்தியாவில், இந்திய கிரிக்கெட் அணிக்கு உண்டான கதி தான் எனது நிலைமையும்.

இன்னும் சில மாதங்களுக்கு அல்லது இனி எப்போதுமே அதற்கு வாய்ப்பில்லை. வீட்டில் மடிக்கணினியை வைத்துக் கொண்டு எழுதுவதும் கடினமாக உள்ளது. டெஸ்க்டாப்பில், அதுவும் அலுவலகக் கணியில், டைப் செய்வது போல் ஒரு சுகம் எதுவுமில்லை. நான் எழுதாவிடில் நாட்டில் என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. ஆனாலும் கலைஞன் விரும்பினாலும் விரும்பாவிடிலும் திருட்டு வி.சி.டியில் படம் பார்த்தாவது விமர்சனம் எழுதும் விமர்சகர் போல், நாட்டு நடப்பைப் பற்றி எனது எண்ணக் குப்பைகளைக் கொட்ட வேண்டாமா?

கடந்த இரண்டு மாதங்களில் முக்கியமான நிகழ்வுகள் என்று பெரிதாக (என்னைப் பொறுத்தவரையில்) நடந்து விடவில்லை.

ஆனாலும் புலிகள் தொடுத்த வான் வழித் தாக்குதல் முக்கியமானது. அதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை அறிய ஆவலோடு இருந்தேன். வழக்கம் போல் பட்ஷே, முஷாரப் 'இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்கப் பாடுபடவேண்டும்' என்று கூறுவது போல் ஒரு வில்லங்கமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அபூர்வமாக, இந்திய வெளியுறவுத்துறை செயலர், '..இந்த தாக்குதல் இலங்கையில் நடந்து வரும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதி மட்டுமே. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக சொந்த நாட்டிலேயே இருப்பது வருத்தமடையச் செய்கிறது. ...', என்பது போல் கூறியுள்ளார். இது ஆச்சர்யமடைய வைக்கிறது.

இதில் ஒரு சில தமிழ் நாளிதழ்கள் எப்போதுமே இலங்கைக்கு ஆதரவாக எழுதி வருவது ஏனென்று தெரியவில்லை. இலங்கை ராணுவம், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் செய்தியை இருட்டடிப்பு செய்தும், புலிகள், ராணுவத்தினரைத் தாக்கினால் ஏதோ அணுகுண்டு வீசியதைப் போலவும் அச்சேற்றுவது ஏனோ? சென்ற வாரம் தினமலரில், 'இலங்கையில் இரண்டாவது நாளாக புலிகள் அதிரடி. ராணுவ வீரர்கள் உட்பட ஏழு பேர் பரிதாப பலி' என்று செய்தி வெளியாகியிருந்தது. இவர்கள் கூறுவது, ஏதோ இலங்கை ராணுவம் தாக்கினால் தமிழ் மக்கள் எல்லாம் சந்தோஷமாக சாவது போல் இருக்கிறது. புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் சவக்கிடங்கிற்கு அனுப்பிவிடுவார்கள் போல! அதிலும் சில பத்திரிக்கையாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புலி என்றாலே அவர்களுக்கு வயிற்றில் பற்றிக் கொண்டு வருகிறது. 'பத்மநாபா கொலையில் இருந்தே .......' என்று ஆரம்பித்து விடுவார்கள். கேட்டால் நாங்கள் தமிழர்களுக்கு எதிரியில்லை; புலிகளுக்கு தான் என்று கூறுவர். புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று மட்டும் கூறுபவர்கள், தமிழ் மக்களுக்கு என்ன வழி என்று மட்டும் கூற மாட்டர். புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், 'எங்களது ஆதரவு புலிகளுக்கல்ல; ஈழத்தமிழர்களுக்குத் தான்' என்று கூறிக்கொள்கிறார்கள். என்ன தான் முடிவோ?

****

இந்திய அணி வெளியேறியது. நல்லவேளை இன்னும் நான்கு போட்டிகள் ஆடிய பிறகு வெளியேறி மக்களின் நேரத்தை வீணாக்கவில்லை. அது சரி... அனைத்து மக்களும் ஏதோ ராக்கெட் (நக்ஸலைட் ரவி ராக்கெட் அல்ல) தயாரித்துக் கொண்டிருந்தது போலவும் இவர்கள் அவர்களது நேரத்தை வீணாக்கியது போலவும் கூறுவது சிறிது அதிகம் தான். ஆனாலும் சிலர் இருக்கத் தான் செய்கின்றனர். இங்கிருந்து இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்க்கப்போகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் விசாவிற்கு அலைந்து விமான டிக்கெட், போட்டிக்கான டிக்கெட் (?) எல்லாம் எடுத்து வைத்து கோழி போல காத்திருந்த சிலருக்கு அடி. முக்கியமாக எனது மேலாளருக்கு :) இத்தனை ஆண்டுகளாய் எப்படியும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எப்படியாவது சின்ன சின்ன அணிகளை லீக் போட்டிளில் வென்று சூப்பர் 6, சூப்பர் 8 என்று முன்னேறி விடும். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 6/8 போட்டி, அதன் பிறகு காலிறிதி அல்லது அரையிறுதியில் ஆட வைப்பதன் மூலம் பலத்த வருவாயை ஈட்டி வந்தனர், கிரிக்கெட் வாரியத்தினர். அந்த கனவிற்கு வந்த பேரிடி. இதனால் அடுத்து வரும் தொடர்களில் 'லீக்' போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம்பெறுவது அவர்களின் வருமானத்திற்கு மிக அவசியம். செப்டம்பரில் தெனாப்பிரிக்காவில் நடக்க போகும் 20-20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் ஒரே பிரிவில் சேர்க்கப்படிருப்பது இதனால் தானோ? ரிச்சர்ட்ஸ் இப்போது இந்திய பயிற்ச்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி முன்னேற வேண்டும் என்ற பலரின் ஆவல் எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. 'ரிச்சர்ட்ஸை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. இலங்கை முன்னாள் பயிற்சியாளர் 'வாட் மோர்' இந்தியப் பயிற்சியாளராக வர விருப்பம் தெரிவித்திருந்தார். கங்குலி தனக்கு சேப்பல் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். கங்குலிக்கு நடந்ததும், சேப்பலுக்கு நடந்ததும் அனைவருக்கும் தெரியும். பதவி விட்டுப் போன கடுப்பில் இந்திய அணியை வதைப்பதே வாட் மோருக்கு வேலையாகி விட்டது. 1996-ம் ஆண்டிலும் இதே போல் தான் இந்திய அணியை இலங்கை அணியை விட்டு பழி வாங்கினார். அப்போதும் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர விண்ணப்பித்திருந்தார் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

சிவாஜி படத்தின் பாடல்கள் கேட்டேன். (ஆமா இவர் மட்டும் தான் பெரிசா கேட்டுட்டாராம்!) இரண்டைத் தவிர மற்றவை சுமார் ரகம் தான். ரகுமான் நல்ல பாடல்கள் (ஒட்டு மொத்தமாக ஒரு படத்தில்) கொடுப்பது அத்திப்பூத்தாற் போல் ஆகிவிட்டது. சிவாஜி பாடல்கள் பற்றி அடுத்தப் பதிவில்...'நல்லா இல்லைன்னு சொல்லுற பின்ன ஏன் விமர்சனம்' எழுதற என்று கேட்க கூடாது. இந்திய அணி தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகு எல்லோரும் கிரிக்கெட் பற்றி பேசுவதை விற்று விட்டார்களா என்ன?

குறிப்பு: அன்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். புதிய பிளாக்கருக்கு மாறிய பிறகு, தமிழ்மணத்தின் டூல்பார் தெரிவதில்லை. இதனை சரிசெய்ய யாராவது சுட்டி அளித்தால் நன்றாக இருக்கும்.

ஸ்ருசல்

கருத்துகள் இல்லை :