செவ்வாய், ஏப்ரல் 10, 2007

சிவாஜி பாடல்கள் மதிப்பீடு

1. வாஜி வாஜி
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ

சிவாஜி பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இணையத்தில் கிடைத்த மூன்று பாடல்களில் ஒன்று; இப்படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடலும் இதே. பாடலை முதன் முதலாக கேட்ட போது உண்மையிலேயே இது 'சிவாஜி' படப் பாடல் தானா என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் வைரமுத்து எழுதிய 'வாஜி வாஜி சிவாஜி வரிகள்', கண்டிப்பாக இது சிவாஜி பாடல் தான் என்று உறுதி செய்ததால் ஒரு நிமிடத்திலேயே அடுத்த பாடலுக்கு தாவினேன். ஆனால் பொறுமையாக ஒவ்வொரு பாடலாக கேட்ட போது இப்பாடலில் இரண்டு இடங்கள் எனக்கு பிடித்தது. ஒன்று 00:30 - 00:49 வரை வரும் 'இம்க்கும் இம்க்கும் இம்க்கும் இம்க்கும் ஆம்பல் ஆம்பல்' என்ற குழுவினரின் குரல். அதுவும் ஒவ்வொரு வார்த்தையும் இடம், வலம் என மாறி மாறி வருவது இனிமை. பொதுவாக பிளாசேயின் குரல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு. அபூர்வமாக இப்பாடலில் ஹரிஹரன், மதுஸ்ரீ குரலை விட பிளாசேயின் குரல் கவர்ந்தது. 2:14, 4:30-ல் 'திரிகிடாதா' என்று இடையில் அவர் ஓசையிடம் இடம் அழகு. பாடலில் நிறை என்று சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. சாதாரண, பழைய கால இசையும், மதுஸ்ரீயின் பொருத்தமற்ற குரலும், (1:36-ல் 'வ்வாஜி வ்வாஜி' என்று உச்சரிக்கும் இடம், ரஜினியை சாணியிடச் சொல்லும் இடம்) குறைகள். ஆனால் மூன்று வாரங்கள் கேட்ட பிறகும் இன்னும் சலிக்கவில்லை.

2. சஹானா
பாடியவர்கள்: உதித் நாராயணன், சின்மயி

படத்தின் சிறந்த பாடல் இது தான் என்று நினைத்திருந்தேன்; இன்னொரு சஹானா பாடலைக் கேட்கும் வரையில். ஆனால் இப்பாடலிலிருந்து தான் அப்பாடல் பிறந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகையினால் இப்பாடலுக்குத் தான் எனது ஓட்டு. முதன் முறையாக ஒரு தமிழ் பாடலை உதித் நாராயணன் மிகவும் சிரமப்பட்டு பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். வழக்கமாக 'ஸாரல் த்தூவ்வுதோ' என்று பாடியிருக்கக்கூடியவர் இதில் சிறிது தெளிவாக பாடியிருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் அவரால் அவரையே கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது. இப்பாடலுக்கு சின்மயியின் குரல் மிகவும் அழகு. இப்பாடலை முதன் முதலாக கேட்ட பொழுது, பெண் குரல் யாருடையது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் யோசித்த பிறகு, 'உனக்கு 18 எனக்கு 20' படப் பாடலான 'அந்த சாலையில் போகின்றான்' என்ற பாடலை ஒத்திருந்தது தெரிந்த பின் தான் சின்மயி என்று அடையாளம் தெரிந்தது. அது சின்மயியின் குரலா என்று சின்மயினிடமே கேட்டேன்; பதில் இல்லை. பல்லவி முடிந்ததும் வரும் கிடார் இசையும், அதனைத் தொடர்ந்து ரகுமான், 'தீம் தர தன தீம் தர தன' எனப் பாடுவதும் அற்புதம். 3:19-ல் 'வானுக்கும் நடக்கட்டுமா... ஹோ... ஓராயிரம் ஆண்டுள் சேமித்த காதலிது...' என்று உதித் பாடுவதும், அதே வரியை சின்மயி திரும்ப வேறொரு ராகத்தில்(?. இதன் பெயர் ராகமா?) பாடுவதும் அழகு.

சஹானா, சிவாஜியின் ராணி. (சன் டிவியில் கேட்டது போல் இருக்கிறதா?)

3. ஒரு கூடை சன்லைட்
பாடியவர்கள்: ராக்ஸ், பிளாசே, தன்வி

படத்திலேயே மிக வித்தியாசமான, இந்தியத் திரைப்படத்திற்கு மிகவும் புது வகையான பாடல். பல முறை கேட்டும் பாடல் வரிகள் புரியவில்லை; மற்றவர்கள் பாடல் வரிகளை அனுப்பிய பிறகு தான் தெரிந்தது. 'அப்பத்த பிச்சை கருப்பே. இப்ப நான் செக்க சிவப்பே' என்று. சில ஆண்டுகளுக்கு முன்பு முக்காபுலாவும், சிக்குபுக்கும் இது போல தானிருந்தன. இன்னும் சிறிது நாட்கள் இப்பாடல் பேசப்படும் என்பது நிச்சயம். ஆனால் பாடல் நன்றாக இருக்கிறதா? என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. பாடலை வேறு யாராவது பாடியிருக்கலாம். வரிகள் இன்னும் தெளிவாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். வரிகள் புரியக்கூடாது என்பது தான் எண்ணம் என்றால் தமிழ் எதற்கு?

4. பல்லேலக்கா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ரஜினிக்கு படத்தின் அறிமுக பாடல் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? முதலில் கேட்ட போது, என்ன இது சந்திரமுகியின் 'அரே அரே' பாடலின் இரண்டாம் பதிப்போ என்று தோன்றியது. ஆனால் பல முறை கேட்ட பிறகு பிடித்துப் போனது. 'பாபா' படத்தில் சங்கர் மகாதேவன் பாடிய பாடலில் செய்த தவறை ரகுமான் மீண்டும் செய்ய மாட்டார் என்று அசாத்திய நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்பார்த்தது போலவே எஸ்.பி.பியை பாடச் செய்திருந்தார். எஸ்.பி.பி வழக்கம் போல் மிகச் சிறப்பாக பாடியிருக்கார். 'பல்லேலக்கா... சேலத்துக்கா மதுரைக்கா...' இடங்களும், '...கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப்பாருலே' என்ற இடத்தில் 'லே' என்று எஸ்.பி.பி அழுத்தம் கொடுப்பது அழகு. இப்பாடல் வெற்றி பெறத்தவறி விடும் என்ற கணிப்பு சில நாட்களிலேயே பொய்த்துப் போனது. பாடலில் ரெஹானா பாடும் 'ஆலமரத்திற்கு ஜடையை பின்னி தான்...' என்ற வரிகளை வேறு யாராவது பாடியிருக்கலாம்.

5. சஹாரா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கோமதி ஸ்ரீ

விஜய் ஜேசுதாஸின் குரல் பரவாயில்லை. 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவாய்' என்று கோமதி ஸ்ரீ பாடும் திருப்பாவை அற்புதம்! என்னவொரு அற்புதமான படைப்பு. ராகம் அமைத்த விதமும், கோமதி ஸ்ரீயின் குரலும் மிகச் சிறப்பு. இப்பாடலைத் தொடர்ந்து ஒரே நாளில் பல பத்து முறைகள் கேட்டிருக்கிறேன்; கோமதி ஸ்ரீ பாடிய திருப்பாவைக்காக. சிறப்பு திருப்பாவையிலா; அல்லது அதனை கல்நெஞ்சம் படைத்தவரும் கரையும் விதமாக பாடிய கோமதி ஸ்ரீயின் குரலிலா அல்லது அத்திருப்பாவைக்கு ரகுமான் கொடுத்த அற்புதமான ராகத்திலா என்று தெரியவில்லை. இப்பாடலை கேட்ட பிறகு, ராகா.காம்-ல் சுதா ரகுநாதன், டி.கே.பட்டம்மாள் இன்னும் பிறர் பாடிய இதே 'மாலே மணிவண்ணா' கேட்டேன். உண்மையை சொல்வதென்றால் இப்பாடலில் உள்ள அழுத்தம் அப்பாடல்களில் இல்லை. இப்பாடலின் (திருப்பாவை) வரிகள் சோகம் நிறைந்தவை அல்ல. ஆனால் அதற்கு இது போல சோக வடிவம் கொடுத்தது தான் இப்பாடலுக்கு அழகு சேர்த்தது என்று கூறுவேன். சுதா ரகுநாதனும் இன்ன பிற பாடகர்களும் (இப்பாடலின் பிற வடிவங்களைப் பாடியவர்கள்), இப்பாடலை கேட்ட பிறகு, இது போல் ஏன் நமக்கு தோன்றாமல் போய்விட்டது என்று நினைத்திருப்பார்கள் என்பது என் கருத்து. இன்னுமொரு 'குனித்த புருவமும்' (தளபதி). இல்லை; அதனை விட சிறப்பு வாய்ந்தது இது என்று கூறுவேன். எங்கள் ஊருக்கு, இன்னுமொரு திருப்பாவை பாடலின் வழி சிறப்பு. ஏற்கனவே 'ஹே ராம்' திரைப்படத்தில் ஓர் திருப்பாவை பாடல் இடம்பெற்றிருந்தது.

ரகுமான் (மே, 28-ம் தேதி, ரெடிஃப் தளத்தில்) தனது பேட்டியில் கோமதிஸ்ரீயைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மோமதிஸ்ரீ, ரகுமானின் குரு தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகளின் மகள் ஆவார்.


"Gomathishree, daughter of Rahman's guru Dakhshinamurthi Swamigal"

"Gomathi is not just a film singer but she has an interesting voice," says Rahman. "I have plans to compose a few songs for her for a non-film album I want to produce"

6. அதிரடி தான்
பாடியவர்கள்: ரகுமான், சயோனரா

'லப்போ லப்போ' என்று பாடலின் ஆரம்பத்திலிருந்து ஒரே அதிரடி தான். சிறந்த பாடல் அல்ல; ஆனால் நல்ல பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரகுமான் அதிரடி காதல் பாடலை பாடியிருக்கிறார். 'ஹம்மா.. ஹம்மா', 'ஹலோ டாக்டர்' பாடல்களுக்குப் பிறகு. முதல் சரணத்திற்கு முன்பு வரும் கிடார் இசை அழகு. 2:30 'கண்கள் என் ??? ராஜர் மூர் போல்... ' என்று பாடுமிடத்தில் ரகுமானின் குரல் அற்புதம்.


7. இதனைத் தவிர ஒரு தீம் மியூசிக்கும் இந்த இசை ஆல்பத்தில் உண்டு. ஆனால் அதனைப் பற்றி எழுதும் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை.

மொத்தத்தில், சிவாஜி ரகுமானின் வழக்கமான ஆல்பம் அல்ல. ரஜினிக்காக நிறைய விட்டுக்கொடுத்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் 'பாபா' போல கவனக்குறைவாகவும் இசையமைக்கப்பட்டது போல் தோன்றவில்லை. சங்கரும், ரஜினிக்காக மிகவும் விட்டுக்கொடுத்திருக்கிறது போல் தோன்றுகிறது. சங்கர், 'பல்லேலக்கா', 'வாஜி வாஜி' வகை பாடல்களை ஒப்புக்கொள்பவர் அல்ல என்பது என் கருத்து. ஆனால் பாடல்களில் பழைய, புதிய, கேட்டிராத வகை என அனைத்து வகை இசையும், குரலும் உண்டு. இது ஒரு 'இந்தியன்' போன்ற சிறப்பான படைப்பு என்று கூற முடியாவிட்டலும் இந்தியன் போல் வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம்.

ஸ்ருசல்

2 கருத்துகள் :

Victor Suresh சொன்னது…

சிவாஜி பாடல்களை அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். படையப்பா, சந்திரமுகி பாடல்கள் போல பாபா, சிவாஜி பாடல்கள் முதல் தடவை கேட்ட போது திருப்தியாக இல்லை. ஆனால் கேட்க, கேட்க ரசிக்க முடிகிறது. குறிப்பாக படம் பார்த்த பிறகு.

ஸ்ருசல் சொன்னது…

நன்றி.