திங்கள், ஜூலை 31, 2006

நீ பாதி நான் பாதி

அலுவலகத்தில் தமிழ் பாடல்களை வழங்கும் இணையத்தளங்கள் முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதால் புதிய படங்களின் பாடல்களை கேட்க முடியாமல் போய் விட்டது. எப்போதும் பாடல்களை கேட்டு விட்டு, நன்றாக இருந்தால் இசைக் குறுந்தட்டு வாங்குவது வழக்கம்.

நேற்று 'சில்லென்று ஒரு காதல்' இசைத்தட்டு வந்திருக்கும் என்ற நப்பாசையில் லேண்ட்மார்க் சென்றேன். ம்ஹீம். இன்னும் இரண்டு, மூன்று தினங்களாகும் என்று கூறிவிட்டனர். சரி வேறு என்னென்ன படங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போம் என்று நோட்டமிட்டேன். சம்திங் சம்திங்.. திமிரு போன்ற படங்களே இருந்தன. அருகில் ஆங்கில பாப் ஆல்பம் போல By2 என்று ஓர் இசைத்தட்டு இருந்தது. என்ன இது என்று பார்த்தால் இசை: விஜய் ஆண்டனி என்று எழுதப்பட்டிருந்தது.

'டிஸ்யூம்', படத்தின் இசைத்தட்டை சிறிது தயக்கமில்லாமல் (கேட்காமலேயே) வாங்கினேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. அதே போல இதுவும் சிறந்த பாடல்களைக் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பில் வாங்கிக் கொண்டேன்.

அருகில் சாசனம் படத்தின் இசைத்தட்டும் இருந்தது ஆச்சர்யம். இந்தப் படம் எப்போது வருமென பல ஆண்டுகள் எதிர்பார்ப்பு மேலோங்க காத்திருக்கிறேன். 2001-ம் ஆண்டே படத்தின் கதையை ஏதோ ஒரு வலைத்தளத்தில் படித்திருந்தது ஞாபகம். செட்டியார் சமூகத்தில், குழந்தையைத் தத்து கொடுத்தப் பின் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைக்கும், அதன் உண்மையான பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவில் உருவாக்கப்படும் சமூகத் தடை மீதான படம் என்று படித்தது ஞாபகம். அதாவது, குழந்தையின் பெற்றோர் இறந்தால் கூட அந்தக் குழந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அளவில். இதில் அரவிந்த்சாமி தந்தையாகவும், ரஞ்சிதா மகளாவும், சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் பிரவுவின் காதலியாக வரும் நடிகைக்குப் (பெயர் ஞாபகம் இல்லை) பிறந்த குழந்தை தான் ரஞ்சிதா என்பது போல் படித்த ஞாபகம். பின்னர் அரவிந்தசாமி-டெல்லிகுமாரின் உறவுமுறை பற்றி படித்த போது கூட எனக்கு இந்தப் படம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

கடைசி காட்சி வசனங்கள் அதிகமில்லாமல் அரவிந்த் சாமிக்கும், ரஞ்சிதாவிற்கும் இடையில் நடப்பது போல் அதில் விவரித்திருந்தனர். பார்க்கலாம் இப்போதாவது படம் வெளிவருகிறதா என. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாலபாரதி. ஒரு தயக்கமிருந்தாலும், மகேந்திரனின் படமென்பதால் இசைத்தட்டை வாங்கிக் கொண்டேன்.

வீட்டில் வந்து, முதலில் சாசனத்தை ஒலிக்கவிட்டேன். ஒரு பாடலைத் (முதல் பாடல்) தவிர பிற பாடல்கள் அவ்வளவு சிறப்பாக வரவில்லை. பாடல்களை நன்றாக கேட்டு விட்டு எழுதுகிறேன்.

By2ல், விஜய் ஆண்டனி இம்முறையும் ஏமாற்றவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் இடம்பெற்ற ஒரு பாடலை மிகவும் லயித்துக் கேட்டேன். மிகவும் அரிதாகவே ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்குள்ளேயே உற்சாகம் பிறக்கும்; பாடல் முடியும் வர முகத்தில் புன்னகை மாறாமல் இருக்கும். அப்படி ஒரு உற்சாகம் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'பூவின் மடியில் புறா குஞ்சுகள்' என்ற பாடலைக் கேட்கும் போது ஏற்பட்டது. வரிகளை சரியாக கவனிக்கவில்லை. என்னவொரு பாடல்! என்னவொரு இசை! என்னவொரு குரல்!. சாதனா சர்கம் அற்புதமாக பாடியுள்ளார்.

இதே பாடல் மூன்று முறை வெவ்வேறு கவிதை வரிகளில் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு பாடல்களை விட சாதனா சர்கம் பாடியுள்ள பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ('பூவின் மடியில் புறா குஞ்சுகள்').

அற்புதம்.

மற்ற பாடல்கள் பரவாயில்லை. 'என் கால்கள்' பாடல் நன்றாக இருக்கிறது. சைத்ரா நன்றாக பாடியிருக்கிறார். 'அழகா அழகா' (சாதனா பாடியது) பாடலை எங்கேயோ கேட்டது போலிருக்கிறது (தேவா பாடல்??). பாடல் ஞாபகம் வந்ததும் தெரிவிக்கிறேன்.

வரிகளை பெரும்பாலும் கவனிக்கக் கூடாது என்று கவனத்துடன் சில பாடல்களை கேட்பேன். ஆனால் சில பத்து முறைகள் கேட்ட பின் தானாகவே மனதில் பதிந்து விடும். அப்படி பதிந்து விட்டால் பாடல்கள் சலிக்க ஆரம்பித்து விடும். இந்தப் பாடலும் சலித்துப் போகும் நாள் வரும். அது மட்டும் தான் ஒரே வருத்தம்.

சில மாதங்களுக்கு என்னுடைய ஒரு பதிவில் கூறியிருந்த கருத்தை மீண்டும் கூற விரும்புகிறேன். விஜய் ஆண்டனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்னுடைய 'Songs\Vijay Antony' ஃபோல்டர் நிரம்பி வழிய வேண்டும் என்பது எனது அவா. அவரின் முதல் படத்தில் (சுக்ரன்) இடம்பெற்றிருந்த, 'உச்சி முதல் பாதம் வரை', 'உன் பார்வையோ தீயானது' பாடல்களை இப்போதும் கேட்பதுண்டு. முக்கியமாக, 'உச்சி முதல் பாதம் வரை' பாடலின் ஆரம்பத்தில் 'கோயோ மாயோ ....' என்ற இடத்தில் நடு நடுவே வரும் குழந்தைகளின் குரலையும், 'இமைகளில் இருக்கிறாய், கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்' ராகத்தையும் விரும்பிக் கேட்பதுண்டு. ஆனால் சமயங்களில் இவரின் பாடல்கள் ஒன்று போல் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. அதில் மட்டும் சிறிது கவனம் செலுத்தினால் + (சில படங்களும் வெற்றியடைந்தால்) இவர் நிச்சயம் தமிழில் கொடி நாட்டலாம்.

படத்தின் பெயர் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். சின்ன பட்ஜெட் படமாக இருப்பதால், கேளிக்கை வரி விலக்கை கருத்தில் கொண்டு படத்தின் பெயர் மாறக்கூடும். வசனத்தை பாடல்களின் ஆரம்பத்திலிருந்து நீக்கியிருக்கலாம் என்று கருதுகிறேன்.

குறிப்பு: சில்லென்று ஒரு காதல் படத்தின் மாதிரி பாடல்களை ராகா.காம் தளத்தில் கேட்டேன். ரகுமான் பாடிய நியூயார்க் நகரம் உறங்கும் வேளையில் பாடல் நன்றாக வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை :