வெள்ளி, அக்டோபர் 28, 2005

இந்திரா வாழ்வில் சுவாரசியமான நிகழ்ச்சிகள் - பாகம் 2

இது போன பாகத்தின் தொடர்ச்சி

1. மே, 1920-ம் ஆண்டு அலகாபாத்தின் கடும் வெயிலினைத் தவிர்க்கும் பொருட்டு, முச்சோரிக்கு நேரு, அவர் தாய், மனைவி, இரு சகோதிரிகள் மற்றுன் இந்திராவுடன் சென்றார். அங்கு ஹோட்டல் சவோவில் தங்கியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் இங்கிலாந்து அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ஆப்கன் மந்திரியும் அதே ஹோட்டலில் தங்க நேர்ந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆங்கிலேய அரசு நேருவினை முச்சோரியை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறவேண்டும் என உத்தரவிட்டது. இதனால் அவர் மட்டும் அங்கிருந்து திரும்ப நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோதிலால் நேரு அவருடைய ஆங்கிலேய நண்பர் சர். பட்லரைத் தொடர்பு கொண்டு அந்த உத்திரவினை ரத்து செய்யச் செய்தார். நேரு திரும்ப அங்கு சென்ற போது, ஆப்கன் அமைச்சர், இந்திராவுடன் விளையாடுவதைக் கண்டார். நேரு வெளியேற்றப்பட்டதை பத்திரிக்கைகள் மூலம் அறிந்தவர்கள், நேரு குடும்பத்தினரை நன்கு உபசரித்து அவர்களைப் பார்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையில் இந்திராவினை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

2. 1943 ல் இந்திராவும், நேருவும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குள் கடிதத் தொடர்பு இருக்கக் கூடாது எனவும் உத்தரவு இருந்தது. அதாவது உத்தரவானது கீழ்கண்டவாறு விதிக்கப்பட்டது. "நீங்கள் உங்களுக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதலாம். ஆனால் நீங்களாக கடிதத் தொடர்பினை ஆரம்பிக்கக் கூடாது". பிறகு எப்படி இருவரும் தொடர்பு கொள்ளமுடியும்?

3. நேரு முதலில் இந்திரா - பெரோஸ் காந்தி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். பின்னர் சமாதானமாகி ஒத்துக் கொண்டார். ஆனால் அந்த சமயத்தில், ஃபெரோஸிற்கு வருமானம் இல்லாதக் காரணத்தினால், திருமணம் முடிந்ததும் நேரு, ஃபெரோஸிற்கு அலகாபாத் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வேலை போட்டுக் கொடுத்தார். மாதச் சம்பளம் 100 ரூபாய். திருமணத்திற்கு நேரு 1000 ரூபாய் ரொக்கமாகவும் பரிசளித்தார். ஆனாலும் இருவருக்கும் அவர்களின் மாத வருமானம் போதாத காரணத்தினால் நேருவிடம் சில நேரம் பணம் வாங்க நேர்ந்தது. நேரு சிறை சென்ற பிறகு இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் "உங்களுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் என்னுடைய கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள தயங்க வேண்டாம். உரிமையுடன் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

4. காந்தி கொல்லப்படுவதற்கு முன்பாக நேருவிற்கு காவலர்கள் என்று யாருமே இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பின் தான், மவுண்ட்பேட்டன் பிரபு நேருவினை Commander-in-Chief கட்டிடத்தில் இருக்குமாறும், சில காவலர்களை வைத்துக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார். இதனை நேரு ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் அவரை சம்மதிக்க வைத்தார்.

5. நேரு பிரதமரானதும், இந்திரா பெரும்பாலும் டெல்லியிலேயே தங்கி விட்டார். இது இந்திராவிற்கும், ஃபெரோஸிற்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. பின்னர் ஃபெரோஸ் ரே பெரேலி தொகுதியில் நின்று பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

6. ஃபெரோஸ் டெல்லி வந்த பிறகு பல பெண்களுடன் வெளிப்படையாக தொடர்பு வைத்திருந்ததும் நேருவையும், இந்திராவையும் வருத்தமடையச் செய்தது.

7. ஆரம்பத்தில் ஃபெரோஸ் பாராளுமன்றத்தில் அமைதியாக இருந்தாலும், பின்னர் காங்கிரஸினை எதிர்ப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார். நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அப்போது முந்தரா என்ற காங்கிரஸ்காரருக்கு எல்.ஐ.சி. பங்குகளை மாற்றிக் கொடுத்த விவகாரத்தில் ஃபெரோஸ் பாராளுமன்றத்தில் காங்கிரஸை கடுமையாக சாடியதின் விளைவாக நேரு விசாரணைக் கமிஷன் அமைத்தார் (Mundhra Scandal). விசாரணையின் முடிவில் டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு இல்லை என்றாலும், நிதியமைச்சரின் கட்டுப்பாடில் இது வருவதால் அவரே இதற்கு பொறுப்பு என தீர்ப்பளித்தது. இதனால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய நேர்ந்தது. மொரார்ஜி தேசாய் அவரிடத்தை நிரப்பினார்.

8. சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் (அல்லது செயலாளர்) பொறுப்பேற்றப் பிறகு, பெரோஸ் இந்திராவை கடுமையாக சாடி வந்தார்.

9. முதல்முறையாக கேரளாவில் காங்கிரஸ் அல்லாத அரசு முதன்முதலில் (கம்யூனிஸ்ட்) E.M.S. நம்பூதிரிபாடி தலைமையில் 1957 ல் ஆட்சி அமைத்தது. இது காங்கிரசுக்கு பலத்த எரிச்சலையூட்டியது. மேலும் இந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு (1959-ல்), கேரளாவிற்கு விஜயம் செய்தார். அப்போது கம்யூனிஸ்ட் அரசும் பல கம்யூனிசக் கொள்கைகளை மக்களின் மீது திணித்திருந்தது. விவசாய நிலங்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கும் திட்டம் (சீனா, ரஷ்யா போல) அதில் முக்கியமானது. இதனால் பலதரப்பினரும் அந்த அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த சமயத்தில் இந்திராவின் விஜயம் முக்கியத்துவம் பெற்றது. பின்னர் மே 1959 ல் நேருவும் கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய அதிருப்தியினை வெளியிட்டார். டெல்லி திரும்பிய சில நாட்களில் கேரள அரசு நீக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஃபெரோஸ் இதற்கு நேருவும், இந்திராவும் தான் காரணம் என கடுமையாக சாடினார். பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கை விரோதக் கட்சியான முஸ்லீம் லீக்குடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

10. 24 ஆகஸ்டு 1963 ல் காமராஜர், "காமராஜ் திட்டம்" என்ற அறிமுகப்படுத்தினார். அதன்படி வயதான மத்திய அமைச்சர்களும், மாநில முதல்மந்திரிகளும் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அது. இது பிரதம மந்திரிக்குப் பொருந்தாது எனவும் அறிவித்தார். அதன்படி காமராஜர், கர்நாடக முதன் மந்திரி நிஜலிங்கப்பார், மேற்கு வங்க முதலமைச்சர் அதுல்யா கோஷ், ஆந்திர முதலமைச்சர் சஞ்சீவ ரெட்டி, பம்பாய் முதலமைச்சர் எஸ். கே. பாட்டில் உட்பட ஆறு முதலமைச்சர்களும், மொரார்ஜி தேசாய், மற்றும் லால் பகதூர் சாஸ்திரியும் ராஜினாமா செய்தனர். இதில் லால் பகதூர் சாஸ்திரி நேருவிற்கு அடுத்து பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகள் இருந்ததால் இது முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் அவர்கள் காங்கிரஸ் சிண்டிகேட்டில் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர்.

11. நேரு இறந்ததும் இந்திரா அவருடைய அஸ்தியினை எடுத்து நேருவின் வேண்டுகோளின் படி இந்திய மாநிலங்கள் முழுவதும் தூவினார். இதில் காஷ்மீர் மாநிலத்தின் மீது ஹெலிகாப்டரில் சென்று தூவினார். அஸ்தியின் ஒரு பகுதியினை அலகாபாத் சங்கம் நதியிலும் கரைத்தார். நேருவின் அஸ்தியுடன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு மறைந்த அவருடைய தாயார் கமலா அஸ்தியையும் கரைத்தார். கமலா சுவிட்சர்லாந்தில் இறந்த பிறகு அங்கிருந்து கமலாவின் அஸ்தியினை இந்தியா கொண்டு வந்து, அவருடனேயே 30 வருடங்கள் வைத்திருந்தார். இது அலகாபாத் ஆனந்த் பவனிலும், பல சிறைச் சாலைகளிலும், பிரதமரானதும் தன்னுடைய யார்க் ரோடு பங்களாவிலும் வைத்திருந்தார்.

12. லால் பகதூர் சாஸ்திரி இறந்ததும், இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது காமராஜரிடம் நீங்கள் பிரதமராக விருப்பம் இல்லையா எனக் கேட்டதற்கு "No Hindi, No English, how?" எனக் கேட்டார். இந்திரா பொறுப்பேற்றதும் டைம் பத்திரிக்கை "Troubled India in a women's Hand" என தலையங்கம் வெளியிட்டது.

13. 1965 ல் இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுபாடு நிலவியது. இந்தப் போரினால் அமெரிக்க அரசும் இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவியினை நிறுத்தியது. இந்திரா அமெரிக்க சென்று, ஜான்சனை சந்தித்து அமெரிக்க அரசின் உதவியையும், பின்னர் உலக வங்கியின் உதவியினையும் நாடினார். உலக வங்கியும், IMF-ம் இந்திய ரூபாயின் மதிப்பினை குறைத்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் 6 ஜூன் 1966 ல் இந்திய ரூபாயின் மதிப்பை 57.5% குறைத்தார். இது சிண்டிகேட்டிடமோ, மற்ற தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் இரவு 11 மணிக்கு அறிவித்தார். இதனால் காமராஜரும் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அரசு தருவதாக சொல்லியிருந்த 3 மில்லியன் டன் உணவும், 9 மில்லியன் டாலர்களையும் தராமல் மிகவும் தாமதப்படுத்தியது.

14. 1966 மாடு வதைத் தடுப்புச் சட்டத்தினை கொண்டு வர வேண்டும் என பல இந்து அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரழக்க நேரிட்டது. இதற்கு பின் இந்திரா முடிவாக சட்டம் கொண்டுவர முடியாது என தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

15. 1968 ம் ஆண்டு ராஜிவ் முதன்முதலாக சோனியா காந்தியை இந்தியாவிற்கு அழைத்த வந்து இந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்திராவிற்கு பிரெஞ்ச் மொழி நன்றாகத் தெரியுமாதலால் அவருடன் பிரெஞ்ச் மொழியிலேயே உரையாடினார். பின்னர் இந்திய கலாச்சாரத்தை நன்கு கற்றுக் கொள்வதற்காக சோனியாவை நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினருடன் இரண்டு மாதங்கள் தங்க வைத்திருந்தார். பின் பிப்ரவரி 25, 1968 ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்தது.

16. இந்திராவுடன் சிறு வயதில் படித்த பரமேஸ்வர் நரேன் ஹஷ்கர் அவருக்கு செயலாளராகப் பொறுப்பேற்றார். 1967 முதல் 1973 வரை இந்திராவிற்கு அடுத்து சக்தி வாய்ந்த புள்ளியாகத் திகழ்ந்தார். அவர் பின் கேபினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இது தான் நமது நாட்டின் IAS பதவியில் உச்ச வரம்புடைய பதவி.

17. 1969 ல் காங்கிரஸ் பிளவுற்று இரண்டாகப் பிரிந்தது. அது இந்திரா பிரிவு முதலில் காங்கிரஸ்(R) Requisitionist எனவும், நிஜலிங்கப்பா (காமராஜர்) பிரிவு காங்கிரஸ் (O) Organization எனவும் அழைக்கப்பட்டது. இதனை மற்றவர்கள் காங்கிரஸ் Ruling எனவும் காங்கிரஸ் Old எனவும் கேலியாக அழைத்து வந்தனர். இந்திரா பிரிவில் 220 உறுப்பினர்கள் இருந்தனர்.

18. பின்னர் 1969 ல் இந்திரா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 220 உறுப்பினர்களே இருந்த காரணத்தினால், இந்திரா CPI உதவியுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்...

போன பகுதியைப் பார்க்க

குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. "Life of Indira" புத்தகத்தில் நான் படித்தது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.



ஸ்ருசல்

வியாழன், அக்டோபர் 27, 2005

சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் சங்கம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. நடுத்தர வர்க்க குடும்பங்களில் பெரும் மாறுதல்கள் இந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. 20-30 வருட சேமிப்பின் வாயிலாகவே வீடு கார், நிலம் வாங்க முடியும், என்ற நிலை போய், 25, 30 வயதிலேயே இதெல்லாம் வாங்குவதற்கு அடிகோலியது இந்தத் துறை. (வெளிநாட்டு வங்கிகளின் சேவையும் முக்கிய காரணம்).

ஆனாலும் இந்தத் துறையில் ஆரம்பத்திலிருந்தே நிச்சயமற்ற தன்மை நிலவி வருவது கண்கூடு. வேலையின் தன்மை, சம்பளம், அளவுக்கு அதிகமான காலி இடங்கள், பணி நீக்கம் போல வேறு எந்த துறையிலும் இந்த 50 ஆண்டுகளில் நாடு கண்டதில்லை. அதிலும் முக்கியமாக 2001 ல் இந்தியாவில் ஏராளமான பென்பொருள் துறை ஊழியர்கள், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2002 ல் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பானது. நிலைமை 2003 இறுதியில் தான் திரும்ப சரியானது.

இந்த நிலையில் சமயத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது "சாப்ட்வேர், பி.பி.ஓ நிறுவன ஊழியர்களுக்கும் மற்ற துறையில் உள்ள ஊழியர்கள் போல வேலை நிறுத்தம், சங்கம் வைத்துக் கொள்தல் போன்ற உரிமைகள் கொடுக்கவேண்டும்" என்பது. அவர்கள் சொல்வது "தகவல் தொழில் நுட்பத்தில் நாட்டில் 500000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சங்கம் வைத்துக் கொள்வது அவர்களது நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைக்கும் (சம்பள விசயத்தில்), வேலை நிறுத்தத்திற்கும் உதவும்". இது அவசியமா என்பது தான் என்னுடைய கேள்வி. நாட்டில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் இன்னும் மக்களைப் பிரிப்பதிலேயே (சேர்பதற்கு எனக் கூறினாலும்) குறியாக உள்ளனர். அவர்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எப்போதும், எதற்காகவும் தங்களது அரசுடனும், பணிபுரியும் நிறுவனங்களுடனும் மல்லுக்கட்டிக் கொண்டு மக்களுக்கு சிரமங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும் என்பது எண்ணமா? மென்பொருள் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் மக்களுக்கு சிரமம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை தான். அதனால் பாதிக்கப்படப்போவது, மென்பொருள் நிறுவனங்களும், அவர்களின் வாடிக்கையாளர்களும். இதனால், அயல்நாட்டு நிறுவனங்கள் பின்வாங்க ஆரம்பிக்கும். வேலை வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும். அவர்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அயல்நாட்டு முதலீடு யாருக்கு வேண்டும் என வாய்கிழிய கூறிவிட்டு, "வாருங்கள் மேற்கு வங்காளத்திற்கு! முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!" என கூவ ஆரம்பித்து விடுவர். வெளிநாட்டு முதலீடு அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று. சமீபத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் அவர்களின் அரசினை(மத்திய அரசினை) எதிர்த்தே போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை நிறுத்தம் செய்யும் போது மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் ,"வேலை நிறுத்தம் செய்யுங்கள் ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யுங்கள்" எனவும் கூறினார். அவர்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது (மத்தியில் மற்றும் மாநிலத்தில்), போராட்டம் நடத்த முடிவெடுத்தது அதே கட்சி. போராட்டம் நடத்தப்படுவது அவர்கள் ஆட்சியை எதிர்த்து; இதில் அதே கட்சித் தலைவரின் அறிவுரை வேறு தொண்டர்களுக்கு! என்னே ஒரு கட்சி! இவர்களுக்கு தங்கள் கொள்கைகள் என்னவென்றே மறந்துபோய், "வேலை நிறுத்தம் செய்வதும், சம்பள பேச்சு வார்த்தை நடத்துவதும், அயல்நாட்டு முதலீடுகளை காரணமின்றி எதிர்பதுமே" கொள்கையாகி விட்டது.

மென்பொருள் துறையில் பிரச்சினை இல்லாத பட்சத்திலேயே, அவர்கள் தீர்வு காண்பதற்கு விழைகிறார்கள். வேலை நிறுத்தம் என்பது கூட ஒரு தீர்வு அல்ல. தீர்வு காண்பதற்கான ஒரு வழி என அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

மா சே துங்கும், தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் போது ('Great Leap Forward') ஆரம்பத்தில் அனைவரையும் அறிவு சார்ந்த துறையைச் சார்ந்தவர்கள் உட்பட, தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் வேலை செய்ய உத்தரவிட்டார். கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பின்பே தன்னுடைய தவறை உணர்ந்து, மீண்டும் அவர்களை தத்தம் துறைகளில் பணியில் அமர்த்தினார்.

ஏகாதிபத்தியம், அடக்குமுறை, அடிமைத்தனம் மிகுந்த துறைகளுக்கு வேண்டுமானால் இந்த உரிமை அவசியமாக இருக்கலாம். இண்டெலக்சுவல்ஸ் எனப்படும் அறிவு சார்ந்த துறைகளுக்கு அவசியமே இல்லை என்பது என்னுடைய கருத்து. அவர்களுக்கும் அரசியல் சாயம் பூசி கோமாளிகள் போல பார்க்க வேண்டும் எனத் துடிக்கின்றனரா?

சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இவர்கள் ஒன்றும் உடல் சார்ந்த வேலை செய்யவில்லையே? ஒரு நாளைக்கு இத்தனைப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது போல. இது அறிவு சார்ந்தது. உடல்பலத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இல்லாததால், சில துறைகளில், பணியாளர்கள் ஒரே மாதிரியான வேலை செய்யலாம்; அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் என்பது சாத்தியபடலாம். அந்த நிறுவனத்தாருக்கும், ஒருவர் பணியில் இருந்து விலகினாலோ, அவருக்கு மாற்று கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விசயமாக இருக்காது.

ஆனால் இங்கு அனுபவமே இல்லாத ஒரு புதிய நபர் கூட சாதனை செய்ய முடியும். வயதோ அல்லது உடல் பலமோ அல்லது அனுபவமோ ஒரு தடையே அல்ல. சம்பளத்திற்கு பேச்சு வார்த்தை என்பது அனைவருக்கும் அவர்களது அனுபவத்தின் அடிப்படையில்சம்பளம் நிர்ணயம் செய்யும் முறையில் கொண்டு செல்லும். அனுபவ அடிப்படை என்றால் என்ன தான் வேலை செய்தாலும், எங்கு சென்றாலும், அதே சம்பளம் தான். இது முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடைக்கல்லே. யாருக்கும் புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி செய்து தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவா அற்று போகும்.

ஏற்கனவே தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளம், Attrition Rate முதலானவற்றால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், அவர்களும் இதை ஏற்றுக் கொள்வதற்கு மகிழ்வுடனே இருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏனென்றால் அனாவசியமான சம்பள உயர்வினைத் தவிர்த்து, வருடத்திற்கு 10% ஊதிய உயர்வு; ஆரம்ப நிலைப் பணியாளர்களுக்கு 10000; 10 வருடங்கள் கழித்து 20000 என சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்யலாம். செலவும் குறைவே. ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக அனுபவ அடிப்படையில் ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டக் காரணத்தினால் தான் 1960 லிருந்து பலர் வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். இப்போது வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக மென்பொருள் துறை நிறுவனங்கள் வந்தபின் தான் இந்த நிலை மாறத் தொடங்கி
வெளிநாடுகளுக்கு நிகரான ஊதியமும், ஓரளவிற்கு நிம்மதியான வாழ்க்கை முறையும் சாத்தியமாகி வருகின்றது. இதனால் மற்ற துறைகளும் இதனைப் பின்பற்றி, Performance Based Appraisal வழியில் ஊதியமும், பதவி உயர்வும் நிர்ணயம் செய்யவும் ஆரம்பத்துள்ளனர். இந்த மாறுதலினால், இப்போது வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் திரும்பி வருகின்றனர் அல்லது திரும்புவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். இது போன்ற உரிமைகளின் பேரில் வழங்கப்படும் ஆயுதமானது, அவர்கள் திரும்ப கூட்டம் கூட்டமாக வெளிநாடுகள் செல்வதற்கே இது வழிவகுக்கும்.

Performance Based Appraisal தான் அனைத்து துறைகளுக்கு சிறந்த முறை. முக்கியமாக, அறிவுசார்ந்த துறைகளில் பணிபுரியும் அரசு நிறுவனங்களுக்கும். உதாரணமாக ISRO, NAL, போன்ற ஆராய்ச்சி துறைகளில் பணிபுரிவோருக்கு. அங்கு ஒத்த வயதுடைய அனைவருமே
ஏதாவது ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் திறமையானது மட்டுப்படுத்தப்படுகின்றது. 10 வருட அனுபவத்திற்குப் பின் அனைவருமே Scientist C வகுப்பிலும், 12000 - 16000 வரை ஊதியமும் பெற்று வருவர். பல அறிவாளிகள் அந்தக் கூட்டத்தில் அடிப்பட்டு புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கலாம். இதனை மாற்றி அதிகபட்ச வளர்ச்சியினைக் காண்பதற்கு Performance Based Appraisal-ம், மென்பொருள் துறையில் உள்ளது போல கருத்தாக்க சுதந்திரமும் (Liberty of expressing Ideas & Concepts) வேண்டும் என்பது என்னுடையக் கருத்து. ஆனால் இது போன்ற துறைகளில் பணிபுரிவோருக்கு சங்கங்கள் வைத்துக் கொள்தல், வேலை நிறுத்தம் போன்ற உரிமைகள் அனாவசியமான சிக்கலுக்கும், பொருளாதார தேக்கத்திற்குமே வழி வகுக்கும்.

மென்பொருள் துறையிலும் சிறிது அடக்குமுறை உள்ளது. துறை நன்றாக செயல்படும் போது தேவையில்லாமல் ஊழியர்களைப் பணியில் சேர்பதும், நிறைய சுதந்திரம் வழங்குவதும், பொருளாதாரம் சிறிது வீழ்ச்சியடைந்தாலும் திடீரென ஊழியர்களை பணியில் இருந்து நிறுத்துவதும், நிறைய கட்டுப்பாடுகள் விதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதே நேரத்தில் ஊழியர்களின் பக்கமும் நிறைய தவறுகள் நடக்கின்றது. (குறைந்த காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டி, அடிக்கடி நிறுவனங்கள் மாறுவது போன்றன. ஆனால் இது வேறு கதை.

ஸ்ருசல்

செவ்வாய், அக்டோபர் 25, 2005

சிக்கன் 65

அயல்நாடுகளில் வசிக்கும் மணமாகாத இந்தியர்களில் பெரும்பாலோனோர் அடிக்கடி McDonalds, KFC, Loteria போன்ற புகழ்பெற்ற சிக்கன் விற்பனை நிலையங்களில் தங்கள் மதியம் மற்றும் இரவு உணவினை சுலபமாகவும், சுவைபடவும் முடித்துக் கொள்தல் உண்டு. ஆனால் அங்கு வறுத்து வைக்கப்பட்டிருக்கும் கோழிகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன எனத் தெரிய வந்தால் நிறைய பேர் அதனை உண்பதையே நிறுத்தி விடுவர் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

சமீபத்தில் எனக்கு ஒரு சலனப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த சலனப் படம் கே.எஃப்.சி எவ்வாறு கோழிகளைக் கொல்கின்றது என்பதனைப் பற்றியது. ஒவ்வொரு வருடமும் சுமார் 750 மில்லியன் கோழிகள் கே.எஃப்.சில் மட்டும் கொல்லப்படுகின்றன என்றவாறு அந்தப் படம் தொடங்குகிறது.

கோழிக் குஞ்சு பொறித்த (இங்குபேட்டர்களில் தான்) சில நாட்களில், அவற்றின் அலகுகள் ஒடிக்கப்படுகின்றன. "கோழிகளின் அலகுகளை ஒடிப்பது, நம் விரல்களில் உள்ள நகங்களை ஒடிப்பதற்கு ஒப்பானதல்ல. நம் விரல்களையே வெட்டுவதற்கு ஒப்பானது" எனக் குறிப்பிடுகின்றார், அந்த செய்தியாளர். அந்தக் காயம் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும். இந்த செயல்முறையில் சில கோழிகள் இறந்து விடுவதும் உண்டு என்கிறார். கோழிகளை விரைவாக வளர்ப்பதற்காக அவற்றுக்கு சரியான உணவும் அழிக்கப்படாமல் விட்டுவிடுகின்றனர். சமச்சீரற்ற உணவினை அழிப்பதால், கோழிகள் விரைவாக வளர்ந்து, அவற்றால் எடையைத் தாங்க முடியாமல் கால்கள் முறிந்து விடுவதும் உண்டு.

பண்ணைகளிலிருந்து, அவற்றை கொல்வதற்கு (slaughterhouse க்கு கொண்டு செல்வதற்கு) வாகனங்களில் ஏற்றுவதோ, கிரிக்கெட்டில் பீல்டிங் செய்பவர் எல்லைக் கோட்டிலிருந்து பந்தை வீசுவது போலத் தான். கோழிகளை அள்ளி, வாகனங்களில் எறிகின்றனர். திரும்ப அவற்றை இறக்கும் போதோ, மணல் வண்டியில் இருந்து மணலை இறக்குவது போல, மொத்தமாகக் கொட்டுகின்றனர்.

இறக்கிய பின், முதலில் கோழிகள் வரிசையாக உள்ள கொக்கிகளில் மாட்டப்படுகின்றன. மொத்தம் ஆயிரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் மாட்டலாம் போலத் தோன்றுகின்றது. அவைகள் வரிசையாக, இயந்திரங்களின் உதவியினால் தலை சீவப்படுகின்றன. அதற்கு முன்பாக கோழிகளுக்கு மின்சார அதிர்ச்சியூட்டப்படுகின்றது. பின்னர், அவை கொதிக்கும் நீரில் வரிசையாக முக்கி எடுக்கப்படுக்கின்றன. (இறகுகளை சுலபமாக நீக்குவதற்காக). அதன் பின்னரும் பல கோழிகளுக்கு உயிர் இருக்கும் என்கிறார்.

இதனைத் தவிர சில ஊழியர்கள், சில நேரங்களில் கோழிகளை எடுத்துக் கொண்டு, சுவற்றில் பலமாக அடிக்கின்றனர். அடித்த பின்பு அவற்றின் மேல் ஏறி மிதிக்கின்றனர். அதற்குப் பின்னரும் அவை உயிருடன் இருக்குமா என்ன?

சில விசயங்கள் நிறுவனத்தின் செயல்முறை என்றாலும் இன்னும் சிலவற்றை அந்த நிறுவன ஊழியர்களே விரும்பிச் செய்வது போல் தெரிகிறது. உதாரணத்திற்கு வாகனங்களில் கோழிகளை ஏற்றுவதும், அவற்றை சுவற்றில் அடிப்பதும். எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? யார் மேல் கோபம்?. பல கோழிகள் இறப்பதைப் பார்த்த பின்னாலும் அவர்கள் மனம் மாறவில்லையா? இல்லை அதனைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு மேலும் கொலை வெறி அதிகரிக்கின்றதா?

இதுவும் ஒரு வகையில் சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல் தான். மனிதன் மற்ற இனங்களை விட பெரியவன், அறிவினால் உயர்ந்தவன், பகுத்தறிவுவாதி என்பதனால் தன்னுடைய சர்வாதிகாரத்தினை மற்ற விலங்கினங்களின் மேல் காட்டுவது மிகவும் வருத்தத்திற்குரியது. மனிதர்களாகிய நமக்கு இந்த உலகில் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு. சமூகத்தில் மிகவும் கொடூரமான குற்றம் புரிந்த மனிதர்களுக்கே மரண தண்டனையை எவ்வாறு வலியில்லாமல் நிறைவேற்றலாம் என யோசிக்கும் நாம், ஒரு குற்றமும் அறியாத அந்த ஜீவராசிகளைக் கொல்வதற்கு எவ்வளவு யோசிக்க வேண்டும்? கொல்லாமல் இருக்க வேண்டாம்; கொல்லும் முறையிலாவது சிறிது பரிவினைக் காட்டலாமே!

சென்ற மாதம் கோன்பனேகா குரோர்பதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. PETA என்ற அமைப்பு எதனைச் சார்ந்தது?. அதற்கான முழுமையான விடை இந்த விசயத்தில் தெரிகிறது. 2003 ல் இருந்து PETA அமைப்பு கே.எஃப்.சியின் இந்த கொடூரமான முறையினை சாடி வருகிறது. பீட்டா அமைப்பு, கோழிகளைக் கொல்லும் முறையில் (வாயு செலுத்தியோ, அல்லது மயக்க நிலையிலோ கொல்லலாம்) மாற்றம் கொண்டு வர வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அந்தப் படத்தினை பார்க்க

மேலும் விவரங்கள் அறிய: பீட்டாவின் வலைத்தளத்திற்கு செல்லுங்கள் (கூகுள் செய்யவும்: PETATV)

குறிப்பு: கே.எஃப்.சி நிறுவனத்தினைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள்
என்னுடைய கருத்துகள் அல்ல. பீட்டா வலைத் தளத்தில் எடுக்கப்பட்டவை. அதன் நம்பகத்தன்மையின்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.


மேலும் நீங்கள் அசைவம் சாப்பிடக்கூடாது எனக் கூறுவதற்கு நான் விழையவில்லை. சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

ஸ்ருசல்

வியாழன், அக்டோபர் 20, 2005

இந்திரா வாழ்வில் சுவாரசியமான நிகழ்ச்சிகள்

சென்ற மாதம் "Life of Indira" என்ற புத்தகத்தை வாங்கினேன். முதல் 200 பக்கங்கள் மிகவும் களைப்படைய வைப்பதாக இருந்தாலும், அடுத்த 200 பக்கதங்களுக்கு மேல் மிக சுவாரசியமாகவே சொல்லி இருந்தார், நூலாசிரியர் ஃபிராங்க்.

அந்தப் புத்தகத்திலிருந்து பல விசயங்கள் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு அதற்கு முன்பு தெரிந்ததெல்லாம், நேரு குடும்பத்தைச் சார்ந்தவர். நெருக்கடி நிலையை அமலாக்கியவர், பொற்கோவில் என்ற அளவில் மட்டுமே. அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வந்தது, Inside an Elusive Mind என்ற புத்தகத்தினைப் படிக்கும் போது தான்.

அந்தப் புத்தகத்தில் இருந்து சில சுவாரசியமான, எனக்கு தெரிந்திராத விசயங்களைக் கீழேக் கொடுத்துள்ளேன். இது நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். அவர் இறக்கும் போது எனக்கு 3 வயது என்பதால் எனக்கு அப்போது அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீங்கள் அப்போதே இதனைப் பற்றி நாளிதழ்களில் படித்திருக்கலாம்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.

1. சஞ்சய் காந்தி, ஏதோ விமான விபத்தில் இறந்தார். அவருடை மனைவி மேனகா என்பது மட்டுமே நான் அறிந்திருந்த ஒன்று. ஆனால், இந்திராவின் வாழ்க்கையில் மற்ற யாருக்குமே இல்லாத ஒரு இடம் இவருக்கு இருந்திருக்கின்றது. ராஜீவினை விட செல்வாக்கு பெற்றவறாகவும், இந்திராவினை விட அதிகாரம் படைத்தவராகவும் இருந்திருக்கின்றார்.

ஒரு நாள் குடும்பத்தினருடனும், இன்ன பிற நண்பர்களுடனும் இந்திரா இரவு உணவு அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சஞ்சய் காந்தி, இந்திராவின் கன்னத்தில் ஆறு முறை அறைந்தாராம். அந்த இடமே நிசப்தமாகி விட்டதாம். யாராலும் ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஆனால் இந்திராவின் குடும்ப நண்பர் இதனைப் பற்றி இவ்வாறாகக் குறிப்பிடுகின்றார். "இது ஒரு வதந்தி.

இந்திராகாந்தியை கடவுள் கூட அடிக்க முடியாது"

2. இந்திராகாந்தி நெருக்கடி நிலைக்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஆட்சியை இழந்தார். அது வரை அவர், அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வீடான 1, சாப்ராங் ரோட்டில் வசித்து வந்தார். ஆனால் அந்த வீடு மொரார்ஜி தேசாய் பிரதமரானதும், மொரார்ஜிக்குக் கொடுக்கப்பட்டது. இந்திரா குடிபோவதற்கு எந்த வீடும் இல்லாத நிலையில், இந்திராவின் அவருடைய நண்பர் அவருடைய பங்களாவினை காலி செய்து அவருக்குக் கொடுத்தார். நேருவின் ஆனந்த பவன் வீடு நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது, நேரு வாழ்ந்து வந்த டீன் மூர்த்தி வீடும், நேரு மியுசியமாக மாற்றப்பட்டது.

3. நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதால் அனைத்துப் பத்திரிக்கைகளும் அரசினால் தணிக்கை செய்யப்பட்டது எல்லாருக்கும் தெரியும். அப்போது வி.சி.சுக்லா தகவல மற்றும் செய்தித் துறை அமைச்சராக இருந்தார். சஞ்சய் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் பத்திரிக்கைகளிலும், வானொலியிலும் இடம் பெற்றன. 1976 ஆம் ஆண்டின், ஜனவரி மாதத்தின் முதல் இரு வாரங்களில் மட்டும் சஞ்சய் பற்றி 176 புல்லட்டின்கள் ஆல் இந்தியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது.

4. இந்திரா நெருக்கடி நிலையினை ஒட்டி, 20 திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அதனை விட சஞ்சய் அறிவித்த 5 திட்டங்கள் தான் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை, வரதட்சணை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, நகரங்களை அழகாக்கும் திட்டம், குடும்பக் கட்டுபாடு திட்டம், இன்னொன்று எனக்கு மறந்து விட்டது.

5. பல ஆங்கில பத்திரிக்கைகள், அரசுக்கு ஆதரவு நிலை எடுக்க, இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் அரசினை சாடி வந்திருக்கின்றது. த டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிக்கை, த டைம்ஸ் ஆப் இந்திரா என சிலரால் கேலி செய்யப்பட்டது.

6. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் சஞ்சயினை பேட்டி எடுத்து தனது வார இதழில் (பெயர் மறந்து விட்டது) வெளியிட்டார். அது பின்வருமாறு.

சிங்: நீங்கள் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். உங்கள் தாத்தா நேருவுடன் உங்களுக்கு எந்த மாதிரி பழக்கம்?
சஞ்சய்: எல்லா பேரன்களுக்கும் தாத்தாவிற்கும் உள்ள உறவினைப் போன்றது தான்.

சிங்: நீங்கள் தாத்தாவின் புத்தகங்களிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டது?
சஞ்சய்: பெரியதாக ஒன்றும் இல்லை.

சிங்: உங்கள் தந்தை ஃபெரோஸ் பற்றி?
சஞ்சய்: எல்லா மகன்களுக்கும், தந்தைக்குள்ள உறவு தான்.

சிங்: உங்களுக்கு புத்தகளில் எந்த மாதிரி புத்தகங்கள் பிடிக்கும்? வரலாறு, பொருளாதாரம், வாழ்க்கை வரலாறு, ...?
சஞ்சய்: நான் அவ்வளவாக புத்தகம் படிப்பதில்லை.

சிங்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர ஏதும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
சஞ்சய்: எனக்கு அரசியலமைப்புச் சட்டம் அவ்வளவாகத் தெரியாது.

7. இந்திரா தேர்தலில் தோற்றது, ராஜீவ் காந்தி மிகவும் ஆத்திரப்பட்டு, "அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய சஞ்சயை சும்மா விட மாட்டேன்" என அவரது நண்பரிடம் கூறியுள்ளார்.

8. காமராஜரை நம்ப வேண்டாம் என நேருவிடம் இந்திரா அடிக்கடி கூறியுள்ளார்.

9. இந்திரா நிக்சனை சந்திக்க அமெரிக்கா சென்ற போது, முதல் நாள் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட கோபத்தினால், இரண்டாம் நாள் பேச்சு வார்த்தைக்கு வந்த இந்திராவை கிட்டத்தட்ட அரை நாள் காத்திருக்க வைத்திருக்கிறார், நிக்சன்.

சஞ்சய் ஆரம்பத்தில் குறைந்த விலையில் இந்தியர்களுக்கு கார் கொடுப்பதாக மாருதி என்னும் நிறுவனத்தினை தொடங்கி பல காலம் முயன்றுள்ளார். அது தான் இப்போதுள்ள மாருதி நிறுவனமா எனத் தெரிந்தவர்கள் கூறவும்.

இவை தான் என் நினைவில் உள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.

ஸ்ருசல்

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.

புதன், அக்டோபர் 19, 2005

மின்சாரக் கம்பியில் இணையத் தொடர்பு

தற்போது, இணையத்தில் உங்கள் கணினியை இணைக்க நீங்கள் ஒன்று டயல் அப் அல்லது ப்ராட்பேண்ட் உபயோகப்படுத்துவீர்கள். துரித இணைப்பிற்காக, பல தொலை தொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள சாலைகளில் ஃபைபர் கேபிள்களை பதித்து வருகின்றனர். இது மிகுந்த செலவிழுப்பதாகவும், மக்களுக்கு பெருத்த சிக்கலாகவும் உள்ளது. நகரங்களுக்கே இந்த நிலை என்றால், இன்னும் கிராமங்களுக்குச் செல்லும் போது எவ்வளவு சிரமமாக இருக்குமோ?

உங்கள் வீட்டிற்கு உள்ள மின்சார இணைப்பிலேயே இணையத் தொடர்பும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அது தான் இன்னும் சிறிது ஆண்டுகளில் நடக்கப் போகின்றது. இந்தியாவிலா என்று கேட்காதீர்கள், எனக்குத் தெரியாது. செட்டாப் பாக்ஸ் இந்தியாவில படும்பாடு உங்களுக்குத் தான் தெரியுமே?. இனி மேல் இணையத்தில் தொடர்பினைப் பெற டெலிபோன் வயரினையோ, ப்ராட்பேண்ட் வயரினையோ நீங்கள் இணைக்க வேண்டாம். உங்கள் கணினியையோ, அல்லது மடிக்கணினியையோ மின்சுற்றில் இணைத்தால் போதுமானது. மேலும் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சுற்றிலும் உங்கள் கணினியை இணைத்து இணையத்தில் நுழையலாம்.

இந்த தொழில்நுட்பத்திற்கு PLC (Powe Line Communication) எனப் பெயர். இதனை BPL (Broadband over Power Line) எனவும் அழைக்கலாம். இதில் கடந்த 10 ஆண்டுகளாக சில அயல்நாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இப்போது சோதனை முறையிலும் சில நாடுகளில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே ஆரம்ப நிலையில், தானியங்கி மின்சார வினியோகத்திற்கும், தானியங்கி மீட்டர் கணக்கீட்டிற்கும் (Meter Reading) உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதாவது மின்சார நிறுவன ஊழியர்கள், அவர்களின் அலுவலகத்திலிருந்தே நீங்கள் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என அறிந்து கொள்ள முடியும்.

அது இப்போது மேம்படுத்தப்பட்டு, உங்கள் வீட்டினை இணைக்கும் மின்சார கம்பிகளே இணையத் தகவல்களைச் சுமந்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ப்ராட்பேண்ட் அளவிற்கு வேகமாக இல்லாவிட்டாலும், ADSL அளவிற்கு வேகமாக இருக்கும். உதாரணத்திற்கு சொல்வதென்றால் 200 Mbps.

எப்படி உங்கள் கணினியை இணைப்பது?

இது ஒரு பெரிய விசயம் அல்ல. PLC மோடத்தினை மின்சுற்றின் ஒரு பகுதியிலும் மறுமுனையினை உங்கள் கணினியின் USB Slot அல்லது Ethernet Slot - ல் இணைத்தால் போதுமானது.

அல்லது இப்போதுள்ள Bluetooth அல்லது Wireless LAN மூலமாக மோடத்திற்கும் (Modem), உங்கள் கணினிக்கும் கம்பியில்லா இணைப்பினையும் பெறலாம்

மேலும் சிலருக்கு வரம்பில்லாத இணைப்பு இருக்காது. மாதத்திற்கு இவ்வளவு என கணக்கிடுவார்கள். அந்த வகையில் பார்த்தால், அதனையும் இனி சுலபமாகக் கணக்கிடமுடியும்.

தடையில்லா இணைப்பும் இதன் மூலம் சாத்தியம். ஆனால், மின்சாரத்தினையே இன்னும் தடையில்லாமல் நம்மால் பெற முடியவில்லை. கோடை காலங்களில் கேட்கவே வேண்டாம்.

பலருக்கும் Home Networking பற்றித் தெரியும் என நினைக்கிறேன். அதாவது, உங்கள் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை இணைத்து ஒரு தொடர்பினை கணினி மூலம் ஏற்படுத்தி அந்தப் பொருட்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் கட்டுப்படுத்தமுடியும். உதாரணத்திற்கு, அலுவலகத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பாகவே சமையலைத் தொடங்க நினைத்தால், நீங்கள் அதை செய்யலாம்.அதற்கு இணையத் தொடர்புடன் வீட்டில் ஒரு கணினியும், அந்தக் கணினியில் ஒரு அனைத்து சாதனங்களும் இணைக்கப்பட வேண்டும். மின்சாரம் மூலமாகவே இணைப்புக் கிடைப்பதால் மிகச் சுலபமாகவே இதனை செய்யமுடியும். தீயணைப்பு நிலையங்கள், சுலபமாக அனைத்து வீடுகளையும் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகின்றேன். அது எவ்வளவு தூரம் சாத்தியம் எனத் தெரியாது.

இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், சக்தி இழப்பும், குறுக்கீடுகளும் தான். தகவல்கள் இழப்பிற்கு சாத்தியம் சிறிது அதிகமே.

ஆனால் இந்தத் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டால் இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு: நான் தமிழ்மணத்தில் கடந்த ஒரு மாதகாலமாகவே உறுப்பினராக உள்ளேன். ஏற்கனவே யாராவது இதைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தால், மன்னிக்கவும்.

திங்கள், அக்டோபர் 17, 2005

வேற்றுக்கிரகத்தில் உயிரினமா? - பாகம் 1

சுத்திகரிப்பு ஆலைகளில் உபயோகப்படுத்தப்படும் கொதிகலன்களைப் போல இரும்பிலான சுவர்களைக் கொண்ட பெரிய கோட்டை. அங்கு தான் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கழிக்க வேண்டும். வாழ்க்கை எப்படி இருக்கும்?

மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இன்னும் பல கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் திண்டாடிவருகின்றான். அவற்றில் முக்கியமானது இந்த பிரபஞ்சத்தின் அமைப்பு. எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க முடியும்? இன்னும் அது விரிவரைடைகின்றதா? எப்போது சுருங்க ஆரம்பிக்கும்? விரிவடைய எந்த ஒரு பொருளுக்குமே அதனைச் சுற்றி இடம் வேண்டும்.

நீங்கள் ஒரு பலூனை ஊதுகின்றீர்கள். அது விரிவடைகின்றது. அதற்கு எங்கிருந்து விரிவடைய இடம் கிடைக்கின்றது?. நீங்கள் இருக்கும் அறை, தெரு, மைதானம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் அறை என எடுத்துக் கொள்வோம். அப்படியானால் அந்த அறையைச் சுற்றிலும் ஒரு இடம் இருக்க வேண்டும். இந்த இடத்தைச் சுற்றி இன்னொரு இடம் இருக்க வேண்டும் அப்படியே அது போய் கொண்டே இருக்கும். அதே போல் தான் பிரபஞ்சத்திற்கும் விரிவடைய இடம் வேண்டும். அப்படியே பிரபஞ்சம் விரிவடைய இடம் இருக்கின்றதென்றால், அந்த புதிய இடத்தினை எவ்வாறு அழைப்பது. இதனை அறிவியலால் இன்னும் விளக்க முடியவில்லை.

பல அறிவியலார்கள் இந்த அண்டமானது, ஒரு புள்ளியில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஒன்றுமில்லாத ஒன்று (?), ஒரு துகளாகவும் (Particle), எதிர் துகளாகவும் (Anti-Particle) பிரிந்து அந்த பிரிந்த துகளும் இருபடியாக்கல் முறையினால் பலமுறை பிரிவடைந்து இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படியே பார்த்தாலும் அந்த துகள்கள் உலாவுவதற்கு பரப்பு எங்கிருந்து வந்திருக்க வேண்டும். சரி ஒரு புள்ளி வைக்கவேண்டும் என்றால் கூட ஒரு தாளாவது வேண்டும். அந்த தாளினை வைக்க ஒரு மேஜை வேண்டும். அந்த மேஜையை வைக்க ஒரு வீடு வேண்டும். வீட்டிற்கு ஒரு தெரு வேண்டும். தெருவிற்கு ......????

இந்த பூகோளமானது, சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். சூரிய குடும்பம் மற்றும் இன்ன பிற கோடிக்கணக்கான கிரகங்களும் இணைந்து ஒரு பால்வழித்திரளை உண்டாக்குகின்றன. இந்த அண்டமானது, இது போன்ற கோடிக்கணக்கான பால்வழித்திரளை உள்ளடக்கியது. சரி இந்த ஒரு பெரிய பரப்பில், நாம் மட்டும் தான் இருக்கின்றோமா அல்லது வேறு கிரகத்திலும் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கின்றோம் என்றால், இவ்வளவு பெரிய பெரிய கிரகங்கள் அனைத்தும் வீணா? பூமியில் மட்டும் உயிரினம் தோன்ற காரணம் என்ன?

வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா என்பதற்கு பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் கீழ்கண்ட முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

1. விண்கலத்தில் பூமி பற்றியத் தகவல்களைப் பதிந்து வேற்ற்கு கிரகங்களுக்கு அனுப்புதல்
2. பூமியில் இருந்து வேற்று கிரகங்களுக்கு ரேடியோ அலைகளை அனுப்புதல்
3. வானில் இருந்து வரும் சமிகஞைகளை அலசுதல்

விண்கலத்தில் பூமி பற்றியத் தகவல்களைப் பதிந்து வேற்ற்கு கிரகங்களுக்கு அனுப்புதல்


பயோனிர்-10 விண்கலம் 1972 லும் பயோனிர்-11 விண்கலம் 1973 லும் விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றின் நோக்கம் சூரிய குடும்பத்தின் அமைப்பினைப் பற்றி அறிவது தான். இப்போது இந்த இரண்டுமே கிட்டத்தட்ட 8 பில்லியன் மைல்கள் பயணம் செய்து சூரிய குடும்பத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கின்றன. இதில் பயோனிர்-11, சமிக்ஞைகளை அனுப்புவதில்லை. பயோனிர்-10, கடைசியாக சென்ற ஜனவரி மாதம் பூமியைத் தொடர்பு கொண்டது. சமிக்ஞைகள் பூமியை அடைய கிட்டத்தட்ட அரை நாளாகும். அது வினாடிக்கு 12 கிலோமீட்டர்கள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பூமிக்கும், விண்கலத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிக மிக அதிகமாகி விட்டதால், அந்த சமிக்ஞைகள் பூமிக்கு கிடைப்பதற்கு முன்பாக வலிமை குன்றி விடுகின்றன.

அந்த விண்கலங்கள் எங்கே சென்று சேரும் எனத் தெரியாது. ஒரு வேளை அந்த விண்கலங்கள் ஏதாவது ஒரு கிரகத்தினை அடைந்து, அந்தக் கிரகத்தில் உயிரினம் இருந்து விட்டால், அவனுக்கு (அல்லது அதற்கு) எப்படி நம்மைப் பற்றித் தெரிவிப்பது? அதற்கு தான் அந்த இரண்டு விண்கலங்களிலும் பூமியைப் பற்றிய தகவல்களை ஒரு தகட்டில் படம் வரைந்து (பிரபஞ்ச மொழி) அனுப்பியுள்ளனர். ஒரு வேளை அந்த தகடு அவனுக்கு கிடைத்து, அவனுக்கும் ஓரளவிற்கு வானவியல் பற்றித் தெரிந்திருந்தால், அவன் பூமியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த கிரகத்தில் உள்ள உயிரினங்கள் ஒரு வேளை, நம்மை விட பல கோடி ஆண்டுகள் பின்னடைந்து இருந்தால் அதனால் ஒரு உபயோகமும் இல்லை.

அந்தத் தகட்டில் ஆண், மற்றும் பெண்ணின் உருவமும், சூரிய குடும்பத்தின் எந்த பகுதியிலிருந்து இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது என்பதற்காக சூரிய குடும்பத்தின் அமைப்பும் வரையப்பட்டுள்ளது.



இந்த யோசனையைத் தெரிவித்தவர்களில் கார்ல் சாகனும் ஒருவர். இவர் ஒரு புகழ்பெற்ற வானவியல் அறிஞர். இவரின் பல புத்தகங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றில் முக்கியமானது Cosmos, Billions and Billions, மற்றும் பல. இதில் Contact என்ற நாவலும் அடக்கம். இது திரைப்படமாகவும் வந்துள்ளது.

இதே போல 1976 ம் ஆண்டு அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலத்திலும் ஒரு தங்கத்திலான CD அனுப்பப்பட்டது. அதிலும் இதே போன்ற ஒரு படம் வரையப்பட்டது. அந்த CD யில் பூமியில் உள்ள பல உயிரினங்களின் சத்தமும், 55 மொழிகளும் (தெலுங்கு, கன்னடா உண்டு. தமிழ் இல்லை), சில பாடல்களும் (ஒரு இந்திய ராகமும்; சுரஸ்ரீ கேசரிபாய் கெர்கரால் பாடப்பட்டது) பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.



ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் அவர்களுக்கு அந்தத் தட்டை பயன்படுத்தத் தெரியுமா என்று?

2. பூமியில் இருந்து வேற்று கிரகங்களுக்கு ரேடியோ அலைகளை அனுப்புதல்

எப்படி பூமி பற்றிய தகவல்களை தகட்டில் பதிந்து அனுப்பினோமோ, அதே போல (ஆனால் விண்கலத்தில் அனுப்பாமல்) வானவெளியில் ரேடியோ அலைகளின் மூலமாக தகவல்களை அனுப்புவது தான் இந்த முறை. பூமியில் நாம் சமிக்ஞைகளை பல செயற்கைகோள்கள், விமானங்கள், இன்ன பிற விண்கலங்களிடமிருந்து பெற்று, அதனை அலசி நமக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதைப் போல வேற்றுக் கிரகவாசிகளும் தகவல்களைப் பெற பெரிய பெரிய ஆண்டினாக்களை உபயோகப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முறை கையாளப்பட்டுள்ளது.

ரேடியோ அலைகள் சக்திவாய்ந்தது மற்றும் எல்லையற்றது. அது சக்தியிருக்கும் வரை (வீச்சினை, வலிமையினை இழக்கும் வரை) பயணம் செய்து கொண்டே இருக்கும். நாம் இப்போது பார்க்கும் பல நட்சத்திரங்கள் பல ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தள்ளி இருந்தாலும் நம்மால் பார்க்க முடிவதற்குக் காரணம், அந்த நட்சத்திரங்கள் வெளிப்படுத்துகின்ற ஒளி அலைகள் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு இங்கு வந்து சேரமுடிவதால் தான். நீங்கள் பார்க்கும் இந்த நிமிடத்தில், அந்த நட்சத்திரங்கள் அழிந்தே போயிருக்கலாம். ஆனாலும் இப்போதும் இருப்பது போன்ற ஒரு தோற்றம் நமக்கு. காரணம், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கிருந்து அந்த அலைகள் பயணம் செய்வதற்கு ஆன கால அளவு தான்.

சரியான வீச்சில் ரேடியோ அலைகளை செலுத்தினால் அவை நீண்ட தூரம் பிரயாணம் செய்து கொள்ளும் திறன் வாய்ந்தவை. அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த முறை பயன்படுத்தப்பட்டது. கிரேட் கிளஸ்டர் என்பது 3,00.000 நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பு. இது ஹெர்குலிஸில், நமது பால்வழித்திரளிலிருந்து சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அந்த கூட்டத்தில் உயிரனம் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இங்கிருந்து அனுப்பும் எந்த ஒரு செய்தியும் (ரேடியோ அலை) அந்தக் கூட்டத்தினை அடைய 25000 ஆண்டுகள் ஆகும். அது சென்று சேர்வதற்கு முன்பு அந்த கூட்டமே இல்லாமல் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது அல்லது அங்கிருந்து நகர்ந்தும் போயிருக்கலாம். நாம் இப்போது காணும் அந்த நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றமே சுமார் 25000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. அதாவது 25000 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை பார்ப்பது போலத் தான். சரி எப்படி இங்கிருந்து அனுப்பினார்கள்?. என்ன அனுப்பினார்கள்?

அரிசிபோ என்ற ட்ரான்ஸ்மிட்டர் மூலமாக 1974 ஆம் ஆண்டு, 2380 MHz அலைவரிசையில் அந்தக் கூட்டத்தினை நோக்கி சக்திவாய்ந்த ரேடியோ அலைகள் மூன்று நிமிடங்களுக்கு அனுப்பப்பட்டன. 25000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அலைகள் அங்கு சென்று சேர்ந்து, அந்த நட்சத்திரங்களும் அங்கேயே இருந்து, உயிரனங்களும் அங்கிருந்தாலும் அவர்கள் பெரிய ராடார்களைக் கொண்டு வரும் செய்திக்காகக் காத்திருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அந்த செய்தி என்னவென்றும் அறியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 25000 ஆண்டுகள் அந்த அலைகள் பயணம் செய்தாலும் அவை சிறிதும் பொலிவிலக்கா வண்ணம், சக்தி வாய்ந்த ட்ரான்ஸ்மிட்டர்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.

சரி நாம் அனுப்பிய அந்த செய்தியில் என்ன இருந்தது?

அந்த மூன்று நிமிடங்களில், 1679 எழுத்துக்கள் கொண்ட ஒரு படமானது (பைட்டுகள்) திரும்பத் திரும்ப அனுப்பப்பட்டது. வரிசையாக 0 வையும், 1 யையும் கொண்டு அடுக்கப்பட்ட எழுத்துக்களாக கோர்க்கப்பட்டது.

ஏன் 1679?

படத்தினை வரிசையான எழுத்துக்களாக அனுப்புவதால், அது ஒரு படம் என்பதனை உணர்த்துவதற்காகத் தான். 1679 என்பது ஒரு பகா எண் (i.e. Prime Number). அதனை 23ம், 79 மட்டுமே வகுக்க முடியும். வேறு எந்த எண்ணும் அதனை வகுக்க முடியாது. ஆதலால் அவன் இந்த 1679 எழுத்துக்களை பெற்று, 23 க்கு 79 அல்லது 79க்கு 23 என அடுக்கும் போது ஒரு சரியான படமும், ஒரு ஒழுங்கற்ற படமும் கிடைக்கும். அவனுக்கு எண் வரிசை தெரிந்து, பகு எண், பகா எண் கருவும் தெரியும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. (வாய்ப்புகள் மிக மிக குறைவே)

நாம் அனுப்பியது 23 க்கு 79. அந்த படமானது இதோ.



இது கீழ்கண்ட செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

மனிதனின் உருவம்
பூமியில் உள்ள தனிமங்களின் வரிசை (ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்,
சூரிய மண்டலம்
டி.என்.ஏ அமைப்பு
எண் வரிசை
அரிசிபோ தொலைநோக்கியின் அமைப்பு

3. வானில் இருந்து வரும் சமிகஞைகளை அலசுதல்

இதைத் தான் இப்போது முழுநேரப் பணியாக பல பல்கழைக்கழகங்களில் செய்து வருகின்றனர்.

இதனை அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். (உங்களுக்குப் பிடித்திருந்தால் கூறுங்கள் அடுத்த பாகத்தில் தொடருகிறேன்)

ஸ்ருசல்

சனி, அக்டோபர் 15, 2005

சாம்சங் கட்டுகிறது 1290 கோடி அபராதம்! இங்கே நிலைமை?

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சிப் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவன்ம். 1999-2002 ஆண்டுகளில் அது பிற சிப் தயாரிக்கும் நிறுவனங்களான ஹைனிக்ஸ், இன்ஃபினியான் மற்றும் மைக்ரான் உடன் சேர்ந்து சில்லுகளின் (டிஜிட்டல் மேமராக்கள், பிரிண்டர்கள், மொபைல் போன்களில் உபயோகப்படுத்தப்படும் சில்லுகள்) சந்தை விலையை நிர்ணயம் செய்தாகக் குற்றம் சாட்டப்பட்டது. இப்போது குற்றம் நிரூபணமாகி, சாம்சங் நிறுவனம் சுமார் ரூபாய் 1290 கோடி (300 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்) அபராதமாகக் கட்ட வேண்டும் என அமெரிக்க நீதித் துறை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்காக, அந்த நிறுவனங்களளிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், அவர்கள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டன. வழக்கு 2002 இறுதியில் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.

மற்ற நிறுவனங்களான ஹைனிக்ஸ் 180 மில்லியன் அமெரிக்கன் டாலர்களும், இன்ஃபினியான் 160 மில்லியன் அமெரிக்கன் டாலர்களும் அபராதமாகக் கட்ட வேண்டும் என அமெரிக்க நீதித் துறை தீர்ப்பு வழங்கியது. அவை ஏற்கனவே அபராதத் தொகையைக் கட்டியுள்ளன. மைக்ரான், குற்றத்தை ஒப்புக் கொண்டு, விசாரணைக்கு ஒத்துழைத்ததால், அதற்கு அபராத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் டெல் 2001 ஆம் ஆண்டே சில சில்லு தயாரிக்கும் நிறுவனங்கள் ஏகாதிபத்திய முறையில் செயல்பட்டு வருவதாக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அது இப்போது நிரூபணமாகி உள்ளது.

இந்தியாவிலும் அதே ஏகாதிபத்திய நிலைமை தான். இதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய பதிவில் எழுதியுள்ளேன். தனியார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் புகுந்து விளையாடுகின்றன. பெரும்பாலான விசயங்கள் கண்டு கொள்ளாமல் விடப்படுகின்றன.

இப்போது சில பெரிய நிறுவனங்கள் அரசிடம் இருந்தே ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் அளவிற்கு தேறி விட்டன. காரணம், புதிய நிறுவனங்கள் துவக்குவதற்கான அனுமதிக் கட்டணத்தை அரசு குறைத்தது தான். கட்டணத்தைக் குறைப்பதும், உயர்த்துவதும் அந்த நிறுவனங்களை எந்த விதத்தில் பாதிக்கின்றது?. அவர்கள் அதிகமாகக் கட்டி உரிமம் பெற்றார்கள் என்பதற்காக மற்றவர்களும் கட்ட வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானக் கட்டணமாக நான் 8000 ரூபாய் கொடுத்ததனால், இப்போது செல்பவர்களும் அதே தொகையைக் கட்ட வேண்டும் எனக் கூறுவது முட்டாள் தனமானது. வேண்டுமானால், அவர்களும் காத்திருந்து உரிமம் பெற்றிருக்கலாம்.

ஸ்ருசல்

வெள்ளி, அக்டோபர் 14, 2005

புலம்பெயர்தலால் ஏற்படும் இழப்புகள்

புலம்பெயர்தல் ஆக்கிரமிப்பின் முதல் படி. படையெடுப்புகளின் வழிகாட்டி. புலம்பெயர்தல் (அல்லது வலசை), ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, இம்மூன்றும் இந்த உலக மக்களை ஒரு விதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதித்து வருகின்றன.

புலம்பெயர்தல், இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. இது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ அல்லது ஒரு ஊரிலிரிந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது) நிகழ்ந்து வரும் ஒன்றாகும். இதனால் மனிதன் பெற்றது ஏராளம்; அதே நேரத்தில் இழந்தது ஏராளம். பல பிரிவுகள் புதிதாகத் தோன்றியுள்ளன; ஏராளமான இனங்கள் அழிந்துள்ளன. அழிக்கப்பட்ட இனங்கள்
மனிதன் மட்டுமே அல்ல. உலகமே காடாக; மனிதனும் விலங்குகளுடன் விலங்காக இருந்த சமயத்தில் "இப்போதைய" விலங்குகளுடன் சண்டையிட்டு அவற்றை வெற்றிகரமாக அதனுடைய பகுதியிலிருந்து விரட்டி அடித்துள்ளான். இப்போதும் காடுகளில் வெட்டப்படும் ஒவ்வொரு மரமும், கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ஏதோ ஒரு இனத்தினை அழிக்க போடும் அடிக்கல்லே!

புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உள்ளன.

1. பொருளாதார ஆதாரமின்மை
2. இயற்கை சீற்றங்கள் அல்லது இயற்கை வளமின்மை (விவசாயம், நீர் ஆதாரங்கள்)
3. அரசியல் காரணங்கள் (குறிப்பிட்ட மதம், சாதி, இன மக்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்)
4. படையெடுப்பு
5. இன்னொரு நாட்டின் மேல் சொந்த விருப்பு. (இப்போது இருப்பது போல; எல்லோரும் வெளிநாடு செல்வதனால், தானும் செல்ல வேண்டும் என்ற வேட்கை. இதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்)

ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தான் தமிழன், அதிகமாக, பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வருகிறான். புலம்பெயர்தல் இந்தக் காலத்தில் சாதாரணமாகி விட்டாலும், இதனால் பிற்காலத்தில் இழக்கப் போவதைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். இப்போதே நமக்கு தெரியாத பலவற்றை இழந்து விட்டு தான் வெற்றிகரமாக, தமிழினமாக இங்கே வாழ்ந்து வருகிறோம். ஆனால், இந்த நிலையை அடைவதற்கு முன்பு நாம் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதற்கு வரலாற்றுப்பதிவு கிடையாது. நாம் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு மொழி பேசி வந்திருக்கலாம். (தற்சமயத்திற்கு கல்தோன்றா முன் தோன்றா.. என்பதனை மறந்து விடுங்கள்) அங்கிருந்து இங்கே வந்து பலவற்றை இழந்து இத்தகைய வாழ்வைப் பெற்றிருக்கலாம் (வாழ்வு என்பது நம்முடைய மொழியாக, கலாச்சாரமாக, செய்யும் தொழிலாக இருக்கலாம்). இவற்றில் முதல் இரண்டைத் தான் இவ்வுலகில் எல்லோரும் கட்டிக் காக்க விரும்புவது. இரண்டிலுமே மொழிக்குத் தான் முதல் உரிமை. வெகு அரிதாகவே பரம்பரைத் தொழிலைக் காக்க சிலர் முயல்வதும் உண்டு. அது தவறு எனக் கூற வரவில்லை. மற்ற பழக்க வழக்கங்ளான கோபம், ஆத்திரம், வெறி, சிரிப்பு, ... எல்லாம் பரிணாம வளர்ச்சியினால் (பரிணாம வளர்ச்சி என்பது சரியா தவறா எனத் தெரியவில்லை) பெற்றுக் கொள்ளும் மனிதன் முதலில் வாழ்வில் கற்றுக் கொள்வது ஒரு மொழியாக இருப்பதனால்அந்த ஆர்வத்திற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் தான் அதனை உயிர் உள்ளவரை மறக்காமல் காக்க விரும்புகின்றான்.

சரி ஒருவன் (ஒருவன் தான், ஆயிரக்கணக்கானோர் அல்ல) வேறு ஒரு நாட்டிற்குப் புலம்பெயர்கிறான் (உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து ஸ்பெயின் என வைத்துக் கொள்வோம். அவனுக்கு ஆரம்பத்தில் இந்த மூன்றுமே (மொழி, கலாச்சாரம், தொழில்) முக்கியமாகப் படலாம். ஆனால் தொழிலை சில ஆண்டுகளில் இழக்க வேண்டியதிருக்கும். கலாச்சாரம் அவன் உயிருடன் இருக்கும் வரை வாழ்ந்திருக்கும். மொழியினை அவன் அரும்பாடுபட்டு தன்னுடைய மகனுக்கோ / மகளுக்கோ கற்றுக் கொடுக்கலாம. ஆனாலும் அந்த மொழியையும் அவன் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்தத் தலைமுறையிலோ இழக்க வேண்டியதிருக்கும். இது நிச்சயம்.

கலாச்சாரமும், மொழியும் காக்கப்படவேண்டுமானால், புலம்பெயர்தல் கூட்டமாக நடக்க வேண்டும். அப்போதும் கூட கலாச்சாரமும், மொழியும் ஓரளவிற்குத் தான் காக்கப்படும். கலாச்சாரம் சில பத்தாண்டுகள் நிலைத்திருக்கலாம். மொழி வாழ்ந்திருக்கும் ஆனால் பேச்சளவில் மட்டுமே. அரிதாகவே எழுத்தளவிலும் இருந்து மொழி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது புலம்பெயர்ந்த நாடும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்த நாடாக இருந்து, அந்த நாட்டு மக்களும் புலம்பெயர்ந்தவர்களுடைய மொழி, கலாச்சாரத்தை ஓரளவிற்காவது போற்றுபவர்களாக இருக்க வேண்டும் (இதற்கு வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளைக் குறிப்பிடலாம்). அல்லது புலம்பெயர்ந்த மக்கள் ஒடுக்கப்பட்டு, எழுச்சியடைந்திருக்க வேண்டும்.

இழந்தவர்களுக்கு உதாரணமாக தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்களைக் குறிப்பிடலாம் (இது எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படவில்லை). அவர்கள் எப்போது இங்கு புலம்பெயர்ந்தார்கள் என எனக்குத் தெரியாது. ஏதாவது வரலாற்று குறிப்புகள் இருக்கலாம். கலாச்சார அளவில் தமிழர்களுக்கும் அவர்களுக்கும் அதிக வேறுபாடு கிடையாததால், அதில் எந்த சிக்கலும் இல்லை. தொழில் வேறு வேறு தொழில்கள் தான் புரிகின்றனர் (ஏன் இந்த உலகத்தில் அனைவருமே; இப்போது தொழில் இன / மொழி அடிப்படையில் அல்ல). ஆனால் மொழியில் பேச்சளவில் மட்டுமே இருக்கின்றனர். பெரும்பாலோனோருக்கு தெலுங்கில் எழுதுதவோ, படிக்கவோ இயலாது. ஆந்திராவில் உள்ளவர்களிடமே அவர்களால் சரளமாகப் பேச முடியாது. இது தான் புலம்பெயர்தலுக்கு அவர்கள் கொடுத்த விலை. பேச்சளவிலாவது இருக்கக் காரணமே, அவர்களின் கணிசமான எண்ணிக்கை. அவர்கள் அதை மறந்தாலும் மற்றவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது தான். ஏன்? தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள், தெலுங்கு திரைபடங்களையே பார்ப்பதில்லை என நினைக்கிறேன். இப்போது இருப்பவர்களும் இதை ஒரு இழப்பாகக் கருதுவது கிடையாது. காரணம், தலைமுறை இடைவெளி. ஆரம்பத்தில் புலம்பெயர்கின்றவர்களுக்கு இருக்கின்ற வேட்கை அடுத்து வருபவர்களுக்கு அவ்வளவாக இருப்பதில்லை.

இன்று சிங்கப்பூரிலும், இலங்கையிலும், இன்ன பிற நாடுகளிலும் தமிழர்கள் எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளார்களாயானால் அதற்குக் காரணம் அவர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கு அந்தந்த சமயங்களில் கிடைத்த சுதந்திரமும் தான். அந்த சுதந்திரத்திற்குத் தடை வரும்போது, அது வேட்கையாக மாறி இன்னும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது.

இன்னொரு உதாரணம் பெங்களூர். இங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் எத்தனை பேர் தமிழைக் கற்றுக்கொள்கிறார்கள் எனக் கேட்டால் மிக மிகக் குறைவே. இங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும். அவர்கள் தமிழ் பேசலாம் (வீட்டில் அல்லது உறவினர்களிடம் மட்டும்); திரைப்படங்கள் பார்க்கலாம். பாடல்கள் கேட்கலாம். ஆனால் எழுதவோ, படிக்கவோ தெரியாது. அவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை போலும். ஒருவேளை, அதிகமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அவசியம் எனக் கருதி தெளிவடைவார்கள் என நினைக்கிறேன். இதே நிலை நீடித்தால், அடுத்த தலைமுறையினர், சுத்த கர்நாடக மக்களாக மாறி, தமிழகத்திற்கு எதிரான நிலையைக் கூட எடுப்பார்கள். (எனக்கே பலரைத் தெரியும்) இது தவறு எனக் கூறவில்லை. இதுவும் ஒரு வாழ்வியல் கோட்பாடு தான்.

இதே நிலைமை தான் மும்பை, டெல்லி முதலான நகரங்களில் வாழும் தமிழர்களுக்கு.

நானே கூட வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தமிழ் மொழியின் சுவையயும், தமிழ் கலாச்சாரத்தின் அருமையை என் புதல்வர்களுகம் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பி அவர்களை தமிழ் புத்தகங்ளை எப்பாடு பட்டாவது படிக்கச் சொல்லலாம். தமிழைப் பயிற்றுவிக்க, தனியாக சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பலாம்.

ஆனால், அவர்களின் அடுத்த தலைமுறை அதே உணர்வுடன் இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே.

சரி மொழி, கலாச்சாரத்தோடு இந்த சிக்கல் முடிந்ததா என்றால் இல்லை. இதனைத் தவிர முக்கியமான ஒன்று அந்த மண்ணின் மைந்தர்களின் (அல்லது நீண்டகாலமாக அங்கே வாழ்பவர்கள்) காழ்ப்புணர்ச்சி. எப்போதுமே, புலம்பெயர்ந்த மக்களுக்கு, அந்த நாட்டு (மாநிலம், எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்) மக்களை விட முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அதனால், அவர்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயரும். இது 10 ஆண்டுகளில் நிகழலாம். அல்லது 50 ஆண்டுகளிலும் நிகழலாம். ஆரம்பத்தில் இது ஒரு பெரிய விசயமாக அந்த மண்ணின் மைந்தர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்களுக்கு இது போன்று குறைந்த ஆண்டுகளில் வளமையடைந்த சமுதாயத்தைப் பார்க்கும் போது அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி அதிகரிக்கும். அந்த காழ்ப்புணர்ச்சி பல்வேறு வடிவங்களில் வெளிவரலாம். அது அவர்கள் வாழும் இடத்தையும், அங்குள்ள மக்களின் மனநிலையையும் பொறுத்தது. இப்போதுள்ள நிலையே எப்போதும் தொடர்ந்தால் நல்லதே. ஆனால் வாழ்க்கை நிலையற்றது. கடந்த 40 வருடங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் பெரிய அளவில் ஏதும் நிகழாமலிருந்திருக்கலாம். ஆனால் 40 வருடங்கள் என்பது குறைந்த கால அளவு. மனிதனின் வாழ்வே நமக்கு குறிப்புகளினால் 2500 ஆண்டுளாகத்தான் அறிய முடிகிறது. பூமி தோன்றி 2 கோடி வருடங்களுக்கும் மேலாகி விட்டது. 2500 ஆண்டுகள் என்பது அதில் சிறிய பங்கு. இனிமேலும் ஒரு கலவரம் நிகழ வாய்ப்பில்லை; அனைவரும் ஓரளவிற்கு கல்வியறிவு பெற்றுவிட்டனர் என நினைத்திருந்தேன். ஆனால் குஜராத்திற்கு பின் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டாதாகி விட்டது. கலவரங்கள் உடனே தொலைதொடர்பு வசதியினால் வெளிஉலகத்திற்கு தெரிந்து விடும். ஆனால் அதனைக் கண்டிப்பதற்கு வெளிஉலகம் தயாராக இருக்க வேண்டும். அல்லது அதனைக் அக்கறையுடன் கேட்கும் நிலையிலாவது இருக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் புலம்பெயரும் மக்களுக்கு ஒரு வித பய உணர்வு கட்டாயாகமாக இருக்கும். ஆண்டுகள் செல்ல செல்ல அவர்களும் புதிய சமுதாயத்துடன் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிம்மதியான வாழ்வைப் பெறலாம். அல்லது சுத்தமா ஒதுக்கப்படலாம்.

சில நேரங்களில் சென்ற மண்ணிற்கே உரிமை கொண்டாடுவதும் நிகழும். அது புலம்பெயர்தலின் அடுத்த நிலையான ஆக்கிரமிப்பு. எப்போதும் புலம்பெயர்வதால் மூன்று விதமான விளைவுகள் ஏற்படும். புலம்பெயரும் மக்கள் அந்த மண்ணினை ஆக்கிரமிக்கலாம். அல்லது அங்குள்ள பெரும்பான்மையானவர்களால் அடக்கப்படலாம். அல்லது சேர்ந்து வாழலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த மண் யாருக்குமே சொந்தமில்லை. உங்கள் நாடு, மாநிலம், ஊர், மொழி என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே உங்களுடையதாக இருந்திருக்காது. வேறு யாருக்காவது சொந்தமாக இருந்திருக்கும். அனைவருமே தக்கன தப்பிப்பிழைத்தல் (Survival of the fittest) என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றோம்.

நானே (என் முன்னோர்கள்) கூட எங்கிருந்தோ வந்து என்னுடைய அடையாளத்தை இழந்து தமிழ் மொழியைக் கற்று, தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆதலால், மக்களே உங்கள் சொந்த நாட்டிற்கு அல்லது ஊருக்குத் திரும்புங்கள்; உங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பேணிக் காப்பாற்றுங்கள்; ஒரு பள்ளியைத் துவக்கி உங்கள் வருங்கால சந்ததியினருக்கு தமிழைக் கற்பியுங்கள்; உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்; என என்னால் எந்த அறிவுரையும் கூற முடியாது. அது அவரவரின் விருப்பத்தைப் பொருத்தது. நான் தமிழ் மொழியையும்,
கலாச்சாரத்தையும் நேசிப்பவன். நான் என்னுடைய வருங்கால சந்ததியினரும் அதனையே பேணிக் காக்க வேண்டும் என விருப்பப்படுகின்றேன். தமிழ் மொழி மற்றும் மக்களின் அருமையையும், அவசியத்தினையும் ஓரளவிற்கு அறிந்தவன். ஆனால் அதற்காக எந்த பிரிவினையிலும் ஈடுபடமாட்டேன். நீங்களும் நேசித்தால், நல்லது. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

ஆனால் இந்த புலம்பெயர்வால், உலகத்தின் பெரும்பாலான உயிரனங்களை அழித்து விட்டோம் என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால். மனிதனின் இந்த அபாரத் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதனுக்கே சாவு மணி அடிக்கப் போகின்றது. ஒரு வேளை மனித இனமே அழிந்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவக்கினால் நன்றாக இருக்குமோ? இந்த பூமியைக் காக்க!

இந்தக் பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

ஸ்ருசல்

புதன், அக்டோபர் 12, 2005

பகாஎண்.ச

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்குபவர்கள் பேசுவதைக் கேட்கும் போது, எனக்கு ஒரு கேள்வி மனதில் எழும். எல்லாமே என்றால், மருந்துகள், உபகரணங்கள், கணினி கூடவா அவ்வாறு இருக்க முடியும்?.

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் யூசர் இண்டர்பேசை தமிழ்படுத்தி வருகின்றோம். உதாரணம், தமிழில் லைனக்ஸ். நம்மால் இப்போது சில தமிழ் எழுத்துருக்களின் உதவியினால் சரளமாக தமிழில் மின்னஞ்சல், கட்டுரைகள் எழுத முடிகிறது. யுனிக்கோடு இருப்பதால் சுலபமாக அதனை மற்ற தமிழன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் இன்னமும் பல விசயங்கள் தமிழ்படுத்தப்படாமல் தான் இருக்கின்றன். உதாரணத்திற்கு கணினி செயல்திட்டம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தப் பயன்படும் மொழிகள். கொரியா மற்றும் சீன வாடிக்கையாளர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது இதனைக் கவனித்துள்ளேன். அவர்களின் கணினியில் அனைத்துமே அவர்களின் மொழியில் தான் இருக்கும். அவர்களின் ஆவணங்கள் உட்பட. புரோகிராம்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துவர். அப்போது தான் ஆங்கில எழுத்துக்களை திரையில் காண முடியும்.

புரோகிராம்களையும் தமிழ்படுத்தப்படவேண்டும் என்பது என் கருத்து கிடையாது. அவற்றை அவ்வாறே விட்டுவிடுதல் தான் எல்லோருக்கும் நலம். இல்லை என்றால்

நாம் எழுதும் செயல்திட்டத்தை உலகம் முழுவதும் பகிர முடியாமல் போய்விடும். (ஓபன் சோர்ஸ்)

நம்முடைய வாடிக்கையாளருக்கு (அவர் தமிழ் தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில்) நம் செயல்திட்டத்தின் கட்டமைப்பு புரியாது.

அது மட்டுமல்லாமல், தமிழில் திரட்டுகள் (Compiler-ன் தமிழாக்கம் சரியா?) எழுதுவது அவ்வளவு எளிதன்று.

ஆனாலும் நகைச்சுவைக்காக, ஒரு C ப்ரொக்ராமை, தமிழில் மொழிபெயர்த்தால் எவ்வாறு இருக்கும் என முயற்சித்ததன் விளைவு தான் இந்த செயல்திட்டம். இதன் ஆங்கில வழி செயல்திட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஒரு சிறிய புரோகிராமை எடுத்து 30 நிமிடங்களில் கட்டுரையை முடிக்க வேண்டும் என நினைத்து கல்லூரிகளில் (இப்போது பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்ற) பயின்ற ஒன்றை (Prime Numbers) தேர்ந்தெடுத்துள்ளேன். இதற்கு C திரட்டினை உபயோகப்படுத்தியுள்ளேன்.

படித்துவிட்டு யாரும் என்னை அடிக்க வராதீர்கள். இது விளையாட்டிற்காகவே.

பகாஎண்.ச
-------------

#இணை <உள்வெளீயீடு.த>
#இணை <எழுத்துதொகுப்பு.த>

ஆம்இல்லை பகாஎண்ணா (முழுஎண் பரிஎண்);

முழுஎண் ஆரம்பம் (
                                    முழுஎண் மொத்தஉள்ளீடுகள்,
                                    மாறிலி எழுத்து* உள்ளீடுகள் [])
{
            முழுஎண் வஎண்;

            இயக்கு (வஎண் = 3; வஎண் < 1000; வஎண் ++)
            {
                        சரியாயின் (பகாஎண்ணா (வஎண்) == சரி)
                        {
                        அச்சிடு ("\அ %ன ஒரு பகாஎண்", வஎண்);
                        }
                        இல்லையெனில்
                        {
                        அச்சிடு ("\அ %ன ஒரு பகுஎண்", வஎண்);
                        }
            }

            மீள் 0;
}


ஆம்இல்லை பகாஎண்ணா (முழுஎண் பரிஎண்)
{
            முழுஎண் வஎண்;

            இயக்கு(வஎண்=2; வஎண் < பரிஎண்/2; வஎண்++)
            {
                        சரியாயின் ((பரிஎண் % வஎண்) == 0)
                        {
                                    மீள் இல்லை;
                        }
            }

            மீள் ஆம்;
}

நினைத்துப் பாருங்கள் எவ்வளவு கடினம் என்று. ஆனால் ஜெர்மானியர்கள் இவ்வாறு தங்கள் மொழியிலேயே எழுதுவதாகக் கேள்வி. தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்.

ஸ்ருசல்

செவ்வாய், அக்டோபர் 11, 2005

சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள்

இந்த இரண்டு மாதங்களில் நான் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல்களின் பட்டியல்.

1. From the heavens up above - படம்: Warriors of Heaven and Earth - பாடியவர்: சுனிதா சாரதி - இசை: ஏ.ஆர்.ரகுமான்

Warriors of Heaven and Earth எப்போதோ வந்தது தான். அப்போதும் சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் போன வாரம் தான் இசைத் தட்டு கிடைத்தது (Movie Sound Tracks). சொல்லத் தேவையில்லை. ரகுமானின் இசை மிக அருமை. சுனிதா சாரதியின் குரலும் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது இந்த ஆங்கிலப் பாடலுக்கு. இதன் ஹிந்தி பதிப்பும் உள்ளது. அதனை சாதனா சர்கம் பாடியுள்ளார்.

இதே தொகுப்பில் உள்ள மற்ற இசைத் திரட்டுகளும் அருமை. முக்கியமாக முதலாவது ஒன்று.

2. மேற்கே மேற்கே - படம்: கண்ட நாள் முதல் - பாடியவர்: சங்கர் மகா தேவன், சாதனா சர்கம் - இசை: யுவன் சங்கர் ராஜா

ஒரு வித்தியாசமான பாடல். சங்கர் மகா தேவன் பாராட்டப்பட வேண்டியவர். ஆரம்பத்தில் வரும் "லைல லைலா" என ஆரம்பித்து "மேற்கே மேற்கே" என செல்வது அருமை. இந்தப் பாடலின் சரணம், காதல் கொண்டேன் படப் பாடலின் சாயலைக் கொண்டுள்ளது,

3. சுட்டும் விழிச் சுடரே - படம்: கஜினி - பாடியவர்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ - இசை: ஹாரிஸ்

ஹாரிஸின் படங்களில் ஒரு பாடலாவது இந்த ரகத்தில் உண்டு. மிக அருமையான மெல்லிசை. வழக்கம் போல பாம்பே ஜெயஸ்ரீ தன்னுடைய குரலால் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பாம்பே ஜெயஸ்ரீ அறிமுகமானது ரகுமானின் இசையில் தான் என்றாலும் அவர் பெரும் புகழ் பெற்றது ஹாரிஸின் இசையில் தான். (வசீகரா, முதற் கனவே, கலாபக் காதலா, உயிரே என் உயிரே, இந்தப் பாடல்)

ஹாரிஸ், ஆஸிட் டூல்களைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். அவருடைய பாடல்களில் பெரும்பாலும் இது தான் ஆக்கிரமிக்கிறது.இதற்கெல்லாம் முன்னோடி ரகுமான். அவருடைய முதல் பாடலில் இருந்து இன்று வரை அதைத் திறம்பட பயன்படுத்தி வருகிறார். அந்தக் காலத்தில் இளையராஜாவின் தபேலா ஒரே சீரில் பாடல் முழுவதும் வருவது போல்.

4. ஒரு மாலை இளவெயில் நேரம் - படம்: கஜினி பாடியவர்: கார்த்திக் - இசை: ஹாரிஸ்

இந்தப் பாடல் முதலில் மிகவும் பிடிக்கவில்லை. படம் பார்த்து வந்த பிறகு மிகவும் பிடித்து விட்டது. நன்றாக படமாக்கியிருந்தார்கள். இந்தப் படத்தில் வரும் ரங்கோலா பாடலும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக சுஜாதாவின் குரல். பல்லவி முடிந்ததும் வரும் "தரிக்கான் ங் ஆ ங் ஆ" கேட்க இனிமையாக இருந்தது :)

5. Choreography (Vaneasa Mae) - ராகா டான்ஸ் - இசை: ஏ.ஆர்.ரகுமான்

இதனைப் பற்றி ஏற்கனவே என்னுடைய பதிப்பில் எழுதியிருக்கிறேன். வயலின் இசையை பிரதானமாகக் கொண்ட இது ஒரு அருமையான பாடல்.

6. மண்ணிலே மண்ணிலே - படம்: மழை - பாடியவர்கள்: SPB. சரண், சுமங்கலி - இசை: தேவி ஸ்ரீபிரசாத்

SPB சரண் (அவரின் தயாரிப்பு) நல்ல பாடலைத் தான் தெரிவு செய்திருக்கிறார்). யாரென்று தெரியவில்லை இந்த சுமங்கலி. பாடலின் வரிகளும் நன்று.

உதாரணமாக

"இத்தனை மழையிலும் இந்த நாணம் நனையவில்லை?"

"கன்னி நான் நனையலாம். கற்பு நனைவதில்லை"

பாடல் சில இடங்களில் கேட்பதற்கு, சிட்டிசன் படத்தில் வந்த "சிக்கி முக்கி கல்லு" பாடலைப் போல இருக்கின்றது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ரகுமான் வந்து சிறப்பித்திருந்தார்.

7. நல்ல வாழ்வு - படம்: சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - இசை: இளையராஜா

நல்ல மெல்லிசைப் பாடல்.

8. கஜூராகோ - படம்: ஒரு நாள் ஒரு கனவு - பாடியவர்கள்: ஹரிஹரன் - இசை: இளையராஜா

நல்ல பாடலே; ஆனாலும் இது கண்ணுக்குள் நிலவில் வரும் ரோஜா பூந்தோட்டம் பாடலை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் சரணத்திற்கு முன் வரும் வயலின் இசை அருமை.

9. யாரிடமும் தோன்றவில்லை - படம்: தொட்டி ஜெயா - பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம், ஹரிணி இசை: ஹாரிஸ்

இந்தப் படத்தின் சிறந்த பாடல். ரமேஷ் விநாயகம் ஒரு இசை அமைப்பாளர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் (அழகியத் தீயே, நளதமயந்தி). அழகியத் தீயே-ல் அவர் பாடியிருந்த "விழிகனருகினில் வானம்", நளதயந்தியில் பாடியிருந்த "என்ன இது" பாடலும் நல்ல பாடல்கள். மற்றுமொரு சிறப்பு ஹரிணி பாடியிருப்பது. ஆரம்பத்தில் இருந்து எனக்கு விருப்பமான பாடகர். (சுஜாதவும் தான்)

10. உயிரே என் உயிரே - படம்: தொட்டி ஜெயா - பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, அனுராதா ஸ்ரீராம் - இசை: ஹாரிஸ்

மற்றுமொரு பாடல் தொட்டி ஜெயா படத்திலிருந்து; பாம்பே ஜெயஸ்ரீ பாடலின் பாதியில் தான் பாட ஆரம்பிப்பார். அவர் ஆரம்பிக்கும் அந்த முறை மிக அருமையாக இருக்கும். அனுராதா ஸ்ரீராம் ஏன் எனக்குப் புரியவில்லை. படத்தைப் பார்த்தால் ஒரு வேளை புரிய வரும் என நினைக்கிறேன்.

ஹாரிஸின் பாடல்கள் சிறப்பாக வந்தாலும் அவருடைய தீம் பாடல்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக ஒரு உணர்வு எனக்கு. அன்னியன், தொட்டி ஜெயா, கஜினி. கஜினி படம் முழுவதும் அந்த இசை இடம்பெற்று மிகவும் சோதித்தது. அவர் வேறுமாதிரியாக முயற்சித்தால் நன்றாக இருக்கும். ஒரு வேளை இயக்குநர்களின் விருப்பமாக இருக்கலாம்.

11. அன்பே ஆருயிரே - படம்: அன்பே ஆருயிரே - பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான் - இசை: ஏ.ஆர்.ரகுமான்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரகுமானின் படம் தமிழில். அவர் பாடிய பாடலும் இதுவே. நல்ல பாடல். படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே ஓரளவு நல்ல பாடல்களே. ஆனால் எடுத்த விதம் சரியில்லை என்பது கருத்து.

12. முதல் முதல் உன்னை - படம்: பிரியசகி - பாடியவர்: சித்ரா - இசை: பரத்வாஜ்

கேட்பவரே உருகும் விதத்தில் சித்ரா பாடி இருக்கிறார். இனிமையான பாடல்.

13. சமர்பணம் உனக்காகத் தான் - தொகுப்பு: அம்மா - பாடியவர்: கங்கை அமரன் - இசை கங்கை அமரன்

நான் சிறு வயதாக இருக்கும் போது, தினமும் காலையில் விஜய் தொலைக்காட்சியில் (அப்போது பெயர் வேறு என்று நினைக்கிறேன்) வரும் அம்மா நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரும் "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" என்ற பாடலை விரும்பிப் பார்ப்பேன். நான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னால் அந்த வயதில் வித்தியாசப்படுத்த முடியவில்லை. ஆனால் பாடியது கங்கை அமரன். நீண்ட நாட்களாக முயற்சித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்த இசைத் தட்டு கிடைத்தது. அந்தப் பாடலும் அருமை. அந்தத் தொகுப்பிலிருந்த இந்த "சமர்பணம் உனக்காகத் தான்" என்ற பாடல் மிகவும் பிடித்து விட்டது. தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் முன்பு இந்தப் பாடலைக் கூடுமான வரைக்கும் கேட்டு விட்டு தான் வருகிறேன். மனதிற்கு இதமாக இருக்கின்றது.

எது இங்கு நடந்தாலும்,
எவர் எமை புகழ்ந்தாலும்
வருவது நின்றாலும்,
நின்றது வந்தாலும்

எது வந்த போதும்
இன்பம் துன்பம் யாவுமே
சமர்பணம் உனக்காகத் தான்
என் தாயே இங்கே
சகலமும் உனக்காகத் தான்

நல்ல வரிகள். உள்ளம் உருக வைக்கும் ராகம்.

ஸ்ருசல்.

ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 2

முதல் நாள் வேலை செய்தக் களைப்பு இருந்தாலும், காலை 8.30 க்கு மைதானம் வர வேண்டி இருந்தது. விழா அமைப்பினர் கொடுத்த டி-சர்ட்டை அணிந்து கொண்டு பேலஸ் கிரவுண்ட்ஸ் சென்றேன். காலையிலேயே நல்ல வெயில்.

மைதானத்தைச் சுற்றி பெரிய பெரிய பேனர்கள் கட்டும் பணி. வேலை முடிவதற்கு நண்பகல் 12 மணி ஆனது. வெயில் உச்சத்தில் இருந்தது.

எனக்கும் மற்ற ஏழு நண்பர்களுக்கும், விழா முடிந்ததும் இசைக் கருவிகளை எடுத்து வைக்கும் பொறுப்பு. மகிழ்ச்சியுடன், மேடையின் அருகிலேயே காத்திருந்தோம். நிகழ்ச்சி நடக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என விவரிக்கப்பட்டோம். அதாவது டான்சர்கள் மறைந்திருக்கும் பெரிய மேஜைகளைத் தூக்கும் வேலை, டான்சர்களை, மேடைக்கு அழைத்துச் செல்பதும் எங்களின் பணிகளில் ஒன்று.

3 மணிக்கு பாடகர் நரேஸ் ஐயருடன் பேசிக் கொண்டிருந்தோம். 3.30 க்கு பாடகர் பிளாசே எங்கள் குழுவினரை படம் எடுத்தார். ரகுமானின் Poverty Theme என்ற பாடலுக்காக.

நானும் நண்பர்களும் மேடையின் பின்புறம். மற்ற நண்பர்கள் நுழைவுச் சீட்டு விற்பனையில்; நுழைவு வாயிலில் சீட்டினை பரிசோதித்து ரசிகர்களை உள்ளே அனுப்பும் பணி.

மாலை, 4 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வந்தார். நேராக மேடைக்குச் சென்று ரிகர்சல் ஆரம்பித்தார். ஒரு மணி நேரம், சித்ரா, ஹரிஹரன், மதுஸ்ரீ முதலானோர் பாடி முடித்தவுடன், தன்னுடைய அறைக்கு சென்றார்.

5 மணி அளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். மெதுவாக கூட்டம் வர ஆரம்பித்தது. 5.30 மணி. ஆனால் திடீரென்று மழையும் ஆரம்பித்தது. மழையை எதிர்பார்த்தோ என்னவோ மக்கள் குடையுடன் வந்திருந்தனர்; மழை விட்டுவிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எல்லோரையும் ஏமாற்றும் விதமாக மழைக் கொட்டொ கொட்டென்று கொட்டியது. விறு விறுவென சென்று அனைத்து இசைக் கருவிகளையும் பாலீத்தீன் கவர் (தமிழ் வார்த்தை?) கொண்டு மூடினோம். நேரம் செல்லச் செல்ல, மழையின் தாக்கம் அதிகரித்தது.

மேடைக்கு மேலே முன்பிருந்த, புரஜக்டர் கருவிகள் நனைய ஆரம்பித்ததால், ஏற்கனவே மேடைக்கு மேலே போடப்பட்டிருந்த ஒரு பெரிய பாலீத்தீன் துணியை எடுத்து பிடிக்க ஆரம்பித்தோம். காற்றும் உரக்க வீசி ஆரம்பித்ததால், மூன்று பேர் சேர்ந்து பிடித்தோம். அரை மணி நேரம். வலி தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் காற்றின் வீச்சு மிக அதிகமாகவே அந்தத் துணியை அறுத்து விட்டோம். எனக்கு நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.

பின் மேடைக்கு பக்கவாட்டில் கீழே நின்று கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். மக்கள் அனைவரும் கலையாமல் மைதான ஓரங்களில் நின்று கொண்டும், பிளாஸ்டிக் இருக்கைகளைக் கொண்டும் சமாளித்துக் கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மேடையின் பின்புறம் வைத்திருந்த ஒரு பெரிய திரையினை மாட்டியிருந்த இரும்புக் கம்பிகளைக் கொண்ட பெரிய அடுக்கு மேடையை நோக்கிச் சாய ஆரம்பித்தது. அதைப் பார்த்து, கதி கலங்கி உரக்க கத்த ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அது சாயாமல் அது பாதியிலேயே நின்று விட்டது. இல்லையென்றால் அது கீழே விழுந்தது மட்டுமல்லாமல் மேடையிலிருந்த நூற்றுக்கணக்கான பெரிய பெரிய விளக்குகளும், மின்சாரக் கம்பிகளும் மேடையின் மீதிருந்த இசைக் கலைஞர்கள் மீது விழுந்திருக்கும். அடுத்த விநாடியே எல்லோரையும் மேடையை விட்டு வெளியேறச் செய்தோம்.

பெரிய கயிறுகளைக் கொண்டு, அந்த இரும்புத் திரையின் மீதேறி கட்டி, அதன் பின்னால் இருந்து 10 பேர் பிடிக்க ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அனைத்து இசைக் கருவிகளையும் கீழே இறக்கினார்கள், கலைஞர்கள் (சிவமணியின் கருவிகள் தவிர). அவர் மட்டுமே சுமார் ஐம்பது கருவிகள் வைத்திருந்தார். மக்கள் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஏன் மக்களை இன்னும் காத்திருக்க வைத்திருக்கிறார்கள் என எண்ண ஆரம்பித்தேன். அப்படி ஒரு மழை, காற்றை சமீபத்தில் பார்த்ததில்லை. ஒரு வேளை திறந்த வெளி மைதானத்தில் இருந்ததால் நான் அவ்வாறு எண்ணியிருக்கலாம்.

கீழே, நாங்கள் இருந்த இடத்திலேயே ஸ்ரீதர் அவர்களும் வந்தார். அவருடன் பேச ஆரம்பித்தேன். அவரும் அதே கருத்தையே சொன்னார்.

"இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்க வாய்ப்பே இல்லை. ஏன் இன்னும் மக்களை காத்திருக்கச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. ரகுமானை விட்டு மக்களிடம் பேசச் சொல்லி, ரத்து செய்வது தான் ஒரே வழி", என்றார். எனக்கும் அது தான் சரியெனப் பட்டது. எப்போது விழும் என சொல்ல முடியாத பெரிய இரும்பு அடுக்கு; அதனை நம்பிக்கையின்றி பின்புறம் பிடித்திருக்கும் 10 பேர், ஏற்கனவே விழுந்த பெரிய பெரிய அலங்கார வளையங்கள் (கோன் போல மேடையில் மாட்டப்பட்டிருந்தன), விழா அமைப்பினரை நிகழ்ச்சியை ரத்து செய்யச் சொல்லும் காவல்துறையினர், உடைந்த 3D விளக்குகள், மேடையின் பக்கவாட்டில் அடிக்கும் சாரல், விடாத காற்று மற்றும் மழை இவற்றைப் பார்த்த போது அவர் சொல்வது சரி தான் எனப் பட்டது.

ஆனால் எனக்குள் எழுந்தக் கேள்வி, விழா நாளையாவது நடக்குமா? அப்படியே நடந்தால் நாளையாவது மழை பெய்யாமல் இருக்குமா? அய்யோ அவர் நடத்தி, நான் பார்க்கும் முதல் நிகழ்ச்சி இப்படி ஆகி விட்டதே, ஒரு வார உழைப்பும் (Promotional Act), இரண்டு நாட்கள் மைதானத்தில் உழைப்பு, மற்றும் இரண்டு மாதங்கள் எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகின்றதே என்ற வருத்தம்.

மணி 8.00 ஆகி விட்டது. காற்று குறைந்திருந்தது. ஆனால் லேசாக மழை அடித்தது.

திடீரென மேடைக்கு வந்தார் ஏ.ஆர்.ரகுமான். நான் மேடையின் பின்புறம் நின்றிருந்தால் என்னால் பார்க்க முடியவில்லை. ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். விழா ரத்து அறிவிப்பு என நினைத்திருந்தேன்.

மைக்கைப் பிடித்த அவர், "இன்னும் உங்களுக்கு நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறாதா" எனக் கேட்டார்.

Yes.. என எல்லோரும் ஓசை எழுப்பினர்.

"இன்னும் ஒரு மணி நேரம் கொடுங்கள். அனைத்தையும் சரி செய்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் அறைக்குச் சென்று விட்டார்.

எங்கள் அனைவருக்கும் ஆச்சயம். ஸ்ரீதருக்கும் தான்.

சிவமணி வந்தார். சில நிமிடங்கள் வாசித்து, மக்களை சாந்தப்படுத்தினார்.

8.30 க்கு கைலாஸ் கீர் வந்து ஒரு பாடல் பாடினார்.

மீண்டும் அனைத்து வாத்தியங்களையும் மேடைக்கு கொண்டு வர ஆரம்பித்தனர். எல்லாரும் ஆவலுடன் காத்திருக்க, சரியாக ஒன்பது மணிக்கு, ஃபனா என மேடையில் ரகுமான் தோன்ற, ஒரே ஆரவாரம். மனிதர் மிக உற்சாகமாக; சரிந்த மேடையில்; சிறிதும் பயமில்லாமல், மக்களை சந்தோசப்படுத்தும் ஒரே நோக்கில்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மூன்றே மூன்று தமிழ் பாடல்கள் என நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தனர். எனக்கோ சிறிது வருத்தம், ஆனால் நிகழ்ச்சியில் பத்து தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. மொத்தம் 28 பாடல்கள். ஒரு கன்னடப் பாடல் (கண்ணாளனே-யின் கன்னட டப்பிங்).

மேடையின் பின்புறம் ஆவலுடன் காத்திருந்தோம். மேடை சரிந்ததில், நடனம் ரத்து செய்யப் பட்டதால் மேடையின் முன்புறம் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டோம்.

பாடல்கள் வரிசை:

1. பனா- யுவா - ஏ.ஆர்.ஆர்
2. டெலிபோன் மணிபோல் - ஹரிஹரன், சாதனா
3. O Hum Dum - சங்கர் மகாதேவன், Blaaze, George Peters
4. மங்கள மங்கள - கைலாஸ் கீர்
5. மெஹந்தி ஹய் - அல்கா யக்னிக்
6. Sakhi Aayo re - சுக்விந்தர், சாதனா
7. Hum Hain Is Pal - மதுஸ்ரீ
8. Roja Jaaneman - ஹரிஹரன், சாதனா
9. சந்தனத் தென்றலை - சங்கர் மகாதேவன்
10. சினேகிதனே - சாதனா, நரேஸ் ஐயர்,
11. கண்ணாளனே - சித்ரா (கன்னடா)
12. சலே சலோ - - லகான் - ஏ.ஆர்.ஆர்
13. வெண்ணிலவே - ஹரிஹரன், சாதனா
14. சின்னம்மா, சிலுக்கம்மா - மீனாக்ஷி - சுக்விந்தர்
15. சண்டைக் கோழி - மதுஸ்ரீ, ஏ.ஆர்.ஆர்
16. Pagdi Sambhal - சுக்விந்தர்
17. Taal Se Taal - Alka / Aslam
18. ஹம்மா ஹம்மா - ஏ.ஆர்.ஆர், சங்கர் மகாதேவன்
19. பாபா ராப் - Blaaze
20. சிவமணி சோலோ
21. Pray For Me (Poverty Anthem) - ஏ.ஆர்.ஆர், ஆங்கிலப் பாடல்
22. Loves Never Easy - Bombay Theme - Alma / மதுஸ்ரீ
23. முக்காப்புலா - பத்ரி, சயனோரா
24. Ghanan Ghanan - Shankar
25. முஸ்தபா - ஏ.ஆர்.ஆர்
26. சரி கம - பாய்ஸ் - ஏ.ஆர்.ஆர்
27. சையா சையா - ரெஹ்னா, சுக்விந்தர்
28. ஆஸாதி - ஏ.ஆர்.ஆர்
29. வந்தே மாதரம் - ஏ.ஆர்.ஆர்

அனைத்தும் அருமை! என்ன சொல்ல?

அவர் வந்தே மாதரம் பாடலை ஆரம்பிக்கும் போது மணி 11.50. மழைக் கொட்ட ஆரம்பித்தது. ஆனால் யாருமே நகரவில்லை.

ரகுமானின் இசையின் மந்திரம்!

இரவு மணி சரியாக 12. மழை பலமாகக் கொட்டுகிறது. "இன்னும் பாட வேண்டுமா?", ரஹ்மான்.

ஆம் எனப் பலத்த குரலில் கூட்டம்.

ஆனால் 12 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லாததால் வணக்கம் தெரிவித்து விட்டு அவர் காரை நோக்கிச் சென்றார்.

என்ன ஒரு நிகழ்ச்சி! வாழ்நாளிலும் காணக் கிடைக்காத ஒன்று!!!!

மழை நிற்க இரவு 1 மணி ஆனது. வீடு திரும்பும் வழியில் மீண்டும் மழை. மழையுடன் வீடு திரும்பினேன். இன்றிரவும் சாப்பிடவில்லை.வீடு வரும்போது மணி 2.00.

Pray For Me, இது Poverty Theme. அவரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். அந்தப் பாடலின் இசையும், அவர் பாடிய விதமும் மிக மிக அருமை. எப்போது அது மார்க்கெட்டுக்கு வரும் என ஆவலுடன் இருக்கிறேன்.

ஸ்ருசல்.

ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 1

நான் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகன் என்பதால், ஏ.ஆர்.ரகுமானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அனைத்தும் தனிமனித துதி என ஒதுக்கி விட வேண்டாம்.

இசை நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை நடைபெற்றது. எங்கள் குழுவினர், இசை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துடன் பணிபுரியுமாறுக் கேட்டுக் கொள்ளப்பட்டதால் (30 பேர்), வெள்ளிக் கிழமை அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து விட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றோம். வீட்டில் இருந்து 8 மணிக்கு கிளம்பி 8.40 க்கு பேலஸ் கிரவுண்ட்ஸை அடைந்தேன்.

அங்கு முதலில் 3D கண்ணாடியில் விளம்பரதாரரின் சின்னம் ஒட்டும் பணியில் ஈடுபடுமாறு ஒரு 10 பேர் பணிக்கப்பட்டனர். மொத்தம் 20000 கண்ணாடிகள்.

நான், SIM card-கள் வாங்கி ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்த dancer-களுக்கு கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். யாருமே முன்வரவில்லை. வேண்டா வெறுப்பாகச் சென்றேன். அது சுமார் 8 கி.மீட்டர் தள்ளி இருந்தது. நல்ல போக்குவரத்து நெரிசல். ஹோட்டலுக்கு சென்று எலிசெபத்தைச் சந்தித்தேன். தனியார் நிறுவனத்தைச் சார்ந்த ஒருவர், 30 நிமிடங்கள் கழித்து SIM card-ஐ கொண்டு வந்தார். அவரிடமிருந்து SIM card-களை வாங்கி எலிசெபத்திடம் கொடுத்து விட்டு, நிகழ்ச்சி அமைப்பினரைத் தொடர்பு கொண்டேன். விமான நிலையத்தில் ஒருவர் காத்திருப்பதாகவும் அவரிடம் இரண்டு SIM card களைச் சேர்க்குமாறும் பணிக்கப்பட்டேன். விமான நிலையம் சுமார், 20 கி.மீட்டர்கள் தள்ளி இருந்தது. எனக்கு வெறுத்தே விட்டது.

45 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்தேன்.

அங்கே SIM card-டை அந்த நபரிடம் சேர்ப்பித்த போது, ஏ.ஆர்.ரகுமானின் குடும்பத்தினர், மற்றும் குழுவினர் சென்னையிலிருந்து, அப்பொழுது தான் வந்தடைந்திருந்தனர். ரகுமானின் அம்மா, சகோதரிகள், ஸ்ரீதர் (சவுண்ட எஞ்சினியர்), சிவகுமார் (சவுண்ட எஞ்சினியர்), நோயல் (ரகுமான் மேனஜர்), நவீன் (புல்லாங்குழல்), ராஜா (டிரிக்கரிங்), கல்யாண் (வயலின்), பின்னணிக் குழுவினர் (சயனோரா, ஜார்ஜ், ...) அனைவரையும் பார்த்து, அவர்களைச் சரியான வாகனங்களில் ஏற்றி சேர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் மூன்று கீ-போர்டுகள், பெரிய பெரிய ஆப்பிள் கம்பியூட்டர்கள் அனைத்தையும் இன்னொரு தனி வாகனத்தில் (பேலஸ் கிரவுண்ட்ஸிற்கு) ஏற்றி அனுப்பிவிட்டு ஏ.ஆர்.ரகுமான் எப்போது வருகின்றார் எனக் கேட்டேன். அவர் 2.30 மணி விமானத்தில் வருவதாகத் தெரிவித்தார் நண்பர்(Event Management group). நான் உடனே திரும்ப வேண்டியதாக இருந்ததால், அங்கிருந்து அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எங்கள் குழுவினரில் முதன் முதலாக அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோசத்தில் மைதானத்திற்கு திரும்பினேன்.

சுமாராக மூன்று மணிக்கு, சிவமணி மட்டும் மைதானத்திற்கு வந்தார். நண்பர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அவருடைய உபகரணங்களை சரி செய்து விட்டு, உடனே கிளம்பினார். சிறிது நேரத்தில், சவுண்ட் எஞ்சினியர் ஸ்ரீதர் மற்றும் குழுவினர் வந்தனர். அப்போது ஆரம்பித்து, இரவு 8 மணி வரை அனைத்துக் கருவிகளிலின் ஒலி வெளியீடும், பாடகர்களின் ஒலி வெளியீடும், தனது கருவிகளில் சரியாக வந்து சேர்கிறாதா எனச் சரி பார்த்தார். மனிதருக்கு நிறைய பொறுமை தான்.

ஊரில் நடக்கும் கச்சேரிகளை நினைத்துக் கொண்டேன். 9 மணிக்கு வந்து, 10 மணிக்கு ஆரம்பிக்கும் கச்சேரிகளை.

நடுவில் சின்ன சின்ன வேலைகள்.

சுமார் 8.30 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் மைதானத்திற்கு வந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்க ஆரம்பித்தார். அவர் வந்தது தெரிந்ததும், நண்பர்கள் மேடையின் முன்புறம் ஓடினர். எல்லோருடைய கையிலும் கேமராக்கள். பத்திரிக்கை நிருபர்கள் என நினைத்து, தயக்கத்துடன் சிரித்துக் கொண்டே மேடையின் ஓரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் மேடையின் முன்பாக வரும் போது, நாங்கள் கொண்டு சென்ற பெரிய பேனரை ("arrahmanfans welcome ARR and Team to Bangalore"). அதைப் பார்த்ததும் மிக சந்தோசத்தில் வணக்கம் தெரிவித்தார்.

பின்னணி பாடகர், ராஜேஸ் Blazee ராமனை சந்தித்து நாங்கள் ரகுமானைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தோம். முயற்சிப்பதாகச் சொன்னார். சுமார் 11 மணியளவில், மீண்டும் கேட்ட போது, "சரி. ஆனால் யாரும் ரகுமானைத் தள்ள முயற்சிக்கக் கூடாது" என தெரிவித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாரோ ஒரு ரசிகர் காரில் ஏற விழைந்த ரகுமானை பிடித்து இழுக்க முயற்சித்ததால் இந்த கவனம்.

எங்களுக்கு மிக சந்தோசம்.

வேகமாக கீழிறங்கி வந்தார். நாங்கள் அனைவரும் ஒரு அறையில் காத்திருந்தோம். வரிசையாக பத்து பேர் தங்கள் கேமராவைக் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். நான் ரகுமானை ஒட்டி நின்று கொண்டேன். Flash! Flash!

நண்பர்கள் முட்ட ஆரம்பித்தனர். எங்களுக்கோ பயம். எங்கே கோபித்துக் கொள்வாரோ என.

"அவசரப் பட வேண்டாம். எல்லோரும் புகைப்படம் எடுத்த பின்பே இந்த இடத்தை விட்டுச் செல்வேன்", என்றார். ஆச்சர்யம். மிக எளிமையாக பேசிக் கொண்டிருந்தார். கொஞ்சமும் கோபப்படாமல் 15 நிமிடங்கள் அங்கிருந்து எங்களை சந்தித்தார்.

ஆட்டோகிராப் வேண்டுமென்று ஒரு 35 அட்டைகளை நீட்டியதும், இரவு ஹோட்டலுக்குச் சென்று கையொப்பமிட்டுத் தருவதாகத் தெரிவித்தார். அது வெறும் வார்த்தைகள் அல்ல. மறுநாளே அத்தனை அட்டைகளிலும் கையொப்பமிட்டு, எங்களிடம் மானேஜர் மூலமாக சேர்ப்பித்தார்.

பின்னர் நாங்கள் கொண்டு சென்றிருந்த நினைவுப் பரிசை அவரிடம் கொடுத்தோம். சந்தோசத்துடன் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

செல்லும் போது, "சார். என் பெயர் ...., " என அறிமுகம் செய்து கொண்டேன். கை கொடுத்தார்.

சந்தோசமாக இருந்தது. வீடு திரும்பும் போது மணி 1.00.

இரவு சாப்பிடவில்லை. ஆனாலும் நிம்மதியாகத் தூங்கினேன்.

ஸ்ருசல்.

புதன், அக்டோபர் 05, 2005

வரி செலுத்துகிறது அரசாங்கம்

பெங்களூரிலிருந்து மைசூருக்கு நால்வழிச் சாலையில் செல்லும் பிரதமர், வழியில் இறங்கி சுங்க வரி வாயிலில் வரியைச் செலுத்தி விட்டு தன் பயணத்தைத் தொடருகிறார். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். இது நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது. காரணம் தனியார் மயம்.

1. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைக் கூறு போட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பது.

2. அரசாங்க நிறுவனங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது.

தனியார்மயத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஏகபோகத்திற்கு; நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் தன்னுடைய நிறுவனம் தான் முதலிடமாக இருக்க வேண்டும் என்ற முதலாளிகளுக்கு. தனியார் நிறுவனங்களினால் மிகப் பெரிய மாறுதல்கள் நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்னும் பல துறைகளில் அரசாங்கம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தால், நாம் அலுவலகத்திற்கு நடந்து தான் சென்று கொண்டிருக்க வேண்டும்; ஒன்றாம் தேதி, கனரா வங்கியிலேயோ, ஸ்டேட் வங்கியிலேயோ நம்முடைய எண் எப்போது அழைக்கப்படும் என்று காத்திருக்க வேண்டியிருக்க வேண்டும். STD பூத் சென்று தான் தொலைபேசியில் பேச வேண்டியிருக்க வேண்டும்; இன்னும் பல. அதெல்லாம் சரி.

தனியார் மயத்தைப் பற்றி முதலில் ஆரம்பித்தது, சந்திரசேகர் அரசு என்று நினைக்கின்றேன். ஆனால் முதலில் இதற்கு கதவை நன்கு திறந்து விட்டது; பி.ஜெ.பி. அரசு. அதற்கென்றே தனியாக ஒரு துறையையும் ஆரம்பித்து இருக்கின்ற நிறுவனங்களையெல்லாம் விற்றது. காங்கிரஸ் அரசும் அதனைத் தாங்கி வருகின்றது. நியாயமான காரணம் இருந்தால், நிறுவனத்தை மூடுவதற்குப் பதில் விற்கலாம். அல்லது தனியாருடன் கூட்டு அமைத்து தொடர்ந்து நடத்தலாம். ஆனால் லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும் விற்பதென்பது இந்தியாவில் மட்டுமே நடக்கும் விசயம். கொள்ளை லாபம் கொடுக்கும் நிறுவனங்களை ஏன் விற்க வேண்டும். வேலைக்கு ஆட்கள் எடுக்க முடியவில்லையா? அல்லது அதன் மேலாண்மைக்கு ஆட்கள் இல்லையா?

ஒரு நிறுவனத்தை நன்கு நடத்த முடியவில்லையென்பது காரணமா இல்லை நடத்தக் கூடாது என்பது காரணமா? IIM போன்ற கல்வி நிறுவனங்கள் உலகிற்கே M.B.A பட்டதாரிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இடத்திலிருந்து ஒரு முன்னாள் மாணவரையோ, அல்லது பேராசியாரையோ அல்லது பேராசியர்கள் குழுவினிடம் ஒப்படைத்தால் அவர்களால் நிச்சயமாக சரி செய்ய முடியும். நிறுவனத்தைப் பற்றி எதுவுமெ தெரியாத ஒரு அதிகாரியிடம் ஒப்படைத்தால் அப்படித் தான் நடக்கும்.

அதனைத் திறம்பட அரசினால் நடத்த முடியாது என்ற வந்தப் பின் கூட தனியார் நிறுவனங்கள் ஏன் வாங்க வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளன? அதன் பயன்களை நன்கு தெரிந்து கொண்டு, அதனைக் கண்டிப்பாக லாபம் தரும் நிறுவனமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை தான். 1000 - 50000 தொழிலாளர்களைக் கொண்டுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு, அதனை லாபம் கொடுக்கும் நிறுவனமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், 1 கோடி ஊழியர்களைக் கொண்ட இந்திய அரசால் ஏன் முடியாது? எல்லாவற்றிலும் தனியார் வந்தால் தான் உருப்படும் என்ற கெட்ட எண்ணத்தை விட்டு விடுதல் நலம்.

சில தனியார் நிறுவனங்களே, அரசு நிறுவனங்களை விற்பதற்கு அரசியல்வாதிகள் உதவியுடனும், அரசு அதிகாரிகள் உதவியுடனும் முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அரசு முதலில் 40% சதம் பங்குகளை விற்கும். தனியார் நிறுவனம், ஆரம்பத்தில் சில சதவீத பங்குகளை (உதாரணமாக 20%) மட்டும் வாங்கும். பின்னர் பங்குச்சந்தையின் மூலமாக, மக்களிடமிருந்து மீதமுள்ள பங்குகளை வாங்கும். அரசுக்கு, அந்த நிறுவனத்தின் வாரியத்தில் மிகக் குறைந்த உறுப்பினர்களே இருப்பார்கள். அனைத்து முக்கியமான முடிவுகளும் பெரும்பான்மையான தனியார் நிறுவனத்தின் உறுப்பினர்களாலேயே எடுக்கப்படும்.

ஏகபோகம் (Monopoly)

இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள், ஏகாதிபத்திய அமைப்புகளாக உருவாகி வருகின்றன. எண்ணெய், கெமிக்கல், டெக்ஸ்டைல்ஸ், மின்சாரம், தொலைத் தொடர்பு துறை, கட்டுமானத் துறை, மருந்து உற்பத்தி, காப்பீட்டுத் துறை முதலியானவை ஒரு சிறு உதாரணம். அவர்களின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாதது தான். அது அவர்களின் திறமை. ஆனால், வளர்ச்சி நியாயமான முறையில் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும்.

உள்கட்டமைப்புத்துறையில் தனியார் முதலீட்டினை அனுமதித்தால் ஏழை மக்களால் அந்த சாலையை எவ்வாறு உபயோகப்படுத்த முடியும்? மேலும் திட்டம் நிறைவேறிய பிறகு இதற்கு போட்டியாக நடக்கும் எந்த விதமான திட்டத்தையும் அந்த நிறுவனங்கள் தடுக்க முயற்சிக்கலாம் அல்லது அதிலும் பங்கு பெற முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு, அதே இரு நகரங்களுக்கிடையில் வேறு மார்க்கமாக நடைபெறும் எந்தத் திட்டத்திற்கும்.

அரசுக்கு வரி செலுத்துவது போய், இனி தனியாருக்கு வரி செலுத்த வேண்டி வரும். ஏற்கனவே சில அத்தியாவாசமான பொருட்களின் விலையை நிர்ணயிப்பது இந்த தனியார் நிறுவனங்கள் தான். கட்டணத்தை நிர்ணயிப்பது அரசாகவே இருக்கலாம். ஆனால் விலை உயர்வுக்கு காரணிகள் இவர்களாக இருப்பார்கள்.

பிற்காலத்தில் நாட்டை ஆளப் போவது நாம் தேர்ந்தெடுக்கப் போகும் அரசுகள் அல்ல; தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சில தனியார் நிறுவனங்களே.

ஸ்ருசல்

செவ்வாய், அக்டோபர் 04, 2005

அண்ணா - ஜீன்ஸில்

NDTV-ன் எக்ஸ் ஃபேக்டரில், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி விவாதித்தார்கள். அதில் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசுவநாதன், கார்த்திக் சிதம்பரம் (சென்னை ஸ்டுடியோவிலிருந்து) மேலும் இரண்டு பெண் கல்லூரி முதல்வர்கள் (ஒருவர் மும்பை, மற்றொருவர் டெல்லியிலிருந்து), செய்தியாளர் பார்க்ஷ்சா தத்தாவும் விவாதித்தார்கள். மிகவும் சுவாரசியமாக இருந்தது. முதல் சில நிமிடங்களைக் காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இரு கல்லூரி முதல்வர்களும் அமைதியாக, கேட்டதற்கு மட்டும் பதிலளித்தனர். கார்த்திக், துணைவேந்தரைக் கிழி கிழி என்று கிழித்தார்.

"ஏன் இந்த புதியக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது"

"நிறையப் பெண்கள் மிகவும் மோசமாக உடை அணிந்து வருகின்றனர். அவர்களின் டி-சர்ட்ல் கண்ட கண்ட வாசகங்களும் இடம் பெறுகின்றன. அதைத் தடுப்பதற்காகவே"

"எந்த எந்த உடைகள் தடைசெய்யப் பட்டுள்ளன?"

"டி-சர்ட், ஜீன்ஸ், ஸீலீவ் லெஸ் சர்ட் / சுரிதார்..." என வரிசையாகக் கூறினார்.

"ஜீன்ஸ் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?"

சில வினாடிகள் மவுனம்.

"அது ஒரு அநாகரீகமான உடை"

மற்ற மூவருக்கும் இதைக் கேட்டு சிரித்து விட்டனர்.

"ஏன் அதனை ஒரு அநாகரீகமான உடை எனக் கூறுகிறீர்கள்"

அவரால் பதில் கூற முடியவில்லை. மவுனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்தார். அவை நாகரீகம் கருதி, பார்க்ஷ்சா தத்தா மற்ற இருவரிடம் வேறு கேள்வியைக் கேட்டார். அவர்கள் ஜீன்ஸ் அணிவதால் எந்த விதமான கெடுதலும் ஏற்படுவதில்லை எனத் தெரிவித்தனர்.

எதற்காக அதைத் தடை செய்ய நினைத்தார் என்பதற்கு அவருக்கே தெரியவில்லை. "தவறு கூடச் செய்யுங்கள். ஆனால் அதை ஏன் செய்கிறீர்கள் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்". அவர் ஜீன்ஸ் என்ற துணியில் விரசம் இருப்பதாக நினைக்கின்றாரா அல்லது அணிபவர்கள் அதனை விரசமாக அணிகின்றனர் என நினைக்கின்றாரா எனத் தெரியவில்லை. "மிகவும் இறுக்கமாக அணிந்தால் தவறு என அவர் குறிப்பிட்டிருக்கலாம்." பேண்ட், சர்ட்-ஐ ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் ஜீன்ஸை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

எந்த விதமான உடையிலும் கவர்ச்சியைக் காட்டலாம். தவறு உடையில் இல்லை என அவர் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த விதமானத் துணி என்ற அளவீட்டிற்குப் பதில் அது எவ்விதம் அணியப்படுகின்றது என்ற அளவீட்டினைத் தெரிவு செய்திருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு தனியார் கல்லூரி, கருப்பு நிற பேண்டும், சிவப்பு நிற சட்டையும் அணிந்ததற்காக ஒரு மாணவரை வெளியேற்றி உள்ளது. இரண்டுமே அடர் நிறமுடையது எனக் குறிப்பிட்டுள்ளனர். கருப்பு சிவப்பு என்பது தி.மு.க வின் நிறம் என்பதாலா? :)

ஏற்கனவே சில தனியார் கல்லூரிகள், மாணவர்கள் மாணவிகளிடம் (மாணவிகளும் மாணவர்களிடம்) பேசக் கூடாது. பார்க்கக் கூடாது போன்ற கீழ்த்தரமானக் விதிகளைப் பின்பற்றி வருகின்றன. இதில் இந்தச் சுதந்திரத்தையும் கொடுத்தால் (இது கல்லூரி நிர்வாகத்திற்குச் சுதந்திரமே), மாணவ, மாணவியரின் கதி அதோ கதி தான்.

ஸ்ருசல்

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் தினமும் கன்னடப் பாடல்கள்

போன வாரம் (வெள்ளிக்கிழமை என்று நினைக்கின்றேன்) IBM நிறுவனம், ஒரு பெரிய கலைநிகழ்ச்சியை பெங்களூர் "பேலஸ் கிரவுண்ட்ஸ்"-ல் நடத்தியது. அதில் ஹிந்தி பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்பட்டதாகவும், கன்னட பாடல்கள் பாடும் போது, மற்றவர்கள் வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை சில கன்னட அமைப்பினர், கோரமங்கலா IBM நிறுவனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த மெய்க்காவலர்களையும் தாக்கியுள்ளனர். கடைசியில் போலீசார் வந்ததும் கலைந்து சென்றுள்ளனர்.

தவறு இருவர் பக்கமும் உள்ளது. அவர்கள் கன்னடப் பாடல்களை ஒலிபரப்ப அனுமதித்திருக்க வேண்டும். சிறுபான்மையினர் (வெளி மாநில மக்கள்) பெரும்பான்மையாக பணிபுரியும் நிறுவத்தினமாக இருந்தாலும் கூட, அவர்களும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமை பாதிக்கப்படுகின்றது என இப்போது கூக்குரல் இடுவதற்குப் பதில், தாங்கள் பெரும்பான்மை என்ற தகுதியை அடையும் போதும் கண்ணியத்துடன் நடக்கின்றார்களா என எண்ணிப் பார்க்க வேண்டும். அது தான் சகிப்புத் தன்மை. இதே மக்கள், தங்கள் சொந்த ஊர்களில் எவ்வாறு நடந்து கொள்வார்கள்?

சரி அடுத்த விடயம். எதற்காக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்? அவர்களுக்கு எவ்வாறு இது தெரிய வந்தது. கண்டிப்பாக, அங்கே பணிபுரியும் யாராவது, அந்த அமைப்பினரிடம் சொல்லியிருக்க வேண்டும். இது வெறும் வாயில் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது. ஏற்கனேவே, பெங்களூரில் மற்ற மாநில மக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது; கன்னடர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் முன்னுரிமை வேண்டும் எனவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர்.
இப்போது, இது போன்ற நிகழ்ச்சிகள் அவர்களுக்கு சாதகமாக ஆகி விட்டன. ஏன் அவர்கள் இதனை இவ்வாறு யோசிக்கக் கூடாது? கர்நாடாகவைச் சார்ந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை கிடைத்து விட்டது. மற்ற காலி இடங்களுக்கு வெளி மாநிலத்திலிருந்து ஆட்களைப் பணியில் அமர்த்துகிறார்கள்.

மாநில அரசு இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கக்கூடாது. இதே மாநில அரசு தான், சிறிது ஆண்டுகளுக்கு முன்னதாக "வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு! முதலீடு செய்ய" என்று எல்லோரையும் அழைத்தது. இப்போது நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வந்த பின் இவ்வாறு தாக்குதல் நடத்துவதும், அதனைக் கண்டிக்காமல் மவுனமாக இருப்பதும் சரியல்ல. இந்தியா என்ற பெயரைச் சொல்லி முதலீடு பெறுவதும், சிறிது நாட்களுக்குப் பிறகு எங்கள் மாநிலத்தவற்கே முன்னிரிமை என்பதும், பின் எங்கள் ஜாதிக்கு முன்னிரிமை என்று கேட்பதும் மிகவும் வருத்தத்திற்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மென்பொருள் நிறுவனங்கள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. பெங்களூரின் உள்கட்டமைப்பு வசதி சரியில்லை என்று நிறைய புகார் தெரிவித்த வண்ணம் உள்ளன. இது அதிகரிக்கவே, ஒரு மாநில அமைச்சர், "முதலில் அவர்கள் கர்நாடகாவைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கட்டும். அப்புறம் அவர்கள் இதெல்லாம் கேட்கட்டும்" என்றார். கஷ்டத்தில் இருக்கும் போது மற்றவர்களுடன் மிகப் பணிவாகவும், அந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட்டப் பின் அவர்களே வேறு விதமாக நடப்பதும் மனிதனிடம் காணக்கிடைக்காத பண்பொன்றுமில்லை.

இந்தியாவில் இதுவொன்றும் புதிதாகவொன்றும் நடக்கவில்லை. மகாராஸ்ட்ராவிலும், அஸ்ஸாமிலும் இன்ன பிற மாநிலங்களிலும் அடிக்கடி நடப்பது தான். அதற்காக இதைக் கவனிக்காமல் விட்டு விடக் கூடாது. மக்கள் தங்கள் எல்லையை விட்டுத் தாண்டி வர வேண்டும். தங்கள் சாதி, மதம். மொழி, மாவட்டம், மாநிலம், என்று நினைக்காமல் ஒரே நாடு என்ற எண்ணத்துடனாவது வாழ வேண்டும். என்னைக் கேட்டால் நமது நாடு என்று சொல்வதைக் கூடத் தவறு என்று சொல்வேன். ஆனால் மற்ற பிரிவினையை விட இது
எவ்வளவோ மேல். இப்படி ஒரு மாநிலத்தவர் மற்றொரு மாநிலம் சென்று தொழில் துவங்கக் கூடாது, வாழக் கூடாது என்றால், இந்தியா என்பது எதற்கு? சிறிய மாநிலங்களிலிருந்து வரியை சம்பாதித்து, பெரிய மாநிலங்களும், நகரங்களும் பங்கிட்டுக் கொள்வதற்கா?

இதற்கு தான், 1) எந்த ஒரு முதலீடும் ஒரே இடத்தில் முடங்கக் கூடாது. எல்லா இடங்களிலும் பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இயங்குவதைப் போல, முதலீடும் எல்லா இடங்களுக்கும் கிடைக்க வேண்டும். 2) மக்கள் படிப்பறிவு பெற வேண்டும். படித்தால் அனைவரும் பண்படைந்து விடுவார்கள் என்பதல்ல என் வாதம். கீழ்த்தரமான எண்ணங்களும் இருக்கும். இதைப் போன்ற உணர்வுகளும் இருக்கும் (அடித்துத் துரத்த வேண்டும்...). காழ்ப்புணர்ச்சியும் இருக்கும். ஆனால் எதிர்வினை வேறு மாதிரி இருக்கும். ஒரு நிகழ்ச்சியை ஒரு படித்தவனும், படிக்காதவனும் பார்க்க நேர்ந்தாலும், படிக்காதவனின் எதிர்வினை, படித்தவனின் எதிர்வினையை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

இதைத் தான் இன்று காலை எழுத நினைத்தேன். ஆனால் இதோடு முடியவில்லை. இன்று காலையும் போராட்டம். சரியாக காலை 9 மணிக்கு IBM நிறுவனத்தின் முன்பும், என்னுடைய பழைய அலுவலகத்திற்கு முன்பும். என்னுடை பழைய அலுவலகத்தில் IBM இல்லை

தான். ஆனாலும் அவர்கள் ஒரு பெரிய பூட்டை எடுத்து, நுழைவாயிலைப் பூட்டி விட்டனர். யாராலும் உள்ளேயேயும் செல்ல முடியவில்லை. வெளியேறவும் முடியவில்லை. பெரிய சாலை இடையூறு.

சரி இப்போதைக்கு இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு:

பெரிய ஒலி பெருக்கிகளை மென்பொருள் நிறுவனங்களின் வாசலில் மாட்டி, தினமும் ஒரு மணி நேரம் கன்னடப் பாடல்களை ஒலிபரப்புவது தான்.

எத்துனை நாட்களுக்கு இந்த இந்தியா என்ற அமைப்பு தாக்கு பிடிக்குமோ என்ற அச்சம், இதைப் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, மேலோங்குகிறது.

ஸ்ருசல்

சனி, அக்டோபர் 01, 2005

கனவுலகில் திரைத்துறை

காட்சிகளைத் திரையில் காட்டுவதால், அதில் வரும் கதைக் களமும் நிழலாகவே இருக்க வேண்டும் என்று முடுவெடுத்து திரைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் திரைத்துறையினர். திரைப்படத்துடன் ஒன்றி நாட்கள் பல ஆகிவிட்டன (கடைசியாக, அழகியத் தீயே). நிஜ வாழ்க்கைக்கும், திரைப்படங்களுக்கும், இரண்டு பால்வழித்திரளுக்குண்டான இடைவெளி.

இன்று, மிகவும் நம்பிக்கையுடன் சென்று பார்த்தப் படம்: கஜினி. படம் என் எதிர்பார்ப்பிற்கு இல்லாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. மிகவும் வருத்தப்பட வைக்கும் அளவிற்கு இருந்தது. மக்கள் எதையும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ, வாழ்க்கைக்கும் சிறிதும் தேவையில்லாத (சம்பந்தம் இருந்தது) விசயங்களைக் காட்டியிருக்கிறார். சரி விசயத்திற்கு வருகின்றேன்.

படத்தில் விரும்பத்தகாத அளவிற்கு இருந்த ஒன்று - வன்முறை. வன்முறைக்கான அளவீடு, ஒவ்வொருவற்கும் மாறுபடும். என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தில் அது (அளவீடு அல்ல, வன்முறையே) மிகைப்படுத்தப்பட்டு விட்டது. நிறையக் குறைத்து இருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒரு காட்சி: வில்லன், கதையின் நாயகியைக் கொலை செய்வது.

நாயகன், நாயகியைக் காப்பாற்ற வில்லனுடன் சாலையில் சண்டையிடுகிறார். சண்டை முடிந்ததும், நாயகியைத் தேடி அருகிலிருக்கும் நாயகியின் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டிற்கு செல்கிறார். அங்கே மறைவிலிருந்து நாயகி கத்திக் காயத்துடன் வருகிறார். அப்போது வில்லன், நாயகனின் தலையில் ஒரு பெரிய இரும்புக் கம்பியைக் கொண்டு அடிக்கிறார். (வில்லனிடம் எப்போதும் ஒரு கைத்துப்பாக்கியும், இன்ன பிற ஆயுங்களும் இருக்கின்றன. ஆனாலும் ...). நாயகன் தரையில் சாய்கிறார். நாயகியும் தரையில் சாய்கிறார். அப்போது வில்லன் இவர்களைப் பார்த்துக் கொண்டே நடக்கிறார். சிறிது விநாடிகள் கழித்து திரும்ப, நாயகனின் தலையில் தாக்குகிறார். பின்னர், இரண்டு முறை, கத்தியினால் காயமடைந்த நாயகியின் தலையில் அடிக்கிறார். ரத்தம் வழிந்து, நாயகி சாகிறார். (இது மட்டுமல்ல, இன்னும் நிறைய இருக்கின்றன. கல்லூரியில் நடக்கும் கடைசியில் காட்சி மற்றொரு உதாரணம்)

சிலருக்கு நான் சொன்ன இந்தக் காட்சி கூட, சாதாரணமாகத் தெரியலாம்.

என்னுடைய கேள்வி:

இயக்குனர் எதனால் அத்தகைய முறையைக் கையாண்டார்?

1. வில்லனின் கொடூரத்தன்மையை மக்களுக்கு உணர்த்தவா? இது தான் அவர் நோக்கமாக இருந்தால், வில்லன் சம்பந்தப்பட்ட மற்றக் காட்சிகள் எதற்கு?. வில்லனின் கெட்ட குணத்தைக் காட்ட பல எளிய வழிகள் இருக்கின்றன. இந்த காலத்து மக்களுக்கு, நீங்கள், "இந்தக் கதையில் ஒரு கெட்டவன் இருக்கின்றான். இவன் இப்படி பட்டவன்" என சொல்ல வேண்டும் என்ற அவசியமே வேண்டாம். மக்கள் ஆயிரக்கணக்கான படங்களையும், வில்லன்களையும் பார்த்து விட்டார்கள். அவர்களாகவே புரிந்து கொள்வார்கள். ஏன், காதலுக்கு மரியாதையில் வரும் ராதாரவியும் வில்லன் போன்றவர் தான், நாயகனின் பக்கத்தில் இருந்து பார்த்தால். ஆனால் அந்த பாத்திரத்திற்கென்று, ஒரு உயிர் இருந்தது. "பூவிழி வாசலிலே"-ல் வரும், ரகுவரன் பாத்திரம். ஏதோ எனக்கு நினைவில் உள்ளதைச் சொல்கின்றேன். உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் போகலாம். நன்றாக சித்தரிக்கப்பட்ட வில்லன்கள் இருந்தால் சொல்லவும்.

2. கதையின் பிற்பாடு, நாயகன் வில்லனைக் கொலை செய்வது சரியே என்று சொல்வதற்கா?.

3. மக்களின் ஆவலைத் தூண்டி, திரைப்படத்துடன் ஒன்றச் செய்யவா? ஒருவர் கூட அந்தக் காட்சியை விரும்பி பார்த்திருப்பார்கள் எனத் தோன்றவில்லை. சில 'உச்' குரல்களைக் கேட்க முடிந்தது.

4. மக்களும் தங்களின் மனதில், அந்த நாயகனைப் போலவே, வில்லனைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கவா? சில நேரங்களில் மக்களும், "என்ன அடிக்கிறான்?. நல்லா அடி. அந்த கட்டையை எடுத்து அடி. அவன் பொண்டாட்டியை எப்படி எல்லாம் கொடுமை படுத்துனான். இன்னும் நல்லா அடி" என்றெல்லாம் நினைப்பதுண்டு. அதைத் தான் விரும்புகிறாரா? அத்தகைய துவேசம் வேண்டாம். சில கெட்ட விசயங்களைக் காட்டி விட்டு நாயகன் செய்யும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். மக்களில் சிலர், தங்களை நாயகனின் இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அப்படி எனக்கு ஒவ்வாத இன்னொரு திரைப்படம் "விருமாண்டி". படம் முடிவடைவதற்கு முன்பே திரையரங்கை விட்டு வந்து விட்டேன். நிஜ வாழ்வில் அப்படி நடக்கலாம். ஆனாலும் ஒரு வரைமுறை இருக்கிறது. அதனை விட இன்னும் அற்புதமான விசயங்கள் இவ்வுலகில் இருக்கின்றன். முடிந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் படமே எடுக்க வேண்டாம்.

5. உங்கள் வியாபாரத்திற்காகவா? சண்டையைக் காட்டுங்கள். ஆனால் இந்த அளவிற்கல்ல. நீங்கள் திரு. மகேந்திரனைப், ராஜீவ் மேனன் போல மென்மையான, யதார்த்தமானப் பாத்திரங்களைக் காட்ட வேண்டாம். தயவுசெய்து, இடிஅமீனை எங்கள் கண்முன் நிறுத்த வேண்டாம்.

நல்ல விசயங்களைக் காட்டுங்கள். மனநிறைவோடு பார்த்து, அதனைப் பின்பற்ற முயற்சிக்கின்றோம். இசை மனிதனை சாந்தப் படுத்தவில்லையா / ஒழுங்கு படுத்தவில்லையா? ஒரு திரைப்படமும் அதனைச் செய்யக் கூடும். அதை பல படங்கள் செய்திருக்கின்றன். அதற்காக ஆர்ட் (தமிழ் சொல்?) படங்கள் எடுக்க வேண்டும் என்ற சொல்லவில்லை. சாதாரணமாக நல்ல பாடல்கள், சிரிப்பு, அழுகை, நல்லவர்கள், நாயகனுக்குக் கெட்டவன் இப்படியே கோடிக்கணக்கான படங்கள் எடுக்கலாம். இல்லையில்லை எங்களால் வித்தியாசமானக் கதையைக் காட்டமுடியாது என்று சொல்லாதீர்கள். நீங்கள் இப்படிப்பட்ட திரைப்படங்கள் எடுத்து, வித்தியாசத்தைக் காட்ட வேண்டாம். இது வரை வந்த அனைத்துப் படங்களையும் ஒரு 10 பட்டியலில் வகைப்படுத்தி விடமுடியும்.

யாருமே உங்கள் சட்டையைப் பிடித்து, "ஏன்யா? வன்முறையான படம் எடுக்கவில்லை என்று கேட்கப் போவதில்லை." விக்கிரமனின் அனைத்துப் படங்களும் சுவாரசியமானவை என்று சொல்லமுடியாது. ஆனால் அவரால் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க முடிந்தது. திரையரங்கை விட்டு வரும் போது, பல நேரங்களில் இதமான ஒரு உணர்வு மனதை வருடும். சில நேரங்களில் ஒரே மாதிரியான திரைக்கதையும், ராஜ்குமாரின் "லா லா" இசையும் சோர்வடைய வைக்கும். ஆனால் மனதை வருத்தாது. மனதில் வன்முறையை ஏற்றாது.

இன்னும் சிலர், இது திரைப்படத்திற்கு தானே? ஏன் இவ்வளவு கூக்குரல், எனக் கேட்பார்கள். அப்படியென்றால், மக்களை திரைப்படத்துடன் ஒன்றச் செய்ய வேண்டும் என்று கண்ட கண்ட காட்சிகளைச் சேர்க்காதீர்கள். அப்படித் தான் இதுவும் என்றால் இயக்குனரின் வன்சிந்தனைகள் தான் வெளிவந்துள்ளன.

நீங்கள், எங்களை சொர்க்கத்திற்கு அழைத்து சென்று சுற்றிக் காட்ட வேண்டாம். சாக்கடைக்கும், நரகத்திற்கும் அழைத்து செல்லாதீர்கள்.

அந்த இடத்திற்கு, கொலை தான் வேண்டும் என்று அவசியபட்டால், அதனை இலைமறைக் காயாக காட்டி விடுங்கள். முடியாத பட்சத்தில் ஒரு குண்டு போதும். குண்டிற்குப் பதில் கொடூரத்தைச் செலுத்த வேண்டாம். கதையில் லாஜிக் (தமிழ் சொல்?) இல்லாவிட்டால் பரவாயில்லை. பொறுத்துக் கொள்கிறோம். ஏன்? நன்றாக இருந்தால் ரசிக்கிறோம். உண்மையைக் காட்டுகின்றேன் என்று உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். மக்களையும் கொல்லாதீர்கள்.

ஒன்றே ஒன்று தான் என்னை இன்னும் திரைப்படங்களை பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன. அது இசை. இசையைத் தவிர இன்னும் சிலத் துறைகள் முன்னேறி இருப்பது சந்தோசமே. உதாரணத்திற்கு ஒளிப்பதிவு. (எல்லோரும் சொல்வது தான்). மணி கண்டன், ரவி கே. சந்திரன், ராஜசேகர், ஜீவா. மணி கண்டன் சமீபத்தில் பணிபுரிந்த மலையாளப் படத்தின் ஒரு பாடலைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது (படத்தின் பெயர்: போலீஸ்). அவ்வளவு அருமையாக இருந்தது.

என்னதான் மற்ற துறைகள் முன்னேறியிருந்தாவ்லும், உயிரான கதையிலும், திரைக்கதையிலும் வறட்சி இருப்பதை மறுக்க முடியாது.

மனிதன் தொழில்நுட்பத்தில் பல சாதனைகள் நிகழ்த்தி இருந்தாலும், அவனின் சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சுயநலமற்றத் தன்மையும் குறைந்து கொண்டே வருகின்றது. அதே கதி தான் திரைத்துறைக்கும். சீரழிந்து வருகின்றது!

ஸ்ருசல்.